This entry is in the series 20100108_Issue

நட்சத்திரவாசி


தீர்மானிக்கப்படாத எவ்வொரு காலமும்
இல்லாத அகாலத்தின் பிளவினூடே
மேலெழுகிறது பிரமாண்ட இறக்கைகளை
கொண்டதொரு யாழி கோர முகத்துடன்
பெரும் கற்றூண்களுடைய மண்டபங்களைக்
கடந்து அரண்மனையின் உச்சியில்
தம் இறக்கைகளை தாழ்த்துகிறது
மதகுருவின் கமண்டலத்தில் நீர்
வற்றிபோயிருக்கவேண்டும்
அபயம் தேடி உயர்ந்த சிலையின் கீழ்
யாசகம் கேட்கிறான் ராஜபிரதானி
யாழியோ தீப்பிளம்புகளை உமிழ்ந்து
கொட்டுகிறது நாசத்தின் சுவடுகளாய்
மாடமாளிகைகளும்,கூட கோபுரங்களும்
வெந்தழல் சுவைத்து உதிர்கின்றன
சற்றும் எதிர்பாராத தாக்குதலில்
ராஜ்ஜியம் தனது நிழலுக்குள்
பதுங்கிக் கொள்ள எத்தனிக்கிறது
சிலையின் காலடி சன்னதியில்
மதகுரு கைகளை வெட்டி குருதி
நனைக்கிறான்
பரவும் அக்குருதி அடிபாதம்
சுற்றி கால்வழியே
மேலே ஏறுகிறது திளக்கமாய்
பண்டக சலைகளும்,கோட்டை
கொத்தாளங்களும் சிதிலங்களாகி
பொடிந்து பறக்கிறது வானில்
குருதி வழிந்து கண்களில் நனைய
கண்திறக்கிறது கடவுள்
கற்சிலையாய் ஆன பிரமாண்ட கடவுள்
இருப்பிடத்தை விட்டு நகரத்துவங்குகிறது
அதன் பன்னிரு கைகளிலும்
கொலை கருவிகள் நாவு நீட்டுகிறது
நீளும் கைப்பற்றி தப்பிக்காத
யாழியின் வாலையிழுத்து
ஆக்ரோசம் கொண்டு காலடியில்
புதைத்து ஒற்றைக்காலுடன்
நிற்கிறது கடவுள்
கடவுளின் சினம் தணிந்த போது
காலம் தீர்மானிக்கப்பட்டது
யாழியை காலால் மிதித்து
நிற்கும் கடவுள் திருவுருவ
சிலைகளோ பின்னாழில்
பிரபலமாயிருந்தது
அந்த ராஜ்ஜியத்தில்

www.natchathravasi.wordpress.com

mujeeb.h

Series Navigation