நீர்வலை (10)

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
படிப்பு வராதவர்கள் என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன் என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி, ஏகப்பட்ட சிக்கல்களில் அப்பா மாட்டிக்கொண்டு, கடனை அடைக்க வட்டியே ஆளை வீழ்த்தி… வாழ்க்கை திசைதடுமாறிய படகாக திணறிப்போனது. அப்பா உடம்பு மிலிடரி உடம்பு என்று சொன்னால்கூட நம்ப முடியாதிருந்தது. மிலிடரி ஓட்டல் சர்வர் உடம்புடா – என்று கிண்டல் செய்யும்படியாய் ஆகியிருந்தது!
அப்படி அவனுக்கும் ஒண்ணும் படிப்புதாகம் என்றெல்லாம் இல்லை. சரி, என்று பாடப்புத்தகத்தை எடைக்குப் போட்டான். சோன்பாப்டி கிடைத்தது. அவன் புத்தகத்தையே கிழித்து, கட்டிக்கொடுத்தான் வண்டிக்காரன்.
நாலு பக்கமும் கோட்டைபோல் நெளி நெளியாய் தகரமறைப்பு கண்ட பெரிய வளாகம்தான். மணி டிரான்ஸ்போர்ட். தனியார் பஸ் டவுண்பஸ் சர்வீஸ் ஒன்று முதலாளிக்கு இருக்கிறது. தனியே வேறு தெருவில், லாரி பார்சல் ஆபிஸ். ரெண்டு மூணு லாரிகள் லோடு அடித்தன. ஒரு லாரி அண்ணன் கையில். தவிர வேறு கனவாகனங்களில் பழுது, என்றுவந்தால் பார்த்துக்கொடுத்தார். எப்படியும், யானைக்கொட்டடி போல ஒன்றிரண்டு பெரிய வாகனம் – பஸ் – தண்ணி லாரி – லோடு எடுக்கும் லாரி, என உள்ளே நின்றது.
ஒரு விபத்தான லாரியின் முன்நெற்றி மாத்திரம் எப்போதும் ஓரத்தில் கிடக்கும் அங்கே. லாரிக்குப் பேர் வைத்திருக்கிறார்கள் – யாமிருக்க பயமேன் – அதை நம்பிய ஆள் என்ன ஆனோனோ அந்த விபத்தில்?
யாமிருக்க, வேறு பயமேன்!
அந்தத் தரையே கிரீசும், டீசல், பெட்ரோல், கீல் எண்ணெயுமாய்ப் படிந்து கருப்பாய் பளபளத்து வழுக்கியது. செதுக்கியெடுத்தால் எள்ளுப் புண்ணாக்கு போல கட்டியாய் மண் பெயர்ந்துவரும். மழைக்காலமானால் ஜாக்கிரதையாய்த்தான் நடக்கணும். இப்பவே ஜாக்கியில் தூக்கிய வண்டிக்குத் தண்ணீர் அடிக்கையில் சிந்தினால் காயும் வரை சிரமம்தான். உட்கார்ந்து வேலை செய்ய பலகை போட்டுக்கொள்வார்கள்.
சிறு சிறு சுற்றுவட்ட வேலைகள்தான் கஷ்டமாய் இருந்தது அவனுக்கு. டயர்பஞ்ச்சர் என்றுவந்தால் எட்டு நட்டு போலக் கழற்றி எடுக்க வேண்டிவரும். காலகாலமாய் மண் படிந்து இறுகிப்போன நட்டுக்கள். அவற்றைக் கழற்ற என்றே எக்ஸ் போல உபகரணங்கள். அதில் ஏறி, வயலில் ஏற்றம் இறைக்கிறாப்போல மிதித்து, நட்டை ஊப் என தம் பிடித்து, மூச்சடக்கி, அமுக்கி, அசைத்துக் கழற்ற அபாரசக்தி தேவை. அதேபோல் டயரைத் திரும்ப மாட்டுவதும் பெரும்பாடு.
கனவாகனங்களில் முன்பக்கம் ரெண்டு டயர், பக்கத்துக்கு ஒன்றாக – என்றாலும் பின் பக்கம் பக்கத்துக்கு ரெண்டு, என மொத்தம் ஆறு டயர்கள். உள்டயரில் பஞ்ச்சர் என்றாகிப் போனால் கழற்றுவது இன்னும் சிரமமான வேலை.
ஊ..ப்ப்ப்!
அவன் உடம்பில் தெம்பே இல்லை. மூச்சு வாங்க வாங்க வேலைசெய்ய வேண்டியிருந்தது. சில கனமான சாமான்களைத் தூக்கவே சிரமப்பட்டுப் போயிற்று. ஒவ்வொரு டயரும் என்ன கனம். ணங் கென்று டயரைக் கீழேபோட தரையே பாளம் பாளமாய்த் தெறித்தது. காலில் விழுந்தால், என நினைக்கவே பயமாய் இருக்கும். போகப்போகச் சரியாகிவிடும் என்று தேற்றிக்கொண்டான்.
போகப் போக எது சரியாகி விடும்? கால் புண்ணா!
லாரியாபிசில் மற்ற பையன்களுடன் படுத்துக் கொண்டான் முதலில். கமலாதான் வற்புறுத்தி அழைத்தது. கிருட்டினமணியும் தலையாட்டி விட்டான்… ராத்திரி பத்தோ பத்தரையோ ஆனாலும் பரவாயில்லை. வேலையைமுடித்த கையோடு வீடு வந்து சேர், என்றான் அண்ணன்.
நல்லா திருத்தமா அழகா குண்டு குண்டான கையெழுத்து கமலாவுக்கு. வீட்டுப்பாடங்களை முன்குனிந்து கவனமாய்ப் பென்சிலில் அழுத்தி எழுதும்போது நாக்கை ஏனோ சேஷ்டைகள் செய்யும். வீட்டில் அதற்கு பாடம் சொல்லித் தர ஆள் இல்லை. பள்ளிக்கூடம் விட்டு வழியில் டீச்சர் வீடு. அங்கே போய்ப் படித்துவிட்டு வரும். மாலையில் டீச்சர் வீட்டுக்குப்போய் சிவஜோதி கூட்டிவருகிறாள். என் னமாச்சும் பாலோ, கூட நொறுக்குத்தீனியோ எடுத்துக்கொண்டு, டீச்சர் வீட்டில் சாப்பிடக்கொடுத்துக் கூட்டிக் கொண்டு வருவாள். அம்மா முதுகில் பள்ளிக்கூடப் பைக்கட்டு. கையில் தண்ணீர் பாட்டில் மதியச் சாப்பாட்டு டப்பி எல்லாம் வைத்த லன்ச்பேக். பார்க்க அம்மா பள்ளிக்கூடம் போய்வருகிறாப் போல இருக்கும்! கைவீசி வீசி லெஃப்ட் ரைட் நடை நடந்து வரும் கமலா.
தினசரி சிவாஜிமேல் கால் போட்டுக்கொண்டு தூங்குகிறாள் கமலா. அண்ணன் எங்க ஓடிப்போயிருவானோ, என்று பயந்தமாதிரி இருக்கிறது அவள் செயல்! காலை சீக்கிரம் கிளம்ப வேண்டிய சந்தர்ப்பங்கள் சிரமமானவை. அவன் மெல்ல, அவள் அறியாமல், அவள்காலை சலனப்படுத்தாமல் நகர்த்த முற்பட்டால், சட்டெனத் திரும்பி, கையால் அவனை அணைத்துப் படுத்துக்கொள்வாள் குழந்தை. பிரித்துக்கொண்டு கிளம்ப மனசு சங்கடமாய் இருக்கும்.
பட்டறையில் வேலை ஒரே மாதிரி அமையும் என்று சொல்ல முடியாது. சில நாட்கள் வேலையே இராது. கம்பெனி பஸ், கம்பெனி லாரியில் வழக்கமான செக் அப் முடித்து விட்டால் வேறுவேலை இல்லாமல் காலியாக இருக்கும் வளாகம்.
முதலாளி இல்லை என்றால் கொட்டம் அடிக்கலாம்… எறிபந்து விளையாடலாம். எவனாவது அப்பிராணி சுப்ரமணியை தெருநாய்போல நடுவில் மாட்டி பந்தால் நச்சி எடுத்துறலாம்.
துப்புரவா வேலை இல்லாத சந்தர்ப்பத்தில், எப்படியோ தெரிந்துகொண்டு, பெரியாள் நம்பிக்கு யாரோ பெண் ஃபோனில் பேசும். லவ். பேசியபடியே பெரியாள் நம்பி தன்னைப் போல தலையைத் தடவி, முடி ஒதுக்கி விட்டுக்குவான். சீப்பால் வாரிக் கொள்வான். இன்னும் கொஞ்சநாளில் பவுடர் கூட அடிக்கக் கூடும்!…
ஃபோனில் பேசிக்கவே இந்த அமர்க்களம் அப்பா!
காதல் வந்துவிட்டால் இந்த மனுஷாள் – ஆணாயினும் பெண்ணாயினும் கொஞ்சம் பைத்தியசாயல் கொண்டு விடுகிறார்கள். சிலசமயம் அந்த பெரியாள் நம்பி ஸ்பேனர் எடுத்து வந்திட்டிருக்கிற போதே தானே சிரிச்சிக்கிறான். நடையில் இடுப்புவலி கண்டாப்போல ஒரு வெடுக் ஒடிப்பு. நொடிப்பு… என்னடான்னா … ஒண்ணில்ல ஒண்ணில்ல, என்று ஆனால் தொடர்ந்து சிரிக்கிறான். சில சமயம் அவனிடம் தனி பரபரப்பு காணும். உடம்பு இங்கே, மனசு வேறெங்கோ எனத் தெரியும்.
அவளிடம் இருந்து ஃபோன் எதிர்பார்க்கிற நேரங்களாக அவை இருக்கலாம். அழைப்புவரத் தாமதம் ஆகும் ஒவ்வொரு நிமிஷமும் இவாள் படற பாடு. தலையைத் தலையை எத்தனையோ தடவை வாரிக்குவான். பட்டறைக்குள்ளேயே நடையா நடை… ஃபோன் மணி அடித்தாலே இவனுக்குதான் என்கிறாப் போல உடம்பு சிலிர்த்து தூக்கிப் போடுகிறது. அவனுக்குதான் ஃபோன்-னா ஒரே சிரிப்பாணிதான்!
வந்த கால்… அதனால் செலவுக் கணக்கில் மணி ஐயா – வைகறையார் – பார் வைக்கு வராது. சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். என்னதான் பேசுவார்களோ தெரியாது…
எலேய் லாரி ஆபிசில் கழட்டாமலே தானே கழண்ட நட்டுறா நீயி… என்பான் மனோகரன் அவனை.
இல்லாவிட்டால் நம்ப மோகன்பாபு – இருக்கிற ஆள்களில் அவன்தான் கொஞ்சம் பொம்பளைசாயல் – அவனுடன் கூட்டாளி ராமசுப்பு… ரேடியோப் பொட்டியில் பாட்டு பாடப்பாட, ஆட்டம் போடுவார்கள். மோகன்பாபு குத்தாலத் துண்டு எதும் எடுத்து இடுப்பில் முந்திசொருகி உடலைமூடிக் கட்டிக்கொள்வான் புடவையாட்டம். இருவரும் டூயட் ஆட்டம். ஏ மன்மத ராசா…. என்று பாடினால் சுத்தி அதை வேடிக்கைபார்க்க என ஒரு ரசிக மகாக் கூட்டம்.
தேசிங்குராஜன் பலகுரல் மன்னன். சத்யராஜ் பாணியில் அப்படியே பேசிக் காட்டுவான். ராமநாதன் டிரங்குப் பெட்டியில் அபாரமாய்த் தாளம் போடுவான். டண்ட டக்கர டண்ட டக்கர… அவன் தாளத்துக்கு சிகாமணியின் பாட்டு எடுப்பாய் இருக்கும். எளிய, லம்பாடித்தனமான, தாளவெறியான பாடல் கள்.
காற்று வாங்கப் போனேன் – ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
ஏன் காத்து கிடைக்கலியாக்கும்… என்னத்தையோ பண்ணப் போயி, வேறெதையோ பண்ணிட்டு வராங்கய்யா! லூசுப் பசங்க.
எல்லாம் வைகறையார் இல்லாத பட்சம்தான். அவர் முன்னே எல்லாருமே அத்தனை அடக்கம் காட்டினார்கள் – ஆச்சர்யம்.
போன வாரம் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை, என அமர்க்களப்பட்டது வளாகம். கிருட்டினமணி அண்ணன்கூட வந்திருந்தான்… ஷெட்டே சீரியல்பல்ப் மினுங்க அம்சமாய் இருந்தது. சவுண்ட் சர்வீஸ்காரனிடம் சொல்லி, ஒலிபெருக்கி கட்டி, சினிமாப் பாட்டு, என சப்த இம்சை.
எலே சரஸ்வதிக்கு பூஜையாடா இது… பூரா கெட்ட வார்த்தைப் பாட்டா வருது, என்றான் அண்ணன்!
பெரிய முழு முழு வாழையிலைகளில் அவல் – பொரி – பொறிகடலை – தேங்காய், என வைத்து கற்பூரங்காட்டி பூஜை. வரிசையாய் சாமி படம். எங்கிருந்தோ கொண்டு வந்தார்கள்.
நேற்றுவரை அங்கே – ஜோதிகா, ரம்பா, த்ரிஷா, சிநேகா – என்று ஒட்டியிருந்தன. சந்திரமுகி படம் வந்தபிறகு ஜோதிகா படத்தைக் கிழித்து விட்டார்கள். ஒரு பயந்தான்!
ரா ரா…. சரசுக்கு ரா ரா…
ஐய நா வர்ல!
தொழிலாளி எல்லாரையும் நிற்க வைத்து திருஷ்டிப் பூசணி சுற்றிப் போட்டார்கள். வடிவேலுக்கு ஒண்ணரைக் கண் .. இவன் கண்ணைப் பார்த்து எவன் கண் போடப் போறான்!…
வாகனங்களுக்கு சந்தன குங்குமம் பூசினார்கள்.
எதுக்கு பொரி வைத்து பூசை, எப்படி அந்தப் பழக்கம் வந்தது தெரியவில்லை. எல் லார்க்கும் அள்ளிக் குடுக்க விலை மலிவு – சவுகர்யம் என பெரியவர்கள் நினைத்திருக்கலாம்.
பொரியைவிட மலிவா, எதாவது லோகத்தில் உண்டா?
குழந்தைக்கு எட்டரைக்குப் பள்ளிக்கூடம். கிருட்டினமணியிடம் இப்போது சைக்கிள் இருந்தது. சிவாஜி பட்டறைவரை போகவும், குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விடவும், என சௌகர்யம். எலேய், பாவமன்னிப்பு படம் பாத்திருக்கியா? – என்று கேட்டான் கிருட்டினமணி. அதுல, நீயில்ல… நடிகர் திலகம் சிவாஜி, சைக்கிளில் பாடிட்டே போவாரு… வந்தநாள் முதல், இந்தநாள்வரை, வானம் மாறவில்லை… சூப்பர் பாட்டு.
‘ஏன் மாறவில்லை? மழைக்காலமே வரல்லியாமா?’ என்றான் நம்மாள் தேசிங்குராஜன்.
சைக்கிளில் முன்பக்கம் கமலாவுக்கு என தனி சிறிய சீட். பைக்கட்டை பின்கேரியரில் வைத்துக்கொண்டு கூட்டிப்போகிறான் சிவாஜி.
அவளுக்குப் போனமுறை செருப்பு பிய்ந்து போனபோது அண்ணன் ஊரில் இல்லை. இவனிடம் கையில் பணம் இல்லை. அண்ணி வைத்திருப்பாள். என்றாலும், அவளுக்கு செருப்பு பெரியவிஷயமாய்த் தோணவில்லை போல. அண்ணன் வரட்டும் எனக் காத்திருக்கக்கூடும்… இவனுக்கு அப்படி விட்டுவிட முடியவில்லை. தன்னால் வாங்கித்தர முடியவில்லை, என நினைத்தபோது அழுது விட்டான் சிவாஜி.
அன்றைக்குத் தற்செயலாக முதலாளி வந்து விட்டார். என்ன தோணியதோ, துணிச்சலாய், ஒரு அம்பது ருவ்வா வேணும் முதலாளி… என்று கேட்டு விட்டான்.
அவர் முகம் சுருங்கியது.
தப்பா நினைச்சுக்கப்டாது முதலாளி. அண்ணன் ஊர்ல இல்ல. பிள்ளை கால்ல செருப்பு இல்லாமப் பள்ளிக்கூடம் போவுது… பேசும்போதே குரல் தாழ்ந்து குழைந்தது.
சரி, என்று மறு வார்த்தை பேசாமல் எடுத்துக் கொடுத்தார். அட்வான்ஸ் கிட்வான்ஸ்னு பேசாதே… அதெல்லாம் இங்க வழக்கம் கிடையாது, என்றார்.
நீ திருப்பித் தரண்டாம். பரவால்ல – என்றார் புன்னகையுடன்.
அடடா, நூறு ருவ்வா கேட்ருப்பேனே… என்று தோழர்களிடம் சொல்லிச் சிரித்தான் வைகறையார் போனபின்னால்.
(தொ ட ர் கி ற து)


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்