நினைவுகளின் தடத்தில் – 43

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

வெங்கட் சாமிநாதன்


இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினித்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய முனைப்பின்மையும், அதிகம் என்னைச் சிரமப்படுத்திக்கொள்வதில் ஆர்வமின்மையும், என் எதிர்காலத்தை நான் எதிர்கொண்டு அது அமைந்த குணத்திலிருந்து என் போதாமை தெரியவருகிறது.

கிராமத்தில் காத்திருக்கும் நாட்களில் கடைசியாக ஒரு நாள் பரிட்சை முடிவுகள் பத்திரிகையில் வெளியாயின. என் நம்பரும் பத்திரிகையில் அச்சாகி இருந்தது. நான் பாஸ் செய்துவிட்டேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். எனக்கு இந்த படிப்பு என்ற ரோதனை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது ஆசுவாசம் தருவதாக இருந்தது. உடனே மாமாவுக்கு எழுதினேன். எனக்கு முன்னால் என் நம்பர் தெரிந்து வைத்திருந்த மாமாவுக்கு நான் பாஸ் செய்துவிட்டது அவரே நிலக்கோட்டையில் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டிருந்தார். உடனே அப்பாவுக்கு அவர் கடிதமும் எழுதிவிட்டார். நான் பாஸ் செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றும், என்ன மார்க் வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்ததும் மேலே மதராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிட்சை செய்தால் சிரமமில்லாமல் அரசாங்க வேலை கிடைத்து விடும் என்றும் எழுதியிருந்தார். இன்னுமொரு பரிட்சையா, என்று வெறுப்பாக இருந்தது எனக்கு. ஆனாலும் மாமா சொல்வதைத் தட்டமுடியாது. அப்பாவும் அம்மாவும் கூட மாமா சொல்வதைத் தான் கேட்பார்கள். ஏதோ சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளப்போகிறோம் என்று எனக்கு பயமாகவும் இருந்தது. பரிட்சை ரிசல்ட் வரும் வரை இதுபற்றிய சிந்தனைகளே ஏதும் இல்லாது கவலையற்று நிம்மதியாக லைப்ரரி புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்துக் கொண்டிருந்த எனக்கு, பரிட்சை முடிவுகள் வந்ததிலிருந்து நிம்மதி இழந்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை தொற்றிக்கொண்டது.

ஒரு நாள் அப்பா கேட்டார், “காலேஜிலே சேந்து படிக்கிறயா, சொல்லு. மடத்திலே சேத்து விட்டா உனக்கு சாப்பாடு, இருக்க இடம் கிடைச்சுடும். புஸ்தகத்துக்கும் காலேஜ் சம்பளத்துக்கும் தான் நாம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனா மடத்திலே சேக்கணும்னா அதுக்கு நாலு பேரைப் பாத்து கேக்கணும். கிடைக்கும்னு ஒண்ணும் நிச்சயமில்லை. ஆனா உனக்கு மேலே படிக்கணும்னு இருந்தா சொல்லு.” என்று. இதைக் கேட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த அம்மாவுக்கு சந்தோஷத்திலே முகம் பூரித்து விட்டது. ஆனால் எனக்கு இது எதிர்பாராத இடி. இப்படிக் கூட திருப்பங்கள் ஏற்படுமா என்ன? “வேண்டாம்ப்பா” எனக்கு மேலே படிக்கிறது ரொம்ப கஷ்டம். ஏதாவது வேலைக்குப் போறேன். படிச்சது போறும்.” என்று சொல்லி விட்டேன். ஹைஸ்கூல் சம்பளம் மாசம் ஆறு ரூபாய் கட்டறதுக்கே அப்பா பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும். அது போக, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால், கும்பகோணத்தில் தங்கி படிக்க சாப்பாடு போட்ட பாட்டிக்கு மாதா மாதம் குறைந்தது பன்னிரண்டு ரூபாய் கொடுக்கப் பட்ட பாடும் எனக்குத் தெரியும். இதையெல்லாம் மறந்து விட்டு இன்னும் நாலு வருஷம் இன்னும் அதிகம் செலவாகும் காலேஜ் படிப்பை எப்படி அப்பாவும் அம்மாவும் நினைத்தும் பார்த்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியாக இருந்தது. அந்தக் கஷ்டங்கள் தெரிந்து தானோ என்னவோ, அப்பாவும் சரி, அம்மாவும் சரி, என்னை அதிகம் வற்புத்த வில்லை.

