பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

தோழர் சொதப்பப்பா


**

தமிழ்நாட்டுக்கு ஏற்றாற்போல இடதுசாரிகள் அரசியல் செய்யவேண்டுமாமே ? இதோ ஒரு முயற்சி

**

டெலிகிராஃபில் ஒரு பொய்ச்செய்தி

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலோ மற்றொரு பொய்ச்செய்தி

டெலிகிராஃபில் இன்னொரு பொய்ச்செய்தி

வெப் இந்தியாவில் ஒரு பொய்ச்செய்தி

ஸ்டேட்ஸ்மனிலும் பொய்ச்செய்தி

போன்ற முதலாளித்துவப் பத்திரிக்கைகள், மிட்னாபூரின் பஞ்சத்தின் உண்மை நிலையை வெளியிட்டு , மேற்குவங்காளப் புரட்சி அரசைப் பற்றி விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. பஞ்சம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் இடதுசாரி அரசின் பெருமையைப் பொய்யால் காப்பாற்றுவது நம் வரலாற்றுக் கடமை அல்லவா ? அதனால் தானே நகரவைத் தேர்தல்களில் இடது முன்னணி தவிர்த்த மற்ற மாக்களை அச்சுறுத்தி, கொலை செய்து தேர்தலில் நிற்கவிடாமல் செய்து , புரட்சி அரசினைக் காப்பாற்றினோம்.

பழங்களும் காய்கனிகளும் பொன் போன்ற கோதுமையும் அரிசியும் கார்ல் மார்க்ஸின் அருளாலும், ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் கடாக்ஷத்தாலும் எந்த வித உழைப்பும் தேவையின்றி பூத்துக்குலுங்கும்போது, அங்கே பஞ்சம் இருக்கிறது மக்கள் பட்டினியால் இறக்கின்றனர் என்றஉண்மையை வெளிப்படுத்தி எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் புல்லர்கள்

அடுக்குமா இது ?

தோழா புறப்படு, புயலென பொங்கி எழு, புரட்சியை ஒழித்திட எதிர்ப்புரட்சி கெடுமதியினர் புறப்பட்டுவிட்டனர். அவர்தம் வாய்களுக்கும் கை கால்களுக்கும் தக்க பதிலைத் தரவேண்டாமா ?

போலிட்பரோவின் அறிவிப்பினை ஆணையாக ஏற்றுச் செயல்படும் வீரர்களாக உன் போன்ற தோழர்கள் திகழ்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

மக்களை பசி பட்டினியின்றி வைத்திருக்க நமக்கு கடமை ஏதும் இல்லை. பசியோடு மக்கள் இருக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் எழுதினால் அதனை ஒப்புக்கொள்ளும் கண்ணியமும் நமக்கு இல்லை. நமக்கு இல்லாதது பற்றி எழுதி எம்மை எரிச்சலூட்டிடும் முதலாளித்துவ அடிவருடிப் பத்திரிகைகளை அடியோடு வெறுத்திடு. உண்மையைக் காணாமல் கட்டுப்பாட்டோடு இரு.

தொழிலாளர்களின் சொர்க்கபூமி, விவசாயிகளின் வீரநிலத்தில் பட்டினியாம் பஞ்சமாம் மக்கள் பசியால் இறக்கின்றனராம். சொல்கின்றனர் நன்றாகத் தின்று கொழுத்த அயல்மாநிலத்தினர். கடனால் தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திரத்தினரும், அடுத்த நாள் வேலையின்றி அலைந்திடும் கேரளத்தினரும் சொன்னாலாவது காது கொடுத்தாவது கேட்டிடலாம். முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் கொழுத்திட்ட மக்கள் சொல்வதைக் கேட்பதுதான் சரியானதா ? அது மார்க்சுக்கே அடுக்காதே ? மார்க்ஸியத்தில் வாழும் ஏழைகளே, அடுத்த வேலைக்கு உணவில்லாத பண்ணாடைகளே சொல்லவேண்டும். அவர்கள் சொல்லைத்தானே கேட்கவேண்டும். முதலாளிகளின் சுரண்டலினால் கொழுத்து இருக்கும் உழைப்பாளிகளுக்கு சொல்ல உரிமை ஏது ? மார்க்ஸியர்களின் சுரண்டலினால் வறண்டு இருக்கும் உழைப்பாளிகளுக்குத்தானே இதைச் சொல்ல உரிமை உண்டு.

ஏழைகள் இல்லையேல் மார்க்ஸியம் ஏது ? சுரண்டல் இல்லையேல் லெனினியம் ஏது ? அடக்குமுறை இல்லையேல் ஸ்டாலினியம்தான் ஏது ? ஆண்டவன் கட்டளை போல் மாஸ்கோ கட்டளையும், பீஜிங் கட்டளையும் இல்லையேல் இந்திய மார்க்ஸியம்தான் ஏது ?

அவைகளைக் காத்திடத்தானே இந்தியாவில் மார்க்ஸியர்கள், நமது மார்க்ஸியப்பாசறையில் புரட்சியின் முன்னணிப் பணியாளர்கள் நாம் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். வறுமையைக் காத்திடுவோம். வறுமை இருந்தால்தான் புரட்சி வரும். சுரண்டலைக் காப்போம். அது இருந்தால் தான் லெனினியம் பேச முடியும். அடக்குமுறையைச் செய்வோம். அது இருந்தால்தான் ஸ்டாலினியத்தை நம் பொற்திரு நாட்டில் பார்த்திட முடியும். மூளை இல்லாதவர்களே நமக்கு வேண்டும். அவர்களது மூளை வளர்ச்சி பெற்றுவிட்டால் எதிர்ப்புரட்சி அல்லவா நடந்திடும் ?

