காதல் என்பது பலவிதம்

This entry is part [part not set] of 2 in the series 20000305_Issue

பாரி பூபாலன்


காதல் என்பது பலவிதம். விவரம் தெரியாப் பள்ளிப் பருவக் காதல் முதல், விவரத்துடன் வேலையையும் சம்பளத்தையும் கணக்குப் போட்டு செய்யும் காதல் வரை காதல் என்பது பலவிதம். நாம் இங்கு பார்க்கப் போவது, ஒரு மாதிரியான ஒருதலைக் காதல்.

அந்த வாலிபனின் மனதில் ஒரே சந்தோஷம். சற்று முன்னர்தான், அவன் எதிரே, அவள் ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டுச் சென்றாள். சிறிது நாட்களாகவே, அவன் அவளை கவனித்து வருகிறான். அவள் அவனிடம் ஏதொ ஒன்றை சொல்ல முயல்வதாக அவனுக்குள் எண்ணம். அவர்கள் இருவருக்கிடையே ஏதோ ஒன்று இழைந்தோடுவதாய் அவன் நம்ப ஆரம்பித்தான். அவன் இயல்பாகவே ஒரு மென்மையானவன். அதிலும் இந்த வாலிப வயதில் அவள் பார்த்து சிரிக்கும் போது, அவனது மென்மை, மென்மையிலும் மென்மையானது.

அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவள் ஏன் தன்னைப் பார்த்து சிரிக்க வேண்டும் ? யோசிக்க ஆரம்பித்தான். ஒருவேளை காதலாக இருக்குமோ ? யோசிக்க ஆரம்பித்தான். எதற்கும், தன் அறை நண்பனைக் கேட்டு விடலாம் என முடிவு செய்தான்.

‘மாப்ளே.. ஒரு விஷயம்.. ‘ அவன் மிக ஆவலாய் அறைக்குள் ஓடி வந்தான்.

படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையைத் திருப்பி அவனது நண்பன், ‘என்னடா ஆச்சு ? ‘

‘மாப்ளே.. இன்னிக்கு அவ என்னை ஒரு மாதிரியா பாத்து சிரிச்சுட்டு போனாடா.. ‘

‘எவடா ? ‘

‘அவதான். ரேணு!! ‘

‘ஓ… ரேணுவா ? இருக்கும் இருக்கும். நீதான் ஆளு பாக்குறதுக்கு சூப்பரா இருக்கே. I think she is in love with you. நான் கூட கொஞ்ச நாளா நோட் பண்ணேன். அவ ஒன்னை ஒரு மாதிரியாப் பாத்துக்கிட்டே இருந்தா. ‘ எதுவுமே தெரியாவிட்டாலும், தெரிந்தது போல் கூறினான் நண்பன்.

‘ஓ… நீ கூட நோட் பண்ணியா ? ‘ அவன் முகத்தில் ஒரு சந்தோஷம் பிரதிபலித்தது.

‘ஆமாமா. enjoy பண்ணு மச்சி ! ‘

‘என்னடா செய்யலாம் அடுத்து ? ‘ அப்பாவியாய் கேட்டான் அவன்.

‘ஒரு மாதிரியா கெத்தா maintain பண்ணுடா. கொஞ்சம் விட்டுப் புடி, ஒனக்குத் தெரியாதா ? அடுத்து என்ன செய்யனும்னு ! ‘

அவன் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வலம் வர ஆரம்பித்தான், அவ்வப்போது, நண்பனிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டபடி. கனவுலகில், காதல் தேசத்தில் அவளுடன் உலா வந்தபடி.

‘மாப்ளே, நான் போயி பேசட்டுமாடா ? ‘

‘Wait பண்ணு மச்சி. நீயா போயி பேசினா, உனக்கு value இருக்காது. ‘

‘சரிடா. ‘

ஒவ்வொரு நாளும் அவளின் முன் தோன்றி, அவளது உணர்வுகளை கணிக்கலானான். தன் உருவம் அவள் மனதை சந்தோஷமடையச் செய்வதாய் நம்பத் தொடங்கினான்.

சிறிது நாட்களில், அவனுக்கே ஒரு எண்ணம். தான் போய் பேசாததால், அவள் வருத்தமாய் இருப்பதாய்.

அவன் அவளிடம் போய், ‘ஏன் டல்லாயிருக்கே ? ‘

‘ஒன்னுமில்லேயா. நான் நார்மலாதான் இருக்கேன். ‘

‘இல்லே, நீ டல்லாதான் இருக்கே. என் கிட்டே எதுவும் பேசனுமா ? வா கேண்டான் போகலாம் ‘

‘I am alright. Nothing is wrong with me. ‘

அடுத்த நாள், மறுபடியும் ‘என் கிட்டே எதுவும் பேசனுமா ? வா கேண்டான் போகலாம் ‘

‘ஒன்னுமில்லேயா ‘ அவள் திரும்பிச் சென்றாள்.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள். அவன் ஏன் தன்னைப் பார்த்து இப்படி கேட்க வேண்டும் ? யோசிக்க ஆரம்பித்தாள். ஒருவேளை கிறுக்கனாய் இருப்பானோ ? யோசிக்க ஆரம்பித்தாள். எதற்கும் தன் வகுப்பு நண்பர்களைக் கேட்டு விடலாம் என முடிவு செய்தாள்.

வகுப்பிற்குச் சென்றவுடன், சக மாணவர்களிடம் கேட்டாள் ‘ஏன்யா, அவன் சுந்தர் ஒரு மாதிரியா பேசிண்டுருக்கான் ? ‘

சிலர் உடனே, ‘அவன் ஒரு மாதிரிம்மா. சரியான ஊரு. girls யாரும் சிரிச்சா, பேசினா, உடனே love பண்றதா நெனச்சிடுவான். ‘

‘ஓ! அவன்கிட்டே சொல்லுங்கப்பா. அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் கெடையாதுன்னு. ‘

நண்பர்கள் அவனிடம் விவரத்தைக் கூறியவுடன், அவன் சிறிது சோர்வடைந்தாலும், தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கலானான்.

படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து, ஒரிரு வருடங்களுக்குப் பின் சந்தித்த போது வேறிய விஷயங்கள் பேசியதற்கிடையே, அவன் ஆவலாய் கூறினான்.

‘மாப்ளே.. ஒரு விஷயம்.. ‘

‘என்னடா ஆச்சு ? ‘

‘என்னோட வீட்டுக்கு எதிர் வீட்டுலே ஒரு பொன்னு இருக்காடா. அவ என்னை ஒரு மாதிரியா பாத்து, சிரிச்சுகிட்டே இருக்காடா.. ‘

‘இருக்கும் இருக்கும். நீதான் ஆளு பாக்குறதுக்கு சூப்பரா இருக்கே. I think she is in love with you. ‘

*** -பாரி பூபாலன்

Thinnai 2000 March 5

திண்ணை

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்