காந்தி-பெரியார் பற்றி அருணகிரி

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

சோம்.இளங்கோவன்.


திண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.காந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள். அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவா?

28-8-1927 குடியரசு தலையங்கம்.
“முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் மகாத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம்.அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும் ,சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.
அதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது ஜாதி ஒழிக்கப்படவேண்டும். இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவது,பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.

இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்ற்க்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்.”

1-9-1939 ல் நவசக்தி ஆசிரியராக திரு.வி.க. என்று கையொப்பமிட்டு சாமி.சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு’ நூலுக்கு முன்னுறை எழுதியுள்ளார்.

“இந் நூற்றலைவர் இராமசாமிப் பெரியார் அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.அவர்தம் புகழோ தென்னாட்டிலும், வடநாட்டிலும், பிற நாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றன! காரணம் என்னை? தோழர் ஈ.வெ.ரா வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.

அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது?அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.

உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்.அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும் செறிந்த அற்த்தொண்டு.

உரிமை வேட்கை,அஞ்சாமை முதலியன் ஈ.வெ.ரா விடம் தோற்ற்த்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை.

சீர்துருத்தத் துறையில் ஈ.வெ.ரா செய்து வரும் பணி நாடறிந்த தொன்று.

இன்னோரன்ன சிறப்புக்கள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்ரைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை.”

ஈ.வெ.ராமசாமி காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தவர்.செயலாளர்,தலைவர் பதவிகள் வகித்தவர்.ஒரு கால்த்தில் காங்கிரசே தென்னாட்டில் நாயுடு(கிருஷ்ணசாமி},நாயக்கர்{ஈ.வெ.ரா},முதலியார்{திரு.வி.க} கட்சியாகத்தான் கருதப் பட்டது.

இந்து மதமும்,பார்ப்பனீயமும் ஒன்றும் பெரியாரைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவில்லை.பேச்சில்,கூட்டங்களில் அடி தடி,செருப்பு மற்ற பாம்பு முதல் பலவும் வீசப்பட்டு,மாநாட்டில் தீவைத்து ,உயிருக்குக் குறி வைத்து என்று பலவிதமான எதிர்ப்புக்களை செய்து பார்த்தனர்.ஒன்றும் பலனில்லாமல் அடங்கி விட்டனர் என்பது சரித்திரம்.

சரித்திரத்தை, உண்மையை திரிப்பதும் அதற்கு திண்ணை ஒரு ஆதரவு அளிப்பதும் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.
பெரியாரைப் பற்றி சிரியோரின் சின்ன புத்தி எழு்த்துக்கள் ஒன்றும் புதிதல்ல.பெரியார் அதுதான் எனக்கு விளம்பரம் என்றார்.

தொடரட்டும் திண்ணையில் விளம்பரம்.

சோம .இளங்கோவன்.


somailangovan@gmail.com

Series Navigation