ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

சூபிமுகம்மது


1. 2006 நவம்பர் 3 திண்ணை இதழில் பாபுஜி கூறுகிறார் ”மவ்லீது ஓத வருகிறவர்கள் குர்ஆனை படிக்க வராதிருந்தார்கள்….” எந்த நேரத்தில், எந்த ஊரில் யார் வரவில்லை என்று கூறுவாரா? தமிழகம் முழுவதும் பாரம்பர்யமாக முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளி வாசல்களில் தான் தொழுகை நேரம் தவிர்த்த பின் இரவில் நபிமுகமதுவின் ஞாபகங்களை புதுப்பிக்கும் சுபுஹான மவ்லிதை ஓதுகிறார்கள்… மேலும் தர்காக்களை உருவாக்கியவர்கள் அதற்கு அருகாமையிலேயே தான் பள்ளிவாசல்களையும் அமைத்தார்கள். உண்மையான வரலாறுகளை திரித்துக் கூறக்கூடாது.

2. ”அதே நேரம் முரண்பாடில்லாத கவிதைகளையோ கலையையோ, வணக்கமாக கருதாமல் வெற்று இன்பத்துக்காக பாடினால் அதில் தவறில்லை”.

பாபுஜி மவ்லீது ஓத ஒப்புதல் வழங்கிவிட்டதைப் பாருங்கள். இனி தெளகீது பிராமணங்கள் தங்களது பள்ளிவாசல்களிலும் கூட்டியோ குறைத்தோ தங்கள் நிலைபாட்டிற்கு ஏற்ப தங்களது மவ்லீது மஜ்லிசுகளை துவக்கி நடத்தட்டும். நபி புகழ் கூறும் மவ்லிதுகள் ஓதி முழக்கட்டும். வாழ்த்துக்கள்.

3. இப்னு பஷீர், பாபுஜி புதுமைகள் பற்றி:
புதிதாக வந்த மத்ஹபுகளை, தரீகாக்களை, இஜ்மா, இஜ்திகாத்துகளை, ஜனநாயகத்தை, சோசலிசத்தை, தர்காக்கள் உருவாக்கும் சமூக நல்லிணக்கத்தை – இந்த விதமான புதுமைகளை ஏற்கமாட்டோம். ஆனால் புதிதாக வந்த இட்லி சாம்பாரை, சட்னி வடையை, பிரியாணி குறுமாவை ஏற்போம் என்று கூறுவதுபோல் அவர்களது வாதம் வேடிக்கையாக இருக்கிறது.

வஹி வந்த விஷயங்களில் மட்டும்தான் புதுமையை ஏற்கமாட்டோம் என்றொருவாதம் கூட. அப்படி எனில் அனைத்து ஹதீது தொகுப்புகளையும் ஹராம் என விலக்கி விட்டீர்களா? ‘வஹி’ வராமல் கலிபாஉதுமானால் தொகுக்கப்பட்ட, தலைப்பிடப்பட்ட சேருசவருள்ள திருக்குர்ஆனையும் விலக்கி வைத்து விடுவீர்களா….

மார்க்க வணக்க வழிபாட்டில் மட்டும்தான் புதுமையை ஏற்கமாட்டோம் என்றொரு சப்பைக் கட்டுவாதம் கூட. அப்படி எனில் அடுத்தவனிடம் அபகரிக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யலாமா… ‘விவசாயம் செய்தல்’ வணக்கம் இல்லையே… வணக்க வழிபாடுகள் அனைத்தும் வெறும் சடங்கியல்கள் தானே

நீங்கள் ஏற்றாலும் ஏற்காமல் போனலும் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியான ஊடகங்களின் இணையங்களின் செல்வாக்கினை தடுக்கமுடியாது. ‘நபிமுகமது செய்யாத ஒன்றை’ இதுபோன்ற விஷயங்களில் மட்டும் ஏற்றுக் கொள்வோம் என்பது வகாபிகளின் போலித்தனத்தையும், பலவீனத்தையும் அம்பலப்படுத்தி காட்டுகிறது.

