கடவுள்களின் கலக அரசியல்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

புதியமாதவி, மும்பை



“Existence is dialectical; it always has its opposite. Without the opposite
it will not
exist. Becasue man created God as the very holy of the holiest, he had to
create a devil.
It was just an absolute philosophical necessity! The devil is the
counterpart of God”
என்பார் I Teach Religiousness not religion என்ற புத்தகத்தில் ([பக் 24) பகவான் ஸ்ரீ ரஜ்னிஷ்

என்றழைக்கப்படும் திரு ரஜ்னிஷ்.

கவிஞர் கோசின்ராவின் ‘என் கடவுளும் என்னைப் போல கறுப்பு’ கவிதை நூலில் ‘இரட்டையர்’ என்ற
கவிதையிலும் இக்கருத்தை அண்மையில் வாசித்தேன்.

‘சற்று உற்றுப்பார்த்தேன்
நிதானமாய்..
சாத்தானின் முதுகுப்பக்கம்
கடவுளின் முகம்
கடவுளின் முதுகுப்பக்கம்
சாத்தானின் முகம்..

இவர்களை
தனித்தனியே பிரித்து
சாத்தானைக்
கொன்றுவிட வேண்டும்
அதுதான் பூமிக்கு நல்லது.

ஒருவேளை
அறுவைச் சிகிச்சை
தோல்வியடைந்தால்..?
கடவுள் இறந்து
சாத்தான் பிழைத்துவிட்டால்..
(பக் 93)

அறுந்துப்போன பாவாடை நாடாவாக, தங்கை சாந்தியின் தூக்குமாட்டி கயிறாக இருக்கும் கயிறு கடவுளை
உட்கார வைத்து தேரிழுக்கும்போது மரியாதைக்கு உரியதாகிவிடுகிறது என்று கயிறு பற்றி எழுதும்போதும் கடவுள் வருகிறார்.. ஏன் சிறுவர்களின் கைகளில் ஊதப்பட்ட நிரோத்தைப் பார்க்கும்போது அதையும் கடவுளுடன் முடிச்சுப் போடுகிறது இவர் கவிதைகள்.

கடவுளின் தலங்களிலும்
நிரோத்
கிடக்கிறது
யார் எறிந்திருப்பார்கள்?

கடவுளின் குடும்பத்தில்
நேற்றுவரைக்கும்
புதுவரவு இல்லை

என்று கவலைப்படும் போது கடவுளின் குடும்பத்தைக் கட்டுப்படுத்துவது நிரோத் என்றால் இங்கே கடவுள் யார்? என்ற கேள்வியை முன்வைக்கிறார். மதமாற்றம் சிலரால் ஏன் மிகப்பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது என்பதையும் அதன் மூல காரணத்தையும்
மதமாற்றம் என்ற கவிதையில் தெள்ளத்தெளிவாக எழுதுகிறார்.

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்.
அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?

நீங்கள் சிந்திக்கிறிர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்.

மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது?
(பக் 54)

இப்படியாக கடவுள்களைப் பற்றிய பல்வேறு தளங்களில் விடைகாணமுடியாத வெளியில் நின்று கொண்டு மனிதம், மனித நேயத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி தன் கவிதைகளில் பயணிக்கிறார் கோசின்ரா.

இவருடைய கடவுள் பாதையில் போப்பாண்டவரும் தப்பவில்லை.

கடவுள்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புடைய மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் எல்லாம் கோசின்ராவின் பார்வையில் கவிதைக்கான தளமாக விரிகிறது. இக்கவிதை தொகுப்பின் தலைப்பு கவிதையான ‘என்னுடைய கடவுள்” கவிதையில் சில கருத்தியல் முரண்கள் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது.

இக்கவிதையின் முதல்வரியில் சொல்லுகிறார்…

என்னுடைய கடவுளும்
கறுப்புத்தான்
தமிழ்தான் தாய்மொழி..

இனி தமிழனின் கறுப்புநிறக்கடவுளை அறிமுகப்படுத்தும்போது கடவுளுக்கு கோவில்தான் உலகம் என்கிறார், வெளிச்சத்தின் கைகள் தீண்டாத அறையில், தவறி விழுந்த பல்லிகள் பயமுறுத்த போலியோ கால்களுடன் தமிழனைப் போலவே நோன்சானாய் இருப்பதாக சித்தரிக்கிறார்.

தமிழின வரலாற்றில் கறுப்பு கடவுள் கோப ஆவேசத்துடன், மேற்கூரையும் இல்லாத வெட்டவெளியில் கையில் அரிவாள், வேல் ஆயுதங்களுடன் முறுக்கிய மீசையுடன் திடகாத்திரமான தோள்களுடன் கண்டவருக்கு அச்சம் தரும் தோற்றத்தில் காட்சி அளிப்பவராகவே இருக்க கவிஞர் சித்தரிக்கும் நோஞ்சான் கடவுளின் சித்தரிப்பு கவிதைக்கான கருப்பொருளை வலுவிழக்கச் செய்துவிடுகிறது.

கலை-இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது போல இக்கவிதைகளின் மூலம் கவிஞர் கோசின்ரா ” ஒரு கலக அரசியலைச் சாதிக்கிறார்”. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிதைநூல்: என் கடவுளும் என்னைப்போல் கறுப்பு
வெளியீடு: குமரன் பதிப்பகம், சென்னை 17.
பக் : 96 , விலை : ரூ 50/

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை