முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

மலர்மன்னன்


வட நாட்டுக்காரரான காந்திஜி முகமதியரை முஸல்மான் என்றும் முஸ்லிம் என்றும்தான் குறிப்பிட்டார், நான்தான் வேண்டும் என்றே முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுகிறேன் என்று அன்பர் வஹ்ஹாபி என் மீது குற்றம் சுமத்தியதும், இனியாகிலும் மலர் மன்னன் முகமதியர் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பார் என எதிர்பார்ப்பதாக அவர் மிகவும் மென்மையான மறைமுக மிரட்டல் விடுத்ததும் திண்ணை வாசகர்களுக்கு நினைவு இருக்கும்.

அதற்கு மறுமொழி கூறுகையில், காந்திஜி மட்டும்தானா வடநாட்டவர் என வினவியதோடு, காந்திஜியும் சில இடங்களில் வெகு இயல்பாக முகமதியர் என்ற பதத்தைப் பிரயோகம் செய்திருப்பதாகவும் எழுதியிருந்தேன். முகமதியர் என்று சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, அதனை ஆட்சேபிப்பதற்கு நியாயமானதும் அறிவு பூர்வமானதுமாக எக்காரணமும் இல்லை என்பதுதான் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய
அம்சம். முகமது அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட, அல்லது வஹ்ஹாபி கருதுவதுபோல முகமது அவர்களால் தெளிவுரை, பொழிப்புரையுடன் கூடிய மறு உருவாக்கம் அல்லது ஊர்ஜிதம் செய்யப்பட்ட சமயக் கோட்பாட்டை அவரது பெயரால் அழைப்பது மிகப் பொருத்தமானதேயன்றி அதில் இழிவுத்தொனி ஏதும் இல்லை.

கிறிஸ்தவம் பிளவுபட்ட போது அதற்குப் பெரும் காரணமாய் இருந்த மார்ட்டின் லூதர் பெயரால்தான் லுதரன் திருச் சபை இயங்குவதாகவும் அதேபோல் கால்வின் பிரிவு கால்வினியன் திருச் சபையாக அறியப்படுவதாகவும், எனினும் நியாயப்படி ஆட்சேபிக்கத் தக்க “எதிர்ப்பாளர்’ என்னும் பொருள்படும் “புராட்டஸ்டன்ட் ‘ என மொத்தமாக அழைக்கப்படுவதை அவர்கள் பெரிது படுத்துவதில்லை என்றும் பின்னர் திண்ணையில் ஒரு தனிக் கட்டுரையும் எழுதியிருந்தேன். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைச் சீர்திருத்தம் செய்யும் முகாந்திரமாக ஏற்பட்ட தமது பிரிவுகளை சீர்திருத்தப் பிரிவுக் கிறிஸ்தவர் என்றுதான் அழைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும் அல்லவா? ஆனால் அவர்கள் இந்தப் பெயர் விஷயத்தை ஒரு பிரச்சினையாக்குவதில்லை. தம்மை அவர்கள் ‘புராட்டஸ்டன்ட்’ எனக் குறிப்பிட்டுக் கொள்வதில்லை, அவ்வளவுதான் (அக்கட்டுரையை எழுதக் காரணமாயிருந்த “திண்ணை’ ஸ்ரீ கோபால் ராஜாராம் அவர்களுக்கு நன்றி. ஏனெனில் இந்த முகமதியர் பதப் பிரயோகம் தொடர்பான சர்ச்சையையொட்டி லுதர், புராட்டஸ்டன்ட் சமாசாரங்களைக் குறிப்பிட்டு அவர் ஒரு கட்டுரையை எழுதியிராவிடில் அது தொடர்பாக ஒரு தனிக் கட்டுரை எழுத வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்காது!).

இனி, காந்திஜியும் முகமதியர் எனப் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு, அவ்வாறு அழைப்பதில் தவறோ இழிவுக் குறிப்போ இல்லை என நான் தெரிவித்தமைக்கு ஆதாரம் கொடுத்துதான் ஆகவேண்டும் எனில், காந்திஜி 1919 ல் ஹிந்துஸ்தானத்தின் இரு முக்கிய சமயத்தவரான ஹிந்து முகமதியரிடையிலான இணக்கம் தொடர்பாகப் பேசியதிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன் (“ஆதாரம் ஏதும் இல்லாமல் இந்த நாட்டாமை எழுதிக் கொண்டு போகிறான்’ என்பதாக ஒரு நிரந்தரமான அவச் சொல் எனக்கு இருந்து வருகிறது அல்லவா? முடிந்தவரை அந்தக் கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ):

“With God as witness we Hindus and Mohammedans declare that we shall
behave towards one another as children of the same parents, that we
shall have no differences, that the sorrows of each will be the
sorrows of the other and that each shall help the other in removing
them. We shall respect each other’s religion and religious feelings
and shall not stand in the way of our respective religious practices.
We shall always refrain from violence to each other in the name of
religion.”

முகமதியரே தம்மை முகமதியர் என்று குறிப்பிட்டுக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்மாறு காந்திஜி வேண்டுகிறார். அந்தப் பதப் பிரயோகம் இழிவு கருதிப் பயன்படுத்தப்படுவதாக இருப்பின் முகமதியர் மீது தனிப் பாசம் வைத்திருந்த காந்திஜி அதனைக் கனவிலும் பயன்படுத்தியிருக்க மாட்டார் அல்லவா?

காந்திஜி ஆற்றிய உரைகளின் தொகுப்பு ஆண்டுகள் பிரகாரம் பல தொகுதிகளாக வந்துள்ளன. ஒவ்வொரு தலைப்புகளிலும்கூடத் தொகுப்புகளுண்டு.இதனால் பலவற்றில் “கூறியது கூறலு’ம் உண்டு. ஆகவே வெகு எளிதில் நான் குறிப்பிட்ட பகுதியைக் கண்டுகொள்ளலாம்.

மேலும்”மொஹமடன் லா’வுக்கு எத்தனைதான் புதுப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் நீதிமன்றத் தாழ்வாரங்களில் மட்டுமின்றி கனம் கோர்ட்டார் அமரும் நியாய சபைகளிலும் வழக்கு மொழியாக “மொஹமடன் லா’ என்றுதான் பேசப்பட்டு வருவதையும் அதை எவரும் ஒரு பிரச்சினையாக்குவதில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

எனது கட்டுரைகளிலும் அடையாளத்தைச் சுட்டுவதற்காகத்தான் அது பிரயோகிக்கப் படுகிறதேயன்றி இழிவுக் குறிப்பாக அல்லவே! தங்களின் இறைத் தூதராக மட்டுமின்றி மனித குலத்திற்கே இறுதி இறைத் தூதர் என்று அவர்களால் நம்பப் படுபவரின் பெயரால் அவர்களைக் குறிப்பிடுவது எதனால் அவர்களுக்கு இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்று அறிவுப் பூர்வமாக விளக்கினால் அதைப் பயன் படுத்துவதை நிறுத்திவிடலாம். வெறும் அகராதிகளைக் காட்டுவதால் என்ன பிரயோசனம்? நாளைக்கேகூட அது திரும்பவும் ஏதேனும் ஓர் அகராதியில் இடம் பெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பல காரணப் பெயர்கள் அவ்வாறு இடம் பெற்றதுண்டே? இதற்கும் ஆதாரம் வேண்டுமானால் தேடித் தருகிறேன்! பிறக்கிற அனைவருமே முஸ்லிம்தான் என்பது போன்ற விசித்திரமான வாதங்களும் கோபால் ராஜாராம் மிகச் சரியாகவே சொன்ன மாதிரி சிரிப்பூட்டுவனவேயன்றி வேலைக்கு ஆகுமா?

