தாய் வீடு

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

மருதமுனை எஸ் ஏ. ஹப்பார்


இன்று மூன்றாவது நாள்.

என்னோடு கோபித்துக்கொண்டு அவள் தன் தாய் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ அல்லது இரண்டாவது நாளோ வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை மூன்று நாட்களாகியும் வரவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. பிரிவை நினைக்கும்போது நெஞ்சு பாரமாக இருந்தது. அப்படி எங்களுக்குள் சண்டை என்று பெரிதாக ஒன்றுமில்லை. பரஸ்பர புரிந்துணர்வு போதாது.. அவ்வளவுதான். இத்தனைக்கும் நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

நான் ஒரு முன்கோபி, உண்மைதான். எதையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவம், அதுவும் உண்மைதான். மற்றவர்களைப் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது அவமானப்படுத்த வேண்டுமென்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தவறுகளும் அநியாயங்களும் எங்கு நடந்தாலும் அங்கு என் குரல் ஒலிக்கும். அதை சிலர் பிழையாக விளங்கிக்கொண்டு என்னை விமர்சிப்பார்கள். அதை நான் பொருட்படுத்திக் கொள்வதுமில்லை. என் மனைவிகூட என்னை ஒரு பிடிவாதக்காரன் என்றும் எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எடுத்ததெற்கெல்லாம் கோபித்துக்கொண்டு அவளது தாய் வீடு செல்வது பழக்கமாகிவிட்டது. எனக்கு அவமானத்தையும் பக்கத்து வீட்டாரிடையே ஒருவகை தன்மானப் பிரச்சினையையும் தோற்றுவித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இதன் எதிர்விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இலேசாக வியர்க்கத் தொடங்கும்.

நாளை ஹஜ்ஜூப் பெருநாள். இருவர் மனதிலும் மகிழ்ச்சியும் சந்தோசமும் குடிகொண்டிருந்ததை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு நாளைய பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாக இருந்தோம். பலகாரங்களையும் உணவுப் பொருட்களையும் தயாரிப்பதில் அவள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு ஒத்தாசைகள் செய்துகொண்டிருந்தேன்.

திடீரென ஏதோ நினைவு வந்தவளாக உள்ளே சென்றாள். அலமாரி திறக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. நேற்று அவளுக்காக வாங்கி வந்த அழகிய விலையுயர்ந்த செருப்புச் சோடியை எடுத்து வந்தாள். ஷஷஎன்ன? நல்லதென்று திரும்பத் திரும்ப பார்க்கிறாயா?|| என்றேன். ஷஷஇல்ல! நல்ல அழகாத்தான் இருக்கு. விலைதான் மிச்சம் அதிகம்.|| என்றாள். ஷஷஇப்ப என்னதான் விலையில்லை. எல்லாம் ஆனை விலைதான்|| என்றேன். நான் கூறியதை அவள் கவனிக்கவில்லை என்பது எனக்கு நன்கு தெரிந்தது. ஏதோ ஒன்றை அவள் நன்கு கூர்ந்து அவதானிப்பதும் தெரிந்தது. எனக்கு இலேசாக பயம் பரவத் தொடங்கியது. நாளை பெருநாள். விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொண்டேன். ஷஷஇஞ்ச பாருங்க. இந்தப் பட்டியை. பிஞ்சுபோய் திரும்ப ஒட்டியிருக்கான் போல.|| அவளது குரல் கேட்டு எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. ஷஷபுதுச் செருப்பைப் போய் யாராவது ஒட்டியிருப்பானா? – எனது கேள்வி எடுபடவில்லை. கடைக்காரனிடம் கொண்டு கொடுத்து வேறொன்று மாற்றிவரச் சொன்னாள். நான் மறுத்தேன். முடிவு அவள் தாய் வீடு சென்றுவிட்டாள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பெருநாளைக்கு அவள் தாய் வீடு சென்று விட்டாள் என்றும் இன்றிரவே வீடு வந்துவிடுவாள் என்றும் பொய் சொன்னேன். அது பொய்யல்ல, மெய்யென நிரூபிக்க அவள் அன்றிரவே வந்துவிட்டாள்.

முந்தநாள் அவளது நண்பியின் திருமணம். வேலைக்குப் போவதற்கு முன் பத்துத் தடவையாவது சொல்லியிருப்பாள். ஷஷபாருங்க, என் உயிர் நண்பியின் திருமணம். நான் கட்டாயம் நாலு மணிக்கெல்லாம் அங்கு இருக்க வேண்டும். ஏதும் பிரச்சினை என்றால் சொல்லிடுங்க. லீவு போட்டுவிட்டு இருந்திடலாம் என்றாள். ஷஷஇல்ல ஜெ~p, நான் இண்டக்கி கட்டாயம் வேலைக்குப் போகவேண்டும். எப்படியாவது நாலு மணிக்குள்ளே வந்திடுவேன்|| என்றேன். ஷஷஇஞ்ச பாருங்க, நாமளும் நாலு கலியாண வீடு, சா வீடென்று போனாத்தான் நம்மட சாவு வாழ்வுக்கும் நாலுபேர் வருவாங்க. வேலை, வேலை என்று திரிந்தால் நம்மள ஊர் ஒதுக்கிடும்|| அவளது புத்திமதி எனக்கு உறைத்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாக நேரத்தோடு வெளிக்கிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஆனால் அவளுக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் ஐந்து மணிக்கு வந்துநின்று விழி பிதுங்கினேன். அவள் ஒன்றுமே கூறாமல் திருமண வீட்டுக்குப் போக ஆயத்தமாக நின்றது எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் திருமண வீடு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு இரவு எட்டு மணியளவில் வீடு வந்தடைந்தோம். எனக்குக் கால், கைகளெல்லாம் வலித்தன. விழுந்து படுத்தால் சுகமாக இருக்கும் போலிருந்தது. அப்படியே முன் ஹாலில் கிடந்த சோபாவில் மெதுவாகச் சாய்ந்தேன். நித்திரை என்னை ஆட்கொண்டுவிட்டது. விழித்துப் பார்த்தபோது மணி பத்தரையாகிவிட்டது. கண்களைக் கசக்கி கைகளை உயர்த்தியபோது தொலைபேசி அலறியது. ரிசிவரைத் தூக்கினேன். ஷஷஎன்ன மச்சான், எப்ப பார்த்தாலும் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் அக்கா சண்டை போட்டுக்கொண்டு உம்மா வீட்டுக்கு வருவதும் போவதுமாக. நாலு அறை அறைந்து அடக்கிவைக்கத் தெரியாதா உங்களுக்கு? உம்மா அழுதுகொண்டே இருக்கா. வாப்பா ஆத்திரத்தில் கத்திக்கொண்டே இருக்கார்.|| – அவளது தங்கையின் குரல் கேட்டு எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ரிசிவரைக் கீழே வைத்துவிட்டு அவள் வருகைக்காக வாசலில் காத்து நின்றேன்.

மூன்று நாட்கள் தனிமையில் எவ்வாறு காத்துக்கிடந்தேன் என எனக்கே புரியவில்லை. மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளாமல் தவிப்பதும் தாங்களாகவே பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு பரிதவிப்பதும் எனக்கு மட்டுமல்ல அவளுக்கும் நன்கு புரியும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ இன்னும் பழகிக்கொள்ள முடியவில்லையே என எண்ணும்போது கவலையாக இருந்தது. அதற்கான வாய்ப்புக்கூட ஏற்படவில்லை, ஒரு குழந்தை வடிவிலாவது. என்னதான் இருந்தாலும் அவள் என் ஜெ~p. அவளை எப்படியாவது சமாதானப் படுத்தி அழைத்துவர எழுந்த என்னை ஆட்டோ சத்தம் வேகமாக நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவள் திரும்பி வந்துவிட்டாள்.

எழுந்த நான் அப்படியே நின்றேன். உள்ளே வந்தவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மின் விளக்குகளையும் மின்விசிறியையும் உயிர்ப்பித்தாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது வீடும் நானும் உறங்கிக்கிடந்தது. மின்விசிறியின் அரட்டலில் விழித்துக் கொண்ட அவ்வார இதழொன்று என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியது. அதைக் கையிலெடுத்து மீண்டும் சோபாவில் சாய்ந்தேன், இன்னும் சில நாட்களுக்கு என் ஜெ~p என்னைத் தவிக்கவிட்டு தாய் வீடு செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையுடன்.

– மருதமுனை எஸ் ஏ. ஹப்பார்.
இலங்கை.
27-07-2006.

Series Navigation

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்