உதிரிப்பூக்கள்
கி. சீராளன்

(1)
உதிரும் போதும்
அழகு
பூக்கள் மட்டுமே.
….
(2)
இறுதி ஊர்வலத்தில்
பூக்கள்
உயிரோடு.
….
(3)
வெளியே மழை
மனதில் சாரல்
உயிர் துளிர்ப்பு.
….
(4)
விஞ்ஞானத்தின் முகத்தில்
சேறு
பூஜை சந்தனம்.
….
(5)
கருவறைக்கும் சிறையறைக்கும்
இடையே சாமி ஊர்வலம்
தெருவில் பக்தர்கள்.
….
(6)
தேடினேன் குவிந்தது
நெல்மணிகள் அல்ல
தகவல்கள்.
….
(7)
கொலையாளி, கொள்ளைக்காரன்
தேவதாசி, சாமியார் போக
கோமாளிகள்
டி.வி. புகழ் நட்சத்திரங்கள்.
….
(8)
அஸ்திகள் போதவில்லை
உயிர்கள் வேண்டும்
மாமிச பட்சினிக்கு.
….
(9)
துச்சாதன கண்கள்
டிஜிட்டல் காமிரா ஆயுதமேந்தி
பெண் இன்னும் துகில்கொடுக்க
வருவதாயில்லை கண்ணன்.
….
(10)
வருவதாயில்லை கடவுள்
எல்லாம் கொடுத்தாயிற்று உன்கையில்
மகனே உன்சமத்து.
….
(11)
தமிழாசிரியர் சொன்னார்
‘கடல் அலையிலே உரல் உருளுது
புரளுது
கடல் அலையிலே உரல் உருளுது
புரளுது ‘
மாணவன் உளறினான்
கடல் அலையிலே உடல் உருளுது
புரளுது
கடல் அலையிலே உடல் உருளுது
புரளுது ‘
அடிக்க ஓங்கிய கையை
மடக்கிக்கொண்டார் வாத்தி
சரிதான் என்று.
(punnagaithozhan@yahoo.com)