எனக்கு ஜெம்ஷெட்பூரில் இருந்த மாமா ஒருவரின் நினைவு உடன் வந்தது. அவர் நினைவு மங்காதிருக்கக் காரணம், மதுரையில் பாட்டியுடன் ஒரு தனி வீட்டில் இருந்து கொண்டு மிகுந்திருந்த சில மாதங்கள் படிப்பிற்காகத் தங்கியிருந்த போது, அந்த மாமா திடீரென்று தோன்றினார். அந்த ஜெம்ஷெட்பூரில் ஒரு மாமா இருக்கிறார் என்பது பற்றி அப்போது தான் நான் அறிந்து கொண்டேன். அவர் பார்க்க வந்தது பாட்டியை. பாட்டி அவருக்கு சின்னம்மா. பாட்டியின் மூத்த சகோதரி (அவளும் விதவை தான்) உமையாள்புரத்தில் இருந்தாள். தன் சின்னம்மா மதுரையில் இருப்பது தெரிந்து பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறார். ஜெம்ஷெட்பூரிலிருந்து விடுமுறையில் வரும்போது அவர் எல்லா உறவினரையும் பார்த்து நலம் விசாரித்துப் போவதை ஒரு சந்தோஷம் தரும் கடமையாகக் கொண்டவர். அவருடைய ஒரு தம்பி, சாம்பசிவம் என்ற பெயர் கொண்டவர் பம்பாயில் இருந்தார். அவரை நான் பார்த்ததே இல்லை. இன்னொருவர், கடைசித் தம்பி, குழந்தை மாமா என்று நாங்கள் அழைப்போம் அவரை. அவர் உமையாள்புரத்திலோ அல்லது பாபுராஜ்புரத்திலோ இருந்தார். கணக்குப் பிள்ளையாக இருந்தார். கிராமத்தில் இருந்த ஆரம்பப் பள்ளியோடு படிப்பை நிறுத்திக்கொண்டவர். மிகத் தமாஷாகப் பேசுபவர். தன்னையே கேலி பேசிக்கொள்வார். அந்த குணமே அவர் எங்களுக்குப் பிரியமானவராக்கியது. அவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாக வாய்த்தாலும், அவரைப் பார்த்து அவர் பேசக் கேட்பது என்பது எங்களுக்கு மிக சுகமான அனுபவம். அவர் பேசினால் சுற்றியிருப்பவர் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ஒரு முறை பாட்டியைத் தேடி சுவாமிமலை, பாபுராஜபுரம், உமையாள்புரம் எல்லாம் கிட்டத்தட்ட 24 மைல் தூரம் சுற்றி அலைந்து கடைசியில் கும்பகோணத்திலேயே கண்டுபிடித்ததைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது தான் பாட்டியின் சகோதரிகளையும் அவர்களது குடும்பத்தையும் முதன் முறையாகப் பார்த்து அறிந்து கொள்கிறேன்.

ஜெம்ஷெட்பூர் மாமாவை அப்பு என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் நாராயணசாமி. அவரும் பத்தாவது படித்து முடித்ததுமே, வீட்டு வறுமை காரணமாக வேலை தேடி வடக்கே சென்று விட்டார். நாக்பூரில் வேலையில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். கேம்ப்டியோ என்னவோ ஒரு ஊர், நாக்பூருக்குப் பக்கத்தில் என்று சொன்னார்கள். பின் எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஜெம்ஷெட்பூர் வாசம். அவர் தனக்கு வேலை கிடைத்ததும், தன் அடுத்த தம்பி சாம்பசிவத்தையும் அழைத்துக் கொண்டதாகவும், இப்போது சாம்பசிவம் (1947-ல்) பம்பாயில் இருப்பதாகவும் சொன்னார்கள். அப்பு மாமா உறவுகளைப் பேணுபவர். முடிந்தவரை எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை உள்ளவர். அவருடைய தங்கையும் மச்சினனும் கூட ஜெம்ஷெட்பூரின் இன்னொரு பகுதியில் டாடா நிறுவனத்தின் இன்னொரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரை நான் முதல் முறையாகப் பார்த்தது, நானும் பாட்டியும் மதுரையில் என் படிப்புக்காக தங்கியிருந்த போது. அது 1946-ம் வருடம். தன் சித்தி (என் பாட்டி மதுரையில் இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரைக்கு வந்திருந்தார்.

