தேசியம் என்பது கதையாடலா?

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

நடராஜா முரளிதரன்


தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம் உள்ளன. நாடுகளுக்கு நாடுகள், தேசங்களுக்குத் தேசங்கள் இச் சொற்றொடர் குறித்த வியாக்கியானங்களோ அல்லது வரைவிலக்கணங்களோ வேறுபட்டுக் காணப்படுகின்றன.
மொழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தேசங்களும், தேசியங்களும் நவீன வரலாற்றில் பிறப்பெடுத்தமை குறித்த வரலாறுகளைப் பதினெட்டாம்; நுற்றாண்டு கால ஐரோப்பிய அரசியல், அறிவியல் புரட்சிகளின் வெளிப்பாடுகளாகவே ஆய்வாளர்கள் நோக்குகின்றனர். தேசியத்தின் எழுச்சியும், மதச் சிந்தனைகளின் வீழ்ச்சியும் சமகால அளவில் நிகழ்ந்ததன் விளைவாகப் பதினெட்டாம் நூற்றாண்டு கால ஐரோப்பாவில் நவீன தேசங்கள் தொடர்பான கட்டுமானங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தமையை உணர முடியும்.
இத்தகைய நவீன தேசங்களின் எழுச்சியில் காலனியாதிக்கம், மத நிறுவனங்களின் ஏகபோகம், முடியாட்சி போன்ற அதிகாரபீடங்களுக்கெதிரான கிளர்வுகளின், எழுச்சிகளின் உணர்வுகள் ஊட்டம் பெற்றிருந்தன. ஆயினும் தேசியம் என்பதானது மரபு, இனம், மதம், மொழி போன்ற ஒருமைப்பாடுகளிலிருந்து எழும் அல்லது கட்டப்படும் பொதுவான உளவியல் சார்ந்த உணர்வுத்தளத்தையே பெரிதும் சார்ந்து நிற்கிறது.
அவரவர் முகிழ்த்து வந்த அரசியல் அடியினையொற்றித் தேசிய இனம் தொடர்பான கருத்துருவாக்கங்கள் எம்மால் பேசப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் தேசிய இனம் தொடர்பாக நான் வரித்துக் கொண்டிருந்த கருத்தமைவானது மொழி, பண்பாடு, தொடர்ச்சியாக வாழ்ந்த நிலப்பிரதேசம், தங்களுக்கேயுரித்தான பொருளாதார வாழ்வு போன்ற வரைமுறைகளைக் கொண்டிருக்கும் மக்கள் குழுமங்களைத் தேசிய இனங்களாக வரையறுத்துக் கொள்ளலாம் என்பதாகவே அமைந்தது. இங்கு மதம் இணைந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுவூட்டுவதே நான் சார்ந்திருந்த அரசியல் போக்கின் நலன்களுக்கு அமைவாக இருந்தன.
“தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்பட வேண்டியவை, மாற்றியமைக்கப்பட வேண்டியவை என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து” எனத் தனது உரையொன்றில் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிட்டிருந்தார்.
மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் அமைவிடம் போன்ற பொதுக் காரணிகளை அடிப்படையில் வைத்துக் கட்டப்பட்ட தேசங்களுக்குள்ளேயும் புதியவகைச் சிக்கல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.
வர்க்கப்பிரச்சினை தீர்க்கப்படுழ் சமூகங்களில் இன, மத, மொழி முரண்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் அழிந்தொழிந்து போய்விடும் என்பதான சூத்திரத்தையே இடதுசாரிகளில் பெரும்பாலோனோர் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள்.
மார்க்சீய-லெலினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சோசலிச நாடுகளிலேயும் கூட சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடக்குதலுக்கு உள்ளான வரலாறுகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடையே இங்கு நான் விசாரிப்புக்கு உட்படுத்த முனையும் விடயமானது ஈழத்திலே வாழுகின்ற தமிழ்பேசும் மக்களைத் தேசியம் என்ற வேலிக்குள் அடைப்பது தொடர்பான விடயத்தை ஒட்டியதெனலாம்.
ஈழத்தமிழ்த் தேசியமாக உச்ச வளர்ச்சியுற்ற யாழ்ப்பாணியம் கீழ்த்தட்டு மக்கள் குறித்துக் கவலை கொள்ளவில்லை – கிழக்கு மக்கள் குறித்தோ, முஸ்லீம் மக்கள் குறித்தோ அக்கறைப்படவில்லை – தலித்துக்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்கள் மாற்றுக்கருத்தாளர்களால் ஈழத்தமிழ்த் தேசியத்தை நோக்கி முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வளர்ச்சியுறும் எத்தேசியத்துக்குள்ளும் அதிகாரசக்திகள் தங்கள் நலன்களைப் பேணுமுகமாக மரபுகளின் காத்தலை, பழமையின் தொடர்ச்சியை நிறுவுதலுக்கான அவாவினைக் கொண்டிருப்பர். மறுபுறத்தில் தேசிய இனவிடுதலையென்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையல்ல. விடுதலை குறித்த பயணத்தில் ஒரு படிக்கட்டமாக அதனை ஊடறுத்தலே ஏற்புடையதாக அமையும்.
“உலகம் கிராமமாகச் சுருங்கிவிட்டது”, “தேசம் என்ற கருத்தமைவு உடைந்து நெடு நாளாயிற்று” என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் வீரியம் பெற்றுவரும் இன்றைய உலகச் சூழுலிலும் கூடத் தேசங்களுக்குள்ளும், தேசியங்களுக்குள்ளும் காலகாலமாக நசிக்கப்பட்ட மக்கள் குழுமங்கள் தங்கள் நியாயத்தீர்ப்புக்காக குரலெழுப்புவதைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதுதான்.
அதேவேளை இந்த முரண்பாடுகளையெல்லாம் வெளித்தாண்டிப் பலம் பொருந்திய இன்னுமோர் சக்தி இந்த முரண்தழைகளுக்குள் சிக்குண்ட சமூகங்களை அடக்குதலுக்கு உட்படுத்த முனையுமாக இருந்தால் அவ்வாறான சமூகங்கள் எடுத்தாள வேண்டிய நிலைப்பாடுதான் என்ன? இவ்வாறான எனது கூறலைப் “பச்சை யாழ்ப்பாணியம்” என்று பிரகடனப்படுத்த உங்களில் பலர் துடித்தெழலாம்.
எவ்வாறு ஒடுக்குதலுக்கு உட்பட்டதால் விழைந்த தேசியவாதம் குறுந்தேசியவாதமாக மாறிவிடக்கூடாதோ அதே சமாந்தரத்தில் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னோக்கி இழுத்து நிறுத்துகின்ற குளறுபடிகளையும் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவதாகக் கூறிக்கொள்வோர் நிகழ்த்தி விடக் கூடாது.
கடந்த 25 வருடங்களாக மக்களே மகத்தான சக்திகள், அவர்களே இறுதியில் வரலாற்றைத் தீர்மானிப்பார்கள் என்று மொழிந்து வந்தபோது ஏற்படாத சந்தேகம் இன்று வரலாறு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுவதாகவோ அன்று யாழ் குடாநாட்டு மத்தியதர வர்க்கத்தின் அபிலாசைகளுக்காகத் திணிக்கப்பட்ட “பெருங்கதையாடலாகவோ” தமிழ்த் தேசியம் சித்தரிக்கப்படுவதும் பல முனைகளில் வiலாற்றுத்திரிபுகளும், மிகைப்படுத்தல்களுமாய் நிறைந்து வழிகின்றது.
சமூக விடுதலைக்கான போர்த்தொடுப்பில் தேசியக் கருத்தமைவின் பெறுமானங்களைக் கேள்விக்குட்படுத்துதல் அதன் குறைபாடுகள் குறித்த பரிமாணங்களை அளவைப்படுத்துதல் என்பவை குறித்து எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. மாறாக அவற்றை முற்றிலும் நிராகரிப்பது குறித்தோ அவையுள்ளடக்கி வைத்திருக்கும் முற்போக்குக் குணாம்சங்களை மறுதலிப்பது குறித்தோ பெரிதும் அச்சப்படுகின்றேன்.


nmuralitharan@hotmail.com

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)