ஊர்விலக்கத்திற்கு தடை

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

ஹெச்.ஜி.ரசூல்


முஸ்லிம்ஜமாத்துகளில் மறைமுகமாக நடைபெற்றுவந்த ஊர்விலக்கு என்னும் கட்டப் பஞ்சாயத்து முறைக்கு எதிரானகுரல்கள் அண்மைக்காலங்களில் தீவிரமடைந்து வந்துள்ளன.முஸ்லிம் சிந்தனையாளர்கள் மட்டத்திலும் ,தமிழகத்தில் வாழும் ஜனநாயக பண்பாட்டு இயக்கங்கள் சார்பிலும் இவைகுறித்து விரிவான அளவில் விவாதங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த வகை கருத்தியல் சுதந்திரத்திற்காக திண்ணை இணைய இதழும் கட்டுரைகளை விவாதங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் ஒரு முனைப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்தவகை ஊர்விலக்கத்திற்கு அடிப்படைகளாக ஜமாத் சொத்துக்களை,அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வது,சுன்னத்துல்ஜமாத் – வகாபி பிரச்சினைகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன.வகாபியப் பிரச்சினைகள் தலைதூக்கியப் போது அவ்வியக்கத்தினரின் உள் அரசியல் தளத்தில் ஊர்விலக்கம் ஆதரவுக்குரிய செயல்பாடாக மாறியது. ஏனெனில் ஊர்விலக்கப்பட்ட வகாபிகளை ஒன்று திரட்டிஅவர்கள் மாற்று ஜமாத்தை கட்டியமைப்பதற்கு இது போன்ற விலக்கங்கள் தேவைப் பட்டன. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அவர்களது குடும்பங்களை செயலூக்கமுடன் ஒன்றிணைத்தன.எனவே ஜமாத் அமைப்புக்குள் போராட்டத்தை தவிர்த்தனர்.தனியாக பள்ளிவாசல் ,தனியான மையவாடி, என பலத்த பொருளாதார பின்னணியோடு செயல்பட்டனர்.

வகாபியப் பிரச்சினைகள் அல்லாது ஜனநாயக ரீதியான கருத்தியல் விவாதங்களுக்கு இடமளிக்காமல் சுன்னத்துல் ஜமாத்தினர்களும் வகாபிகளும் ஒரு சேர எதிர்க்கும் நிலையில் ஊர்விலக்கத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளும் உண்டு.

இதில் விசேசம் என்னவென்றால் ஒருகாலத்தில் கடவுள் இல்லை என பகுத்தறிவுவாதம் பேசியவர்களும், முரட்டுமார்க்ஸியம் பேசியவர்களும் கூட வகாபியக் கொள்கைகளோடு இணைந்தும்,ஜமாத்துகளின் முக்கிய உறுப்பினர்களாகவும் மாறி தங்களது இருப்புக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர்..படைப்பாளிகளின் நிலைதான் இவற்றில் எல்லாம் பரிதாபமாக உள்ளது.

இந் நிலையில் தமிழ்நாடு வக்ப் வாரியம் அதன் தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றை 11 – 09 – 2008 அன்று பத்திரிகை ஒருங்கிணைப்பாளர்மூலம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் ஜமாத்துகளில் ஏற்படும் தனிப்பட்ட விரோதங்களுக்காக ஜமாத்து நிர்வாகிகள் அவர்களின் ஜமாத்துக்கு உட்பட்ட நபர்களை ஊர்நீக்கம் செய்தல், திருமணப் பதிவுப் புத்தகம் தர மறுத்தல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல்தடுத்தல் போன்ற இஸ்லாத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து இதுபோன்ற விசயங்கள் மனித உரிமை ஆணையம்,மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப் பட்டாலும் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் ஜமாத்துகள் வக்ப் நிறுவனங்களாக இருப்பதால் வாரியம் உரிய கட்டளைகள் பிறப்பிப்பது என் முடிவு செய்து செ,ஹைதர் அலி அவர்களை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வக்ப் வாரியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முத்தவல்லி அல்லது நிர்வாகக்குழு, சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களை சமூகபுறக்கணிப்பு,மற்றும் ஊர்நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் ஜமாத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமணப் புத்தகம் தர மறுப்பது,இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களில் முத்தவ்ல்லி அல்லது நிர்வாகக் குழு ஈடுபடக் கூடாது.மேற்கண்ட உத்தரவை வக்ப் நிர்வாகங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ் உத்தரவை புறக்கணித்து மேற்கண்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் முத்தவல்லி/நிர்வாகக் குழுவை பதவிநீக்கம் செய்ய தமிழ்நாடு வக்ப் சட்டம் 1995 ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறாக வெளியிடப்பட்டுள்ள வக்ப் வாரியத் தலைவரின் அறிவிப்பு ஊர்விலக்க வன்கொடுமையால் நசுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கும் சமூக குடும்ப சமய உறவுகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்அவர்தம் குடும்பங்களுக்கும் ஒரு விடுதலையை வழங்குமென நம்பலாம்.

எனினும் இந்த தீர்மானத்தின் அமுலாக்கத்தை, ஜமாத்துகள் எங்கனம் நிறைவேற்றுகின்றன என்பது குறித்து வக்ப் வாரியம் உரிய முறையிலான கண்காணிப்பை செய்ய வேண்டும்

ஜமாத்துகளை பார்வையிட அதிகாரம் படைத்த வக்ப் ஆய்வாளர்கள் ஜமாத்துகளின் நிர்வாகிகள் முன்பு அடிபணிந்து நிற்கும் நிலைமையை மாற்றி செயலாற்ற வேண்டும்.

அரசுக்கு முறைப்படி சேரவேண்டிய உண்டியல் மற்றும் சொத்து வருமான வரியை ஏய்ப்பு எதுவும் செய்யாமல் முறையாக கணக்கீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

உள்ளாட்சித் தணிக்கைக்கு வைக்கப்படாத வரவு செலவு கணக்குகள்,வக்ப்வாரிய அனுமதியிண்றி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள்,நிர்வாகங்கள் பின்பற்றும் இரட்டை கணக்குமுறை,விவசாயவிளைப் பொருட்களை விற்பதில் பின்பற்றவேண்டிய டெண்டர்முறை வக்ப் சொத்து ஆக்ரமிப்புகள்,சொத்துவருமானத்தில் ஏற்படும் இழப்புகள். வங்கியிலும்,ரொக்கமாகவும்பணம் இருப்புவைத்து பேணும் முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளின்பால் வக்ப் வாரியம் கவனம் செலுத்தி ஏழைஎளியமுஸ்லிம்களின்கல்வி,வேலைவாய்ப்பு,தொழில்கடன் ,முஸ்லிம் பெண்களின் சுய ஆளுமைத் திறன் முன்னேற்றத்திற்கு அந்த வருமானத்தை பயன்படுத்த வேண்டும்.

ஜமாத்துகளை ஜனநாயகப்படுத்தாமல் எந்த முன்னேற்றத்தையும் நாம் எட்டமுடியாது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்