4. நபி முகம்மது செய்த ஒன்றின் அடிப்படையிலான நபிவழித் திருமணம் என்ன ஆயிற்று… ஆறு வயது சிறுமியா… அல்லது குழந்தைகளுக்கு தாயான விதவைப் பெண்ணையா…. யாரை வகாபிகள் நபிவழியில் செய்திருக்கிறீர்கள். இல்லையெனில் நபிவழித் திருமணமென்று மேடைகளில் முழங்குவதையெல்லாம் வெற்றுக் கூச்சல்தான் என்று ஒப்புக் கொள்ளுங்கள்.

5. அல்லா – நபி முகமதுவுக்கு ஏற்படுத்திய உள்மனத் தூண்டலின் வெளிப்பாடுதான் திருக்குர்ஆன் என்று கூறியவர்கள் சர்சையத் அகமத்கான், குலாம் அகமது பர்வேஸ் என இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்களின் பெயரை ஹெச்.ஜி.ரசூல் தனது கட்டுரையில் குறிப்பிட்டதும் இப்னுவும், வஹ்ஹாபியும் பதறி விழுந்தடித்து எழுத முற்பட்ட வரிகளில் பதட்டம் மட்டுமே தெரிகிறது. திருக்குர்ஆன் விளக்கவுரை ஏழு தொகுதிகள் எழுதியுள்ள சர் சையத் அகமத்கானின் வெறும் ஏழு வரிகளை எடுத்துக்காட்டி திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளல்ல என்று இப்னு நிரூபிக்க முற்பட்டிருப்பது கோமாளித்தனமே.

இப்னுவிடமிருந்தும், வஹாபியிடமிருந்தும் சர் சையத் அகமத்கானின் கற்பை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கில்லை. அடிப்படைவாதிகள் – ஜனநாயகவாதிகள் என்ற இரு கருத்து நிலைகளில் நீங்கள் யார் பக்கம் என்பது தான் கேள்வி. மெளதூதியோ, நத்வீயோ, பர்வேஸோ, கானோ, அஸ்கர் அலி இன்ஜினியரோ யாராக இருந்தாலும் சரி.

எப்படியோ கிறிஸ்தவ மேற்குலக சிந்தனை பாதிப்பின் வெளிப்பாடுதான் திருக்குர்ஆனின் புனித கற்பிதங்கள் பற்றிய ஹெச்.ஜி. ரசூலின் கட்டுரை என வெளுத்து வாங்கியருந்த வஹ்ஹாபி குழுமம் தடாலடியாக இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்களும் இப்படி பேசியிருக்கிறார்களாவென்று படிக்க ஆரம்பித்திருப்பதே மிக ஆரோக்கியமான விஷயம் தான்.

6. ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக்காட்டிய அல்லாவின் புனைவு மொழிச் சொல்லாடல்கள் குறித்து மேலும் எனது சந்தேகங்கள்.

(அ) வெட்டிப்போடப்பட்ட பறவையின் உடல் துண்டுகள் நான்கு மலைகளிலிருந்து திரும்பவும் ஒன்று சேர்ந்து எப்படி ஒரு பறவையானது… நிரூபணம் செய்ய முடியுமா… ஒரு பறவையை துண்டுதுண்டாக்கும் குரூர மனம் அல்லாவுக்கு எப்படி வந்தது…?

(ஆ) ஆண் துணையின்றி அன்னை மர்யம் கர்ப்பம் தரித்த சம்பவத்திற்கு அறிவுபூர்வமான பதில் என்ன…. வஹ்ஹாபி மூடநம்பிக்கை பால் குடித்து வாந்தி எடுப்பது அசிங்கமாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் வகாபிய நாத்திக வாதம் அவுலியாக்களை இல்லையென்று சொல்கிறது. பெரியாரின் நாத்திகவாதம் அல்லாஹ்வையே இல்லையென்று சொல்கிறது. இரண்டும் ஒப்பீட்டளவில் ஒன்றுபோல்தானே தெரிகிறது.

