Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

கே ஆர் மணி


பிகேசிவகுமார் எனது மின்னஞ்சல் நண்பர். இருவரும் சிலசமயம் பொதுவான மின் தளங்களில் எழுதிக்கொள்வதுண்டு. அவரது சிபி.காமின் இப்போதைய எழுத்தான சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள் கட்டுரை படித்ததும் வேலைக்கு நடுவிலும் வேகவேகமாய் ஆங்கிலத்தில் வெந்ததும் வேகதாதுமாய் சில எதிர்வினைகள் அவருக்கே எழுதினேன். அப்படியென்னும் தலைபோகிற விசயமல்ல. அப்புறம் ஆற அமர எழுதியிருக்கலாம்தான். விரிவாய் எழுதுங்களேன் என நட்பாய் உடனே அடுத்த மின்னஞ்சல்.
எழுதுகிறேன்.
(http://tamil.sify.com/fullstory.php?id=14571341&page=1)
“எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கான புத்தகங்களைத் தமிழில் எழுதுகிறவர்கள் என் ரசனையின்படி வெகு சிலர்தான். என் ரசனைப்படி என்ற தப்பித்தலை இட்டுவிட்டதால் பெயர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா, சரோஜாதேவி. ”

நானும் மேற்சொன்ன எழுத்தாளர்களின் வாசகன் தான். சரோஜாதேவியை நீக்கிவிட்டு மற்றமூவரில் ( ஆதவன் பெயரும்
பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது) ஜெயகாந்தன் இந்த வரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது கொஞ்சம் அதிகமாகவேபட்டது. He is odd man out in these list .,

வேகமான ஒட்டமோ, தளர்விற்கான புத்துணர்ச்சியோ, வயாகராவோ ஜெயகாந்தன் எழுத்தில் எங்கும் எழுதப்பட்டதாக எழுப்பப்பட்டதாக எனக்குத்தெரியவில்லை, தெளிவுமில்லை. அது ஒரு சந்தர்ப்பமான, சாதுர்யமான யதார்த்தவாத பானையில் வேகவைக்கப்பட்ட லட்சிய ரேசன் அரிசி. வசீகரிமானது. வேரையும் புதுமையும் இணைக்க நினைக்கும் பாலமான எழுத்து. எந்த அர்த்தத்தில் அது எழுத்தாளரிடமிருந்து வந்தாலும் அதை நுகர்பவனாய் என்னை கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவைக்கும் எழுத்து. போனவாரத்தில்தான் சிலநேரங்களில் சில மனிதர்களை படித்துமுடித்தேன். எத்தனாவதுமுறை என்று கணக்கில்லை. ரொம்ப நாளைக்குபிறகு படித்ததில் அதன் மொழிபெயர்ப்பு சூத்திரங்கள் என்னை மறுபடியும் மயக்கத்திலாழ்த்தியது. இரு மொழிகளும் கையாளப்பட்டு அது வாசகனுக்கு கனமாகிப்போகமால், கதையின் நடையில் அது பலவீனப்படாது, அதையே பாத்திரங்களின் நுண்ணுணர்வுகளை செலுத்த உபயோகித்த சிறப்பு, சிறந்த கைவினைஞனாக்கிக்காட்டியது. கலைஞனாத்தெரிகிற மாபெரும் கைவினைஞன்.

அதன் கருத்தாளம் ( intense) உங்களின் உயரம் பொருத்தது. அதில் நின்று கால் நனைக்கலாம், கொஞ்சம் நடந்தால் உடல்முழுதும் நனைக்கலாம். இன்னும் நடந்தால் முத்துக்குளிக்கலாம். அது அவரவர்களின் உயரம் பொருத்தது. அவரின் கதையின் மையம் அமைதியானது. ஆழமானது என சொல்லத்தேவையற்றது. அழுக்குகள், ஆடம்பரங்கள், தேவையற்ற ஆளுமை பந்தாக்கள், மரபு உடைக்கும் கிழிசல்கள், பழைமை இணைக்கும் வலிகள், இருப்பதையெல்லாம் இணைத்து புதுமை தேடும் தேடல்கள் என அவரது இலக்கியபயணத்தின் நெடிய பாதையில் அவரின் எழுத்துக்கள் பலருக்கு, பல சமயத்தில் பலபலவானது, ஒருவருக்கும் ஒரே சமயத்தில் பலவாகவும், அவருக்கு மறுசமயத்தில் சிலவாகவும் மாறும் தன்மை கொண்டது. கலைடாஸ்கோப்புபோல என கவிதை ஜல்லியடிக்கலாம் (!)
Technically speaking, his writings are “One to one and One to Many and looklike one to many but not the same ”
( ஓழிக ! டெக்னிகல் ஆத்மாக்கள், சாம்பலாகட்டும் சாப்ட்வேர் வார்த்தைகள், பஜனைகள் 1)

