நீர்வலை – (12)

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை உணர்வு. சிறகு முளைத்த உற்சாகக் கும்மாளம்.
அழகர் ஆத்ல இறங்கினதைப் பார்த்தாப்லயும் ஆச்சி. அண்ணனுக்குப் பொண் பார்த்தாப்லயும் ஆச்சி – என பழமொழி!
விதவிதமான அனுபவங்கள். கல்யாணப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் மணப்பெண். இழவு சமாச்சாரப் பத்திரிகையில் இறந்தவர்படம் சின்னதாகி விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு.
கல்யாணத்தில் வாழ்த்துப்பா, என்று நூறு இருநூறு, அவசர நோட்டிஸ்கள். திடீரென்று எவனுக்காவது கற்பனைவளம் பெருகி – மடை உடைந்து, அல்லது நட்டு லூசாகி… எதாவது கிறுக்கிவந்து கொடுப்பான். உடனே அச்சடித்து கல்யாணப் பந்தலில் டெலிவரி தர வேண்டும். ஒரு கல்யாணத்தில் வாழ்த்துப்பா வாசிக்கு முன்னாலேயே, மாப்பிள்ளை பார்ட்டிக்கும் பெண் வீட்டுக்காராளுக்கும் சண்டை. வரதட்சிணைப் பிரச்னையா தெரியவில்லை.
நடுவில் இவன் நிற்கிறான். அச்சடிச்ச மணமக்கள் வாழ்த்தை யாரிடம் தர? காசு பேருமா பேராதா… யூகிக்கவே முடியவில்லை. எவன் எழுதினானோ அவனிடமே தந்து காசு வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். கல்யாணம் நடந்ததா முறிந்ததா தெரியாது.
சர்ச் ஒன்று இருந்தது ஊரெல்லையில். கடல்கரையைத் தழுவிய சர்ச் அது. மீனவர்கள் வழிபட்டு விட்டு அதிகாலையில் கடலுக்குள் செல்கிற மாதிரியான அமைப்பு கொண்டது. நிறையப் படகுகள் கரையில் சற்று வெளித்தள்ளி மண்ணில் சொருகிக் கிடக்கும் அந்தப் பக்கம். தற்போது ஊர், சுற்றுலாத்தலம் என கவனம் பெற்று, புதுசாய் கைடுகள்… வழிகாட்டிகள்… கோனார் தமிழுரைகள் உருவாகி யிருந்தார்கள்…
ஓட்டைப் படகுகள் தவிர அதிகாலையில் மற்றவை கிளம்பிப் போவதைக் காணவே அழகு – என்பான் கிருட்டினமணி அண்ணன். சைக்கிளில், ஓடற வண்டியில் தாவி ஏறுவதைப் போல, படகைத் தண்ணியில் தள்ளி விட்டு விட்டு ஏறுவார்கள்… ஒரு நாள் அதிகாலையில் வந்துபார்க்க ஆசையாய் இருந்தது அதைக் கேட்க.
அருமையான வளாகம். வாசலில் நின்றால் கடல் காற்று ஆளைத் தாலாட்டியது. கால் புதையப்புதைய நடக்கும் மணல் வெளி.
பார்க்கவே கடல் எத்தனை அழகு. கரையில் நின்றபடி ஆவெனப் பார்த்தான். தூரதூரத்துக்கும் நீர்… நீர்… நீர்மயம். அம்மைத்தழும்பு போல, சிறுசிறு குழிவிழுந்து தளும்பும் அலைகள். காற்று, நீரைச் சலித்தாற் போலிருந்தது. அலைகளைத் தாம்பூலமாய் மடித்து காற்று, ஓரத்தில் தள்ளும் அழகு.
தொடும், என நினைத்துக் காத்திருந்தால், உள்வாங்கித் திரும்பிப்போய்விடும் சில. வேறு பேரலை உருவாகி உன்னை நோக்கி வரும் என்றாலும், திரும்பும் அலையில் சிக்கி அதும் தலையைக் கீழே போட்டு விடும். வராது என நினைக்கையிலேயே சில அலைகள், பிரம்மாண்ட உருவெடுத்து காலைத் தழுவி, அடிமண் உருவும். அந்தக் குறுகுறுப்பு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
லேசாய் வெளிச்சம் கரைந்த பொழுதுகள் – காலையானாலும் மாலையானாலும் – கடலுக்கு எத்தனை அழகு வந்துவிடுகிறது. காதல் வளர்க்க, காதலர்கள், எதனாலோ கடலைத் தேர்வு செய்கிறார்கள்… ஜெயித்தவர்கள் படகடியில் போகிறார்கள். தோற்றவர்கள் கடலில் பாய்ந்து செத்துப் போகிறார்கள்.
சதா சிரித்துக் கொண்டிருக்கிறது கடல். லூசுக் கடல்!
பிரம்மாண்டமான வெளிகளுக்கே, ஒரு மயக்கம்தருகிற அழகு இருக்கிறது. கோவிந்தசாமி நாடார் தோப்பு, பெரிய மாங்காய்த்தோப்பு ஊரில்… மரங்கள் மரங்கள். மற்றும் மரங்கள். இன்னும் மரங்கள். மேலும் மரங்கள்… நடுவே படுத்துக் கிடக்கவே தனி சுகம்.
ஒண்ணுமில்லை – நம்ம அரசம்பட்டி பொதுக்கூட்டத் திடல்… நிலா வெளிச்சத்தில் சிலசமயம் தனியே அவன் படுத்துக்கிடப்பான். மனம் தன்னைமீறிய இன்ப லகரியில் திகட்டிக் கிடக்கும்…
அவனுக்கு விளக்கத் தெரியாது. ஆனால் சந்தோஷத் தித்திப்பு உள்ளே சிலிர்க்கும்.
அடாடா, ஒரு நாள் அந்தத் திடலில் தெருஜனம் பாய்போட்டு ஆக்கிரமித்துக் கொண்டது. வெயில்காலம். வீட்டுக்குள் தூங்க ஏலாத ஜனம். அவன் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்த் திரும்பிவிட்டான்.
இடம் இடமாய்த் தேடி அலைகையிலேயே மழை வந்துவிட்டது. ஒதுங்க நினைக்குமுன்பே, நல்ல மழை… போட்டு கொட்டித் தீர்த்துவிட்டது. வெயில், பகலில் அதிகம்தான். அப்பவே மழைபற்றி எதிர்பார்க்க முடிந்தது…
திடீரென ஞாபகம் வந்தாற்போல அந்தத் திடலைநோக்கிப் போனான்.
ஆளின்றி வெறிச்சோடிக் கிடந்தது திடல். ஏறிப் படுத்துக்கொண்டான். உடம்பெங்கும், நாடி நரம்பெங்கும் கொட்டுகிறது மழை. பிடிவாதமான, முரட்டு மழை…
ஹம்ம்மா… என முணுமுணுத்தான். மழைக்குக்கூட இத்தனை முரட்டுத்தனம் உண்டா!
அருவியில் குளிக்கிறபோது நீரின் ஆக்ரோஷம் தெரியும்.
அதேபோல மழையில் முகத்தை நேரடியாய் நீட்டினால்தான் அதன் ஆவேசம் தெரிகிறது.
கடலை அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. சிலநாட்கள் எதிர்பாராத வகையில் அண்ணனும் வீட்டில் இருப்பான். சிவாஜிக்கும் ஓய்வாய் இருக்கும்… எல்லாருமாய்க் கடல்கரைக்கு வருவார்கள். அன்றைக்கு அண்ணிதான் எத்தனை உற்சாகமாய் இருப்பாள்.
அருமையான பெண் அவள். எதையிட்டும் அவளுக்குக் குறை இல்லை. எதைப் பேசினாலும் சிறு சிரிப்புடன் அண்ணி பேசும். அண்ணி முகம் மாறினால் அண்ணனால் தாள முடியுமா?
தான் அழகு என மற்றவர் சொல்ல சிறு ஆசை அவளுக்கு. மறக்காமல் திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்வாள். அவள் முகக்கருப்புக்கு திருஷ்டிப்பொட்டு கூட, கருப்பு அத்தனைக்கு இல்லை, என்று சொல்ல முடியுமா?
வீட்டில் அவன் இருந்தால் அவனுக்கு என சூடாக சோறு வடித்து இறக்கினாள் சிவஜோதி. உனக்காகப் பருப்புத் துவையல் அரைச்சேண்டா, என்கிறாள் அவன் தலையை வருடி. அட என் அம்மாவே…. என அழுகை முட்டும் அவனுக்கு. இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி உண்டா?
அதான் பார்த்த கணத்தில்… அண்ணன் காலடியில் கூட விழாத அவன், அவள் காலடியில் விழுந்தான், தானறியாமல்!…
கமலா கால் புதையப்புதைய அந்த மணலில் ஓடித் திரிகிறது. தனக்குத் தானே பேசிக் கொண்டு, தன் உலகத்தில், அது இயங்க ஆரம்பித்துவிட்டது. கூ, என்று வாயைக் குவித்து, ஐவிரலையும் நெட்டுக்க வைத்துக் கொண்டு ஓடினால், ரயில். கமலாவின் குரலில் அது, ரயில் அல்ல… குயில்!
டுர்ர்ரென ஓடினால் அது பஸ்.
கூ டுர்ர் டும்… என்றால்,
பஸ்சும் ரயிலும் மோதி – விபத்து!
பஸ் எந்தூரு போவுதுட்டி?… என்று கேட்கிறான் சிவாஜி.
உங்கூர் எது?
அரசம்பட்டி.
அப்ப பஸ் அரசம்பட்டி போவுது…
அரசம்பட்டில ஆரு இருக்கா?
போயி எங்கய்யாவோட மண்மேட்டைப் பாத்திட்டு வர்றதா!… என சிரிப்பும் அழுகையுமாய் நினைத்துக் கொண்டான்!
அடிக்கடி உலக நினைவு வர, தூரத்தில் அப்பா, அம்மா, அண்ணன்… இருக்கிறார்களா, என ஒரு வெள்ளோட்டம் விட்டுக்கொள்கிறது.
உலகில் பிரச்னையே இல்லை, என வாழ்கிற வயது அதற்கு. எந்தக் காயத்தையும் அசட்டை செய்து – அழுது, உடனே மறந்து, எழுந்தோடி வரும் பருவம். அழுகை வரும்போதும், சிரிக்க விரும்பும் பருவம். எந்த அழுகையின் ஊடேயும் அண்ணி அதைச் சிரிப்புகாட்டி விடும்…
அழுத பிள்ளை சிரிச்சுதாம். கழுதைப்பாலைக் குடிச்சுதாம்… என்பாள்.
கழுதைப்பால் எப்படி யிருக்கும் நினைவில்லை. சின்னவயதில் முதல்நாளில் இருந்தே அவன் தாய்ப்பால் அறிந்தானில்லை. மாட்டுப்பால்,. ஆட்டுப்பால்., கழுதைப்பால் கூட, அப்பா, அவன் குடித்ததாய்ச் சொல்லியிருக்கிறார்… ஞாபகம் இல்லை.
கழுதைப்பால் மத்த பாலைக் காட்டிலும் உசத்தி சரக்கு. விலை ஜாஸ்தி.
உலகில் அத்தனை பிரச்னை அழுத்தங்களையும் ஒதுக்கி, ஆசுவாசம் கண்ட கணங்கள். கடல் கரை கணங்கள். பிரம்மாண்ட கடல். அதன் நீண்ட கரைவெளி. மனிதன் தன்னை – ஆகவே தன் பிரச்னையையும், சிறுத்துப் போனதாக உணர்கிறானா?
சற்றுதள்ளி அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான் சிவாஜி. நல்ல வெளிச்ச இரவில் இப்படி படுத்துக்கிடக்க ஆசையாய் இருந்தது. மெல்ல அலைவந்து முட்டமுட்ட ,எழுந்துகொள்ளாமல் கிடக்க வேண்டும்.
சற்று தூரத்தில் அண்ணி. தலையில் மல்லிப்பூ. அரைவட்ட தோரணம் போலக் கட்டிக் கொண்டிருக்கிறாள். காலை நீட்டியவாக்கில் அருகே உட்கார்ந்தபடி அண்ணன். மணலை வெறுமனே அளைந்தபடி, என்னவோ அவளையிட்டு கிண்டல் தொனியில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்.
அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்கவே மனம் லேசாகி காற்றில் மிதக்கிறது.
வாழ்க்கையில், சந்தோஷம் என்பது, அமைதியின் வடிவமாகவும் அமையும், என்று அதுவரை அவனுக்குத் தெரியாது.
அதிகம் பேசிக்கொள்ளாமலேயே அநேக விஷயங்கள் புரிபட்ட, மனசுக்குப் பிடிபட்ட கணங்கள் அவை.
வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது… என நினைத்தான்.
மறுநாள்த்தான் நிகழ்ந்தது அந்த விபரீதம்.
(தெர ட ர் கி ற து)


Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்