முதலாளித்துவப் பத்திரிக்கைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெலிகிராஃப் ஆகிய மேல்தட்டு மேனாமினுக்கிகளின் பத்திரிக்கைகளை உடைப்போம். அவைகளின் முதுகெலும்பை நொறுக்குவோம். மக்கள் இனி பீபிள்ஸ் டெமாக்ரஸி, கனசக்தி, தேசாபிமானி, தீக்கதிர், செம்மலர் , தி இந்து ஆகிய தொழிலாளர்களின் அறிவுக்களஞ்சியத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்று சூளுரைப்போம். அன்றே சொன்னார் மார்க்ஸ். கூடவே சொன்னார் லெனின். ‘பத்திரிக்கைகளில் என்ன வரவேண்டும் என்ன வரக்கூடாது என்பதை தொழிலாளர்களின் சர்வாதிகாரமே நிர்ணயிக்கும் ‘ இன்று நிர்ணயித்திட முடியாத நிலையினால்தான் மித்னாபூரில் பஞ்சத்தில் மக்கள் இறப்பதாகச் செய்தி வெளியிடுகின்றன சுரண்டல்காரர்களின் பிரச்சாரப்பத்திரிக்கைகள். பார் தி இந்துவை. அந்தச் செய்தி வந்ததா ? சிந்தித்திடு. ஆகவே ஏழைகளின் தோழன் மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாறாத தொண்டன், மேற்கு வங்கப் பஞ்சத்தை மூடிமறைத்து , பட்டாச்சார்யாவின் இடது முன்னணி வெற்றிப் பெருமையை முழங்கிய முற்போக்கு ஏடு தி இந்து பத்திரிக்கை தவிர வேறொன்றைக் கையில் வைத்திருப்பவனின் கையை விடாதே. காலையும் விடாதே. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கழுத்தை நெறிப்போம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலில் விழுவோம் என்ற முற்போக்குக் கொள்கையின் வரலாற்று இயங்கியல் புரியாத போக்கிரிகள் பொறாமையால் பொசுங்கட்டும். உண்மையை எழுதவேண்டும் என்று ஊளையிடும் உளறுவாயர்கள் ஒதுங்கட்டும்.

பழமைவாதியான திருவள்ளுவன் என்ற சனாதனத்தை கைக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் புல்லர்கள், ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரினாலும் கெடும் ‘ என்று சொன்னானாம். அதனால் பத்திரிக்கைகளுக்கு சுதந்திரமாக உண்மைகளைச் சொல்லும் உரிமை இருக்கிறதாம். மார்க்ஸியத்திற்கு ஒவ்வாத உண்மை யாருக்கு வேண்டும் ? இடது முன்னணியின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறை சொல்கிற உண்மையை வெளியிட்டு புனித மார்க்ஸியத்திற்குக் களங்கம் கற்பிக்கும் கயவர்களுக்குப் பாடம் புகட்டிட அவர்களை பாடையேற்றிட படையோடு. கிரிஸ்து பிறப்பதற்கு முன்னால் பிறந்த பழமைச் சனாதன திருவள்ளுவனுக்கு கார்ல் மார்க்ஸ் தெரியுமா ? லெனினின் மேதமை புரியுமா ? ஸ்டாலினின் அறிவுதான் புலப்படுமா ? எல்லா சுதந்திரமும் தொழிலாளர்களின் சர்வாதிகாரத்துக்குத்தான் தலைவணங்க வேண்டுமென்பதுதானே மார்க்ஸியத்தின் முதல் கருதுகோள். அதனை தலையாயக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தி இந்துவைப்படி, அதனைப் புரிந்துகொள்ளாத டைம்ஸ் ஆஃப் இந்தியாவை வெறுத்திடு, டெலிகிராபை ஒதுக்கிடு.

இதனைப் புரிந்து கொள்ளாத மூட இந்தியர்கள் கையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் டெலிகிராபும் இருக்கலாமா ?

கூடாது கூடாது.

அதனை நிரூபிக்க தோழா, தோழமைக்கட்சிகளின் தொண்டுள்ளம் கொண்ட தூய தோழ உடன் பிறப்புக்களுடன் இணைந்து எறும்புகளாய் தேனீக்களாய் சுறுசுறுப்பு காட்டி எல்லா முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் கொளுத்து, உடன் பிறப்பே, தோழா, வென்று காட்டு.

வாழ்க மார்க்ஸ் நாமம், வாழ்க மார்க்ஸ் நமக்குப்போட்ட நாமம், வாழ்க மார்க்ஸின் பெயரில் மக்களுக்கு நாம் போடும் நாமம்

புரட்சி ஓங்குக

தோழர் சொதப்பப்பா

**

கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டில் எது முக்கியம் என்று பெரியார் கருணாநிதியிடம் கூறினார் ?-இங்கே படியுங்கள்

Series Navigation

தோழர் சொதப்பப்பா

தோழர் சொதப்பப்பா