சங்கம் சரணம் கச்சாமி

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திரு.தொல்.திருமாவளவனின் பேச்சு எவ்விதத்திலும் நியாயமற்றதாக இருந்தது. திண்ணிய நிகழ்வில் தொடர்புடைய ஆதிக்கசாதியினர் ஊரறிந்த மதச்சார்பற்ற கட்சியுடன் தொடர்புடையவர்கள். இக்கட்சித்தலைமையுடன் பல மேடைகளை பகிர்ந்துவரும் திருமாவளவனுக்கு அவரிடம் இக்கேள்விகளை கேட்கத் தோன்றவில்லை. ஏன் திண்ணிய நிகழ்வின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட அவர் தனது ‘பெயர்மாற்ற மாநாடுகளுக்கு ‘ செலவிடும் உழைப்பு, செல்வம் ஆர்வம் ஆகியவற்றில் நூற்றில் ஒருபங்கு செலவிட்டிருப்பாரா தெரியவில்லை. ஆனால் ‘தங்களை ஹிந்துக்கள் என கூறுபவர்களை ‘ நோக்கி வினா மேல் வினா தொடுக்கிறார். ஹிந்து சமுதாயத்தின் சார்பில் திரு.வரதன் அவர்கள் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில் ஹிந்து இயக்கங்கள் – குறிப்பாக சங்க அமைப்புகள்- ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆற்றும் பணிகள் சங்கத்தின் சமுதாய பார்வை ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட திரு.தொல்.திருமாவளவனின் பேச்சு ஒர் வாய்ப்பினை தருகிறது.

I

ஒரு கடுமையான புள்ளியிலிருந்து பயணத்தை தொடங்கலாம். 1987இல் மகாராஷ்ட்ர அரசாங்கம் பாபா சாகேப் அம்பேத்கரின் ‘ரிடில்ஸ் ஆஃப் ராம் அண்ட் கிருஷ்ணா ‘ எனும் அத்தியாயம் அடங்கிய நூலை வெளியிட முடிவு செய்தது. சரத்பவாரின் கூட்டாளியும் ‘முற்போக்கு ‘வாதியுமான மாதவ் கட்கரீ இது குறித்து சர்ச்சையை கிளப்பினார். உண்மையில் சரத்பவாருக்கும் எஸ்.பி.சவாணுக்குமிடையிலான பதவிப்போட்டியில் சவாணுக்கு தலைவலியை உருவாக்க ‘சோசலிச ‘ வாதிகள் செய்த உக்தி இது. சிவசேனை களமிறங்கியது. ‘ரிடில்ஸை ‘ நீக்க கோரியது. பிரகாஷ் அம்பேத்கர் உட்பட தலித் தலைவர்கள் மறுபுறம் களமிறங்கினர். போட்டி பேரணிகளும், வசை பாடல்களும் நடந்தன. இந்நிலையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் எடுத்த நிலைபாடானது சங்கம் சமுதாய பிரச்சனைகளை எவ்விதம் அணுகுகிறது என்பதனை தெளிவாக்கும். சங்க பத்திரிகையான ‘விவேக் ‘கில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் அம்பேத்கரின் ‘ரிடில்ஸ் ‘ நான்காவது தொகுதியிலிருந்து அகற்றப்படகூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. சங்கத்தின் மூத்த தலைவரான ஸ்ரீபதி சாஸ்திரிகள் கூறினார், ‘நான்காம் தொகுதியில் ராமர் கிருஷ்ணர் குறித்த அத்தியாயம் இடம் பெற்றால் அதனால் ஹிந்து சமுதாயத்திற்கு ஆபத்து எதுவுமில்லை. ‘தங்கள் சொந்த அரசியல் இலாபங்களுக்காக ஹிந்து சமுதாயத்தை உணர்ச்சியேற்றி ஓட்டுவங்கிகளாக உடைக்க திட்டமிட்டவர்களின் மூக்குகள்தான் உடைபட்டன. சங்கத்தின் நிலைபாடு ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தின் நன்மையை பரஸ்பர சகோதர மனோபாவத்தை மனதில் கொண்டது. அமைதியாக தொலைநோக்குடன் செயல்படுவது. அதனிடம் ஆர்ப்பாட்டம் இல்லை. அலட்டல் இல்லை. மாறாக ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தை ஒரு குடும்பமாக நோக்குகிறது. இதன் உள் அவலங்களையும், எதிர்நோக்கும் ஆபத்துக்களையும் வேறெந்த அமைப்பையும் விட சங்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

