உயிர் உணர்வதெப்போது

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue

சிவகாசி திலகபாமா


உயிரில்லா கல்லெல்லாம்
உயிர் சக்தியாம் மின்சாரம் தொட
உயிர் பெற்று வருகுது
கல்லது வடிவம் பெற்று
கடவுளானது கண்டோம்
கல்லது உயிர் பெற்று
காலை உணவுக்கு
மாவரைக்கும் மந்திரமானது
தயிர்மத்தும் தானே சுழன்று
தானியங்கியில்
தாழி உடையாது
வெண்ணெய் திரளுது
இருள் திரையென இருந்த
சின்னத்திரையும் உயிர் பெற்று
வண்ணம் ஏழு தாங்கி
எண்ணம் முழுதும் நிறைந்து
உயிர் பெற்ற பெட்டியாய்
உலா வருதல் கண்டோம்
திருமண பந்தத்தில்
தீரா சொந்தம் கொண்ட
அம்மியும் இன்று அடுக்களையில்
ஆதரவின்றி உயிர் பெறாததால்
அசையாப் பொருளையெல்லாம்
அறிவால் அறிவியலால் உயிராக்கி
அசைய வைத்து விட்டு
தட்டினால் இயங்கும்
தானியங்கி மத்தியில்
நீ மட்டும் உயிரற்ற ஜடமாய்
உறைந்து உருமாறியதெப்போது
மதிப்பெண் தேடி
கல்லூரி இடம் தேடி
நாலு இலக்க சம்பளத்தில்
நாற்காலி தேடி
பெண்தேடிபின்
பிள்ளைகளூக்கு
பள்ளியில் இடம் தேடி
சுடுகாடில் இடம் பெறும் வரை
தேடித் தேடி நீ
உயிர் தொலைத்து
மம்மிக்குள் அடைத்த உடலாய்
உலவத் தொடங்கியதெப்பொது
சேர்க்கையின் விளைவோ
செயற்கையின் அழிவா ? ?

Series Navigation

சிவகாசி திலகபாமா

சிவகாசி திலகபாமா