திருநெல்வேலி

This entry is part 29 of 49 in the series 19991203_Issue

விக்கிரமாதித்யன்


 

    திருநெல்வேலி ரொம்ப அழகான ஊர். (எங்கள் ஊர் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே அழகான ஊர்). ஊருக்கு மத்தியில் பெரிய கோவில். நெல்லையப்பர் கோவில். நுழைந்ஹ்தவுடன் கண்ணில் படும் பெரிய மாக்கல் நந்தி. (இது வளர்ந்து மேல்கூரையை இடிக்கும்போது உலகம் அழிந்துவிடும் என்று சின்ன வயதில் கதை சொல்லியிருக்கிறார்கள்) சுவாமி சன்னதிமுன் இருக்கும் சப்தஸ்வரதூண்கள் எனப்படும் இசைத்தூண்கள். சுயம்புலிங்கம்.

     

    அம்மன் சன்னதிப் பக்கமாய்ப் பொற்றாமரைக்குளம். தேவார மண்டபம். சன்னதி உள்வந்தால், நின்ற கோலத்தில் காந்திமதியம்மன். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு அம்சமான கோவிலை நான் பார்த்ததேயில்லை.

     

    அம்மன் சன்னதியிலிருந்து கொஞ்சம் தள்ளிக் கீழ்ப்புறத்தில் நந்தவனம். மேல்புறத்தில் வசந்தமண்டபம். வசந்தோற்சவத்தில் பிரமாதமான ஒரு பானகம் கொடுப்பார்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த திருவிழா இது.

     

    என் சிறுவயது நினைவுகளும் அனுபவங்களும் சேர்ந்துதான் மறுபடியும் மறுபடியும் கோவில் சார்ந்த விஷயங்களாகக் கவிதைகளில் வெளிப்பாடு கொள்கின்றன என்று கருதுகிறேன். திருநெல்வேலி இல்லாமல், வேறு ஏதாவது ஊரில் வளர்ந்திருந்தால் கோவில் இந்த அளவுக்கு இடம் பிடித்திருக்குமா கவிதையில்.

     

    தம்ரவருணி ஓர் அருமையான ஆறு. அது ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் அழகோடு விளங்கும். பாபவிநாசம் மலைமேல் திமிறிக் கொண்டு பாய்ந்து வரும். முட்டி மோதிக்கொண்டு சமவெளியில் இறங்கும். கோயிலையொட்டிய படித்துறைப்பக்கம், பாறைகளுக்கு மத்தியில் புகுந்து புறப்படுகையில், சுழித்துக் கொண்டு ஓடும். விக்ரமசிங்கபுரத்தில் பார்த்தால் அமைதியாக இருக்கும். அம்பாசமுத்திரம் ரயில் பாலத்துக்குக் கீழ் வேகமாய் இழுத்துக் கொண்டு போகும். கல்லிடைக்குறிச்சியில் மெதுவாய் நடக்கும். சேரன் மாதேவியில் பார்த்தால் வேறே மாதிரித் தெரியும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரிப் பக்கம் தேர் போலப் போகும்; தாம்ரவருணியின் எல்லாச் சாயல்களும் எனக்குப் பிடிக்கும்.

     

    திருநெல்வேலி டவுனில் அது ஊரை விட்டுத் தள்ளிதான் ஓடுகிறது. (யோசித்துப் பார்த்தால் பாப விநாசத்தை விட்டல். ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி ஜங்ஷன் சிந்துபூந்துறை, சிக்க நரசய்யன் கிராமம் தவிர எல்லா இடங்களிலுமே தாமிரவருணி எட்டித்தான் இருக்கிறது போல.. ஊருக்குள் இருக்கலாமோ ஆறு. அப்படியிருந்தால் அதுக்கு என்ன அழகு இருக்கும் துப்புரவாய்த்தான் இருக்குமா) குறுக்குத்துறை என்று சொல்வோம் பக்கத்து படித்துறையை. தாம்ரவருணி இங்கே இரு தனி அழகில் இருக்கும். கீழ்புறத்தில் சித்திரங்கள் போலப் பனைமர பின்புலத்தில் வயல்வெளிகள். மேற்புறத்தில் ‘சிக்கிலிங் ‘ கிராமத்து வீடுகள், வடபுறம் ரயில்பாலம். படித்துறையையொட்டி முருகன் கோவில். (திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது) ஏகமாய் விரிந்துகிடக்கும் மணல் பரப்பு. சிறிய பாறைகளினூடே செல்லும் நதி.

     

    ஆற்றுக்குப் போகிற பாதையே நன்றாக இருக்கும். இரண்டு பக்கமும் பருத்து வளர்ந்த மருத மரங்கள்(எங்கள் ஜில்லாவில்தான் மருதமரங்கள் நிறையப் பார்க்கமுடியும். திருநெல்வேலியைத் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துவந்த பிற்காலப் பாண்டியர் காலத்தின் மிச்சமோ) லெவல் கிராஸிங் தாண்டியதும் இசக்கியம்மன் கோவில். சூழ வயல்கள். மாந்தோப்பு வழியே புகுந்தால் படித்துறை.

     

    என் கவிதைகளில் நதி நிறைய வரும். பால்யகாலத்தில் படிந்த தாமிரவருணியின் பாதிப்புத்தான் என்று இப்போது தோன்றுகிறது. ‘விரும்புவது நதிக்கரை நாகரீகம். விதிக்கப்பட்டது நெரிசல் மிக்க நகரம் ‘ என்ற என்னுடைய வரிகளை இந்த பின்புலத்தில்தான் பார்க்கவேண்டும்.

     

    தெப்பக்குளமும் நயினார்குளமும் ஊருக்குள்ளேயே இருக்கின்றன. முப்பது வருஷத்துக்குமுன் நயினார்குளம் நன்றாகவே இருந்தது. இப்போது ரொம்ப மாறிவிட்டது. குளத்துக்குப் பக்கத்தில் உள்ள வயல்வெளிகளையெல்லாம் ‘நயினார்குளத்துப் பற்று ‘ என்று சொல்வார்கள். ஒருகாலத்தில் அதில் ஸ்டாம் போட் விட்டிருந்தார்கள். கோடைக்காலத்தில் தண்ணிர் இல்லாத சமயம் வெள்ளரி போடுவார்கள்.

     

    தெப்பக்குளத்தில் வருஷம் பூராவும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். பெரும்பகுதி நான் தெப்பக்குளத்திலோ நயினார் குளத்திலோதான் குளித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் ஆறுதான் மனசில் நிற்கிறது. இது எப்படியெண்று தெரியவில்லை.

     
     

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< தமிழ் இனி 2000மார்ட்டின் எபனேசர் கவிதைகள் >>

விக்கிரமாதித்யன்

விக்கிரமாதித்யன்