இந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

புதுவை ஞானம்



இந்தக் கட்டுரை விதி வசத்தால் குடிகாரர்களான என் போன்ற குடியர்களுக்கானது. நல்லவர்கள் விலகிக்
கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.நாங்கள் குடிக்கும் மது போத்தல்களில் IMFL -அதாவது
INDIAN MADE FOREIGN LIQUOR அதாவது வெளி நாட்டு மதுவகை கலந்து செய்யப்பட்ட இந்திய மது என்று
ஒரு வாசகம் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

இவற்றைக் குடிக்கும் பாவப்பட்ட இந்திய ஜன்மங்கள் எத்தனை விதமான நோய்நொடிகளுக்கு ஆளாகி அணு
அணுவாய் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அரசுக்கும் தெரியும் மருத்துவர்களுக்கும் தெரியும். ஆனால்
நமது இந்தியக் கலாச்சாரம் மது வகைகளுக்கு எதிரானதல்ல என்பதும் மிகச் சிறந்த ஆரோக்கியமான மது வகை
மருத்துவத்தில் குறிப்பாக ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன் படுத்தப்படுவதும் உலகறிந்த உண்மை.

இனி நாம் நமது முன்னோர்கள் தயாரித்த INDIAN MADE INDIAN LIQUOR பற்றிய சில பல விவரங்களைத்
தெரிந்து கொள்ள முனையலாம்.

தேனும் முந்திரிப் பழச்சாறும் மதுவெனப்படும்.

ஆடு திண்ணாப்பாளை திப்பிலி என்னும் இவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து அதனோடு கருப்பஞ்சாறு
வெல்லம் தேன்பாகு நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்னும் இவற்றுள் ஒன்றைக் கலந்து ஒரு திங்கள் ஆறு
திங்கள் அல்லது ஓர் யாண்டு வரை வைத்துப் பின் அதனோடு சிற்பிடம் வெள்ளரிப் பழம் கரும்பு மாம்பழம்
நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றிற் கலந்தேனும் கலவாமலேனும் அமைக்கப் படுவன சாராய வகைகளாம்.

( ஓர் யாண்டு வரை வைக்கப்படுவது தலையாயது என்பதும் ஆறு திங்கள் வரை வைக்கப்படுவது இடையாயது
என்பதும் ஒரு திங்கள் வரை வைக்கப் படுவது கடையாயது என்பது கருத்து.(சிற்பிடம் : ஒருவகை கொடிப்பழம்.)

புளிப் பெருங்களா, மா, மாதுளை, சிற்றிலந்தை, பேரிலந்தை, இனிப்பிலந்தை, இனிப்புப்புளி, முதலிய இவற்றின்
பழச்சாறுகள் புளிப்புச்சுவைச்சாறுகளாகும்.

தோப்பி தேறல் பிழி அரிட்டம் மைரேயம் மது இவைகளைப் பற்றி இனிக் கூறுவாம் :–

ஒரு தூணி நீர் அரை மரக்கால் அரிசி மூன்றுபடி மதுக்குழம்பு இவற்றின் கலவை தோப்பி எனப்படும்.

பன்னிரண்டு மரக்கால் மா ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை கனிகள் மணக்கூட்டு இவைகளின்
கலவை தேறல் எனப்படும்.

ஒரு துலை விளம்பழம் ஐந்து துலை பாகு ஒரு படி தேன் இவைகளுடைய கலவை பிழி எனப்படும். காற்கூறு
மிக்கது தலையாயது. காற்கூறு குறைந்தது கடையாயது.

வேற்றுமைகளுக்கு ஏற்ப ( வேற்றுமைகள் =: நோயின் வேறுபாடுகள் ) மருத்துவரால் தனித்தனி கூறப்பட்ட
அளவினையுடைய கலப்பு அரிட்டம் எனப்படும்.

கொதிக்க வைத்த மேடசிருங்கிப்பட்டையின் சாறு வெல்லப்பொடி திப்பிலி மிளகு அல்லது திரிபலை இவற்றின்
கலவை மைரேயம் எனப்படும்.வெல்லம் சேர்ந்த எல்லவகைக்கும் திரிபலைக்கூட்டு உண்டு. (திரிபலை =:கடுக்காய்
தான்றிக்காய், நெல்லிக்காய்.)

கொடி முந்திரிச்சாறு மது எனப்படும். அம்மது காபிசாயனம் ஆரகூரகம் என நாடு பற்றி இரு வகைப்படும்.

காய்ச்சியதாதல் காய்ச்சப்பெறாததாதல் ஒரு தூணி உழுந்துக்கழுநீர், மூன்றிலொரு கூறு மிக்க அரிசி பெருங்
குரும்பை முதலியன ஒவ்வொரு கருடம் இவற்றின் கலவை மதுக்குழம்பு எனப்படும்.

தோப்பி தேறல் என்னுமிவற்றிற்குப் பங்கம்பாளை வெள்ளி லோத்திரம் யானைத்திப்பிலி ஏலக்காய் வால்மிளகு
அதிமதுரம் கொடிமுந்திரிப்பழம் ஞாழற்பூ மரமஞ்சள் மிளகு திப்பிலி என்னும் இவை தனித்தனி ஐந்து கருட அளவு
கூட்டுப் பொருள்களாம்.அதிமதுரக் கொதி சாற்றோடு கலந்த கடசருக்கரை நிறம் பயப்பதாகும்.

