காப்பாத்துங்க..

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

ஷைலஜா


‘செல்வராணீ எங்க காணோம் ? ‘

மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது

தெரியல போலருக்கு

என் பேரைச் சொல்லிட்டே வீட்டுக்குள்ள நுழையறாரு சின்ன எஜமான்

குமாரு.காலேசுல படிக்கறபையன்.

எப்போபாத்தாலும் வாயில எதியாச்சும் மென்னுட்ருக்கும்.வாய நல்லா

அசைபோட்டுகிட்டே என்னைப் பாத்து கண் அடிப்பான்

கிட்டே வந்து பாட்டுபாடுவான் . ‘சொன்னபடி கேளு நீ என்னுடைய ஆளு ‘

யே! ஆசைதான் …

எனக்கு சிரிப்பாவரும். எங்க சிரிக்கறது ,குமாரு அப்பா கேட்டா வெட்டிப்

போட்டுடுவாரில்ல என்னைய ? ஏற்கனவே என்னைக்கண்டாலே

திட்டிக்கிட்டு இருக்காரு இப்போல்லாம்… ஆனா குமாரு அப்டி இல்ல..குறும்பு

அதிகம்தான் ஆனாலும் என் மேல பிரியம் அவனுக்கு. என்னையக் கண்டா ‘என்ன

செல்வராணீ..எப்படி இருக்கே ? ‘ன்னு கேக்காம போகமாட்டான்.

எதிர்பாராத நேரத்துல பின்னால பக்கம் செல்லமா கிள்ளீ அடிச்சிடுவான்

குமாரு. வெக்கத்துல எனக்கு உடம்பு கூசிப்

போகும்.

நான் குமாரத் தொடந்து திண்ணை மேட்டுவரைக்கும் வந்து நிக்கறேன்.

‘எங்கடா, டவுன் போயிட்டு இத்தினி நேரம் கழிச்சிதான் வர்தா ?

ஊரெல்லாம் மளைன்னு பேசிக்கிறாங்க நெசமாவா ?

பெரிய எசமான் தன் மகனைப்பாத்து இப்படிக் கேக்கவும் குமாரு

, ‘ஆமாப்பா…திருச்சி சத்திரம் பஸ்நிலயமெல்லாம் தண்ணிவர

ஆரம்பிச்சிடிச்சி…நாம கிராமத்தைவிட்டுக் கிளம்பியாவணும் ‘ன்னு

பரபரத்தான்

‘ஆங் ? ‘

பெரிய எஜமானுக்குக் காது சரியாக் கேக்காது.

மறுமுறை மகனைப்பாத்துக் கேக்கறாரு

‘என்ன சொல்றே ? ‘

‘அதுசரி..வெள்ளம் வந்து உங்கள வாசலுக்கு இழுத்துட்டுபோவறவரைக்கும் இப்டியே

இருங்க…நீங்களும் உங்க கேக்காத காதும் ? ‘

எரிச்சலா பேசிப்புட்டு குமாரு ரூமுல புகுந்துக்கறான்.

‘அப்பாஆஆ… ‘கூவிக்கிட்டே சுமதி வருது. குமாருக்கு ஒருவயசு மூத்தது.

பள்ளிக்கூடம் படிச்சி முடிச்சி

வூட்லதான் கிடக்குது.கிராமத்துல பல பசங்களுக்கு சுமதிமேல ஒருகண்ணு.தள

தளன்னு பறிச்ச புல்லுமாதிரி இருப்பா சுமதி

மேலத்தெருவுக்கு முன்னே ஒரு நா, நான் மட்டும் தனியா போவையிலே

மாணிக்கக் கோனாருமகன் பூவரசனும்

காத்தான்கோனாருமகன் வினாயகமும் சுமதியப் பத்தி என் காதுபடவே

பேசினாங்க.. ‘அந்த சுமதிதான்

இந்தக் கல்லுப்பேட்டை பக்கத்துல கம்பரசம்பேட்டை ஜீயபுரம் வரைக்கும்

அளுகுராணிடா…அவங்கப்பன்

ஒரு செவிட்டுக் கிளம்.பொண்டாட்டி செத்துப் போன பிறவு நாலுவருஷமா இன்னும்

லூஸ் ஆயிடிச்சி. வயலு விவசாயம் மாடு பாலுன்னு

ஊரைக் கட்டிட்டு உக்காந்திருக்குது…சுமதியோட அளகு சினிமாவுக்குப்

போவணும்டா..இல்லேன்னா என்னைச் சேரணும்டா..ஹிஹி ‘

அடப்பாவிகளா ? பீடி குடிச்சித் திரியற உங்களுக்கு இப்படி ஒரு விபரீத

ஆசையா நாசமாத்தான் போவீங்கடா

நான் மனசுக்குள்ள திட்டிபுட்டேன் அவங்களை. வேற என்ன செய்யறது பேர்லதான்

செல்வம் , ராணி எல்லாம். ஏளைச் சொல் அம்பலம் ஏறுமா ?

‘சுமதி..கொமாரு என்னம்மா சொல்றான் ? ‘

எசமான் நிதானமா தாழ்வாரத்து ஊஞ்சலில் உக்காந்து கேக்கறாரு.வாயில

புவையிலை அசைபோடுறாரு.

‘அய்யோ அப்பா !இடா இடிக்குதே காதுல விழலையா… ?ஊரே நகந்துட்டு

போகுதுப்பா…காவிரி பெருக்கெடிச்சி ..மேட்டுர் அணைக்கட்டு உடைஞ்சி

போயிடிச்சாம்..நாமளும் கிளம்பணும் ஊரைவிட்டு..அதான் ஒலிபெருக்கி

போட்டு வேற சொல்லிட்டெ போறாங்களே..ஆபத்துப்பா இனியும் இங்கைட்டு

இருந்தா ஆபத்து நமக்கு.. உயிருக்கே ஆபத்து.. ‘

சுமதி வீறிட்டு சொல்லுது.

‘எங்கிட்டுப் போவறது தாயி ?சொந்தமண்ணு, நெலம் ,மாடு,கன்னுகுட்டி… ‘

அவரு முடிக்கறதுக்குள்ள சுமதி குறுக்கிட்டு சத்தம் போடுது

‘அய்யோ அப்பா! கரண்ட்போயிடிச்சி…கம்மாங்கரையெல்லாம் உடைஞ்சி ஊரே

மிதக்குது,, ‘

‘ஆமா இதப்போல மளே இருவது வருஷம் முந்தி நீ பொறந்தபத்து நாள்ல

வந்ததும்மா…சும்மா பயமுறுத்திட்டு ஓடியே போயிடிச்சி ஆறுகுளம்

கண்மாயி எல்லாம் ரொம்பிச்சி அவ்ளோதான் வெள்ளமெல்லாம் வீதிக்கு

வரல..புரளி கிளப்பறாங்கம்மா வேணுமின்னே சிலரு ‘

‘இல்லப்பா இப்போ அப்படால்ல ..ஊரே ஓடிட்டு இருக்கு.. நம்மஊரு பள்ளிக்கூடம்

மேட்டுப் பகுதில இருக்குறதுனால அல்லாரும் அங்கிட்டு ஒதுங்கறாங்க நானும்

தம்பியும் வேண்டிய சாமான் சட்டு எடுத்துட்டோம் நீங்களும் பொறப்பட்டு வாங்க

சொல்லிட்டேன் ஆமா.. ‘

சுமதி கண்டிப்பான கொரல்ல சொல்லிப்புட்டு நாலுமூட்டை முடிச்சி

பொட்டியோட வாசலுக்கு வந்திச்சி

‘சுமதி நான் ரெடி ‘

குமாரும் பொட்டியோட பொறப்பட்டான்

மளை பெருசா கொட்ட ஆரம்பிச்சிடிச்சி

‘சரி…பின்னாலயே வாரேன் நானும்… ‘எசமான் எரிச்சல்பட்டுகிட்டே

என்னைபாத்தார்

‘ ‘செல்வராணி..நீயும் அவங்ககூட போயித்தொலைக்கவேண்டியதுதானே ? ‘

கத்தினார்

‘அய்யா உங்களத்தனியாவிட்டு நான் எப்படிப்போவறதுங்க ? ‘

அவருக்கு என் குரல் கேட்கல, ‘ சரி நாங்க கிளம்பறோம் சீக்ரமா வாங்க

நீங்களும் ‘ அப்டான்னு சுமதி சொன்னதும் காதுல விளுந்த

மாதிரித் தெரியல.

மழைத்தண்ணி தாழ்வாரத்துல வரலாமான்னு எட்டிப்பாக்குது

‘எலே….கோனாரு..பொறப்படும் சீக்ரமா….வெள்ளம் நுழையுது ஊர்ல.. ‘

தெருவில் யாரோ கத்தறாங்க

அய்யோ காவேரி நதி பொத்துகிச்சா ?

சாமீ!

நான் கண்ணை இறுக்கி மூடிக்கறேன்.

எசமான் திண்ணைதடுப்புஒட்டி இரும்புக்கம்பில கயிறுபோட்டுகட்டிவச்சிருந்த மூணு

பசுமாடுகளை கன்னுகுட்டியோட சேர்த்து அவுத்துவுடுறாரு

எல்லா மாடுகளும் திருதிருன்னு முழிக்குது

‘எல்லாம் போங்க வெளியே ? ‘ பிடிச்சி தள்ளிவிடறாரு

என்னைபாத்தவரு, ‘ வந்து தொலை ‘ ன்னு கத்தறாரு

எத்தினி வருஷம் வாழ்ந்தவீடு ?

எனக்குப்பிரிய கஷ்டமா இருக்குது

வெள்ளம் வடிஞ்சி திரும்ப வூடு வந்துடுவோமில்ல ?

நான் அமைதியா அவரைப்பின் தொடந்துகிட்டு நடக்கறேன்

தெரு எல்லைதாண்டறப்போ திடார்னு தண்ணீ பெருக்கெடுத்து ஓடிவருது.வயிறுவரை

இருந்த தண்ணீ கழுத்தைத் தொடுது இப்போ.

கடல் அலைபோல ஆவேசமா வெள்ளம்

ஜனங்க பதட்டமா ஓட்றாங்க

ஓடுங்க சீக்ரம்..மேட்டுப்பகுதில ஒதுங்குங்க அல்லாரும்

கூவறாரு ஒரு புண்ணீயவான்

லாரி வண்டிங்க நிறைய ‘சர்ர்சர் ‘ருனு வர்து

அம்மாடி!

மூச்சுத் திணறுது எனக்கு

கழுத்துவரை தண்ணீ

முன்னாடி பசுமாடுகன்னுகுட்டிங்களோட நடந்தவரு சட்டுனு நின்ன ஒரு லாரில

ஏறீட்டாரு

லாரிக்கராங்க தயவுல மாடுகன்னுகுட்டிகளையும் மனுஷங்களோடயே ஏத்தறாரு…

லாரி பொறப்படப்போவுது நான் தண்ணில விளுந்து புரண்டு லாரிபக்கத்துல

போயி நிக்கறேன்

அய்யோ எசமான்! என்னைய மறந்திட்டாங்க. நானும் வந்துடறேன் எசமான் மனசு

வைங்க அய்யா சாமீ.

நான் கெஞ்சறேன்

கண்ணுமுழிவரை வெள்ளம் வந்து என் உயிரை எடுக்குது

லாரி ட் ரைவரு. என்னைக்கைகாட்டி, ‘ இழுத்துபோடவா ? ‘ன்னு கேக்கறான்

நான் பலமா தலை ஆட்டறேன்.

என்னைத் திரும்பிப்பாத்த எசமான், ‘ செல்வராணியையா ? வேணாம்… அது

கறவை நின்னுபோயிகிடக்கு சனியன். ஒருவருஷமா அடிமாட்டுக்கு விக்க

தரகருக்கு சொல்லீருந்தேன் …படுபாவி இன்னிவரை வரல …அது இருக்கறதும்

ஒண்ணுதான் இல்லாததும் ஒண்ணூதான்,, செத்துப்போவட்டும் அது தண்ணியோட..நீ

வண்டியக்கிளப்பு. ‘ ன்னு ஈவுஇரக்கமே இல்லாம சொல்றாரு

லாரி கர்புர்னு கத்திக்கிட்டு போயிடிச்சி.

நாம் மட்டும் வெள்ளத்துல உயிருக்கு போராட்டிட்டு இருக்கேன்.

யாராச்சும் வந்து என்னைக் காப்பாத்துங்களேன்

காப்பாத்துங்க

காப்பாத்

காப்

கா…

****

Series Navigation

ஷைலஜா

ஷைலஜா