பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

பாஸ்டன் பாலாஜி



1. இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: ‘ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தொல். திருமாவளவன் கலந்து கொள்ளும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

செல்பேசி சுழன்றது. “வணக்கம். இன்று நான் திமுக அணியில் இருக்கிறேன். பா.ம.க ஆதரவு நிலைப்பாடை அறிய எண் 2-ஐ அழுத்தவும். தற்போதைய குஷ்பூ ‘பெரியார்’ பட கண்டன அறிக்கையை கேட்க எண் 3-ஐ அழுத்தவும். ‘அன்புத் தோழி’ வெளியீட்டுத் தகவல்களைப் பெற எண் 4-ஐ அழுத்தவும். என்னைத் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எண் 5-ஐ அழுத்தவும். என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள எண்-பூஜ்யத்தை அழுத்தவும்” என்னும் தானியங்கி செய்தி வாசித்தது.

ஜீரோவைத் தொட்டவுடன் தொல். திருமா கிடைத்தார். கருத்தை வினவினோம். “மாதத்துக்கு 20,833.33 மட்டுமே பெறுபவர்கள் அவர்கள். இவர்களை எப்படி க்ரீமி லேயர் என்று சொல்லலாம்? திரைப்படம் பார்க்க சென்றால் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எம்.ஜி.எம் சென்றால் இன்னும் சில ஆயிரங்கள். பாலில் க்ரீமி லேயர் இருக்கும். இவர்களோ கிஷ்கிந்தாவில் ஸ்க்ரீம் மட்டுமே செய்பவர்கள். நான்கு வாரங்கள் கொண்ட மாதத்தில் கேளிக்கைக்கே எல்லா சம்பளமும் செலவழிக்கும் இவர்களின் வழித்தோன்றல்களுக்கு சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது.” என்று பகிர்ந்து கொண்டார்.

2. மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணி கேரளாவுக்கு 2-வது மந்திரி: ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு தற்போதைய முதல் மந்திரி அச்சுதானந்தன் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

‘நமது எம்.ஜி.ஆர்’-ஐப் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மயங்கி விழுந்ததாக விஷயமறியாத வட்டாரங்கள் என்னிடம் சொன்னார்கள். “அம்மாவிற்கு அதிர்ச்சியாகாத செய்திகளைத்தான் ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரசுரிக்கும். ஆனால், இந்த செய்தி எடிட்டரின் பச்சை மையால் திருத்தப்படாமல் தப்பித்து விட்டிருக்கிறது. அம்மா அயர்ச்சி ஆனவுடன், என்ன செய்தி என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நாங்களும் புரட்டினோம். நமது அண்டை மாநிலத்தார் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.

ஏகே ஆண்டனியோ காங்கிரஸ். அச்சுதானந்தனோ கம்யூனிஸ்ட். எதிர் துருவத்தைப் பாராட்டலாமா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாழ்த்தியிருக்கிறார்? ‘உள்ளூரில் இருப்பதற்கு பயப்பட்டுக் கொண்டு ஓடி ஒளியும் எதிர்க் கட்சி கரப்பான் பூச்சி’ என்று ரைமிங்காகவோ, ‘ஏற்கனவே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர்தானே? நாளைக்கே பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டு துண்டுக் கடுதாசி கொடுக்கப் போகும் அரை வேக்காடு’ என்று ஏக வசனமாகவோ வசைமொழியல்லவோ வீசியிருக்க வேண்டும்?

ஆனால், தேசிய அளவில் தன் அரசியல் முதிர்ச்சியை கொண்டு செல்வதற்கு இது ஏற்ற சமயமாக அம்மா கருதுகிறார். கூடிய சீக்கிரமே லல்லு போல் ‘அரசியல் பாடம்’ எடுக்க முயற்சிகளை முனைவார்” என்று வட்டாரம் முடித்துக் கொண்டது.