ஒரு காலத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையால் குஜராத் பற்றி எரிந்தது. அல்லது எரிய வைக்கப்பட்டது – ஏனெனில் இந்த வெறுப்பு நெருப்பின் மூலம்தான் இந்திரா காங்கிரஸின் வெற்றிச்சமன்பாடான ஷத்திரியர்கள்-ஹரிஜன்கள்-முஸ்லீம்கள் என்கிற ஓட்டுவங்கி உருவாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபை கூடியது. அநேக முக்கிய ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் குஜராத்தின் மேல்சாதிகள் என அறியப்பட்ட வகுப்புக்களை சார்ந்தவர்கள்.இந்நிலையில் இடஒதுக்கீட்டினை ஆதரிப்பது என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அக்காரசார விவாதத்தின் நடுவில் தேநீர் இடைவெளியின் போது பாலா சாகேப் தேவரஸ் அவர்கள் கூறினார், ‘இத்தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் நூற்றாண்டுகளாக ஒதுக்கிவைக்கப்பட்ட நம் சமுதாய சகோதரர்களின் நிலையையும் அவர்களது உணர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒர் முடிவுக்கு வாருங்கள். ‘ அதன் பின்னர் குறிப்பிடத்தக்க விவாதம் ஏதுமின்றி அத்தீர்மானம் நிறைவேறியது.

ஆக சங்கத்தினைப் பொறுத்தவரையில் அனைத்து தளங்களிலும் தலித் மக்களின் மேன்மைக்காக அது பாடுபட்டே வருகிறது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபை ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதென்பது பொதுவாக அரசியல் கட்சியின் தீர்மானத்தை போன்றதன்று. அத்தீர்மானத்தின் பின்னணியில் அது தொடர்பான செயல்திட்டம் ஒன்றும் இருக்கும். அச்செயல்திட்டம் அமைதியாக உறுதியுடன் மடல் விரிக்கும். சமுதாய ஒருங்கிணைப்பு, தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துதல் என்னும் சமுதாய கடமையை ஹிந்து சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்ப கடனாகவே உணர்ந்து செயல்பட சங்கம் உருவாக்கிய இயக்கம்தான் சேவாபாரதி.

சேவாபாரதியின் சேவை மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பானது மகத்தான களப்பணியாலும் ஒரு மகோன்னத இலட்சிய பார்வையாலும் உருவானது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சமுதாயத்தில் நலிவடைந்த சமூகத்தினரிடையே அவர்களுடன் ஒருவராக வாழ்கின்றனர். அவர்களது போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு ஆன்மிக சாதனையாகவும் கடமையாகவும் சமுதாயத்திற்கான இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். சமுதாய அவலங்களை முதலாக்கி மக்களை உணர்ச்சியூட்டி சமுதாயத்திலிருந்து பிரித்து ஓட்டுவங்கிகளாக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்களில் அவர்கள் ஈடுபடவில்லை. அல்லது தங்கள் தந்தக்கட்டில்களிலிருந்தும், குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்தும் வெளியே வராமல் சமுதாய அக்கறை இருப்பதாக காட்ட தலித்தியமும் முற்போக்குவாதமும் பேசி அமெரிக்காவில் பச்சை அட்டை வாங்கும் முற்போக்குவாத சாமர்த்தியமுள்ள அறிவுஜீவிகளோ அல்லது செமினார்வாலாக்களோ இல்லை அவர்கள். எளிமையான கர்மயோகிகள். ஆனால் அந்த எளிமைதான் எத்தனை உயரியது, எத்தனை வாழ்க்கைகளில் ஒளிசேர்ப்பது!