துள்ளலான நடை, வழுக்கி போகும் கதைகள், வாழைப்பழ ஊசியான ஜோக்குகள், இரத்தத்தில் ஊறும் புத்துணர்ச்சி, சின்னதாய் மண்டையில் கொஞ்சம் சுரீர் – உணர்கீறீர்களா, நீங்கள் சுஜாதா படிக்கீறீர்கள். உங்கள் மூளையை கொஞ்சமும் கஸ்டப்படுத்தாது எந்தத்தலைப்பாயினும் எந்த நிலையையும் எடுக்காது தேன் தடவி படிக்கிற எல்லாருக்கும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப புரிந்துகொள்ளுமாறு யாரால் எழுதமுடியும். தத்துவங்கள், விளக்கெண்ணெய்கள், வெங்காயங்கள் என்கிற கொம்பின்றி படுகேசுவாலாய் நல்ல சிறுகதைகளை நமக்கேற்ப பேக்கிங்செய்து கொடுக்க சுஜாதாவால் முடியும்.

பிசாவில் சாம்பார் ஊற்றி, நம்ம டேஸ்டுக்கு மாற்றி, நம் வாயில் திணிக்கிற வித்தைக்கு சொந்தக்காரர். ( ஜூஜீக்கண்ணு.. ஆஆ.. காட்டு..)
உலக இலக்கியங்களிலிருந்து கொஞ்சம் இறக்குமதி, மரபின்மீது தெளிவான, தேவையான கால், மாறும் டிரெண்டிற்கேற்ப மாறுகிற எழுத்தின் லாவகம், எழுத்தாளானாய் இவ்வளவுதான் செய்யமுடியுமென்கிற தெளிவு, தனது ஹோட்டல் மெனுவை அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருக்கிற சூட்சுமம், டப்பா காலியாகாது எப்படியாவது எதையாவது திணித்துக்கொண்டேயிருக்கிற, எழுதிக்கொண்டேயிருக்கிற – நம் எல்லோருக்குமான இனிய எந்திரா.. பிகேசியின் தலைவர் என்று சொன்னது மிகையில்லை என்றுதான் படுகிறது. வலிக்காத ஸ்டிராய்ட்.

திஜா எழுத்து, காற்று. ஒளி. புரிகிறது. பயமாயிருக்கிறது. நம் அனுமிதியின்றி நமக்கு தெரியாமலே கூட நரம்பில் புகுந்து உள்ளசைக்கிறது. மெல்ல புகும் சுனாமியது. நம்மில் எல்லாவற்றையும் உலுக்கு, கலைத்து போட்டு வெளியே சிரித்துகொண்டு போகும். போகும் வழியில் கிழிந்த மூஞ்சியை காட்டிக்கொடுத்து போயிக்கொண்டேயிருக்கும். உங்களை கீறி கிழித்து விட்டு நமட்டு சிரிப்பு சிரித்து மூலையில் அமர்ந்து சமர்த்தாய் அமர்ந்திருக்கும். ரொம்ப படுபயங்கரமானது. சிரித்துகொண்டே வருகிற சீரியல் வில்லன்களை விட மோசமானது. என்றாலும் அது உங்களுக்கு வேண்டியதானாய்த்தானிருக்கும். மாஸ்லோ தியரின் பிரமீடுகளின் அடிப்படைதேவைகள் விடுத்த உயர்கட்டங்களை உள்ளடக்கிய, உணர்த்திய யூனிவர்சல் தேவைகளின் இலக்கிய பதிவு.

பக்கத்துவீட்டு சாம்பாரின் ருசி என் அப்பாவிற்கு எப்போதும் வேண்டித்தானிருந்தது. எத்தனை லலிதா ஸகஸ்ரநாமமும், அபிராமி அந்தாதியும் சொல்லியும் கட்டுப்படுத்த முடியவில்லை நாக்கை. அந்த ருசியை எப்படி வர்ணிப்பது, கோபிப்பது, சல்லாபிப்பது.
Writing which you love to hate it..!

ஜெயகாந்தனின் எழுத்து நடை கதைக்கேற்ப வடிவம் கொள்ளும் ; சுஜாதா நடைக்கேற்ப கதையோ என சிலசமயம் யோசிக்கவைக்கும்.
படிப்பாளியின் சென்ஸேசனல் சுகத்தை குறிவைத்து சுஜாதா ; உண்மையான அகத்திற்கு திஜா.

[அட.. சரிப்பா.. கொஞ்சம் புரியறமாதிரி சொல்றங்க.. பட்டரு. எனத்திட்டுகிற என் அடுத்த டெஸ்க் நண்பனுக்காக ]
சுஜாதா – காதலிக்கு முத்தம் ; மனைவியினோடான முயக்கம் ; வயதான துணைவியின் சிசுருஸை
ஜெயகாந்தன் – (வேணாம், விட்டுருவோம்..)
திஜா – அடுத்தவன் வீட்டின் ஓட்டுப்பிரித்து இறங்குகிற கள்ளத்தனமான திரில் ; கற்பனை குஜால்

உடுப்பி சைனீஸ் ரவா மசாலா ; மெக்டெனால்டின் பிரெஞ்ச் பிரைஸ் ;பிசாஹாட்டின் பிசா – சுஜாதா ;
என்ன அழகு, மெது. அற்புதமான உற்சாக பாக்கிங் ; டாப்பிங்க்ஸ், எந்த டிராபிக்கிலும் குறிப்பிட்டநேரத்தில் டெலிவரி. என்னால் அடிக்கடி பிசா சாப்பிடாமல் இருக்கமுடியவில்லை. அதன் டாப்பிங் வயிற்றிக்கு நல்லதில்லை, என்கிறாள் அம்மா. எல்லாரும் சாப்பிடுகிறார்கள். நல்லாயிருக்கிறதென்கிறார்கள். உண்மையில் எனக்கும் நல்லாத்தானிருக்கிறது. சாப்பிடுகிறேன். கூடிய சீக்கிரம் அலுத்துவிடுமென்கிறார்கள். ஆசைப்பட்டு, அலுத்து, மறுபடியும் ஆசைப்பட்டு.. இழவு கொள்கையாயென்ன, எழுத்துதானே.
எதிலும் ஒரு சேஞ்ஜ் வேணுமப்பா.. !

வீட்டுப்பாயசம் – ஜெயகாந்தன். அம்மா மில்க்மெய்ட் இல்லாது செய்த அந்த பாயசத்தின் ஆழம் இப்போதில்லை.
அது அமைதியாய், ஆழமாய், அர்த்தபுஸ்டியாய் இருந்ததாய் எனக்குப்பட்டது. திவச பாயசத்திற்கும், பிறந்தநாள் பாயசத்திற்கும் எப்படித்தான் அவளால் அதே பாத்திரத்தில் வித்தியாசம் கொடுக்கமுடிந்தது. அவள் கொடுத்தாளா. நான் தான் கற்பித்துக்கொண்டேனா ? அவள் பண்ணிய பாயசத்தோடு அவளின் ஆளுமைகளின் மணம்தான் என்று நீங்கள் பெரிதாக கண்டுபிடித்தாலும் கூட.. No prizes for guess..

சுருக்கமாக புரிதலுக்காக, சுஜாதா 20-20 ; திஜா ஒண்டே ; ஜெயகாந்தன் டெஸ்ட் மேட்ச் ( என்ன கைப்புள்ள, பெரிசா ஏதோ பேசிட்டு
விசயத்தை இக்குணுண்டா சுருக்கிட்ட.. முணுமுணுக்கிறான் என் அடுத்த டெஸ்க் நண்பன்)

அதிகமாய் எழுதாதல் ஆதவனை இந்த ரேசில் சேர்த்துக்கொள்வது சரியன்று. யதார்த்தவாத ரேசில், கதையை மறுத்த, கதையிலிருந்து
கதையை வெளியெடுத்த ஆதவனின் எழுத்துகளிலிருந்து மேற்சொன்ன ஜாம்பவான்கள் ரொம்பதூரத்தில் விலகியிருக்கிறார்கள்.

ததாஸ்து !

Download Completed !!


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி