இப்போதாவது புரிகிறதா
கவிஞர் புகாரி

விடைபெற்ற மெளனக் கணங்கள்
உடைபட்டு உதிர்கின்றன
கனத்த உணர்வு மலர்களாய்
என் மென்மனதில்
நீ நிறுத்தி வைத்த இடத்திலேயே
நெடு நேரமாய் நான்
நின்று கொண்டிருக்கிறேன்
அதுவும் எனக்கு
விருப்பமானதாகவே இருக்கிறது
உன் வலக்கரத்தை என் இரு
கரங்களுக்கும் இடையில் வைத்து
மூன்று கரங்களுடன் நான் வணங்கியது
நம் காதலைத்தான்
உன்னை நான் சந்தித்தது
எதேச்சைச் செயலென்று
நம்பிக்கொண்டிருக்காதே
யுகம் யுகமாய்த் திட்டமிட்டு
நாம் அறியாத மர்மக் குறிப்பேட்டில்
குறித்து வைக்கப்பட்ட
தேவ சந்திப்பு அது
மென்மைகள் கூடி
தேர்வு செய்த மென்மை
மென்மையாய்ப் பெற்றெடுத்த
மென்மை நீ
உன் குதிகால் பூவெடுத்து
நீ நடப்பதைக் கண்டு
என் விழிகள் வியப்பதை
நீ வேடிக்கை பார்ப்பாய்
எனவேதான்
என் மூச்சுக்காற்றும்
உன்னைக் கருக்கிவிடுமோ
என்ற கவலையில்
எப்போதும் இப்படியே நான்
என்னை மட்டுமே வதைத்துக்கொண்டு
—-
buhari@gmail.com