II

நூறு கொடி நல்ல மிளகு விளையக்கூடிய நல்ல விளைநிலம் அது. குமரிமாவட்டத்தில் பேச்சிப்பாறை பஞ்சாயத்து பகுதியான மல்லமுத்தன்கரை வனப்பகுதிக்கே உரிய வளம் மிகுந்த நிலப்பகுதி. வனவாசியான கொச்சுராமனுக்கு சொந்தமான அந்நிலம் பெயரளவில்தான் கொச்சுராமனுடையது. ஆனால் அதனை ஆண்டு அனுபவிப்பது டவுண் புறத்து கந்துவட்டிக்காரர்கள்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு ஒத்தி வைக்கப்பட்ட அந்நிலம் தரும் வளத்தை அநியாயமாக பிறருக்கு தாரை வார்க்கவைக்கப்பட்டிருந்தார் கொச்சுராமன். ஏறக்குறைய இங்கு வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களும் இந்நிலையில்தான் உள்ளன -அதாவது இருந்தன -சேவாபாரதி ஊழியர்கள் இங்கு வந்து சேரும்வரை. இன்று 25 சுய உதவிக்குழுக்கள் இவ்வனப்பகுதியில் இயங்குகின்றன. இக்குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு பாத்யதைப்பட்ட நிலங்கள் எதுவுமே வெளிஆட்களிடம் இல்லை. அவரவர்களிடமே உள்ளன. மட்டுமில்லை, இன்று அவர்களிடையே இரண்டு சமுதாய மூலக்கூடங்கள் அவர்களே அமைத்துள்ளனர். மாவட்ட வன அலுவலர் அன்வர்தீன் அவர்கள் கலந்துகொண்ட பேச்சிப்பாறை மலைவாழ் மக்களுக்கான சமூக பொருளாதார விழிப்புணர்வு முகாமினை சேவாபாரதி நடத்தியது. சூரிய ஒளி விளக்குகள், குழந்தைகளுக்கு இலவச டியூஷன் அமைப்புகள் ஆகியவை நடைபெறுகின்றன. இன்று மல்லமுத்தன்கரை மட்டுமல்ல அவ்வனப்பகுதியைச் சார்ந்த முடவன்பொற்றை, களப்பாறை, தோட்டமலை, கடவைக்காடு ஆகிய பகுதிகளில் பொருளாதார விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு, கல்வி அறிவு என சமூக மேம்பாட்டிற்கான அனைத்து அம்சங்களும் எந்த முன்னேறிய சமுதாயத்தினருக்கும் ஈடாக ஏன் மேலாகவே துலங்கிவருகின்றன. முக்கியமாக வட்டிக்கொடுமையால் அபகரிக்கப்பட்ட ஒரு ஊர் மக்களின் நிலங்களை முழுமையாக மீட்டுத்தந்திருப்பது சேவாபாரதியின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சேவாபாரதியினருக்கோ இது அவர்களது கடமையேயன்றி வேறில்லை.

III

ஆனால் சேவை ஒன்றும் மலர் நிரம்பிய பாதை அல்ல, நெருப்பாறு ஓடும் தடம்தான். ஆனால் அதற்கென்ன, தீயில் நடப்பதை பூப்பள்ளி இறங்குவதாக்கும் வல்லமை பாரத அன்னைக்கு உண்டு என நம்புவர்கள்தான் சேவாபாரதியினர். மருதன் கோடு நூறுவீடுகள் கொண்ட கூலித்தொழிலாளர் நிரம்பிய பகுதி. இங்கு தவசி என்பவர் அரிஷ்டம் என்று அழைக்கப்படும் போலிச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய ஆரம்பித்தார். (ஆயுர்வேத சித்த மருத்துவர்களே இந்த அரிஷ்டத்தை உற்பத்தி செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக இதற்கான உரிமங்கள் அளிக்கப்படுவது ஊழல்கள் மலிந்த ஒரு துறையாக விளங்குவதாக தோன்றுகிறது.) தொடர்ந்து சிறிய அரிஷ்டக்கடைகள் உருவாகின. விரைவிலேயே விளைவுகள் வெளிப்பட தொடங்கின. அந்த ஊரில் 20 நல்ல திடகாத்திரமான ஆண்கள் குடல் கெட்டு இறந்தனர். இருபது குடும்பங்கள் அன்றாட வாழ்க்கைக்கு வகையற்று நிற்கும் நிலை தோன்றியது. இச்சூழலில் சேவாபாரதி சுய உதவி குழு மகளிர் திருமதி.மார்க்கோஸ் தலைமையில் 300 பேர் கையெழுத்திட்ட மனுவை பஞ்சாயத்துதலைவி திருமதி.கெளசல்யாவிடம் அளித்தனர். இதன் விளைவாக தவசியின் அரிஷ்டம் காய்ச்சும் உரிமம் இரத்து செய்யப்பட்டது. திரு தவசியிடம் அவரது அரிஷ்ட ஆலையை மூன்று நாட்களில் மூடும்படி கூறப்பட்டது. மூன்றாவது நாள் அவர் மூடவில்லை. எனவே ஊர் பெண்கள் அச்சாராயகடையின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். தவசி முரடர்களை திரட்டி அப்பெண்களை தாக்கவும் அவதூறாக பேசவும் செய்தார். இதையடுத்து குழித்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போது அதிகாரிகள் தவசியிடம் உரிமம் உள்ளதால் கைது செய்யமுடியாது என மறுத்துவிட்டனர். இந்நிலையில் சேவாபாரதி மகளிர் அமைப்பினைச்சார்ந்த அந்த கிராமத்து மகளிர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கில் தவசியின் உரிமம் போலியானது என வெளிப்பட்டதுடன், மருதன் கோட்டில் சட்டவிரோத மதுவகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை உறுதியாக தடுக்கப்பட வேண்டும் என்றும் சுயவுதவிக் குழுக்களுக்கு உறுதிக்கட்டளை வழங்கப்பட்டது. இத்தகைய பல மனவலிமையும் சமுதாயசேவைக்கான ஊக்கமும் அளிக்கும் உதாரணங்களை கூறமுடியும்.

IV

ஆனாலும் அதென்னவோ தெரியவில்லை, இத்தகைய செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு, நம் ‘தேசிய ‘ பத்திரிகைகளில் வருவதில்லை. அதே தருணம், ஹிந்து சமுதாயத்தை கூறுபோடும் விதத்தில் பத்திரிகைசெய்திகளை உருவாக்குவதில் நம் ‘தேசிய ‘ செய்தியாளர்கள் நிபுணத்துவம் பெற்றே விளங்குகின்றனர். தொழில்நுட்ப பயிற்சி நம் நலிந்த பிரிவு சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது. வீட்டின் பின்புறமே அஸோலா வளர்த்தலுக்கான தொழில்நுட்பம், சித்த மருத்துவ தோட்டம், மூலிகைகளை விற்றல், மண்புழு உர உற்பத்தி ஆகிய தொழில்நுட்பங்கள் விவேகானந்த கேந்திரத்தால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவாறே உள்ளன. இவை சேவாபாரதியின் சுய உதவிக்குழுக்கள் மூலம் கள-உபயோகப் படுத்தப்படுகின்றன. அஸோலா தொழில்நுட்பத்தில் கேரளத்தின் முதன்மையான வேளாண் அறிவியலாளரான Dr.கமலாசனன் பிள்ளை சேவாபாரதி சுய உதவிகுழுக்களுக்கு செய்முறை பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் இரணியலில் இருக்கும் சேவாபாரதியின் மாவட்ட தலைமையகத்தில் வாரம் தோறும் இலவச மருத்துவமுகாம் செயல்பட்டுவருகின்றது. ஒவ்வொருவாரமும் நலிந்த வகுப்பினைச்சார்ந்த நோயாளிகள் சேவாபாரதியினரால் கண்டறியப்பட்டு அழைத்துவரப்பட்டு பிணி நீக்கம் பெறுகின்றனர். சராசரியாக வாரத்திற்கு 100 பேர்கள். நலிந்த பிரிவின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் தனிப்பயிற்சி கல்வி முகாம்களால் அக்குழந்தைகளும் குடும்பங்களும் பெரும் நன்மை சமுதாயம் முழுமைக்குமே புண்ணியம் பெற்றுத்தருகிறது. தமிழ்நாட்டில் வித்யாபாரதியின் இரவு கல்விக்கூடங்கள் பல தலித் சமுதாய குழந்தைகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பினை சேவாபாரதி இளைஞர்களுக்கு அளித்துள்ளது.

ஹிந்து சேவை இயக்கங்களின்செயல்பாட்டினை குறிப்பாக நலிவடைந்த மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களால் இயன்றவரை கட்டுப்படுத்திவந்தன. இதனால் ஏதோ பிரிட்டிஷ்காரர்களும் மிஷிநரிகளும்தான் தலித்களுக்கு கருணை காட்டுவது போன்ற சித்திரம் வெகுஜாக்கிரதையாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திருமாவளவன் பிரிட்டிஷாரைக் குறித்து நன்றியுடன் நெக்குருகுகிறார். ஒரு உதாரணம் இதனை தெளிவாக்கும். சர். ஹெர்ஹோர்ட் பட்லர் அயோத்தி மற்றும் வட மேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர். அவர் சர் டன்லப் ஸ்மித்திற்கு எழுதுகிறார், ‘ஆரிய சமாஜத்தின் முடிவு என்னவாக இருக்கும் ? அரசாங்கம் விரைவாக தலையிடாத பட்சத்தில் அவர்கள் இந்திய பெண்களுக்கு கல்வி கற்பிப்பார்கள். நாம் இங்கிலாந்திலிருந்து நம் அம்மணிகளை பல நூறு அளவில் இறக்குமதி செய்து பெண்கல்வியை கையில் எடுக்க வேண்டும். ஆரிய சமாஜம் ஒரு ஆபத்தான இயக்கம். அது தேசிய உணர்வையும் கீழ் சாதியினரை மேம்படுத்தும் போக்கையும் உடைய ஆபத்தான இயக்கம். ‘ (1-12-1907 தேதியிட்ட கடிதம்) (மேற்கோள் காட்டப்பட்ட நூல் Servant of India by Martin Gilbert London,1966 பக்.97)

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வெற்றிகரமாக அவர்களை விடுதலையடையச் செய்த ஐயா வைகுண்டர், நாராயண குருதேவர், ஐயன் காளி ஆகியோரது பாதை நமக்கு தெளிவாக காட்டும் பாடம், வெற்றிக்கருவி நம்முன் உள்ளது. அதனையே சேவாபாரதி எடுத்துள்ளது.

எனவே திருமாவளவன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்ற விரும்பிடும் பட்சத்தில் தேவையற்ற ஹிந்து வெறுப்பினை உமிழ்ந்து கொண்டிருப்பதால் ஏதும் நடந்துவிடாது. எனவே அவரை அழைக்கிறோம். வாருங்கள் சேவாபாரதிக்கு. இயலுமென்றால் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது உங்கள் வாழ்வில் நம் சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு சேவையாற்ற சேவாபாரதியில் செலவிடுங்கள் திருமாவளவன். இணைந்து பணியாற்றுவோம், நம் தேசமக்களெனும் விராட தெய்வத்தின் பாதங்களில் சேவை எனும் பூஜை செய்ய நம் வாழ்வினை மலராக்குவோம்.

இக்கட்டுரை எழுத தகவல்கள் தந்துதவிய சேவாபாரதி செயலாளர் திரு.பெருமாள் அவர்களுக்கும், மாவட்ட வன அலுவலர் திரு.அன்வர்தீன் அவர்களுக்கும், விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றி.

—————–

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்