ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

செங்கொடி


அண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக விவாதம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்து நாள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது. பெண்கள் பார்களில் குடிப்பதற்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் கலாச்சார காவலர்களானதைப்போல் ஓரினச்சேர்க்கையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கலாச்சார காவலர்களாக அவதாரம் எடுத்துள்ளன.

இது மதத்திற்கு எதிரான செயல், ஆண்டவன் மனிதர்களை எதிர்பாலர்களாக படைத்தது ஓரினச்சேர்க்கைக்காக அல்ல என்றும், மனித குலத்திற்கு மாபெரும் அழிவைக்கொண்டுவரக்கூடியது என்றும், சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்துவதோடு எய்ட்ஸ் போன்ற நோய்கள் பெருமளவில் பரவுவதற்கும் வழிவகுக்கும் என்பன போன்ற காரணங்களுக்காக எதிர்ப்பதாக இதை எதிர்ப்பவர்களும்;இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, இலக்கியங்களில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டென்றும் மனிதர்கள் தவிர்த்த ஏனைய விலங்குகளிடத்திலும் இது பழக்கத்தில் உள்ளது என்றும், இதை ஒருவகை மனநோய் என்பது அபத்தம் என்றும் இன்னும் பலவித அறிவியல் ஆதாரங்களோடும் இதை ஆதரிப்போர் அவர்களை எதிர்கொள்கிறார்கள். மதவாதிகள் வேதங்களைக்காட்டி எதிர்ப்பது எவ்வளவு அப‌த்தமானதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல இதை இலக்கியங்களை அறிவியலைக்காட்டி ஆதரிப்பதும். இதை நாம் வேறொரு கோணத்தில் அணூக வேண்டும்.

இல‌க்கிய‌ங்க‌ளில் இத‌ற்கு ஆதார‌ம் உண்டு என்றால் அப்போதிலிருந்தே ஓரின‌ச்சேர்க்கை இருந்திருக்கிற‌து என்ப‌தைத்தான் அது காட்டுமேய‌ன்றி, அது ச‌ரியான‌து என்ப‌த‌ற்கான‌ ஆதார‌மாக‌ அது ஆகிவிடாது. அதைப்போன்றே வில‌ங்குக‌ளிட‌மும் இந்த‌ப்ப‌ழ‌க்க‌ம் உண்டு என்ப‌தும். ம‌னித‌னின் ச‌மூக‌ வாழ்வில் முர‌ண்பாடுக‌ள் தோன்றிபோதே அது ம‌னித‌ உற‌வுக‌ளில் தொழிற்ப‌ட‌த்தொட‌ங்கிவிட்ட‌து. கலாச்சாரம், உறவுகள் உறவின் வரம்புகள் எல்லாம் சமூகத்தேவையை முன்னிட்டு மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் மாறும் கலாச்சாரம் சமகாலத்திய சமூகத்தேவைகளை முன்னிலைப்படுத்துகிறதா என்பதே முக்கியமானது. அந்த வகையில் தற்போதைய சமூகத்தேவைகள் ஓரினச்சேர்க்கையை முன்தள்ளவில்லை என்பதே உண்மை. இப்போதுள்ள ஓரின ஈர்ப்பாளர்களின் தேவைகள் தனிமனித உரிமை என்ற அடிப்படையில் எழுந்தவைகளே. சமூகத்தைவிட தனிமனித உரிமைகளை முன்தள்ளப்படுகையில் அதற்கான சட்ட அங்கீகாரம் என்பது அவசியமற்ற ஒன்று தான்.

இதற்கான போராட்டங்களில் திருநங்கைகளும் இணைந்திருப்பது இதில் அழத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஏனென்றால் திருநங்கைகளின் சமூக அங்கீகாரம் என்பது ஓரின ஈர்ப்பிலிருந்து வேறானது. ஒட்டுமொத்த சமூக புறக்கணிப்பால் தங்களுக்குள் குடும்பமாக இணையும் திருநங்கைகளிலிருந்து எழும் ஓரின ஈர்ப்பையும், அனைத்து சமூக அங்கீகாரத்துடன் வாழும் சாதாரண மனிதன் தன் மனபிறழ்வினால் அல்லது தனக்கேயுறிய தனி இயல்பினால் (அல்லது வக்கிரத்தினால்)ஓரின ஈர்ப்பாளனாக இருப்பதையும் வேறுபடுத்திப்பார்க்கவேண்டும். மறு பக்கத்தில் ஈர்ப்பின் நோக்கமே கலவியாக அதாவது இனப்பெருக்கமாக இருக்கும் போது சதாரண மனிதனின் இனப்பெருக்க தகுதியுடைய மனிதனின் ஓரின ஈர்ப்பு என்பது முரண்பாடாகவே இருக்கிறது. அதே நேரம் திருநங்கைகள் இனப்பெருக்க தகுதியில்லாத நிலையில் சமூக புறக்கணிப்பும் இணைவதாலும் திருநங்கைகளையும் சாதாரண மனிதர்களையும் இந்நிலையில் வேறுபடுத்திப்பார்பது மிக அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமியற்றியிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டும் என்பன போன்ற கோசங்களின் பின்னே முதலாளித்துவ நலன்கள் மறைந்திருக்கின்றன. மரபை கடப்பவர்களெல்லாம் மக்கள் நலனை முன்னிட்டு அதை செய்வதில்லை. மாறாக புதிய மரபை படைப்பதாயினும், இருக்கும் மரபை காப்பதாயினும் அதன் பின்னணியில் முதலாளித்துவ நலனே இயங்கிக்கொண்டிருக்கும். கல்வி முதல் கலை வரை அனைத்தையும் தனியார்மயப்படுத்தியிருக்கும் முதலாளித்துவம் கலவியையும் தனியார் மயப்படுத்துவதின் இன்னொரு விளைவுதான் ஓரினச்சேர்க்கை. இனப்பெருக்கத்தை நோக்கமாகக்கொண்டு சமூக அடிப்படையில் இயல்பாக இருந்த ஆண் பெண் உறவை நுகர்வாக மாற்றி அதையும் சந்தைப்படுத்தியதன் வாயிலாக பொது நோக்கம் சிதைந்து தனக்குப்பிடித்த வடிவில் தவறொன்றுமில்லை என்ற முனைப்பின் வெளிப்பாடுதான் இன்று ஓரினச்சேர்க்கை வீங்கி இருப்பதற்கான காரணங்கள். சங்க காலங்களிலும் அதற்கு முன்பேயும் இது இருந்திருக்கிறது என்பது விதிவிலக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற அளவில் தானேயன்றி சமூகத்தேவை இருந்தது என்பதாலல்ல. கலவியின் சமூகத்தேவை மனித உற்பத்தியேயன்றி வேறில்லை.

பெண்ணுரிமை என்ற‌ அடிப்ப‌டையிலும் இதை அணுகுகிறார்க‌ள். திரும‌ண‌ம் என்ப‌து ஆணாதிக்க‌த்தின் வ‌டிவ‌ம் தான் என்றாலும் ஓரின‌ ஈர்ப்பு பெண்க‌ளுக்கு விடுதலையை அளித்துவிட‌ முடியாது. ஆணுக்கு அடிமைப்ப‌ட‌வேண்டிய‌ அவ‌சிய‌மின்றி தேவைக்கு த‌த்தெடுத்துக்கொண்டால் போயிற்று என்ப‌து த‌னி ம‌னித‌ அள‌வில் தான் ப‌ய‌ன் த‌ருமேய‌ன்றி ச‌மூக‌ அள‌வில் அது பெண்ணை ஆணின் சிறைக்குள் தளைப்ப‌டுத்த‌வே உத‌வும். ஆணோ பெண்ணோ எதிர் பாலின் துணையின்றி வாழமுற்படுவது முதலாளிய, ஆணாதிக்க வாழ்முறையின் தூண்டுதலால் ஏற்படுவது; இதையும் அரிதாக வெகுசிலருக்கு ஏற்படும் தனிப்படையான ஓரின ஈர்ப்புக்கான மன இயல்பையும் ஒன்றிணைத்து ஓரினச்சேர்கையை விரும்பும் அனைவருமே தனிப்படையான மன இயல்புடையவர்களாக சித்தரிக்க முயல்கிறார்கள். பெண்விடுதலை என்பது ஆணை மறுப்பதிலிருந்து தொடங்குவதில்லை. ஆனால் முதலாளியவாதிகள் ஆடைசுதந்திரமும், மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுவதையும், குழந்தைகளுக்கு பால் கொடுக்க மறுப்பதையும், குழந்தைபெறுவதையே மறுப்பதையுமே பெண்விடுதலையாக காட்டுகிறார்கள்.

த‌னிம‌னித உரிமை பேசிக்கொண்டு ஓரின‌ ஈர்ப்பை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் இந்தியாவிலும் உல‌கிலும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் உண்ண‌ உண‌வின்றி, வாழிட‌மின்றி, சுகாதார‌மின்றி குறைந்த‌ப‌ட்ச‌ ம‌னித‌ உரிமைக‌ள் கூட‌ கிடைக்காம‌ல் அல்ல‌ல்ப‌ட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அதைப்ப‌ற்றிய‌ சிந்த‌னை துளியுமில்லாம‌ல்
தங்களின் கலவி பேதத்தை அங்கீகரிக்கக்கோரி போராடுபவர்களையும், அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குபவர்களையும், மனிதம் உயிப்புடன் இருக்கும் அனைவரும் புற‌க்கணிக்கவேன்டியது கடமையாகும்.

senkodithamizhan@gmail.com

Series Navigation

செங்கொடி

செங்கொடி