மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

டாம் கிஸ்கென்


வெண்சுரா கவுண்டி ஸ்டார் பத்திரிக்கையில் நவம்பர் 18, 1998இல் எழுதியது.

ஊதிய இறந்த சடலங்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. 300 அடி உயரத்தில், ஒரு விமானத்திலிருந்து கயானா ஜோன்ஸ்டவுணைப் பார்க்கும்போது, சிபிஎஸ் நிருபரான டேவிட் டிக் அவர்களுக்கு பூச்சிகள் இறந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.

‘விளக்கை அணைத்ததும் வீழ்ந்து கிடக்கும் விட்டில் பூச்சிகள் போல மக்கள் கிடந்தார்கள் ‘ என்று அவர் தன்னுடைய குறிப்பேட்டில் எழுதியிருந்தார். ‘எல்லாமே முகம் தரையில் மோதிக் கிடந்தன. நடுக்கமுறுவதாக இருந்தது. நோய்வாய்ப்பட்டதுபோல உணர்ந்தேன். இருப்பினும் வெறுமே தூங்கிக்கொண்டிருப்பவர்கள் போல இருந்தார்கள் ‘

இன்றிலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர். போதைமருந்துக்கு அடிமையான, பேய்க்கனவுகளால் ஆட்டிப்படைக்கப்பட்ட ஜிம் ஜோன்ஸ் என்பவரால் ஒரு மதக்குழு நடத்தப்பட்டு வந்தது. அது தன்னை ஒட்டுமொத்த தற்கொலைக்கு இட்டுச்சென்றபோது, மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட சிறு மதக்குழுக்களைப் (cults) பற்றிய ஒரு கறையை நிரந்தரமாக ஏற்படுத்திவிட்டுச் சென்றது. அது ஒரு ஒட்டுமொத்த தற்கொலை. அதனை இந்த பியூப்பிள்ஸ் டெம்பிள் இயக்கம் அடிக்கடி ஒத்திகை பார்த்திருந்தது. சுமார் 900க்கும் மேற்பட்டவர்கள் சயனைட் போட்ட குளிர்பானம் அருந்தி இறந்தார்கள்.

உட்கொள்ள மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்று சிறுமதக்குழுக்களை கண்காணிப்பவர்கள் இது போன்று மீண்டும் நடக்கும் என்று அஞ்சுவதோடு, அது போல நடந்துவிட்டதையும் கண்டு கவலைப்படுகிறார்கள். சொர்க்கத்தின் கதவு (heavens gate) என்ற சிறு மதக்குழு ஹேலிபாப் என்ற எரி நட்சத்திரத்தோடு தங்கள் விதியை இணைத்துக்கொண்டு, தங்கள் உடலை வெள்ளைத்துணியால் மூடிக்கொண்டு, தங்களை மூச்சுமுட்டி இறக்கும்படி ஆக்கிக்கொண்டு மார்ச் 1997இல் கரைந்தது.

இப்படிப்பட்ட மதக்குழுக்களை ஆராய்பவர்கள், இன்னும் நிறைய இப்படிப்பட்ட குறுகியவட்ட மதக்குழுக்கள் இருக்கின்றன என்றும், கடவுள் பேசுவதை நேரடியாகக் கேட்பவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மதகுருக்களை தலைவர்களாகக் கொண்டு திரைமறைவில் ஒளிந்திருக்கின்றன என்றும், அவை இப்படி அவலத்தில் கொண்டு சென்று முடிவுறும்போதே தெரியவரும் என்றும் கருதுகிறார்கள்.

நவம்பர் 1998இல் சுமார் 15000 பேரை கால்பந்தாட்ட மைதானத்தில் குழும வைத்த இண்டர்நேஷனல் சர்ச்சஸ் ஆஃப் கிரைஸ்ட் போன்ற குழுக்கள் தற்கொலையில் நாட்டமில்லாதவையாக இருந்தாலும், இவை தங்களது உறுப்பினர்களிடமிருந்து பணத்தைக் கறப்பதும், தங்களது உறுப்பினர்களை அவர்களது குடும்பம், மற்றும் நண்பர்களிடமிருந்து பிரிப்பதும் கவலை தருவனவாக இருக்கின்றன.

ஜோன்ஸ்டவுண் கம்யூனை நல்ல திசையிலிருந்து தீய திசைக்குத் திருப்பியது அதன் தலைவராக இருந்தவர் ‘தந்தை ‘ என்று எல்லோராலும் விளிக்கப்பட்டதும், அவரிடத்தில் தான் முழுமுதல் உண்மை இருந்தது என்று மற்றவர்கள் நம்பும்படி கோரியதுமே என்று டிக் கூறுகிறார்.

ஜோன்ஸின் போதை மருந்து பழக்கவழக்கமும், அவரது தகாத உடலுறவு முறை பழக்க வழக்கங்களைய்ம் சேர்த்தால், எரிவாயு கிடங்கில் எரியும் தீக்குச்சியை எறிவது போன்றதுதான்.

தொடர்ந்து ஜோன்ஸ்டவுண் அபாயத்தைப் பேசுவது இதைக் கேட்பவர்களை மரத்துப்போகச்ச் செய்துவிடும் என்றும் அஞ்சுகிறார்.

‘910பேர்கள் இறந்ததினால்தான் இது சோகம் என்று அல்ல. ஒரே ஒருவர் இறந்திருந்தாலும் இது பெரும் சோகமே. ‘ என்று டிக் கூறுகிறார்

கெண்டகி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராக இருக்கும் டிக், இப்போது ஒரு சிறிய பிரசுரஅலுவலகத்தை நடத்தி வருகிறார். 19 வருடங்களுக்கு அவர் சிபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு முதன்மை நிருபராக இருந்தார். அமெரிக்க மக்கள் பிரதிநிதி லியோ ரயான் அவர்களுடன் கயானாவுக்கு பயணம் செய்யும்படி அவரே கோரப்பட்டார்.

ரயான் ஏற்கெனவே இந்த கயான ஜோன்ஸ்டவுன் பியூப்பிள்ஸ் டெம்பிளில் சிந்தனைக் கட்டுப்பாடு-மூளைச்சலவை ( thought-control), சித்திரவதை, துப்பாக்கி பயிற்சி, சிறை ஆகியவை இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். அதனால், இந்த சர்ச்சின் உறுப்பினர்களது குடும்பத்தினர் மற்றும் சில நிருபர்களோடு இந்த ஜோன்ஸ்டவுணை ஆராய சென்றார்.

இந்த சமூகத்தலைவர்களால் சந்தோஷமாக வரவேற்கப்பட்டனர் ரயான் குழுவினர். ஆனால் பல உறுப்பினர்கள் ரயானுடன் வெளியேறிவிட ஆர்வம் தெரிவித்தனர். இவர்களோடு வெளியேறிய ரயானும் அவரது குழுவினரும் விமானதளத்தில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

சயனைடு குளிர்பான தற்கொலைகள் உடனே தொடர்ந்தன.

டிக் மற்றும் பல பத்திரிக்கையாளர்கள் கயானா அரசாங்க வேலையாட்களால் இங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிபிஎஸ் குழு பல சடலங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இறப்பின் வாடை வீசும் இந்த இடத்தைக் கண்டது.

ஜிம் ஜோன்ஸின் அறைக்கு வெளியே ஒரு பெட்டியில் ஏராளமான கடிதங்கள் காணப்பட்டன. அவை அனைத்தும் ஜோன்ஸ் கோரியதால் அவரது சீடர்கள் எழுதிய விசுவாசக்கடிதங்கள். அவை அனைத்தும் ‘டியர் டாட் ‘ ‘அன்புள்ள தந்தையே ‘ என்று ஆரம்பித்திருந்தன.

டிக் தன்னை ஒரு சிறுமதக்குழுக்களை ஆராயும் நிபுணராகக் காட்டிக்கொள்வதில்லை. ஒரு சாதாரண நிருபராகத்தான் இந்த விஷயங்களைப் பார்த்தார். மனதில் இறுகப் பதிந்த அந்தக் கோரக் காட்சிகளை கண்ட அவர் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வேறுயாரேனும் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றினால் ஒரே ஒரு அறிவுரைதான் தர முடியும் என்கிறார்.

‘நான் ஓடுவேன்.. நிச்சயம் அங்கிருந்து ஓடிவிட தப்பித்துவிட முயல்வேன் ‘

பதிலில்லாத கேள்விகள்

ஜோன்ஸ்டவுண் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

யார் லியோ ரயானைக் கொல்ல ஆணையிட்டது ? எத்தனைபேர் தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டார்கள். எத்தனை பேர் மறுத்ததனால் கொல்லப்பட்டார்கள் ? அமெரிக்க உள்துறை ரயானுக்கு தேவையான எச்சரிக்கைகளைச் செய்ததா ?

