ஹெச்.ஜி.ரசூல்
இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு மாற்றாக வாய்மொழி வரலாறுகளின் துணைகொண்டு புதிய உண்மைகளைத் தேடுதல் செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வோடும் உணர்ச்சியோடும் கலந்துவிட்ட நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறைகளாக எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளாக சொல்லப்பட்டு வந்துள்ளன. பிற்காலத்தில் அவை அப்படியே எழுத்து வடிவில் பதிப்பிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாய்மொழி வரலாற்றில் மிக முக்கியமாக இடம் பெறுவது இயல்புக்கு மாறாக நடைபெற்றதாக கூறப்படும் யதார்த்தம் மீறிய வியத்தகு சம்பவங்களாகும். இதனை அற்புதங்கள் என்றும் சொல்வதுண்டு. பொதுவாக இஸ்லாமிய வரலாறுகளில் இத்தகை யதான இயற்கையின் இயல்பான தன்மைக்கும், மனிதனின் இயல்பான தன்மைக்கும் மிஞ்சி யதாக அதீத ஆற்றல் வாய்ந்த சம்பவங்கள் பல உள்ளன. இறைஆற்றலின் வெளிப்பாடுகளாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆனிலும், நபிமார்களின் வாழ்க்கை யிலும் இச்சம்பவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு.
குர்ஆனில் இடம் பெறும் மூசாநபியின் அஸா என்னும் கைத்தடி நிகழ்த்திய அதிசயங் களைக் குறிப்பிடலாம். மூசா நபி அந்த கைத்தடியை நிலத்தில் எறிந்தபோது மலம் பாம்பாக மாறியது. மிகப்பெரிய பாம்பாக உருவெடுத்து மந்திரவாதிகளின் பாம்புகளை விழுங்கியது. பாலைவனத்தில் தாகம் தணிக்க பாறையில் ஓங்கி அடித்தபோது அதிலிருந்து பனிரெண்டு நீரூற்றுகள் கிளம்பின. பிர்அவுன் கூட்டம் துரத்தியபோது அஸாவை செங்கடல்மீது வைத்த போது கடல் பிளந்து பாதை உருவாகியது. மூசாநபி கூட்டத்தை உயிர் பிழைக்க வைத்தது. அதே மணல்திட்டு பாதையில் துரத்திய பிர்அவுன் கூட்டத்தை கடல் திரும்பவும் மூடி அழித்தது. ஈஸாநபி இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தார். வெண்குஷ்ட பிணியாளர், பிறவிக்குருடர்களை தனது கரத்தால் தொட்டு சுகப்படுத்தினார். களிமண்ணால் பட்சி உருவத்தை செய்து அதில் ஊதி உயிருள்ள பட்சியாக மாற்றினார். இபுராகீம் நபியை எரியும் நெருப்பில் வீசியபோது அந்த நெருப்புக்குண்டமே குளிர்பொய்கையாய் மாறியது. இஸ்மாயில் நபியின் கழுத்து பலிபீடத்தில் வைத்து அறுக்க அறுக்க அறுபடாமல் கத்தி அதிசயம் செய்தது.
கடலில் தூக்கி வீசப்பட்டபோது மீன்விழுங்கி மீனின் வயிற்றில் யூணஸ் நபி வாழ நேர்ந்தது. நபிசுலைமான் போர் புரிய திரட்டிய ராணுவத்தில் மனிதர்கள், ஜின்கள், பட்சிகள் இருந்துள்ளனர். எறும்புடன் நபி சுலைமான் பேசுகிறார். ஸபா நாட்டின் மக்களை பல்கீஸ் என்ற இளவரசி ஆட்சி புரியும் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்பாக வெகு தொலைவிலுள்ள அவரது சிம்மாசனத்தை ஜின்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இவையனைத்தும் குர்ஆனில் இடம் பெறும் நபிமார்கள் வாழ்வில் நிகழும் அற்புதங்களாகும்.
இமாம் கஸ்ஸாலி இஹ்யா உலூமித்தீன் நூலின் அக்லா குன்னபி பகுதியில் நபிமுகமது நிகழ்த்திய அற்புதங்களை கூறியுள்ளார். இது புறவாழ்வு மற்றும் அகவாழ்வு அற்புதங் களாக விளக்கப்படுகின்றன.