அடுத்த்து, பார்ப்பனரை நான் பார்ப்பனர் என்று குறிப்பிட்டதாகவும் வஹ்ஹாபி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். கூடுமானவரை தமிழில் எழுத வேண்டும் என்னும் விருப்பத்தால்தான் பிராமணர் என்பதற்குப் பதிலாகப் பார்ப்பனர் எனக் குறிப்பிடுகிறேனேயல்லாது அந்தப் பிரிவினரை இழிவாகச் சுட்டுவதற்காக அல்ல. குறிப்பாக திராவிட இயக்கத்தினர் பார்ப்பனரை இழிவாகச் சுட்டுவதற்கு “பார்ப்பான்’ என்றுதான் சொல்வது வழக்கம். “பார்ப்பனர்’என மரியாதையாக அல்ல. மேலும் திண்ணையில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்சினை தொடர்பாக நான் எழுதிய கட்டுரையினைப் பெரிதும் பாராட்டியும் வரவேற்றும் பிராமணர் சங்க இணைய தளத்தில் விமர்சனங்களும் விவாதங்களும் இடம் பெற்றனவேயன்றி, பார்ப்பனர் என நான் குறிப்பிட்டமைக்காக ஒரு சிறு ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அக்கட்டுரைக்காகப் பல பார்ப்பனர் நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் பாராட்டுத்தான் தெரிவித்தார்கள்.

பார்ப்பனர் பற்றி ஆங்கிலத்தில் எழுதும்போது தமிழரல்லாதவருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக “பிராமின்ஸ்’ என்றுதான் குறிப்பிடுகிறேன். சமீபத்தில் தி மு க. செயற்குழுவில் பார்ப்பனரை அச்சுறுத்தும் விதமாக மறைமுக எச்சரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து “ஆர்கனைசர்’ ஆங்கில வார இதழில் கடும் விமர்சனம் செய்து எழுதிய கட்டுரையிலும் “பிராமின்ஸ்’ என்றுதான் குறிப்பிடுள்ளேன். இக்கட்டுரை
யினை தமிழ்நாடு பிராமின்ஸ் இணைய தளம் மறு பிரசுரம் செய்து விவாதம் நடத்தியிருக்கக் கண்டேன். அதிலும் பாராட்டுகளே காணப்பட்டன. பிராமின்ஸ் என்பது ஆங்கிலத்தைப் பொருத்தவரை ஒரு வேற்று மொழிச் சொல்தான். எனவே இழிவுக் குறிப்புடன் “பார்ப்பனர்” என்னும் பதப் பிரயோகம் செய்யும் நோக்கம் இருப்பின் “பார்ப்பனர்’ என்றே குறிப்பிட்டு
தெளிவுபடுத்துவதற்காக வேண்டுமானால் அடைப்புக் குறிகளுக்குள் “பிராமின்ஸ்’ என்று எழுதியிருக்கலாம் அல்லவா?

வேண்டுமென்றே “பார்ப்பனர்’ என்ற சொல்லை இழிவுக் குறிப்பாகப் பயன்படுத்துவோரும் இல்லாமல் இல்லை. அதற்காக அந்த அழகான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாகாது என எனக்குத் தெரிந்து விவரமுள்ள எந்தப் பார்ப்பனரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. எதுவும் சொல்லும் தொனி, விவாஅதிக்கும் விதத்தைப் பொருத்திருக்கிறது. “சீ, கள்ளா’ என்று கொஞ்சவும் கொஞ்சலாம், திட்டவும் திட்டலாம்தானே!

அண்மையில் ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது ஒருவர் என்னை வழி மறித்து “நீங்கள் முகமதியர் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தாதீர்கள், அது காலனிய அடையாளப் பெயர் ‘ என்று சொன்னார். “அப்படியானால் இந்தியா என்பது கூடத்தான் காலனிய அடையாளப் பெயர். இதற்கு மட்டும் ஏன் ஆட்சேபணை ஏதும் வருவதில்லை?’ என்று திருப்பிக் கேட்டேன். அவர் பதில் பேசாமல் சென்றுவிட்டார்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்