அமரர் சுஜாதா

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழ்மகன்


இறந்து போனவரிடமிருந்து இன்று எனக்கொரு இ மெயில் வந்திருந்தது. அதுவும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து. முதல்கட்டமாக பேரதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிர்ச்சியும் பயமும் அடைவது மட்டும்தான் இதைப் பற்றி ஆராய்வதற்கான முதல்படியாக இருந்தது. பேசாமல் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்படி செயலிழந்து இருப்பது ஏன் என்று எனக்குத் தெரிந்தது. மூளையின் செயல்பாடுகள்பற்றி “தலைமைச் செயலகம்’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருந்த புத்தகத்தில்தான் அதைப் பற்றியும் படித்திருந்தேன். மூளைக்குச் செய்திகளைக் கடத்தும் ஆக்ஸôன்கள், நியூரான்கள் பற்றியது அது. செய்திகளை எடுத்துச் செல்லும் ஆக்ஸôன்கள் அறுந்துவிடுவதால்தான் அதிர்ச்சி எற்படும் நேரங்களில் நாம் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நிற்கிறோம் என்று அவர் எழுதியிருந்தார். அறுந்த தொடர்பு இணைகிறவரை அமைதியாக இருப்போம் என்று காத்திருந்தேன்.

நிதானமாக சுதாரிப்பு ஏற்படுவதை உணர்ந்தேன்.

இறந்து போனவர்கள் மெயில் அனுப்பும் வசதி எதையும் பில்கேட்ஸ் ஏற்படுத்தித் தந்ததாகக் கேள்விப்படவில்லை. பிறகு வேறு என்ன சாத்தியக் கூறுகள் இருக்க முடியும் என்று யோசித்தேன்.
எதையும் விஞ்ஞானபூர்வமாக அணுகிய மனிதரிடமிருந்து இப்படி ஒரு அமானுஷ்ய நிகழ்வா என்ற கிளைச் சிந்தனை வேறு.
போன ஆண்டு கடிதங்கள் எல்லாம் இந்த ஆண்டு கையில் கிடைப்பது மாதிரி எங்கெல்லாமோ சுற்றிவிட்டு இந்த ஈ மெயில் இப்போதுதான் கம்ப்யூட்டருக்குக் கிடைத்ததா? என்ன அபத்தம். அப்படி வாய்ப்பே இல்லை.

வாசகர்களுக்கு நான் ஒரு விஷயத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். நான் எழுதிய சிறுகதை ஒன்றை என்னுடைய தோழிக்கு நேற்று மின்னஞ்சல் செய்தேன். அதுதான் விஷயம். தோழியின் பெயரும் சுஜாதா. ஏதோ பெயர் குழப்பத்தில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்கதையை அனுப்பிவிட்டேன். தோழி மறுபடி போன் செய்து கதை எனக்கு வரவில்லையே மீண்டும் அனுப்ப முடியுமா என்று கேட்க, ஈமெயிலை மறுபடி திறந்த போதுதான் இந்த அதிர்ச்சி. என் கதையைப் படித்துவிட்டு சுஜாதா எழுதியிருந்த பதில் ஈமெயில். இதோ அதுதான் இது:

கதை வித்தியாசமாக இருந்தது. இறந்தவர்கள் பற்றி யோசிப்பது மனிதனின் இயல்பான தேடல் குறித்தது. இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் எல்லா எழுத்துக்கும் ஆதார ஸ்ருதி. எல்லோரும் இறக்கப் போகிறவர்கள்தானே எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்ற அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள். இறவா புகழை அடைய வேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாகிறவரை அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் சாகவேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாவு என்ற ஒன்று இல்லையென்றால் எழுத்துக்கே அவசியமிருக்காதோ என்று தோன்றுகிறது. சாவைப் பற்றி வந்த உருப்படியான கதை. ஆனால் ஆறுமாதங்கள் உருண்டோடின போன்ற பதங்களுக்கு வேறு வாக்கியங்களை உருவாக்கலாம்.
-சுஜாதா
மேற்படி கடிதத்தில் சுஜாதாவின் வார்த்தைப் பிரயோகம் இருப்பது உண்மைதான். ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் நிறையபேர் அவரைப் போல எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியாராவது என்னைக் கிண்டல் செய்யும்நோக்கோடு எழுதியிருந்தால்… ஆனால் அவர்களுக்கு சுஜாதாவின் மின்னஞ்சலின் ரகசிய குறியீட்டு எண் தெரிந்திருக்க வேண்டுமே? அவருடைய உதவியாளர் யாருக்காவது பாஸ்வேர்டை சொல்லி வைத்திருந்திருப்பாரோ?

அவருடன் நெருங்கிப் பழகியிருந்த சிலரிடம் கேட்டேன். ûஸபர் கிரைம் பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் அவர்தான். பாஸ்வேர்டை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த கவனம் பற்றிச் சொன்னார்கள். அதுவுமில்லாமல் பாஸ்வேர்ட் யாருக்காவது தெரிந்துபோக வாய்ப்பிருப்பதால் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பவர் அவர் என்றும் சொன்னார்கள்.

என்னுடைய கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்வதற்கு வரும் ஆசாமியைத் தொடர்பு கொண்டு நடந்த கதையை எல்லாம் சொல்லி விளக்கம் கேட்டேன்.

“அவருடைய பாஸ்வேர்ட் தெரிந்திருந்தாதான் ஸôர் அனுப்ப முடியும். இல்லாட்டி சான்úஸ இல்லை” என்று ஒரே வரியில் வைத்துவிட்டார்.
சரி என்று நானும் விட்டுவிட்டேன். அந்தத் தருணத்தில்தான் அவருடைய கணேஷும் வஸந்தும் மூளைக்குள் புகுந்து ஒரு ஜிவ்வு ஜிவ்வினார்கள்.
மறுபடி சுஜாதாவுக்கே இன்னொரு ஈ மெயில் அனுப்புவது என்று தீர்மானித்தேன்.

என்ன இருந்தாலும் தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளரான அமரர் சுஜாதாவின் பெயரில் இப்படி விளையாடுவது நியாயமே இல்லை. இது அவருக்குச் செய்யும் அவமானம். இந்த விளையாட்டைத் தொடராதீர்கள்.
-தமிழ்மகன்

ஈ மெயில் அனுப்பிவிட்டு சிலவினாடிகளில் இன்னொரு பதில் ஈ மெயில் சுஜாதாவிடமிருந்து.

இறந்த ஒருவரை வைத்து இப்படியெல்லாம் விளையாடக் கூடாது என்ற உங்கள் அபிப்ராயம் சரிதான். ஆனால் இறந்த ஒருவர்தான் உங்களிடம் இப்படியெல்லாம் விளையாடுகிறார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நம்ப வைப்பதற்கு என்னிடம் ராஜ இலச்சினையோ, முதுகு மச்சமோ இல்லை. பேசாமல் இறந்த ஒருவரால் எப்படி ஈ மெயில் அனுப்ப முடியும் என்று யோசியுங்கள். கண்டுபிடிக்கிறீர்களா பார்க்கலாம். உங்களுக்கு 24 மணி நேரம் கெடு.
சுஜாதா
வாசகர்களே தலையைச் சுற்றுகிறதா இல்லையா? இந்த ஒரு நாளில் நான் என்ன செய்ய முடியும்? இன்னும் சிலரிடம் சொல்வதைத் தவிர. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். சுஜாதா எழுதிய கடைசி வாக்கியம்வரை உற்சாகமும் துள்ளலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் இறந்த பின்னுமா? அவர் எழுதிய காலமானவர் கதை ஞாபகம் வந்தது. ஏதாவது காலக் குழப்பம் ஏற்பட்டு தேதி மாறிப் போய் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறதா?
மனிதர் கருட புராணம் எல்லாம் படித்தவர். அந்த மாதிரி சூட்சுமம் ஏதாவது கைவரப் பெற்றுவிட்டாரா?

விஞ்ஞானமும் வேதாந்தமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்வதாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் இருக்கிறவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை எதற்கு இந்தப் பரீட்சைக்குத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் தாங்கும் சக்தியோ, போராடிக் கண்டுபிடிக்கும் திராணியோ இல்லாதவன் நான்.

