என் ராம் சொல்கிறார் : சீனா வாழ்க ! தலாய் லாமா ஒழிக !!

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

மஞ்சுளா நவநீதன்


சமீபத்தில் என் ராம் அவர்கள் எழுதி ஆங்கிலத்தில் வெளிவரும் ஃப்ரண்ட்லைன் என்னும் மாதப் பத்திரிக்கையில் திபெத் சிறப்புக் கட்டுரைகளை படித்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் பத்திரிகையின் இந்தமாத இதழுக்கு ‘சீனாலைன் ‘ என்று பெயர் வைத்திருக்கலாம்.

இடதுசாரிகளுக்கு எப்போதுமே அறிவுஜீவி நேர்மை என்பது கிடையாது என்பது என் வெகுகால கவனிப்பு. அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர் என்பது திருக்குறள். திருக்குறளைத் தமிழ்த் தீவிரவாதம் என்று நினைக்கும் என் ராம் அவர்கள், ஆர் கே நாராயணனின் தொழில் நுட்ப எதிர்ப்பு இலக்கியத்தை ஆதரிக்கும் என் ராம் அவர்கள், மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினரான என் ராம் அவர்கள், மக்கள் பண்பு என்னும் மனித சுதந்திரத்தை நசுக்கும் சீன அரசின் அழைப்பு ஏற்று திபெத் சென்று திபெத்திற்கு தொழில் நுட்பங்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவந்திருக்கும் சீன அரசுக்கு புகழ் பாடுவது ஆச்சரியமற்றது. கட்டுரை முழுக்க சீனாவின் பிரசாரத்தை அப்படியே வாந்தி எடுத்திருக்கிறார் என்.ராம். தலாய் லாமாவின் மீதும் புழுதியை வாரி இறைத்திருக்கிறார். தலாய் லாமாவை ‘ஆதரித்த ‘ குற்றத்திற்காக இந்திய அரசையும் கோபித்துக் கொள்கிறார்.

நல்ல வேளை என்.ராம் இந்தியாவில் பத்திரிகையாளனாய் ஒருக்கிறார். சீனாவில் , சீன அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் நிலையில் இருந்தால் , அவர் சிறையில் தள்ளப் பட்டிருப்பார்.

தன்னை ஒரு பத்திரிக்கைக்காரன் என்று அழைத்துக்கொள்ளும் என் ராம் கீழ்க்கண்ட முகவரியில் சீன அரசுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம். என் ராமுக்கு விருப்பமான ஃபிடல் கேஸ்ட்ரோவும், சீன சர்வாதிகாரிகளும் ஒருங்கே ‘பத்திரிக்கைகாரர்களின் பத்திரிக்கை சுதந்திரத்தின் முதல் எதிரிகள் ‘ என்னும் மரியாதை பெறுவதை கண்டு களிக்கலாம். இண்டெர்நெட்டை உபயோகித்த ‘குற்றத்திற் ‘காக ஆறு பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைத்துள்ளது சீன அரசு. இண்டெர்நெட் இன்னமும் சீனாவில் தணிக்கை செய்யப் பட்டுத் தான் வருகிறது.

http://www.cpj.org/enemies/enemies_00.html

என் ராம் அவர்கள் திபெத்திய ராஜாவாகவும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த தலாய் லாமாவைத் துரத்திவிட்டு சீனா திபெத்துக்கு நல்வழி காட்டுவதாக எழுதியிருக்கிறார். தலாய் லாமாவை பிற்போக்குவாதி என்றும் முன்னேற்றத்துக்கு எதிரி என்றும் எழுதியிருக்கிறார். இதே வாதத்தை வைத்துப் பார்த்தால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தான் இந்தியா முன்னேற்றம் அடைந்தது. எனவே பிரிட்டிஷ் அரசை எதிர்த்த அனைவரும் — காந்தி நேரு உட்பட — பிற்போக்கு வாதிகள். முன்னேற்றத்திற்குத் தடை யானவர்கள்.

தலாய் லாமா பற்றி ஒரு நல்ல வார்த்தை கூடச் சொல்வதற்கு இவருக்கு மனமில்லை. ஹாலிவுட் நடிகர்களுடன் சுற்றுகிறார் என்பதும் ஒரு குற்றச் சாட்டாம். அவர் வன்முறைப் போராட்டத்தை முழுக்க முழுக்கப் புறக்கணிப்பவர் என்பது கூட சொல்லப் படவில்லை. இந்தியா ஜன நாயக நாடு. சீனாவைப் போல் மக்களின் பேச்சுரிமையை நாம் தடை செய்வதில்லை. தலாய் லாமா ஆதரவாளர்களும், ராம் போன்ற எதிர்ப்பாளர்களும், இருவருமே சுதந்திரமாகப் பேசலாம். சீனாவில் போய் ஜியாங் ஸெமின்-ஐ எதிர்த்தோ, தலாய் லாமாவை ஆதரித்தோ பேசினால் உடனே சிறை வாசம் தான்.

உலகக் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் வசிக்கும் வாடிகன் நகரம் இத்தாலியின் ஒரு பங்காக இருந்தது என்பது நேற்றைய வரலாறு. நாளை இத்தாலி அரசு, வாடிகனுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பாதிரிமார்களை கொன்று, கன்னிகாஸ்திரீகளை கற்பழித்து, அங்கிருக்கும் நூலகங்களை கொளுத்திவிட்டு, போப்பாண்டவரை இந்தியா துரத்திவிட்டு, அங்கிருக்கும் வாடிகனை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லுமெனில் என். ராம் அதனை ஆதரிப்பாரா என்று தெரியவில்லை. மேலே சொன்னதைவிட இன்னும் அதிகமாய் சீனா திபெத்தில் செய்திருக்கிறது இன்னும் செய்து வருகிறது என்பது என்.ராம் தவிர எல்லாருக்கும் தெரிகிறது.

என்.ராமிற்குச் சீனாவின் மீது அப்படி என்ன மோகம் என்று பார்த்தால் அதற்கு ஒரே காரணம், சீனாவில் ‘கம்யூனிஸ்ட் கட்சி ‘ ஆட்சி செலுத்துகிறது என்பது தான். இந்தக் கட்சி பெயரளவில் தான் கம்யூனிஸ்ட் கட்சியே தவிர , பல கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டது. இது தவறென்று சொல்ல மாட்டேன். மக்களுக்காகத் தான் கொள்கைகளே தவிர, கொள்கைக்காக மக்கள் அல்ல. சீனத்து மக்களின் முன்னேற்றத்துக்கு ,கம்யூனிஸக் கொள்கைகள் உதவிட வில்லையென்றால் அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு, உகந்த பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், அப்படி மேற்கொள்கிறோம் என்று சொல்கிற நேர்மையும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்து விட்டு , ஜனநாயகத்தை மேற்கொள்கிற பண்பும் இருக்க வேண்டும். ரஷ்யாவில் இது நடந்தது. ஆனால் சீன அதிகார வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சிப் போர்வையில் இது வரை அனுபவித்து வந்த சலுகைகளையும், சீனத்தின் மக்கள் மீது செலுத்தும் இரும்புப் பிடியான மேலாண்மையையும் விட்டுவிடத் தயாரில்லை. இதனால் , சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற போர்வையைக் கழட்டாமலேயே, முதலாளித்துவத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கக் கம்பெனிகளுக்கு இது ஒரு பெரிய வரப் பிரசாதம். அவர்கள் செய்யும் தில்லு முல்லுகள் எதுவும் வெளியே வந்து விடாத படி, பத்திரிகை அடக்கு முறை இருப்பதால், அவர்கள் சீனாவுடன் வர்த்தக உறவு கொள்வதைப் பெரிதும் விரும்புகிறார்கள். அமெரிக்கச் சந்தையில் மலிவு விலையில் பொருள்களை விநியோகிக்கத் தயாரிப்புத் தொழிற்சாலையாக சீனா பயன் படுகிறது. சிறைக் கைதிகளை, மிகக் குறைந்த சம்பளத்தில் சீனா பயன் படுத்திக் கொள்கிறது என்கிற குற்றச் சாட்டும் கேட்கிறது. அதில்லாமல், மரண தண்டனைக் கைதிகளைக் கொன்று, அரசாங்கமே அவர்களின் உறுப்புகளை விற்பதாக ஒரு செய்தி சொல்கிறது. ஆனால், அமெரிக்காவின் பெரும் கம்பெனிகள் எல்லாம், தம்முடைய லாபம் கருதி சீனாவை அமெரிக்காவின் மிக முக்கிய வியாபாரப் பங்காளியாய் ஆக்கி விட்டிருக்கின்றனர்.

என் ராம் போன்றவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருக்குச் செய்யும் மரியாதையாய், சீனாவிற்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். இவர் மக்களிடம் யாரிடமும் பேச வில்லை. சீன அரசின் அலுவலர்களைப் ‘பேட்டி ‘ எடுத்திருக்கிறார். சீனத்தின் அரசாங்க அதிகாரிகளைப் பேட்டி யெடுப்பதே ஒரு கேலிக் கூத்து. அவர்கள், பேச மாட்டார்கள். நேர்முகமாய், பேசும் போது வாய் தவறி ஏதும் சொல்லிவிட்டால் சீனத்தின் அரசாங்கம் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். அதனால் கேள்விகளை அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் பதில்களை எழுதிக் கொடுத்து விடுவார்கள். இதற்குப் பெயர் தான் ‘பேட்டி ‘.

திபெத்தின் தலாய் லாமாவிற்கு ஆதரவை விலக்கிக் கொண்டால், சீனா இந்தியாவிற்கு மிக நெருக்கமாய் வரும் என்று ராமும், சுப்பிரமணிய சாமியும் சொல்கிறார்கள். இது ஒரு பகல் கனவு. சீனா எந்த நாட்டுடனும் நெருக்கமாய் இருப்பதில்லை. அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் உதவி, கோட்பாட்டு ரீதியானதோ அல்லது மற்ற நாடுகளின் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதோ அல்ல. தன் நலனே அதற்குப் பெரிது. உலக அரங்கில் சீனாவிற்கு இந்தியா எப்போதுமே உதவித் தான் வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீனா இடம் பெற வேண்டும் என்பதையும் இந்தியா ஆதரித்தது. ஆனால், சீனாவோ, நக்சலைட்டுகளுக்கு உதவியும், மிஜோ, நாகா கிளர்ச்சியாளர்களுக்கு உதவியும் செய்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் சீனாவின் பங்கு பெரிதும் உண்டு. பங்களா தேஷ் விடுதலைப் போரின் போதும் சரி, பாகிஸ்தான் போரின் போதும் சரி , பாகிஸ்தானிற்கு எல்லா விதங்களிலும் உதவியது சீனா. இப்போதும், பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பிலும் சரி, ஏவுகணைத் தயாரிப்பிலும் சரி சீனா உதவி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீதும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறது சீனா.

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கல்ல , ரஷ்யா சீனாவிற்குத் தான் விசுவாசமானவர்கள் என்று ஆர் எஸ் எஸ் ஆட்கள் சொல்வதுண்டு. ராம் போன்றவர்கள் இதனை இப்படியா நிரூபிக்க வேண்டும் ?

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்