‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றுதான், 28/03/2008 வெள்ளிக்கிழமை திண்ணையைப் பார்க்க இயன்றது. ஓய்வில்லாத பணிகளுக்கிடையிலும் நான் வாசிக்க வாய்த்த – திண்ணையில் வந்துள்ள தங்களின் ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ என்ற அக்கறை மிக்க அறிவுப் பகிர்தல், இஸ்லாம் குறித்து நான் கொண்டிருந்த கருதுகோள்மீது தெளிவான வெளிச்சத்தை வீசியது.
தாங்கள் குறிப்பிடுவதுபோல், நாம் பிறக்கும்பொழுது எழுதப்படாத சிலேட்டுகளாகத்தான் பிறக்கிறோம்; பிறகுதான் வளர வளர, பெற்றோர் உற்றோர் தொடக்கமான சமூகத்தாலும்தான் ‘பணித்திட்டம்’(Programme) எழுதப்பெறுகிறோம் என்பதும்தான் இயல்பான உண்மைகள்.
“அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும்” என்பதைத்தான் இங்கர்சாலும் தன் வாணாள் கருத்தியலாக உலகின் முன்வைத்தார். கருத்துத் திணிப்பாலும் கட்டாயத்தாலும் வன்முறையாலும் உலகில் எந்தச் சமயமும் வளர்ந்ததில்லை. மிகமிக அருமையான கருத்தாடல்களைத் தமிழ்ச் சமூகத்தின்முன் வைத்த திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய அரிய நூல்களைத் தந்த சமணமும்(நண்பர் ஜடாயு பொறுத்துக்கொள்க!); ‘மக்களின் பசிப்பிணி போக்குவதே மெய்யான அறம்’(“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”), “சிறைச்சாலையை அறச்சாலை ஆக்க வேண்டும்!” முதலான சீரிய கருத்தியல்களை வள்ளலார் போன்ற தமிழ்ச் சமூகப் புரட்சியாளர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தந்த மணிமேகலை என்னும் அறநூலைத் தமிழர்களுக்கு நல்கிய பெளத்தமும் அவற்றின் கடுத்தமான – இயல்பாக ஓர் ஆணோ பெண்ணோ பின்பற்ற மிகுதொல்லையான – இறுக்கமான – ஆகவும் விட்டுக்கொடுக்காத தன்மைகளால்தாமே இன்று ஆய்வுக் கட்டுரை எழுதும் அறிஞர்களோடு மட்டுமே நிலைப்பட்டுவிட்டன? இதற்கு ஜார்ஜ் போன்றோர் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் என்ன காரணிகளை எழுதினாலும் சரியே..அவற்றை எதிர்த்து நிலைப்பட ஏன் இந்தச் சமயங்களால் முடியவில்லை? – என்ற கேள்விக்கு – “அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும்” என்ற தங்களின் கூற்றே ஏற்ற மறுமொழியாக இருக்க முடியும்.
“மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும்?” என்ற தங்கள் கேள்வியை வஹாபி போன்றோர் கருத்தில் எடுத்துக் கொண்டு, ‘தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்வதை’த் தவிர்த்துக் கொண்டு அளவையியலை(Logic) சற்றே மதித்துத் தம் கருத்தாடல்களை முன்வைத்தால் இஸ்லாத்தை இயல்பாகப் பலர் புரிந்து கொள்வார்கள். இஸ்லாமுக்கு அவர்கள் தருகின்ற, ஆகவும் சிறந்த பங்குப்பணியாகவும் அது திகழும் என்று கருதுகிறேன்.
அன்புடன்,
தேவமைந்தன்


Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்