This entry is in the series 20040812_Issue

சுஜாதா சோமசுந்தரம்


இளமை
இறக்கை கட்டிப் பறக்க;
இதயம்
இன்பத்தின் உச்சியில் கனக்க;
காதல்
இரு கண்களையும் மறைக்க;
வயது கோளாறு
வம்புக்கு இழுக்க;
கண்ணியமான
உறவை கலங்கப்படுத்தி
மாத விலக்கு
தேதியை மறந்து
மடியில் கனத்தோடும்,
நெஞ்சில் பயத்தோடும்
காரணமானவனுக்காக
காத்திருக்க…நாட்களை
மாதங்கள் விழுங்க
மாதங்களை
கருவறை விழுங்க
கழிவறைக்குள்
கருச்சிதைவு முயற்சி
தோல்வியை தழுவ..
காரணமானவன் கைகழுவ,
பிரசவ வலி
இடுப்பை தின்ன
மருத்துவமனையில்
மகனொருவனை
பெருமிதத்தோடு பெற்று விட்டு
மழலை குரல் கேட்கும் முன்னே
ஈன்ற சுவடு தெரியாமல்
மறைந்தவள் மகவுக்கு
முகவரி தருவது யார் ?
காலங்கள் விதைத்த கோலங்களை
காண சகிக்காத கடவுள்
அனாதை இல்லங்களை
அமைத்து விட்டான் போலும்…. ?

சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.
s_sujathaa@yahoo.com.sg

Series Navigation