ஜோன்ஸ்டவுண் சம்பந்தமான எல்லா சிபிஐ மற்றும் அரசாங்க காகிதங்களையும் வெளியிட வேண்டுமென்று பலர் கூறுகிறார்கள். ‘வெளியிட்ட விஷயங்களைத்தவிர ஏராளமான விஷயங்கள் அரசாங்கத்தினிடம் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம் ‘ என்று இது போன்ற மதக்குழுக்களை ஆராயும் ஜே. கோர்டன் மெல்டன் கூறுகிறார்.

அரசாங்கம் அக்கறையின்றி இருந்திருக்கலாம் ஆனால் அரசாங்கம் உருவாக்கிய சதித்திட்டம் தான் இது என்பது போன்ற வதந்திகளை , ஆவணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அடக்கலாம் என்று கருதுகிறார் மெல்டன்.

ஸாண்டா பார்பராவில் இருக்கும் வெஸ்ட்மாண்ட் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராக இருக்கும் ரான் என்ராத் இந்த சிறு மதக்குழுக்களையும் புதிய மதங்களையும் பற்றி பல வருடங்களாக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். யூனிபிகேஷன் சர்ச் என்னும் கொரிய கிரிஸ்தவ மதக்குழுவால் (மூனிகள் -தலைவர் மூன் என்ற பெயர் கொண்டவர் என்பதால் ) இவர் கடவுளுக்கு எதிரானவர் என்று திட்டப்பட்டார். சொர்க்கத்தின் கதவு சோகக்கதைக்குப் பின்னர் இவரை பேட்டி காண சுமார் 130 பேர் பல்வேறு ஊடகங்களிலிருந்து இவரை தொடர்பு கொண்டார்கள்.

நவம்பர் 18, 1978க்கு முன்பே இவர் பியூப்பிள்ஸ் டெம்பிள் பற்றி கேள்விப்பட்டு 1976இல் சில பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். அதே போலத்தான் சொர்க்கத்தின் கதவு மதக்குழு பற்றியும். பிறகு தொடர்பு அற்றுவிட்டது.

இதுதான் மிகவும் ஆபத்தான சிறுமதக்குழுக்களில் இருக்கும் வழமை.

‘இவை மைய நீரோட்டத்தில் குறிப்பிடப்படுவதில்லை. இவைகள் மிகச்சிறியவையாக இருப்பதால் யாரும் இவற்றைக் கண்டுகொள்வது கூடக் கிடையாது. இறுதியில் புற்றுநோய் போல வெடிக்கும்போது எல்லோருக்கும் தெரிகிறது ‘ என்று பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் லாகார்ட் ஸ்மித் கூறுகிறார்.

இப்படிப்பட்ட குழுக்கள் இருக்கின்றன. இவைகளின் பெயரை இவர் குறிப்பிட விரும்பவில்லை. அவைகளிடமிருந்து ஏற்கெனவே இவருக்கு பல கொலை பயமுறுத்தல்கள் வந்திருக்கின்றன. 4 குழுக்கள் இப்படி தேசத்தின் எதிர்கால சோகங்களாக ஆகிடும் வாய்ப்பு இருக்கின்றன என்று கருதுகிறார்.

அனைத்து அதிகாரத்தையும் மையப்படுத்தி தன் கையில் வைத்துக்கொண்டும் தன்னிடம் மட்டுமே அனைத்து பதில்களும் இருக்கின்றன என்றும் பிரச்சாரம் செய்து, உலகத்தை மாற்றுவது தன்னால் மட்டுமே முடியும் என்றும் இதன் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இதே குழுத்தலைவர்கள் ஜோன்ஸின் வழியைப் பின்பற்றினால், அதே போல உணர்ச்சிமயமான பாதையில் இழிந்தால், இன்னொரு சோகக்கதையை விரைவிலேயே பார்க்கலாம் என்றும் கூறுகிறார்.

ஜோன்ஸ்டவுணுக்குப் பின்னால், இவ்வாறு சிறு மதக்குழுக்களில் சேர்ந்தவர்களை இந்தக் குழுக்களிலிருந்து பிரித்து மைய நீரோட்டத்துக்குச் கொண்டு செல்ல ‘டாபுரோகிராமிங்:deprogramming ‘ என்னும் மனச்சீர்படுத்தலை குடும்பத்தினர் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் பழங்கதையாகி விட்டது. இதற்குக் காரணம் யுனைட்டட் பெந்தகோஸ்தே சர்ச் இண்டர்நேஷனல் சபை இப்படிப்பட்ட டிபுரோகிராமிங்குக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றதே.

ஆகையால், இன்று குடும்பத்தினருக்கு தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசியே வெளிக்கொண்டுவருவதே ஒரே வழியாக இருக்கிறது.

மெல்டன் அவர்களின் மகள் சர்ச் ஆஃப் ஸயண்டாலஜி என்ற சர்ச்சில் சேர்ந்தபோது அவர் தன் மகளிடம் உன்னுடைய வாழ்க்கையை அவர்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்று பேசி வெளிக்கொண்டுவர முனைந்தார்.

அதே சமயம் அவள் எந்த முடிவு எடுத்தாலும் அதனை ஆமோதிப்பார் என்றும் கூறினார்.

‘அது அவளது வாழ்க்கை ‘ என்று மெல்டன் சொன்னார். அவள் அந்தக் குழுவில் இணைந்தாள். பிறகு சில வாரங்கள் கழித்து அதிலிருந்து வெளியேறினாள்.

கல்லூரிகளில் கவலைகள்

இவ்வாறு புதிய மதங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் சிறுமதக்குழு என்பதைக் குறிப்பிடும் cult என்ற வார்த்தையைத் தவிர்க்கிறார்கள். இதன் காரணம் பெரும்பாலும் இந்த வார்த்தை சொர்க்கத்தின் கதவு மதக்குழுபற்றியும் ஜோன்ஸ்டவுன் பற்றியும் நினைவை எழுப்புவதே. இண்டர்நேஷனல் சர்ச்சஸ் ஆஃப் கிரைஸ்ட் போன்ற வேகமாக வளரும் மதங்களை அநியாயமாக இணைப்பதாகவும் குறிப்பிடலாம். (ஆனால், இந்த ஆராய்ச்சியாளர்கள் சிறுமதக்குழுவை நியாயப்படுத்துபவர்களா ?)

இருப்பினும் வெகுவேகமாக வளரும், தீவிரமான மதக்குழுக்கள் கவலையையே உற்பத்தி செய்கின்றன.

சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற மையநீரோட்ட சர்ச்சிலிருந்து 1970இல் கிப் மெக்கீன் அவர்களால் பிரித்து உருவாக்கப்பட்ட ஐசிசி என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் சர்ச் ஆஃப் கிரைஸ்ட் கல்லூரி மாணவர்களிடம் மதமாற்றம் செய்விக்க தன்னுடைய தீவிரமான வற்புறுத்தும் முறைக்காக பலரால் அறியப்பட்ட ஒன்று. முந்தைய சமூக குடும்ப உறவுகளை உடைத்துக்கொண்டு வர வேண்டும் என்றும் சொத்துக்களையும் பணத்தையும் இந்த சர்ச்சின் கஜானாவில் கொட்டவேண்டும் என்று உறுப்பினர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என்று இதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதில் சேர்ந்ததும், இதன் உறுப்பினர்கள் இன்னும் பல உறுப்பினர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்றூம் கலிபோர்னியா லுத்தரன் பல்கலைக்கழக பாதிரியார் ரெவரெண்ட் மார்க் நட்ஸன் கூறுகிறார். தீவிர வற்புறுத்தும் மதக்குழுக்களை எதிர்கொள்வது எப்படி என்று மாணவர்களுக்கு கற்றுத்தரும் குழுவை நடத்திவருகிறார்.

‘எந்தக்குழு தன்னுடைய கொள்கைகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லையோ அது ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய குழு ‘ என்று இவர் கூறுகிறார்.

இண்டர்நேஷனல் சர்ச்சஸ் ஆஃப் கிரைஸ்ட் குழுவின் குறிக்கோள் ஒவ்வொரு நகரத்திலும் சுமார் 100000 மக்கள் கொண்டதாக 2000க்குள் பெரிதாக வேண்டும் என்பது. ஒரு வாரத்துக்கு முன்னர் இந்தக் குழு பாஸ்டெனா நகரத்தில் கால்பந்தாட்ட மைதானத்தில் சுமர் 15000 மக்களை ஒன்று திரட்டியது.

இந்த சர்ச்சின் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் அல் பைர்ட் அவர்கள் இந்த விமர்சனத்தை கேலி செய்கிறார். (இந்த சர்ச் மதத்துக்கு வெளியே திருமண உறவை ஒப்புக்கொள்வதில்லை என்பதும், மிக அதிகமான நிதி உதவியை கோருகிறது என்பதும் விமர்சனங்கள்) ஒருவரின் சம்பளத்தில் 10 சதவீதம் வசூலிக்கப்படுகிறது என்றும் மற்ற சர்ச்சுகளும் இதே அளவையே வசூலிக்கின்றன என்றும் இவர் கூறுகிறார்.

மக்கள் இதனை சிறுமதக்குழு (கல்ட்) என்று கூறக்காரணம் இந்த சர்ச்சை புரிந்து கொள்ளாததே என்றும் இவர் கூறுகிறார்.

சர்ச் ஆஃப் ஸயண்டாலஜி என்ற சர்ச்சும் இதே போல மிகப்பெரிய தொகைகளை நிதியாகக் கோருகிறது தன் உறுப்பினர்களிடமிருந்து. இதற்கு கொடுக்கும் பணத்தின் அளவு 35 டாலரிலிருந்து 3500 டாலர் அளவு வரை போகிறது. இவர்களிடம் கேட்டாலும் அதே பதில்தான் வருகிறது

இது கல்ட் அல்ல, இந்த எங்கள் சர்ச்சே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில்.

‘ கொடுத்த பணத்திற்கு உங்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை இந்த உறுப்பினர்கள் புரிந்து கொள்வதில்லை ‘ என்று ஸாண்டா பார்பராவில் இருக்கும் சர்ச் ஆஃப் ஸயண்டாலஜியின் ரெவரெண்ட் லீ ஹோல்சிங்கர் கூறுகிறார். ‘5000 டாலரை உங்களை செம்மைப்படுத்த கொடுக்கிறீர்கள் என்றால், அந்த செம்மைப்படுத்தல் உண்மையிலேயே உங்களுக்கு வேலை செய்கிறது என்றால் நிச்சயம் நீங்கள் சொல்வீர்கள் ‘அந்த 5000 டாலர் எனக்கு ஒரு பொருட்டல்ல ‘ என்று ‘

புதிய மதங்களை ஆராயும் என்ராத் அவர்கள், நூற்றுக்கணக்கான தொலைபேசிப் பேச்சுக்களைப் பற்றி பேசுகிறார். தன்னுடைய மனைவியும் தன்னுடைய சிறுமதக்குழுவில் இணையவில்லை என்றால் தான் விவாகரத்து செய்துவிடப்போவதாக பயமுறுத்துவது. தனது முந்தைய மதத்திலிருந்து விலகிக்கொண்டு தங்கள் குடும்பத்தினரையும், தாய்தகப்பன்களையும் உதறிவிட்டு உறவை முறித்துக்கொண்டு செல்வது ஆகியவை.

‘நம்பமுடியாத அளவுக்கு மிகவும் சோகமான கதைகள் .பிப்படி மூளைச் சலவை செய்ய்பபட்டவர்க்ளோடு பேசுவது, வெறும் சுவரிடம் பேசுவது போன்றது ‘ என்று கூறுகிறார் டாக்டர் என்ராத்.

எச்சரிக்கை விளக்குகள்

இப்படிப்பட்ட தீவிரமான வற்புறுத்தும் மூளைச் சலவை மதக்குழுக்களை பற்றி அக்கறைப்பட்டு ஸாண்டா பார்பரா பல்கலைக்கழகம் குறிப்பிட்ட சில எச்சரிக்கை வெளிச்சம் இந்தப் பட்டியல்:

1) குழு தன்னிடம் மட்டுமே எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருப்பதாகக் குறிப்பிடுவது

2) புதிய உறுப்பினர்கள் சேர்ந்தவுடனேயே இன்னும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்று வற்புறுத்துவது.

3) மற்ற தினசரி வாழ்க்கைக்கான காரியங்களை விடவும் இந்தக் குழுவின் கூட்டங்கள் ,சந்திப்புகளை மிக முக்கியமாகவும் , தவறவிடமுடியாதபடியும் வைத்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துதல்.

4) உறுப்பினர்கள் முன்னால் சார்ந்திருந்த மதம் மற்றும் சமூக உறவுகளைத் தீவிரமாக விமர்சிப்பது

5) புதிய உறுப்பினர்களிடம், அவர்களது நண்பர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ எந்தவிதமான விடைகளும் கிடையாது. அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டாம் என்ற தீவிரமான அறிவுரை வழங்கி குடும்பத்தினரையும், நண்பர்களையும் எதிரிகள் என்ற உணர்வை ஏற்படுத்துவது.

6) சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்புகிறவர்களிடம் , அப்படிக் கேள்வி கேட்பது பலவீனமான மத நம்பிக்கையின் அடையாளம் என்று போதித்தல். இதனால் இந்த கல்ட் கேள்விக்கு அப்பாட்பட்ட ஒன்று என்று வலியுறுத்துதல்.

7) புதிய உறுப்பினர்களை ஒரு இடத்துக்கு வரவழைப்பது: அதே நேரம் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பது

***

Series Navigation

டாம் கிஸ்கென்

டாம் கிஸ்கென்