- Home »
- கவிதைகள் »
- எனது தமிழும் இனி
எனது தமிழும் இனி
This entry is part of 2 in the series 20010911_Issue
– வ. ஐ. ச. ஜெயபாலன்

வாழ்க தமிழ்க் கவிஞர்
வல்லாரின் பின் சென்று
நாளும் தமிழ் வளர்க்கும் நாயகர்கள்.
பொருளிலார்கு இலை உலகம்
என்னும் முதுமொழியும்
வாழும் வகையும் அறிந்தோர்.
தமிழ் செளிக்க.
நானோ தெருவோரம்
கூழுக்குப் பாடுவேன்.
எனது தமிழ் இனியும்
ஈழத் தமிழனும் முஸ்லிமும்
ஒன்றாகி மேம்படவும்
தமிழகத்து பள்ளர்கள் தேவர்
நாடார்கள்
பறையர்கள் வன்னியர்கள்
சக்கிலியர் கவுண்டர்கள்
முஸ்லிம்கள் என்று
மோதும் சகோதரர்கள்
கத்திகளை வீசிவிட்டு
சந்தணமாய் தம் பரம்பரைகள்
அள்ளி மெழுகிய
வரலாற்றின் பீ களுவி
காணியுடன் கோவிலுடன்
கட்டுண்ட தம் வாழ்வை
மீழ விடுவிக்க.
மனிதம் ஒர் கவடு வைக்க.
மின்னல் கொடியாய்
தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றாகப்
பின்னுகிற இணையத்து வானம்
வசப் படினும்
நானும்
எனது தமிழ் இனியும்
மண்ணிற்தான்.