வாலி, மணிரத்னம், ஷங்கர், கமல்ஹாசன், அப்துல்கலாம், மதன், ராவ் என்று அவருக்கு நிறைய நெருக்கமான ஆட்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரியாருக்காவது இப்படி ஒரு ஈ மெயில் வந்திருந்தால் அது நாடுதழுவிய செய்தியாகவோ உலகு தழுவிய செய்தியாகவோ இருந்திருக்கும்.
வேதாந்தம், அமானுஷ்யம், சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் போன்ற வஸந்த் பாணி விஷயங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு கணேஷ்போல இந்த விஷயத்தைக் கையாள்வோம் என்று முடிவு செய்து கொண்டேன். எனக்கு சுஜாதா எழுதிய “கொலையுதிர் காலம்’ நாவல்தான் இப்படி முடிவெடுக்க உதவியது. விஞ்ஞானம்… விஞ்ஞானம்… எனக்குத் தெரிந்து விஞ்ஞான நோக்கோடு விஷயத்தை எதிர் கொள்பவர் கோவர்தன்தான். பெங்களூருவில் இருக்கிறார். இன்னும் 6 மணி நேரமே இருக்கும் அவகாசத்தில் அவருடைய ஆலோசனையை நாடினேன்.

மனிதர் எப்போதும் போல் மும்பை செல்வதற்காக ஏர் போர்ட்டில் காத்திருந்தார். விஷயத்தை உள்வாங்கிக் கொண்டார்.

“அது எழுத்தாளர் சுஜாதாவின் ஈ மெயில்தானா என்று தீர்மானியுங்கள். நான் என் வேலையை முடித்துவிட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” } ரத்தின சுருக்கமாக இவ்வளவுதான் சொன்னார்.

அவர் சொன்ன முக்கியமான சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள சுஜாதாவின் நண்பர்கள் சிலரை அணுகினேன். அட்சரம் பிசகினாலும் தவறாகிவிடும் என்பதால் எழுத்து எழுத்தாகக் குறித்துக் கொண்டேன். முகவரி சரியாகத்தான் இருந்தது. அது சாட்சாத் சுஜாதாவின் ஈமெயிலே தான். அவசரப்பட்டு இரண்டொரு தரம் கோவர்தனுக்கு போன் செய்த போதும் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவே செய்தி வந்தது. தவிப்பு தாளவில்லை எனக்கு. இரண்டு நாளாக இதே வேலையாக இருக்கிறேன். யாருமே இதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று இந்த பொறுப்பற்ற உலகத்தின் மீதே கோபமாக இருந்தது.

சரியாக மாலை அவரே தொடர்பு கொண்டார்.

“ஈ மெயில் சரிதானா?”

“மிகச் சரியாக இருக்கிறது”

“வேறுயாருக்காவது அவருடைய ஈ மெயில் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

“அதையும் விசாரித்துவிட்டேன். அந்த விஷயத்தில் படு ரகசியம் காத்திருக்கிறார்.”

“அப்படியானால் ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. ஆட்டோ இன்டலஜன்ஸ் புரோகிராமிங்.”

“சில ஈ மெயில் பார்த்திருப்பீர்கள். கடனட்டைக்கான தொகை ரூ… கிடைத்தது. நன்றி… அல்லது எங்கள் வலைதளத்தில் உங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி என்று தயார் நிலை வாக்கியங்களோடு சில கடிதங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படியானது.”

“ஆனால் நான் எழுதிய கதையைப் படித்துவிட்டு விமர்சித்திருக்கிறாரே?”

“ஆயிரக் கணக்கான கதைகளைப் படித்ததன் மூலம் எல்லாவற்றையும் ஒரு பார்முலாவுக்குள் அவரால் கொண்டு வரமுடிந்திருந்தால் கம்ப்யூட்டரேகூட உங்கள் கதையைக் கணிக்க முடியும். அதாவது அந்த மாதிரி புரோக்ராம் செய்ய முடியும்.”

“ரொம்ப நன்றி கோ…”

ஓட்டமாய் ஓடி சுஜாதாவுக்கு அடுத்த மெயிலைத் தட்டினேன்.
“கண்டுபிடித்துவிட்டேன் ஐயா. இதுதானே விஷயம்?’ என்று.
அடுத்த நிமிடம். “வெரிகுட்’ என்றொரு மெயில் ஒன்று அவரிடமிருந்து வந்தது. அடுத்த விநாடி கம்ப்யூட்டர் பட்டென்று அணைந்துவிட்டது. என்னடா இது எல்லாம் கூடி வருகிற நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று பதறிப் போய் மீண்டும் கம்ப்யூட்டரை ஏற்றினேன்.

வேகமாக ஈ மெயிலை திறந்தேன்.
… சுஜாதா… அட அவர் அனுப்பிய ஈ மெயிலே இல்லையே… அனுப்பிய மெயில் பட்டியலிலும் இல்லை. பெற்றுக் கொண்ட பட்டியலிலும் இல்லை.
இதுவும் அவர் வேலைதானா?

நன்றி: தினமணிகதிர் 9.3.2008


tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்