3. விஜயகாந்த் பற்றி விமர்சனம்: கண்ணிய குறைவாக இருந்தால் ஜெயலலிதா மீது நடவடிக்கை: சபாநாயகர் பேட்டி: “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு பொறுப்புடன் வந்து செல்கிறார். சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர் குடித்து விட்டு வருவார் என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது தமிழக சட்டசபையின் ஜனநாயக மாண்பை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழக மக்கள், குடித்துவிட்டு யார் சட்டப் பேரவைக்குள் வருகிறார்கள் எனத் தெரியாமல் எல்லா உறுப்பினர்களையும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உருவகப்படுத்தி பார்க்கத் தொடங்கியுள்ளனர்.” என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக மக்களைத் தொடர்பு கொண்டோம். விளம்ப ஆரம்பித்தார். “ஆறரை கோடிப் பேர்களும் ஒருமித்த கருத்துடனேயே இருக்கிறோம். விஜய்காந்த் திரைப்படத்தில் நடிப்பதை அப்படியே நிஜ வாழ்வில் நடத்திக் காட்டுவார் என்று நம்புவதைப் போலவே, புரட்சித் தலைவி ‘குடிகாரர்’ என்று சொன்னவுடன், அனைவருக்கும் அந்த வசதி கிட்டுவதாகவும், பயன்படுத்துவதாகவும் நம்புகிறோம். எங்களுக்குத்தான் குடிக்க தண்ணீரும் கிடைப்பதில்லை. காசு கொடுத்து வாங்கும் கோக்கிலும் நச்சுப்பொருள் பாய்ந்து தவிக்க விடுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களாவது வசதியாக, தாகசாந்தி செய்து கொள்பவர்களாக எண்ணினோம்.” வாதம் புரிந்தவரின் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனது. நிறுத்திவிட்டார்.

பீட்டர் அல்ஃபோன்ஸ் வந்தார். “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்று நாங்கள் சட்டமன்றத்தைப் பாங்குடன் நடத்துகிறோம். கூட்டணித் தலைவர் கலைஞர் தன்னுடைய பதவிப் பித்தைக் கூறுவார். அதற்கு எதிரணித் தலைவி செல்வி ஜெயலலிதாவும் ஆட்சி மோகத்தை அரங்கேற்றி பதிலளிப்பார். நடுநடுவே நாங்களும் சமயத்திற்கேற்ப புழுதி வாரி தூற்றியும் புகழை வாரி துதிபாடியும் சபை நடவடிக்கையில் பங்கேற்போம்.

எவ்வளவு குடித்தாலும் எங்களுக்கு போதையேறுவதில்லை. குடித்தால்தான் போதையேறும் என்னும் நிலையிலுமில்லை. எனவே தெளிவில்லாமல் பேரவைக்குள் வருகிறார்கள் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்” என்று நிதானமாகவே காணப்பட்டார்.

4. அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வெளிப் பணி ஒப்படைப்பு (அவுட் சோர்சிங்), ப்ரைவடைசேஷன் ஆகியவற்றை எதிர்த்து அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள்.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலத்தை முதலில் பிடித்தோம். “இப்போது கூடப் பாருங்க சார்… நான் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். ‘வெங்கடாசலா…’ என்று ஒரு முறை அழைத்தவுடனேயே கூவிய குரலுக்கு செவி மடுத்தேன். இது எப்படி முடிகிறது? ஏகப்பட்ட பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். எனக்கு இன்னிக்கே வேலை போனாக் கூட சாகிற வரைக்கும் பென்ஷன் சலுகைகள் உண்டு. உங்க சாஃப்ட்வேரில் agile methodologyன்னு ஜல்லியடிப்பீங்களே… ஒத்த வேலைக்கு நாலு பேரு கணினிய சுத்தி நின்னு கும்மியடிப்பீங்களே! அந்த மாதிரி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க சொல்றோம். தப்பா? ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் விகடன்.காம் சந்தாவா கட்ட சொல்லி வறுபுத்தறோம்? ஃப்ரீயா கிடைக்கறத மட்டும் படிச்சு, தேமே என்று இருக்கும் எங்களை வீணாக உசுப்பி விட்டிருக்கிறார்கள்”.

அவரைத் தணிக்க முயன்ற அடிப்பொடியை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. ‘வல்லவன்’ டிக்கெட் கிடைத்ததும் வெங்கடாசலம் கிளம்பிப் போனபின், நுழைவுச்சீட்டு வாங்கி வந்திருந்த அந்த கடைநிலை சிப்பந்தியை அணுகினோம். “எனக்கு பயமாக இருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தினால், வங்கி ஊழியர்களின் தேவையை மக்களும் நிர்வாகமும் உணர்ந்து விடுவார்களோ என்னும் கவலைத் தொற்றிக் கொண்டுள்ளது. பணியே செய்யாமல் டபாய்ப்பதை எல்லோருக்கும் புட்டு புட்டு வைத்து, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்ல’ என்பது போல் சிறுபிள்ளைத்தனமாக ஸ்டிரைக் செய்கிறார்கள். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்று வருந்தினார்.

-பாஸ்டன் பாலாஜி

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி