வாழ்வின் நீளம்
Published June 18, 2009 • By
சக்தி
சக்தி

ஆற்றின் ஓரம்
நடக்கிறேன்
வாழ்வின் நீளத்தை
ரசிக்கின்றேன்
எந்தையும் தாயும்
புரிந்திட்ட
விந்தையாய் நானும்
விழுந்திட்டேன்
தந்தையின் கைகளை
பற்றியபடியே
தாயின் மடியில்
விளையாடிய பொழுதுகள்….
நேற்றைய நினைவுகளில்
புதைந்திட்ட வேளைகள்
நாளைய உலகினில்
புலர்ந்திட வழியில்லை
உள்ளத்தினுள்ளே
உண்மைகள் உறைந்தும்
உலகத்தில் அதனை
உணர்ந்தவர் சிலரே
இன்பம் ஒரு பாதி
துன்பம் மறு பாதி
இரவு ஒரு பாதி
பகலும் மறு பாதி
காற்றில் பறக்கும்
சருகினைப் போலே
காலம் எம்மை
உருட்டிடும் உண்மை
நாமே அனைத்தும்
புரிவது போலே
நம்மை நாமே
ஏய்த்திடும் செய்கை
மணலின் மீது
தவழ்ந்திடும் நதியாய்
புவியின் மீது
மிதந்திடும் தென்றலாய்
இதமாய் நாம் வாழும்
இனிமைப் பொழுதுகளை
இறுகப் பிடியுங்கள்
ஈட்டும் இன்பம் அதுவேதான்
ஒருவரை ஒருவர்
மிதித்தே முன்னேறிடும்
பொல்லாத உலகை
இல்லாமல் செய்வோம்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இருக்கும் இடைவெளி
வாழ்வின் நீளத்தை
அளந்திடும் ஜீவநதி
வாழ்வின் நீளத்தின்
அளவி மைல்களிலில்லை
மனித மனத்தில் விளையும்
நல்ல சிந்தைகளின் கனத்திலுள்ளது
அன்புடன்
சக்தி
http://www.thamilpoonga.com