உஹது யுத்தத்தில் ஹஜ்ரத் கதாதா அவர்களின் கண்விழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. நபிமுகமது அவர்கள் அவ்விழிகளை அந்த இடத்தில் எடுத்துவைத்து தடவிவிட்டார்கள். அந்த ஸகாபி குணமடைந்துவிட்டார். இதுபோன்றே ஒருபெண் தனது குழந்தையை நபி முகமது விடம் கொண்டுவந்து, என்னுடைய இக்குழந்தை புத்தி சுவாதீனமானமில்லாமல் இருக்கிறது என்றார். நபியவர்கள் குழந்தையின் நெஞ்சை தடவிவிடவே குழந்தை வாந்தி எடுத்தது. அதன்பிறகு சுவாதீனம் பெற்றது.
நபிமுகமது அதிசயங்களிலெல்லாம் பேரதிசயம் அல்லா அருளிய புனித நூலான குர்ஆனே என்ற வாசகத்தை இன்னும் சூழ்ந்து உற்று நோக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத சூழலில் (பதூயீன் அரபு பழங்குடி மக்கள்) வாழ்ந்தபோது ஒலி வடிவிலும், பின் எழுத்துவடிவிலும் உருவான குர்ஆன் அறிவுரைகளும் கோட்பாடுகளுமே முஸ்லிம் உம்மத்தை உரு வாக்கியதின் பின்னணியை உணர்த்தும் பெருபங்கினை ஆற்றிய விதமாக குர்ஆனின் அதிசயத்தன்மையை நோக்கலாம்.
உலகின் முதல் மனிதராக கருதப்படுகிற ஆதம் நபியைப் படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாவின் சன்னிதானத்தில் ஒளியாக படைக்கப்பட்டிருந்தேன் என்ப தான நபிமுகமதின் வாக்கில் பாரம்பர்யத் தோற்றம் சார்ந்த விசித்திரம் தென்படுகிறது. தங்கத்தால் உருக்கி வார்க்கப் பட்ட காளைமாட்டுச் சிலையொன்று பேசியதாக நபி மூசா அவர்களின் சரித்திரத்தில் காண்பதுபோல ஹூபுல் சிலைக் குள் முஸ்பிர் என்ற இப்லீஸ் நுழைந்து செய்த பிரச்சாரத் திற்கு எதிராக நபி நூஹ்வின் காலத்தில் இஸ்லாத்தை தழு விய முகீன் என்னும் ஜின்னை ஏவி குறைவுகளின் அவை யில் சத்தியத்தை நிலைநாட்ட நபிமுகமது பேசவைத்த அதிசயத்தையும் குறிப்பிடலாம்.
நபிமுகமது மிகராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் செல்வதற்கு முன்பு மார்பு பிளக்கப்பட்டு உள்உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே புராக் என்னும் கோவேறு கழுதையைவிட பெரியதுமான வெள்ளைநிற மின்னல்வேக மிருகவாகனத்தில் இவ்விண்ணுலகப் பயணம் நடைபெற்றுள்ளதாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் தொன்மவியல் விசித்திரங்கள் ஒரு குறியீட்டு மொழியாடலாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆன் வசனங்கள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன.
ஏழு நபர்கள் ஈமானை பாதுகாக்க மலைக்குகையில் நுழைந்தனர். எதிரிகளிடமிருந்து காப்பாற்ற இறைவன் குகை யின் வாசலை அடைத்து அவர்களை அங்கேயே முன்னூறு வருடம் தூங்கச் செய்தான். ஒருபுறமாக தூங்கினால் விலாப் புறத்தை பூமி தின்றுவிடும் ஆதலால் வலதாகவும் இடதாக வும் புரட்டி புரட்டி தூங்கச் செய்தான். அவர்களோடு வந்த நாய் தனது முன்கால்களை நீட்டி விரித்தபடி அவர்களோடு தூங்கியது. பின்னர் கண்விழித்து நகரங்களுக்குச் சென்றனர். (அல் கபு- குகை அத்தியாயம் 18, வசனங்கள் 71-19)
இஸ்ரவேலர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. உண்மை தெரிவதற்காக ஒரு மாட்டை அறுத்து அதன் நாக்கைக் கொண்டு கொலை செய்யப்பட்ட பிரேதத்தின் மீது அடித் தால் அது உயிர்பெற்று கொலை செய்தவர் யார் என்பதை சொல்லிவிடும் என்று இறைவன் அறிவித்தான். அதன்படி இஸ்ரவேலர்கள் செய்ய பிரேதம் உயிர்பெற்று கொலை செய்தவரை காட்டிக்கொடுத்தது. (அல் பகறா-அத்தமாடு அத்தியாயம் 2, வசனங்கள் 72,73)
இறந்தோரை எப்படி உயிர்ப்பிக்கிறாய் எனக் கேட்க நான்கு பறவைகளை துண்டுதுண்டாய் வெட்டி அவற்றை நான்கு மலையுச்சிகளில் வைத்துவிட்டு மீண்டும் அப்பறவைகளை அழைக்குமாறு சொன்னான். அவை உயிர்பெற்று வந்தன. (அல்பகறா-அத்தமாடு, அத்தியாயம் 2, வசனம் 260)
எந்த ஒரு மனிதருமே தீண்டாமல், அல்லாவின் ஆகுக என்ற சொல்லால் மட்டுமே அன்னை மர்யத்திற்கு கர்ப்பம் ஏற்பட்டு ஈஸாநபியை ஈன்றெடுக்கும் சம்பவம் குர்ஆனில் இடம் பெறுகிறது. (இப்ரானின் சந்ததிகள் அத்தியாயம் 3, வசனங்கள் 45-47) மற்றும் மர்யம் அத்தியாயம் 19, வசனங் கள் 16-24). மரணம், உயிர்ப்பித்தல், பிறப்பு என்பதான கருத் தாக்கங்களை விளக்கப்படுத்தும் மேற்குறிப்பிட்ட வசனங் களில் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபணம் செய்வதற்கான தர்க்கங்களைக் கொண்ட மொழியாடல்களாக இருக்கின்றன. குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் எழுதும் அறிஞர்களும் ஹதீஸ் கலையில் இத்தகையதான தொன்ம மொழியை கையாளுவதை கவனிக்கலாம்.
அல்லாவின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர் கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் கீழ்கண்டவாறு விளக்குகிறார். அவர்களின் உயிர்கள் பச்சைநிறத்துப் பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்க விடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சுவர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்றுபின் அக்கூண்டில் வந்து தஞ்சமடையும்.
மேலும் இறந்த ஒரு உடலை அடக்கம் செய்யும்போது கறுப்புநிற, நீலநிறக் கண்களுடைய இரு வானவர்கள் அவரி டம் வருவார்கள். ஒருவர் முன்கர். இன்னொருவர் நகீர் என்பதான மொழியாகவும் அது உள்ளது. குர் ஆனின் மற்று மொருவசனம் யானைப்படைகளை அழித்தொழித்த சிறு களிமண் உருண்டைகளைப் பற்றிப் பேசுகிறது.
யானைகளுடன் வந்த படையை அல்லாஹ் என்ன செய் தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? அவர் களது சூழ்ச்சியை முறியடிக்க அவன் பறவைக்கூட்டத்தை அனுப்பிவைக்க அந்தப் பறவைகள் அவர்கள்மீது களிமண் உருண்டைகளை வீசி எறிந்தன அல்லவா? அதனால் அவர் கள் மாடுமேய்ந்த செடிகளைப்போல ஆகிவிடவில்லையா?
இறை அற்புதத்தன்மையை வெளிப்படுத்த குறியீட்டு மொழியாடல்களான இந்த வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர் அஸ்கர்அலி இன்ஜினியர் வரலாற்றியல் அர்த்தத்தை வழங்குகிறார்.
அப்ரஹா மன்னன் மக்கா வில் உள்ள அரேபியர்களின் ஆலயத்தை அழிக்க யானைப் படைகளை அனுப்புகிறான். வரும்வழியில் அப்ரஹாவின் படையினரிடையே அம்மை நோய் பரவியதால் சேதம் ஏதும் விளைவிக்காமல் அப் படை பின்வாங்கி செல்லும் படி ஆயிற்று. அபாபீல் வீசிய சிறு களி மண் உருண்டைகள் நோயின் காரணமாக உடலில் தோன்றிய அம்மைநோய் கொப்புளங்களுக்கு குறியீடாகி விடுகிறது என்கிறார். இவ்வாறு குர்ஆனோடும் நபிமார் களின் வாழ்க்கையோடும் தொடர்புடைய அதிசய சம்பவங் கள் முஅஜிஸாத்து என்று அழைக்கப்படுகின்றன. மனித இயல்பு, உலக இயல்புக்கு மாறாக நடைபெறும் நிகழ்வு களாக இவை உள்ளன. ஒரு யதார்த்தக் கருத்தியலை வெளிப் படுத்த முயலும் புனைவு மொழியாடல்களாகக்கூட இவற்றைக் கருதலாம்.
மெய்ஞானிகள், சூபிகள் என்றழைக்கப்படும் வலியுல் லாக்களின் வாழ்க்கையிலும் இத்தகைய சம்பவங்களைப் போன்றே நிறைய நிகழ்வுகள் நடைபெற்றதாக வாய்மொழி வரலாறுகள் கூறுகின்றன. வலிமார்களின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவங்களுக்கு கராமாத்துகள் என்று பெயர். வலி என்றால் பிரதிநிதி, வலி யுல்லாஹ் என்றால் அல்லாவின் பிரதிநிதி, இயற்கைக்கு மாற்றமான, மனித அறிவுக்குப் புலப்படாத மனிதர்கள் திகைப்படையும் வண்ணம் இறைநேசர்கள் நிகழ்த்தும் புதுமைச் செயல்களாக இவை இருக்கின்றன.
சூபிஞானிகளின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப் படும் இத்தகைய வாய்மொழி வரலாறுகளை சிலர் மறுத்து வெறும் கட்டுக்கதைகள் என்றும், ஆதாரமே இல்லாத வெறும் புனைவுகள் என்றும் விமர்சனம் செய்கின்றனர். இவர்களின் கூற்றுக்கிணங்கி இந்த வாய்மொழி வரலாறு களை நாம் முற்றிலும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால் இவை காலங்காலமாக இஸ்லாமிய மக்களால், அவர்தம் மொழியால் பேசப்பட்டு வருபவை. குர்ஆன் கூறும் நபிமார்களின் முஅஜிஸாத்துகளை நம்பிக்கை கொண்டிருத்தலின் தொடர்ச்சியாக கராமாத்துகள் மீது இஸ்லாமிய மக்களின் பெரும்பகுதியினர் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே இச்சூழலில் இக்கராமாத்துகள் மூலமாக வெளிப்படும் உண்மைகளை புதியதொரு அணுகு முறையில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது.
ஈராக் நாட்டில் கஸ்பியன் கடலுக்கு தெற்கிலுள்ள தபரிஸ் தான் மாநிலத்தின் ஜீலான் நகரில் பிறந்தவர் முகியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்றஇஸ்லாமிய சமயஞானி. இவர் (கி.பி.1077- 1165) 91 ஆண்டுகாலம் உலகியல் வாழ்வை நிகழ்த்தியவர். 18ம் வயதில் பகுதாதிற்கு புறப்பட்ட ஆண்டகை 30 ஆண்டுகள் கல்விமுயற்சிகளிலும் கடுந் தவப் பெருக்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டார் .
சூபித்துவத்தின் பாட்டையில் நிகழ்த்திய முகியத்தீன் ஆண் டகையின் பெரும்பயணம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பாக்காது நாட்டின் தலை சிறந்த கலைக்கூடங்களில் மார்க்க கலைகளை கற்ற முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி நிகழ்த்திய சொற்பொழிவுகள் புகழ்பெற்ற உரை களாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நிகழ்த்திய அற்புதங்கள், வாழ்வின் நிகழ்வு களாக சொல் மற்றும் செயல்களில் அமையப் பெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் இக்கராமாத்துகள் குறித்து அப்துற்றஹீம் தனது ஆக்கங்களிலும் விரிவாக ஏழுதியுள்ளார். நயினா முகம் மது ஆலீம் சாகிபவர்களிடம் உரை வாங்கி பக்கீர் மதாருப் புலவர் இயற்றிய முகியத்தீன் மாலை பாடல்களிலும் கராமாத்துகள் விவரிக்கப்படுகிறது.
முகியத்தீன் அப்துல்காதிர் அவர்கள் தாய் வயிற்றிலிருக் கும் நாளில் நடந்த காரணம், துகிலுடுத்திப் பிறந்த காரணம், மரணித்த மடமானுக்கு உயிர்கொடுத்தது, அசூயையான கரத்தை சுகமாக்கியது, திருடனை ஞானியாய் மாற்றியது, 12 வருஷம் போன கப்பலை திரையிலழைத்தது, ஜின்னை கூலிலடைத்தது என எண்ணற்ற கராமாத்துகள் இந்த நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான ராஜஸ் தான் மாநிலத்தின் அஜ்மீரில் அடங்கப்பெற்றுள்ள ஹஜ்ரத் குவாஜா முகீனுத்தீன் சிஸ்தி கி.பி1192ல் இந்திய மண் ணுக்கு தனது சீடர்கள் குழுமத்தோடு வந்தவர் இஸ்லாத்தின் மூலம் சமத்துவம், மனத்தூய்மை, அன்பு, மக்கள் சேவை கருத்தாக் கங்களை நடைமுறைப்படுத்தியவர். மவ்லவி டி.ஏப்.ரஹ் மத்துல்லா அலி ஸாஹிபு பாகவி அவர்கள் சிஸ்தியின் ஜீவிய சரிதையை எழுதியுள்ளார். இது சென்னை, திருவல்லிக் கேணி ஹாஜி எம்.ஐ.ஷாஹூல் ஹமீது அவர்களால் 1963ல் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்தி நிகழ்த்திய கராமாத்துகளும் இந்நூலின் ஒருபகுதியாக தொகுக்கப்பட்டுள்ளன.
அஜ்மீர்மன்னன் நியமித்த அஜய்பால் என்ற மந்திரவாதி குவாஜாமுகீனுதீன் சிஸ்தியை பணியவைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். மிருகச்சாலா என்றொரு மான் தோல் ஆசனம் அவனிடமிருந்தது. அதை மந்திரம் சொல்லி எறிய தலையில் படாமல் அந்தரத்தில் பறந்து வந்தது. அதில் அவன் அமர்ந்து ஆகாயத்தில் பறக்கிறான். அதை எதிர் கொள்ள குவாஜா முகீனுதீன் சிஸ்தி தமது பாதக்குறடாகிய கால்கட்டையைக் கழற்றி ஏவி விட அதுவும் ஆகாயத்தில் அந்தரமாக பறந்து சென்று அந்த மாயமான் தோல்மீது அமர்ந்து அழுத்தியது. மான்தோல் ஆசனம் மடங்கி தரையில் விழுந்தது. தொடர்ந்து பாதக்குறடு அஜய்பாலின் தலையில் தாக்க தரையில் வீழ்கிறான். சிஸ்தியின் ஞானஆற்றலை கண்ணுற்ற அஜய்பால் அவரிடம் கருணைக்காட்டச் சொல்லி முஸ்லிமாகிறான். அஜ்மீரின் ராய்பத்தூரா எனப்பட்ட பிரித்விராஜ் மன்னனுக்கு எதிரான ஒரு சாதுவான பக்கீரின் கலகங்களாக இக்கராமாத்துகளில் பலவற்றை மதிப்பிடலாம்.
தமிழக மக்களால் நாகூர் ஆண்டவர் என புகழப்படும் மீறான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல்காதிறு ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம், வடஇந்திய எல்லையான மாணிக் கப்பூரில் தோன்றியவர். கிபி 1490ல் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தனது இறுதி 28ஆண்டுகளில் தமிழகத்தின் நாகூரில் தங்கியிருந்து சேவை புரிந்து மரணித்தப் பின் அங்கேயே அடங்கப்பட்டிருக்கிறார். நாகூர் தர்கா என்ற பெயரில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக அது நிகழ்கிறது. பல்சமயத்தினரும் பங்கு கொள்ளும் தர்கா நிகழ் வுகள் மாறுபட்ட நல்லிணக்க இழைகளைக் கொண்டுள்ளது.
(அடுத்த பக்கத்தில்)
- ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா
- இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4
- எஞ்சியவை
- கனவுகள் பலிக்கவேண்டும்
- வேத வனம் விருட்சம் 77
- இரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது…!!
- சூஃபிக்களும் இஸ்லாமிஸ்டுகளும்
- கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)
- இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்
- .பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6
- திரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்
- கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்
- பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா
- உள்ளே வெளியே
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -9
- சப்தம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2
- பழகிய துருவங்கள்
- பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !
- கதவைத் திறந்து வைத்து…
- பெண்ணின் பங்கு
- முற்றுப் பெறாதவையாய்
- மொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்
- முள்பாதை 21
- எறும்புடன் ஒரு சனிக்கிழமை
- நடப்பதெல்லாம் நன்மைக்கே
- சிநேகிதன் எடுத்த சினிமா
- ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை