ஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

வெ. அனந்த நாராயணன்


இரவு மணி இரண்டு
எரிக்கும் நிலா
மறந்த தூக்கம்
ஜன்னல் வழியே
அரையிருட்டில்
அரைகுறையாய்த்
தெரியும் உலகம்
இரயில் பயணம்போல்
பயணம்தான்
வழி தெரியவில்லை
என்றாலும்
வழித்துணைக்கு
உறவுகள்
சாமிகள்
புத்தகங்கள்
காசு, புகழ் தேடிச்
சிறிது
சோர்ந்து விட்டது
இருந்தாலும் தூங்கி விழிக்க
இவையன்றி முடிவதில்லை
வழிகாட்டிகளை
நம்பாதேயென்று
அரை நூற்றாண்டுக்காலமாய்
அசராமல் சொல்லிவந்த
ஜே.கே.யும்
மரித்துப்போனார்
தடங்களை விட்டுச்செல்லாத
கழுகாய்ப் பறந்துவிட
பாதையில்லா நிலத்தைப்
பார்த்துவிட
ஆ€ச்தான்
ஆனால்
ஆசையே தப்பு
த்ப்பும் தப்பு
என்னை, இக்கணத்தை
முழுதாய்
எதிரெதிராய்ச்
சந்திக்க
எனக்குத் திராணியில்லை
முயன்றால்
சூன்யம்தான் தெரிகிறது
பூர்ணத்துவம் புரியவில்லை
இரண்டிற்கும் அதிக
வித்தியாசமில்லையோ ?
எழுதப்பட்ட வார்த்தைகளும்
எழுதப்படாத அனுபவங்களும்
என்னுள் விடாமல்
கோர நாட்டியமாடுகின்றன
நேற்றுக்களின்
நாளைகளின்
பாரம்
வார்த்தைகளின் சிறை
இவை நடுவே
விடுதலையோர்
கெட்ட வார்த்தைதான்
புரிகிறது
மூளையளவில்
இருட்டில்
மரங்களை
மரங்களாய், JK
நான் காண்பதெப்போது ?

Series Navigation

வெ. அனந்த நாராயணன்

வெ. அனந்த நாராயணன்