7. இதற்கிடையே வகாபி குழுமத்தை சேர்ந்த இன்னொரு ஆவி அருளடியான் என்ற பெயரில் திருக்குர்ஆனின் புனிதங்கள் சார்ந்த கற்பிதங்கள் கட்டுரைக்காக இணைய தளம் தமிழ் முஸ்லிம் மன்றம் கூட்டு வலைப்பதிவில் ஹெச்.ஜி. ரசூல் ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்று எழுதியிருக்கிறது. விவாதங்களுக்கு பதில் சொல்லமுடியாத நிலை ஏற்படும் போதெல்லாம் இப்படியாக அவதூறுகளை எழுதுவது வகாபிகளின் வாடிக்கை. இதற்கு பதிலாக சவுதியில் பணம் பெற்று அதன் நிழலில் கருத்துப் பிரச்சாரம் செய்யும் இயக்கம் சார்ந்த அருளடியான் ஒரு வகாபிய கைக்கூலி என்று உண்மையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

8. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்.ஜி.ரசூல் எழுதிய மைலாஞ்சி கவிதை நூல் வெளிவந்தது. அதில் கவிதை ஒன்றின் இறுதிப் பகுதி ஒரு குழந்தையின் கேள்வியாக, ”இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்க மத்தியில் / ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி என இடம் பெற்றிருந்தது. இக்கவிதை உள்ளிட்ட பல கவிதைகளுக்காக ஒரு வகாபிய தீவிரவாதி ”ரசூல் கேரளாவில் மட்டும் இருந்திருந்தால் தலையை வெட்டி எடுத்து இருப்பார்கள்” என்று பிரபல வார இதழில் பேட்டிக் கொடுத்தார். அதற்குத் தான் கவிஞர் இன்குலாப் இணையத்தில் எழுதும்போது கேட்டார் ரசூலின் தலையை வெட்டலாம் ஆனால் கேள்விகளை என்ன செய்வீர்கள்… இதைத்தான் திண்ணையில் நடைபெறும் இஸ்லாம் குறித்த விவாதங்களை வாசிக்கும்போது நினைவுப்படுத்த தோன்றுகிறது.

9. ஹெச்.ஜி.ரசூலின் தொடர்ச்சியாக என் பங்குக்கு திருக்குர்ஆன் புனைவுமொழிக் கதையாடல் குறித்து தொடர விரும்புகிறேன். ஹெச்.ஜி. ரசூல் திருக்குர்ஆனும் இஸ்லாமிய நவீனத்துவம் கட்டுரைபோல தொடர்ந்து சிந்தனையை விரிவுபடுத்தும் கட்டுரைகளை எழுதட்டும். வஹாபிகளின் தோலுரித்துக் காட்ட என்போன்றவர்களே போதும்.

அல்லாவின் புனைவு மொழி கதையாடல் : 3
அல்மாயிதா அத்தியாயம் 5, வசனம் 60

அல்லாஹ் அவர்களை சபித்து அவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்களில் சிலரை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் எவர்கள் பொய்த் தெய்வங்களை வணங்கினார்களோ அவர்களும் தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர், அன்றி நேரான வழியிலிருந்து தவறியவர்கள்.

மூக்கு முட்ட மூடநம்பிக்கை பால குடித்து போதையிலிருக்கும் வஹ்ஹாபி போதை தெளிந்து
பதில் சொல்லட்டும்.

i. உலக மக்களுக்கு அருளையும் கருணையையும் சுரக்கும் அல்லா சாபமிடுவது ஏன்

ii. அல்லாவின் சாபமிட்ட வார்த்தைகள் எப்படி மனிதர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றின விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியுமா…

iii. குரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா? அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்….

iv. அல்லாவை தவிர்த்து பிற சகோதர சமயத்தினரின் கடவுள்களை பொய் தெய்வங்கள் என சொல்வதும் அம்மக்களை மிகத் தாழ்ந்த இனத்தினராக சொல்வதும் சமூக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல் அல்லவா? இது அல்லாவின் வார்த்தையா அல்லது ஊடுருவி சேர்க்கப்பட்ட ஷைத்தானின் வார்த்தையா?


tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகம்மது

சூபிமுகம்மது