நீ வருவாயென..

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

சந்திரவதனா


‘வெறும் காணி எங்கே எடுக்கலாம் ? ‘

காண்பவர்களிடம் ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். விசயம் இதுதான் எழுபது இறுதிகளில் சிறுபயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம்வரை கடன் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தக் கடன் பெறுவதாயின் பயிர்ச் செய்கைக்கான காணி இருக்க வேண்டும். அது அவரது சொந்தக் காணியாக இருக்க வேண்டியதென்ற கட்டாயமில்லை. வேறு யாருடையதானதாகவும் இருக்கலாம். காணிக்கு உரியவர் ஒரு குறிப்பிட்ட காலம் கடன் பெற இருப்பவருக்கு பயிர்ச் செய்கைக்காக தருவதாக எழுத்து மூலம் கொடுத்தால் போதும்.

கடன் பெறுபவரை எனக்குத் தெரியும். அவர் இந்த நிலத்தில் பயிர் செய்வதற்கு ஆவலாக இருக்கின்றார். குறிப்பிட்ட நிலம் பயிர்ச் செய்கைக்கு உகந்தது என ஊர் கிராமசேவகர் ஒரு உத்தரவாதம் தந்தால் போதும் ஐந்தோ மூன்றோ கைக்கு வந்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அதாவது பயிர்ச் செய்கை முடிந்தவுடன் பணத்தை வங்கிக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும என்பது எழுதப்பட்டிருந்த விதி;. அந்தக் குறிப்பிட்ட காலம் வந்தவுடன் பயிரை ஆடு மேய்ந்து விட்டது, பள்ளக் காணியாதலால் வெள்ளம் நின்று பயிர் ஆழிந்து விட்டது, இந்த வருசம் வெயில் கொழுத்தோ கொழுத்தென்று கொழுத்தியதாலே பயிர் கருகி விட்டது, என்று அவரவர்கள் காரணம் சொல்லப் போகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதற்கு சாட்சியாக ஊரில் பல விடயங்கள் நடந்தேறின.

வங்கியில் எடுத்த பணத்தில் வீட்டுக்கு மதில் கட்டியவர்கள், மனைவிக்கு நகை செய்து அழகு பார்த்தவர்கள், திருமணத்திற்கு நாள் குறித்தவர்கள், என்று பல விடயங்கள் நடந்து கொண்டிருந்தன. பயிர்ச் செய்கைக்கு முளை நடாமலேயே பலரது கைகளில் தங்க முலாம் பூசிய கைக்கடிகாரம் முளைத்திருந்தது. திடாரென நகரம் பணக்காரத் தன்மை பெற்றுக் கொண்டது போன்ற பிரமை. ஆளாளுக்கு காணி தேடி அலைந்து கொண்டிருந்ததால் நகரத்தில் மக்களின் நடமாட்டமும் அதிகமாகவே இருந்தது.

வங்கிகள் வெளியாட்களுக்காக மதியம் ஒரு மணிவரைதான் திறந்திருக்கும். இந்தக் கடன் கொடுக்கும் திட்டத்தால் தினம் வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் என் போன்றவர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. வங்கிக்கு வழமையான வாடிக்ககையாளர்களை விட அதிகமான புதியவர்கள் அலை மோதினார்கள். இந்தக் கடன் எடுக்கும் கூட்டத்தில் நகரத்தில் அச்சமூட்டும் சில காலிகளும் இருந்தனர். அன்று வங்கிக்கு பணம் செலுத்துவதற்காகச் சென்றேன். கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு தள்ளி நான் முந்தி நீ முந்தியென கட்டுப்பாடுகள் இன்றி வருவோர் போவோரைப் பற்றிக் கவலையில்லாமல் கெட்ட வார்த்தைகளை தாராளமாக அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். இத்தனையையும் வாங்கி வங்கி அல்லோலகல்லப் பட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தை ஒழுங்கு படுத்த கருணாரட்ண நியமிக்கப் பட்டிருந்தான்.

கருணாரட்ண எனது வீட்டிற்கு அருகாமையில்தான் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வாடகைக்குக் குடியிருந்தான். அவனது சொந்த ஊர் எனது ஊரில் இருந்து ஏறக்குறைய 540 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. எனது நகரத்து காவல் நிலையத்தில் சாதாரண பொலிஸாக பணிபுரிந்து கொண்டிருந்தான். ‘எப்பெடி சொகமா ? ‘ என்று அவன் கேட்கும் போதே தமிழ் மழலை கொஞ்சும்.

என்னைக் கண்டவுடன் ஒரு புன்னகையைத் தந்து விட்டு கருணாரட்ண கூட்டத்தை ஒழுங்கு செய்யும் தனது பணியில் கவனம் செலுத்தினான். நான் மேலே குறிப்பிட்ட, அந்த அச்சமூட்டும் நாயகர்களும் அன்று அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். எல்லோரையுந் தள்ளிக் கொண்டு அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். இயற்கையிலேயே அவர்கள் எது செய்தாலும் கண்டு கொள்ளாத எங்களவர்கள் அன்றும் பேசாமல் இருந்தார்கள். கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த கருணாரட்ணா இதை அனுமதிக்கவில்லை. அவர்களைத் தள்ளிக் கொண்டு வந்து மீண்டும் அவர்களது இடத்தில் விட்டுத் தனது பணியை சரிவர செய்து கொண்டிருந்தான். இதனால் அங்கே பெரும் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டது. அச்சமூட்டும் அன்பர்கள் எவ்வளவோ அடிமானங்கள் போட்டும் கருணாரட்ண அசைந்து கொடுக்கவில்லை. கடன் எடுக்க வந்தவர்களுக்கு மட்டுமல்ல வங்கியில் இருந்த அனைவருக்குமே இது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனாலும் யாரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அடுத்தநாள் காலை வழமை போல் நகரத்துக்குப் புறப்பட்டேன். கருணாரட்ணாவின் வீட்டு வாசலில் அவனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பது தெரிந்தது. வேலை முடிந்து வரும் கணவனை வரவேற்கப் பிள்ளையுடன் அவர் வாசலில் காத்திருப்பது வழமை. மொழி புரியாத ஊர். உறவினர்கள் என்று யாரும் இல்லை. ஆகவே அவர்களுக்குள்ளான அன்பு பலமாகவே இருந்தது. இருவருக்கும் சேர்த்து கையசைத்துவிட்டு நகரத்துக்குப் புறப்பட்டேன். எனது வீட்டில் இருக்கும் வீதியால் போனால் அது நேராக துறைமுகத்திற்குப் போய்ச் சேரும்.

நகரத்துக்குப் போவதாயின் துறைமுகத்திற்கு முன்பாக வரும் பாதையால் வலது பக்கம் திரும்பிச் செல்ல வேண்டும். நகரத்துக்குத் திரும்பும் பாதைக்கு அருகில் வரும் போதுதான் கவனித்தேன் வீதியில் சிகப்பாக ஏதோ பூசப்பட்டிருந்தது. அனுமார் வால் என்பார்களே அதுபோல் முடிவில்லாமல் அது சென்று கொண்டிருந்தது. என்னவென்று அறியும் அவாவில் அந்தத் தடயத்தோடு நானும் சென்றேன்.

துறைமுக வாசலோடு தடயம் முடிந்து விட்டது. கீழே கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. என்னைப் போலவே இன்னும் பலர் விடயத்தை அறியும் அவாவில் துறைமுக வாசலில் நின்றிருந்தனர். ஓங்கி அடிக்கும் அலையைத் தவிர எதுவுமே தெரியவில்லை. நகரமும் களை கட்ட நாங்களும் கலைந்து போனோம். மதியம் ஒரு மணிக்கு நகரத்தில் செய்தி பரவியது. கடலின் உள்ளே இருக்கும் முருகைக் கற்களுக்கிடையில் கருணாரட்ணாவின் உடல் கிடக்கிறதென்று. மனது கனத்தது.

வாசலில் அவனுக்காக காத்து நின்ற அவனது மனைவியும், குழந்தையும் இப்பொழுதும் நினைவில் வந்து போகிறார்கள்

**

பிரதியாக்கம் – முல்லை

**

kurinchi@web.de

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா