கற்பு என்னும் மாயை

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

கூத்தாடி


குஷ்பு விவகாரம் நாளிதழ்களிலும்,டி.விகளிலும் கலக்கிகொண்டு இருக்கிறது,ஆளாளுக்கு கற்பு பற்றியும் ,தமிழ் தாய்மார்களை அவமானபடுத்தியதாய் கூறப்பட்ட குஷ்புவின் கருத்து வெளியாகிய தமிழ் இந்தியா டூடே படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் கிடைக்கும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்வேக்கு பதிலளிக்கையில் சொன்னக் கருத்துக்கள் தான் பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிகிறது.

விகடனிலிருந்து ‘ பெண்கள் திருமணமாகும்ப் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று எண்ணங்களில் இருந்து நமது சமுதாயம் விடுதலையடைய வேண்டும்.கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ‘

இந்த கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை.கற்பை கன்னித்தன்மையோடு மட்டும் பொருத்திப் பார்க்கும் சமூகத்தின் குறைபாட்டின் வக்கிரப் பார்வைதான் குஷ்புவின் இந்த கருத்துக்கான எதிர்வினை.கற்பு என்னும் தமிழ் வார்த்தையின் சமமான வார்த்தையாக நான் பார்ப்பது fidelity யைத்தான் virginity யை அல்ல .பெண்களின் கன்னித்தன்மைப் பற்றி கவலைப் படும் சமூகம் ஆண்களுக்கான எந்த வரையறைகளையும் வைப்பதில்லை. இந்த தமிழ் கலாச்சார அரசியலில் பெண்ணியம் பேசும் எவரும் குஷ்புவுக்கு பரிந்து வராதது என்ன அரசியலோ.

ஆண்வழிச் சமூகத்தின் அவலங்களில் இந்த கற்பு நடுத்தர மக்களால் தாண்ட முடியாத லட்சுமணக் கோடு.கொடுமை என்ன வென்றால் இதை உயர்த்திப் பிடிக்கும் ஆண்களில் முக்கால்வேசிப் பேர் கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்ற கருத்தாக்கத்தை மதிப்பவர்கள் அல்ல.

பெண்ணியம் பேசும் பிரபலங்களின் மவுனம் ஆச்சரியப்பட வைக்கிறது.நியாத்தில் அவர்கள் குஷ்புவுக்கு பரிந்து வர வேண்டும்.அவர்களின் மவுனம் அரசியல் அல்லது கோழைத்தனம்.

உணர்ச்சிகள் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொது தானே .அதில் ஒருவர் மட்டும் அடக்கி வைத்துக் கொண்டு தமிழ் காலாச்சாரத்தை காக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.இன்று கல்யாண வயது பொருளாதார காரணங்களால் தள்ளிப் போகும் போது ,சினிமா ,டி.வி க்களில் காணும் விரசம் தூண்டும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு கன்னிமையை தக்க வைத்துக் கொள்வது கடினம் தான்.பெரு நகரங்களில் disco கலாச்சாரத் தில் கற்பு எனும் மாயை விரைவில் தகர்ந்து விடும் .அதுவே சிறு நகரங்களின் அருகில் இருக்கும் அருவிகளிலும் ,பூங்காகளிலும் கொஞ்சம் தொலைந்து கொண்டுத்தான் இருக்கிறது.

இராம தாஸ்,திருமா விடம் இருந்து இதைவிட எதுவும் எதிர் பார்க்க முடியாது.தங்கர் விவகாரத்தில் குஷ்பு மேல் கடுப்பில் இருந்த அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.ஆனால் தங்கர் விவகாரம் இல்லாதிருந்தாலும் இதைத்தான் அவர்களிடம் இருந்து எதிர் பார்க்க முடியும் ,அவர்களின் முற்ப்போக்கு சிந்தனை ஆண்களுக்கு மட்டுமே. ‘அடக்கி வைக்கப் பட்ட பால் உணர்ச்சி தான் உலகின் அனைத்து வன்முறைக்கும் காரணம் ‘ என்ற (யார் சொன்னது ,மறந்து விட்டது ) கருத்து இவர்களின் வன்முறை போரட்டத்துக்கும் பொருந்துமோ ?

தமிழ் கலாச்சாரத்தின் காவலர்களாக காட்டிக் கொள்ளும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ,தயைக் கூர்ந்து தமிழ் கலாச்சாரத்தை ‘தொடைகளுக்கு நடுவில் சுருக்கி விடாதீர்கள் ‘ .

http://koothaadi.blogspot.com/

Series Navigation

கூத்தாடி

கூத்தாடி