இலவங்கப்பட்டை கஞ்சாங்கோரை வாயுவிளங்கம் யானைத்திப்பிலி இவை தனித்தனியே ஒவ்வொரு கருடமும்
பாக்கு அதிமதுரம் கோரைக்கிழங்கு வெள்ளி லோத்திரம் இவை தனித்தனியே இரண்டிரண்டு கருடங்களும் பிழியின்
கூட்டுப் பொருட்களாம்.இவற்றின் பத்திலொரு கூற்றை முலப் பொருளிலே சேர்த்தல் வேண்டும்.

தேறலுக்குக் கூறிய கலவையே வெண்கள்ளுக்குமாம்.

மாங்கள், தீத்தேறல், மதுக்குழம்பு மிகுதியாகச் சேர்க்கப்பட்ட பெருங்கள் மிகைக்கூட்டு இவை கள்ளின் வகை
களாம்.

கருடசருக்கரையை வறுத்துப்பொடித்துப் பெருங்குரும்பை புரசு பத்தூரம் ஆடு தின்னாப்பாளை புன்கு பால்மரம்
இவற்றின் கொதிசாற்றில் நனைத்து வெள்ளி லோத்திரம் கஞ்சாங்கோரை வாயுவிளங்கம் பங்கம்பாளை கோரைக்
கிழங்கு கலிங்கநாட்டு யவம் மரமஞ்சள் கருநெய்தல் பெருந்சதகுப்பை நாயுருவி ஏழிலைப்பாலை வேம்பு மலையத்தி
இவைகளின் பொடியைப் பாதியளவு சேர்த்து ஓர் இறுக்கிய பிடியளவு பொடியை ஒரு காரியளவுள்ள எவ்வகையான
கள்ளிற்போட்டாலும் அது அரசன் பருகுவதற்கு ஏற்றதாகத் தெளிவடையும்.ஐந்து பலம் வெல்லப்பாகு சுவை
மிகுதியிற் பொருட்டு இதிற் கலத்தல் வேண்டும்.

குடிமக்கள் சிறந்த காரியங்களின் பொருட்டு வெண் கள்ளையும் மருந்துக்காக அரிட்டத்தையும் பிறவற்றையும்
செய்து கொள்ளலாம்.

திருவிழா கூட்டம், விரும்பிய தெய்வ வழிபாடு இவைகளில் நான்கு நாட்கள் கள் குடிக்க விடலாம். அந்நாட்களில்
அநுமதி பெறாதவர்களுக்கு இவற்றின் முடிவுகாறும் ஒவ்வொரு நாட்கும் உரிய தண்டனை விதித்தல் வேண்டும்.

சிறுவர்களும் பெண்டிர்களும் கள் மதுக்குழம்பு இவற்றின் தொழிலைச் செய்தல் வேண்டும்.

அரசன் பொருளாலன்றித் தம் பொருளால் கள் செய்வோர் கள் தோப்பி அரிட்டம் மது பழச்சாறு கருப்பங்கள்
இவைகளுக்கு நூற்றுக்கு ஐந்து விகிதம் உல்கு கொடுத்தல் வேண்டும். (உல்கு = வரி Tax )

ஆக நம் முன்னோர்கள் ஆரோக்கியமானதும் இயற்கையானதுமான நல்ல குடி வகைகளை தயாரித்து அருந்தி
அனுபவித்து இருக்கிறார்கள். இவற்றின் தயாரிப்பு விநியோகம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. எரி
சாராயத்தை வெவ்வேறு நிறங்களில் குடித்து குடி வெந்து நொந்து அணுவணுவாய்ச் செத்துக் கொண்டிருக்கும்
லட்சக்கணக்கான உங்கள் சகோதரர்களில் ஒருவனாகிய புதுவை ஞானத்தின் புலம்பல் இது.


ஏதோ கோளாறாகிவிட்டது

ஏதோ கோளாறாகிவிட்டது என் வாழ்க்கையில்
முதுமை நெருங்கிக்கொண்டிருப்பது
காரணமாயிருக்கலாம்_ ஏற்கனவே நான்
விட்டு விட்டேன் நாட்களைக் கணக்கிடுவதை .

கவனமற்று வெறித்துப் பார்க்கிறேன் அடிக்கடி
இப்படியொரு குழப்ப மூட்டத்தில்
மூழ்கக் கூடாது…….. நான்……….
வாழவேண்டிய வகையில் வாழவில்லை.

உண்மையிலேயே வாழ்க்கை என்னைச்
சிதைத்து விட்டதாக எண்ணிக் குடிக்கிறேன்
தேவைக்கும் அதிகமாகவே குடிக்கிறேன்.
மனைவியைத் தவிர மற்ற பெண்களையும்
நேசிக்கிறேன் – இருந்தபோதிலும்
பரிதாபகரமாகவும்வரட்சியாகவும் தான் இருக்கிறது
என் வாழ்க்கை.

தொணியிழந்து விட்டது என் வாழ்க்கை
திரிகிறேன் எங்கேயும் எப்போதும்
காரண காரியமின்றி.
தணலற்றும் தளர்ந்தும் மதிப்பிழந்தும்
தேய்ந்து போயும் வாழ்கிறேன் ஒரு
காயலான் கடைச் சரக்கு போல.
ஏதோ கோளாறாகிவிட்டது என் வாழ்வில்.

பதுங்கிப் பதுங்கி நடக்கிறேன்
பழைய நண்பர்களின் பார்வையிலிருந்து
தப்பித்தவாறும்……
பொறுக்கிகளின் சகவாசத்திலும்.
ஆபத்தானதும் முட்டாள் தனமானதும்
அல்லவா இது ….?.

மூலம் :JUOZAS MACE VICIUS ( 1928 )
LITHUANIA.

தமிழாக்கம் :புதுவை ஞானம்.

puthuvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்