அரங்காடல் – 14 (2007)

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

குரு அரவிந்தன்


கிரேக்க நாட்டில்தான் முதன்முதலாக நாடகக்கலை வளர்ந்ததாகப் பழைய இலக்கியங்களில் இருந்தும், வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகளில் இருந்தும் தெரியவருகிறது. கூத்து, நாடகம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளிக்கும் பொதுவிடத்தை முன்னாளில் அம்பலம் என்று அழைப்பர். அதுவே பின்னாளில் அரங்கமாயிற்று. அந்த அரங்கத்தில் ஆடுவதால், இந்த நிகழ்ச்சிக்கு அரங்காடல் என்ற பெயரை மனவெளி கலையாற்றுக் குழுவினர் சூடியிருக்கலாம். வருடாவருடம் நடக்கும் வித்தியாசமான இந்த அரங்காடல் நிகழ்ச்சியை பதின்னான்காவது தடவையாக மனவெளி கலையாற்றுக் குழுவினர், நாடகரசிகர்களுக்காக அரங்கேற்றிக்காட்டினர். யூலை மாதம் எட்டாம் திகதி 2007, ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணிக்கும், மாலை ஆறுமணிக்குமாக இரண்டு காட்சிகள் மார்க்கம் தியேட்டர் அரங்கில் நடைபெற்றன. அருமையான இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்ட நாடகரசிகர்கள், தவறவிட்டதற்காக நிச்சயமாக பின்பு வருத்தப்பட்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.
எங்கவூரிலே வி.வி.வைரமுத்துவின் காத்தவராயன் கூத்தை, குறிப்பாக மயானகாண்டத்தை சின்னவயதிலே விடியவிடியப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதன்பின் பள்ளிப்பருவத்தில் காங்கேயன்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கலையரசு ஏ.ரி.பொன்னுத்துரை, தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கதிரேசம்பிள்ளைமாஸ்டர் ஆகியோரின் நாடகங்களை கண்டு வியந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மேடையில் தோன்றி நடித்தவர்களைப் பாராட்டத் தோன்றியதே தவிர அவர்களது வெற்றிக்குப் பின்னால் ஒருகூட்டமே இயங்கிக் கொண்டிருந்ததையோ, திரைமறைவில் நின்று, நாடகத்தின் வெற்றிக்குப் பாடுபட்ட அவர்களையும் பாராட்டவேண்டும் என்றோ நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. தாசீசியஸ்சின் நாடகங்கள் வெளிவந்தபோதுதான் கதை, நெறியாள்கை, அரங்கஅமைப்பு, குறிப்பாக ஒலி, ஒளி அமைப்பு, நடிகர்களின் தேர்வு, பொருளாதார வசதி போன்ற பல காரணிகள் ஒரு நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாய் அமைகின்றன என்பதை உணரமுடிந்தது. மிகக்குறைந்த வசதிகளோடு நடேஸ்வராக்கல்லூரி மைதானத்தில் அன்று பார்த்த மயானகாண்டத்தையும், நவீனவசதிகளோடு கூடிய, குளிரூட்டிய சொகுசு இருக்கைகள் உள்ள மார்க்கம் தியேட்டரில் நடந்த அரங்காடலையும் என் மனம் ஏனோ அந்தநிமிடம் ஒப்பிட்டுப்பார்த்தது. காலத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்ட நவீன, தொழில்நுட்ப மாற்றங்களும், நாடகத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாய் அமைந்தன என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ளமுடிந்தது. யாரும் யாருக்கும், எந்தவிதத்திலும் சோடை போகவில்லை என்பதையும் என்னால் உணரமுடிந்தது. நாங்கள் புகலிடம்தேடி வந்தபோது, எம்மவர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த இந்த நாடகக்கலை மெல்ல அழிந்து விடுமோ என்ற பயம் எல்லோர் மனதிலும் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இந்த நாடகக்கலை, இந்த மண்ணில் ஒருபோதும் அழியாது என்பதை அரங்காடல் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் நிச்சயமாகப் தெட்டத்தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். காவியம் செய்வோம், ஓவியம் செய்வோம், நல்ல கலை வளர்ப்போம் என்றெல்லாம் புதுமைக்கவி பாரதி கண்டகனவுகள் இந்த மண்ணில், இளைய தலைமுறையினரால் நினைவாக்கப் படுவதைப்பார்க்கும் போது, புகலிடம் தேடிவந்த தமிழர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
நாங்கள் மார்க்கம் தியேட்டருக்குச் சென்றபோது, அரங்கவாசலில் நடிகர் கதிர் துரைசிங்கம் சிரித்த முகத்தோடு; நின்று, எல்லோரையும் அன்போடு வரவேற்றார். நிகழ்ச்சி ஆரம்பமானதும், எழுத்தாளரும், சமூகசேவகருமான க.நவம் மேடையில் தோன்றி சிறந்தமுறையில் நிகழ்ச்சிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைதியான, கணீரென்ற குரல் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்ல, ஆரம்பத்திலேயே எல்லோரையும் தனது பேச்சு வன்மையால் கட்டிப்போட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
இப்பொழுதும் எப்பொழுதும்: என்ற குறியீட்டு நாடகம் முதலில் அரங்கேறியது. குறியீடுகளின் பலம், பலவீனம் இரண்டுமே அவற்றை நோக்குபவர்கள், தத்தமது பட்டறிவுக்கும் அறிதலுக்கும் ஏற்ப, அவற்றை வௌ;வேறு விதமாக புரிந்து கொள்வதுதான் என்ற விளக்கத்தோடு பார்வையாளர்களின் முடிவிற்கே விடப்பட்டது. ஹரல்ட் பின்றரின் மூலக்கதை பிரதியாக்கம் செய்யப்பட்டு, துஷி ஞானப்பிரகாசகத்தின் நெறியாள்கையில், நீரா சிற்சபைஈசனின் உதவியோடு இந்த நாடகம் அரங்காடலில் மேடையேற்றப்பட்டது. முல்லையூர் கே.பாஸ்கரன், கீர்த்தனன் திவ்வியராஜன், கஜஜெபன் பரராசசேகரம் ஆகியோரின் உதவியோடு சிறப்பாக இசையமைத்திருந்தார். சிவம் இந்த நிகழ்ச்சிக்கு ஒளி அமைப்புச் செய்திருந்தார். கிங்ஸ்லி செபஸ்ரியாம்பிள்ளை, சேகர் தம்பிராஜா, துவாரகா முனீஸ்வரராஜா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். வளர்ந்துவரும் நடனதாரகை துவாரகாவின் நடனநிகழ்ச்சியைப் பலதடவைகள் பார்த்து ரசித்திருக்கிறேன். நடிப்புத்துறையிலும் அவருக்குச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பது, அவரது அன்றைய நடிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நிறங்களின் நிஜங்கள்: – பச்சை என்றால் சம்மதம், சிகப்பென்றால் கிட்ட நெருங்காதே, மஞ்சள் என்றால் புனிதம், வெள்ளை என்றால் துக்கம், சமாதானம் கறுப்பென்றால் எதிர்ப்பு இப்படித்தான் நாங்கள் இதுவரை நிறங்களைப் பற்றி நினைத்திருந்தோம். நிறங்கள் வெறும் நிறங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தம் நிறைந்தவையும்கூட என்று அரங்காடல் மேடையில் மங்கியதோர் விளக்கினிலே, ரெட்ணம் சசிதரனின் இசைத்தேர்வில் அன்று நிரூபித்துக் காட்டினார் ஆனந்தி சசிதரன். ஆடைத்தேர்வும் ஒளியமைப்பும் நிறையவே ரசிகர்களைக் கவர்திழுத்தன. சீனநடனம் போன்ற பல்வேறு கலாச்சார விழுமியங்களில் இருந்தும் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நடனமாக்கியிருந்தார்கள். இந்த நடனத்தில் தர்ஷினி சிவதாசன், எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன், சௌமியா தயாளன், கஜேந்தினி ஆதவன், அனுசியா சயந்தன், தீபிகா ஸ்ரீதரன், மிதுனா நாகநாதன், சோபிகா நாகேஸ்வரன், ஜானுகா ஸ்ரீதரன், நிவேக்கா ஸ்ரீதரன், கௌரி நகுலேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஒளியமைப்பை சிவம் பொறுப்பேற்றிருந்தார். எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன் இருவரும் கே. எஸ். பாலச்சந்திரனின், பாரதியாரின் கயிறு என்ற நாட்டிய நாடகத்திலும் மிகவும் சிறப்பாகச் செய்திருந்ததை அப்போது என்னால் நினைவுகூரமுடிந்தது.

சாகாத சரித்திரங்கள்: – தாயகக் கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகளைத் தொகுப்பாக்கி அரங்காடல் மேடையிலே, கவிநாயகர் வி. கந்தவனம், வயிரமுத்து திவ்வியராஜன், கணபதி ரவீந்திரன், ராஜ்மீரா இராசையா, கந்தையா ராஜன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் ஒன்று சேர்ந்து அந்தக் கவிதையை, மேடையில் வரையாத ஓவியமாக்கியிருந்தார்கள். உலகிலே நடக்கும் அடக்குமுறைகள், அட்டூழியங்கள், கொலைகள் போன்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தாயகக் கவிஞர் சி. சிவசேகரத்தின் சிலகவிதைவரிகள் சித்திரமாக்கப்பட்டு, கவிநாயகர். வி. கந்தவனத்தின் நெறியாள்கையில், சிவத்தின் ஒளியமைப்போடு மேடையேற்றப்பட்ட இந்தப் புதுமையான முயற்சியைக் கட்டாயம் பாராட்டவேண்டும். இசைக்கு முல்லையூர் கே. பாஸ்கரனும், வைரமுத்து திவ்வியராஜனும் பொறுப்பாக இருந்தனர். சிவம் ஒளி அமைப்புச் செய்திருந்தார்.

இரண்டுக்கும் நடுவே : மலரப்போகும் மெட்டுக்களுக்காய் இதழ்கள் இரையாகலாம், இதழ்கள் உயிர் தாங்குவதற்கு மலரும் மொட்டுக்கள் இரையானால்..? என்ற கேள்வியோடு நாடகம் தொடங்குகிறது. சிவமணியால் பிரதியாக்கம் செய்யப்பட்ட கருப்பொருளை, மிகவும் கவனமாக, எந்த ஒரு தொய்வும் இல்லாமல் இளையபாரதி நெறியாள்கை செய்திருக்கின்றார். இந்த நாடகத்தில் சாந்தா சோமஸ்கந்தர், சுமுதினி சக்திவடிவேல், ரெட்ணம் சசிதரன், வேணுஷா கலாதரன், சுஜீபன் கலாநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். எல்லா நடிகர்களும் தமது பாத்திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்தார்கள். குறிப்பாக அப்பம்மாவாக நடித்த, அவ்வப்போது எனக்கருகே இருந்த சில பார்வையாளர்களைக் கண் கலங்கவைத்த சாந்தாக்காவும், மிகவும்திறமையாக நெறியாள்கை செய்த இளையபாரதியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். முல்லையூர் கே. பாஸ்கரன் இசை அமைக்க, துமிந்தன் சிவா ஒளி அமைப்புச் செய்திருந்தார்.

ஆரி ஓம் நம : புராந்தகனின் நாடகம் என்றாலே பொதுவாக அதற்கு ஒரு தனித்துவம் இருக்கும். இயூஜின் அயனஸ்கோவின் மூலக்கதையை, பென்னேஸ்வரனின் தழுவலில் புராந்தகன் நெறியாள்கை செய்து, மேடையேற்றியிருந்தார். நினைவூட்டுகை அனுஜா ஜெயந்தன், இசை வயிரமுத்து திவ்வியராஜன், முகர்சிங் ச.சுரேந்தர். அரங்கில், குரும்பசிட்டி இ.இராசரத்தினம், விமலேஸ்வரி விஸ்வலிங்கம், ஷாளினி சண்முகநாதன் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். நடிப்பதற்கென்றே பிறந்தவர் இராசரத்தினம், எனவே அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. அடுத்து தனது நடிப்பால் மேடையில் எல்லோரையும் கவர்ந்தவர் சாளினி சண்முகநாதன். அவரது நடிப்புத் திறமையை முதன்முதலாக அரங்காடல் மேடையில் பாக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அலட்டிக் கொள்ளாத பக்குவமான நடிப்பு. நடிப்புத்துறையில் நல்லதொரு எதிர்காலம் அவருக்குகாகக் காத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்த்துக்கள்.

நாடக ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த மனவெளி கலையாற்றுக்குழுவின் இந்த அரங்காடல் முயற்சிக்கும், அவர்களுக்குப் பக்கப்பலமாக நின்று, எல்லா வகையிலும் பாடுபட்டவர்களுக்கும் கனடிய நாடக ரசிகர்களின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்கள். சிகரத்தை நோக்கிச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையோடு, மனம்தளராது உங்கள் முயற்சிகள் மேலும் தொடர, எங்கள் வாழ்த்துக்கள்!

(குரு அரவிந்தன் – கனடா)


kuruaravinthan@hotmail.com

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்