முதலில் அவர் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரகார வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கு தான் தன் சின்னம்மா (பாட்டி) இருப்பாள் என்று நினைத்து. அந்த வீடு மூன்று குடும்பங்களைக் கொண்டது. மாமியின் குடும்பம் இருந்த பகுதி வீட்டின் கடைசியில் இருக்கும். விசாரித்துக்கொண்டு உள்ளே போய், பாட்டி கொஞ்சம் தள்ளி இருக்கும் காமாட்சி புர அக்கிரஹாரத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து பின் இங்கு வந்திருக்கிறார். அதை அவர் வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். “எப்படிடா அப்பு கண்டு பிடிச்சே?” என்று பாட்டி சந்தோஷம் பொங்க கேட்க, ” அந்த அட்ரஸ் தான் எங்கிட்ட இருந்தது. வாசல்லே நின்ன உடனேயே வாசல்படிலே குழந்தை ஒன்னு சிரிச்சிண்டு இருந்தது. அதுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்தே,. “இவா நம்ம மனுஷாதான், இந்த ரத்தம் நம்ப குடும்ப ரத்தம் தான்”னு. பின்னே எனக்குக் கண்டுபிடிக்கிறதிலே என்ன கஷ்டம்? ” என்று பதில் சொன்னார். என்ன உற்சாகம்,! என்ன சந்தோஷம்! எவ்வளவு அன்னியோன்ய உணர்வுகள் இருந்தாலும், பார்க்கவேண்டும் என்று எவ்வளவு துடிப்பு இருந்தாலும், வெகு அபூர்வமாகத்தான் இந்த மாதிரி சந்திப்புகள் அவருக்கு நேர்கிறது. அப்படி நேரும்போது சந்தோஷத்தை, பாட்டிக்கும் சரி, அப்பு மாமாவுக்கும் சரி, சொல்லி சாத்தியமில்லை. எழுத்தில் வராது அது.

ஒரு மணி நேரம் இருந்தார். நிறைய பேசினார்கள். அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. காணாமல் போன சின்ன மாமாவைப் பத்தியும் பேச்சு வந்தது. “வருத்தப்படாதே. எங்கேயும் போயிட மாட்டான். வந்துடுவான் பாரு. பகவான் அப்படி ஒண்ணும் நம்மைக் கைவிட்டுட மாட்டார்” என்று பாட்டிக்கு மாமா சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் பக்கம் திரும்பி, “இவன் தான் தங்கம் பிள்ளையா? இப்பத் தான் பாக்கறேன். நன்னா படிக்கறானா? என்று கேட்டார். பாட்டி எனக்கு நல்ல சர்டிபிகேட்டாக ஒன்று கொடுத்தாள். “சொன்னதைக் கேட்டுண்டு நன்னா படிக்கறான். இவனாவது முன்னுக்கு வந்து குடும்பத்தை ஒப்பேத்தணும்,” என்றாள். மாமா என்னைத் தட்டிக்கொடுத்து, “நன்னா படிக்கணும். படிச்சுட்டு எங்கிட்டே வந்துடு. நான் வேலை வாங்கித் தரேன், என்ன படிக்கிறயா நன்னா?” என்று வாத்சல்யம் ததும்ப சொன்னார். அவருக்கு ஒண்ணுவிட்ட தங்கை, தங்கத்திடம் (என் அம்மாவிடம்) பிரியம் அதிகம் என்று தெரிந்தது.

“நான் அப்பு மாமாவுக்கு எழுதட்டுமா அம்மா? நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா? நான் ஜெம்ஷெட்பூருக்கு வரட்டுமா?” ன்னு கேட்டு எழுதறேனே,” என்றேன் அம்மாவிடம். அம்மாவுக்கு அதிலும் சந்தோஷம். உடனே மாமாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டேன். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், மாமாவுக்கு என்னை ஞாபகம் இருக்குமா, பதில் எழுதுவாரா, என்றெல்லாம் மண்டையைக் குடைந்து கொண்டு இருந்தது தான். ஆனாலும் ஒரு கார்டு எழுதுவதில் என்ன சிரமம்? நடப்பது நடக்கட்டும் என்று மாமாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டுவிட்டேன்.

வெங்கட் சாமிநாதன்/28.9.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்