பொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

புதியமாதவி


எழுதுங்கள்

எழுதுகிறேன்

எழுதுவோம்

என்று எழுதிக்கொண்டிருப்பவர்..

சிற்றிதழ்களின் பக்கங்களுக்கு மிகவும் அறிமுகமானவர்.

எப்படி இவ்வளவு எழுத முடியும் என்று என் போன்றவர்கள் வியப்புடன் பார்க்கும்

பக்கங்களுக்குச் சொந்தக்காரர். கவிஞர். பொன்.குமார்.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் இவர் எழுத்துகள்.

புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு ‘கிடைத்தது ‘ என்று அஞ்சலட்டை கூட எழுதுவதற்கு

எழுதுகோல் திறக்காத மனிதர்களுக்கு நடுவில் இவர் ஆற்றும் இந்தப் பணி

போற்றுதலுக்குரியதுதான்.

அண்மையில் வெளிவந்திருக்கும் இவருடைய ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘

15 ஹைக்கூ கவிதை நூல்களுக்கு இவர் அவ்வப்போது எழுதிய விமர்சனங்களின்

தொகுப்பு. விமர்சனங்களுக்கு … விமர்சனம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஏனேனில் விமர்சனம் குறிப்பிட்ட ஒருவரின் கருத்து. பார்வை. அந்த விமர்சனங்களை

விமர்சிக்க வேண்டும் எனில் முதலில் விமர்சிக்கப்பட்ட நூல்களை நானும் குறைந்தது

வாசித்திருக்கவாவது வேண்டும். அடுத்து அந்தக் குறிப்பிட்ட நூல்களுக்கு மற்றவர்கள்

எழுதிய விமர்சனங்கள், நூல் ஆசிரியர்களின் மற்ற படைப்புகளுடன் ஓரளவு

பரிட்சயம் எல்லாம் இருக்க வேண்டும். இப்படி எதுவும் பொன்.குமார் அவர்கள்

எழுதியிருக்கும் 15 நூல்களுடனும் நூலாசிரியர்களுடனும் எனக்கில்லாத நிலையில்

பொன்.குமார் அவர்களின் ஹைக்கூ அனுபவங்கள் என்ற 15 விமர்சனக் கட்டுரைகளையும்

விமர்சிக்க இயலாதுதான்.

தமிழ் இலக்கிய உலகில் நவினத்துவம், பின்நவினத்துவம் எல்லாம் பேசிக்கொண்டிருக்கும்

காலக்கட்டத்திலும் மேலை நாடுகளில் விமர்சனம் ஒரு இலக்கியப் பிரிவாகவே வளர்ச்சி

அடைந்திருப்பது போல் இங்கு விமர்சனம் வளரவில்லை. இன்றும் படைப்பாளிகளே

விமர்சகர்களாகவும் இருக்கும் நிலையே தொடர்கிறது.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஹைக்கூ குறித்த புரிதல்களை, ஒரு பரவலான

அறிமுகத்தை ஏற்படுத்துவது இந்த நூலின் தனிச்சிறப்பு.

>ஹைக்கூ எழுதுவது அவ்வளவு சுலபமல்ல- எழுத்தாளர் சுஜாதா

>நீள்கவிதை எழுதுபவனைவிட ஹைக்கூ எழுதுபவனே புத்திசாலி.ஹைக்கூ ஒரு

மின்னல், தோன்றும்போதே பிடித்துக்கொள்ள வேண்டும்..- கவிஞாயிறு தாராபாரதி

கவிவிருது 2002 விழாவில் கவிக்கோ அப்துல்ரகுமான்

>புரிதல் அரிதானவர்களுக்கு ஹைக்கூ ஒரு புதிர். புரிந்தவர்களுக்குக் கிடைப்பதுவோ

புதையல் – நிர்மலா சுரேஷ்

>தமிழிலே நாம் வெண்பா, விருத்தம் என்று சொல்கிறொம். ஆங்கிலத்தில் சானட் என்று

சொல்கிறார்கள். இதுபோல ஒவ்வொரு மொழியிலும் ஏதாவது ஒரு சில வடிவ

வகைகள் இருக்கும். அதுபோலத்தான் ஜப்பானிய ஹைக்கூ வடிவமும். தமிழில்

எழுதுவதை ஹைக்கூ எனச் சொல்வதே தவறு என்பது என் கருத்து- கவிஞர்

மு.மேத்தா டிசம்பர் 2003 ‘நம்மொழி ‘ இதழில்

>ஹைக்கூ முதலடி ஐந்தசை, இரண்டாமடி ஏழசை, மீண்டும் மூன்றாமடி ஐந்தசை.

தமிழில் வடிவம் மட்டுமே பின்பற்றப்பட்டு கருத்துக்களை முன்வைத்தே எழுதப்படுகிறது.

ஜப்பானிய அளவுகோல் கொண்டே பார்ப்பதால்தான் கவிஞர் மு,மேத்தாவிற்கு தமிழ்

ஹைக்கூ சப்பையாகவே தெரிகிறது.-பொன்.குமார்

>ஹைக்கூவின் பிறப்பிட பிரச்சனைகள் அனுபவங்கள் வேறு. இங்கு இருப்பதோ வேறு

– கவிஞர் அம்சப்பிரியா

>A fallen flower

Returning to the branch

it was a butterfly

என்பது அராகிடா மோரிடேக்கின் ஹைக்கூ.

உதிர்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறதா

வண்ணத்துப்பூச்சி

இந்த உதிர்ந்த மலரே இன்று வரை பலருக்கு ஹைக்கூ எழுத மூலமாகவும்

ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. இவ்விழுந்த மலரிலிருந்தே

ஹைக்கூ எழுந்தது எனலாம்.

இப்படி இந்த அனுபவப் பகிர்வுகளின் ஊடாக ஹைக்கூ பற்றிய நிறையச் செய்திகள் வாசகர்களுக்கு

அள்ளித் தெளிக்கப்பட்டிருப்பது இந்த அனுபவப்பகிர்வுகளின் சிறப்பு.

சில ஹைக்கூ கவிதைகளுக்கு அதே கருத்தாக்கத்தில் மற்றவர்கள் எழுதியிருக்கும்

ஹைக்கூ கவிதைகளையும் எடுத்துக் காட்டி ஓர் ஒப்புமைப் பார்வையை முன்வைத்திருக்கிறார்.

பழைய குளம்

தவளை குதிக்க

நீரின் ஒலி

– பாஷோ எழுதிய ஹைக்கூ

தவளை

தண்ணீருக்குள் தாவ

தடுமாறியது நிலா

– இது ராசி பன்னீர்செல்வம் எழுதிய ஹைக்கூ

தவளை குதித்தது

தாமரை இலையில்

உருளும் நட்சத்திரங்கள்

– இது மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ

இப்படி தவளையில் செயலின் மூவரின் பார்வை எப்படி எல்லாம் ஹைக்கூ அனுபவங்களாக்கப்பட்டிருக்கின்றன

என்பதைச் சுவைப்படச் சொல்லிச்செல்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மங்காய் என்பது போல சில இடங்களில் தான் எழுதிய ஹைக்கூ கவிதைகளையும்

இடம் பார்த்து சேர்த்திருக்கிறார்.

மார்வாடிக் கடையில்

நிரம்பிக் கிடக்கிறது

தமிழரின் உழைப்பு

– பாரதி ஜிப்ரான்

மார்வாடிக் கடையில்

மூழ்கிக் கிடக்கிறது

ஏழை வாழ்வு

– என்ற பொன்.குமாரின் ஹைக்கூவை நினைவு படுத்தியது.

அதே நேரத்தில் சில ஹைக்கூவில் சொற்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அந்தச் சொல்லை

நீக்கிவிட்டு

இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஹைக்கூவின் பொருள் சிறக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுவதைப்

பாராட்டவேண்டும்.

ஆலயத்தினுள்

செல்ல மறுக்கும்

ஜாதிக்காற்று

– வானவனின் ஹைக்கூ

ஜாதிக்காற்று செல்ல மறுப்பதில்லையே. அனுமதி அல்லவா மறுக்கப்படுகிறது எனவே

ஆலயத்தில்

அனுமதிக்கப் படுவதில்லை

ஜாதிக்காற்று.

என்று மாற்றியமைத்திருக்க வேண்டும் என்று புதிதாக ஹைக்கூ எழுதுகிறார்.

ஆனால் அதுவே நிறைய இடங்களில் விபரீதமான விமர்சனமாகியிருக்கிறது.

நிறைய ஹைக்கூ கவிதைகளை வார்த்தைகளைச் சுருக்கி எழுதியிருக்கலாம் என்று இவர் விமர்சனம் செய்வதுடன்

நிற்காமல் இப்படிச் சுருக்கி இருக்க வேண்டும் என்று இவரே ஹைக்கூ பண்ணுவது நிச்சயமாக விமர்சனம் அல்ல.

பொன்.குமாரின் இந்த வகையான அறிவுரை கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

அளவுக்கு அதிகமானால் அந்தியும் அசிங்கமாகிவிடும் ‘ (பக் 8)

‘இந்தியாவின் இன்றியமையாத பண்புகளில் மிக முக்கியமானது வறுமை ‘ (பக் 47)

என்ற தவறானச் சொற்றோடர்கள் நீக்கப்படவேண்டும்.

‘ இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க ஹைக்கூ நூல்/ஹைக்கூ தொகுப்பு.. ஏதாவது விருதுக்கும்

வாய்ப்புண்டு.. ‘

விருதுகள் எப்போதும் ஒரு நூலின் தகுதியை/கவிஞனின் ஆளுமையைக் காட்டும் அளவுகோலாக

விமர்சிப்பது எந்தளவுக்குச் சரி என்பதை பொன்.குமார் அவர்கள் சிந்திக்க வேண்டும்.

‘ஹைக்கு என்பது அனுபவம், எழுதுவதும் ஓர் அனுபவம், வாசிப்பதும் ஓர் அனுபவம், பேசுவதும் ஓர் அனுபவம்,

விமர்சிப்பதும் ஓர் அனுபவம்.. ‘ என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொன்.குமாரின் ‘ஹைக்கூ

அனுபவங்களை ‘ வாசிப்பதும் வாசித்ததைப் பகிர்ந்து கொள்வதும் ஓர் இனிய அனுபவம்தான்.

ஹைக்கூ பற்றிய நிறைய வாசிப்புகள், புரிதல்கள் கொண்ட பொன்.குமார் ஹைக்கு குறித்த மிகச்சிறந்த

விமர்சனக் கட்டுரைகளைப் பிற்காலத்தில் எழுதக்கூடும். ஹைக்கூ இலக்கிய உலகில் விரல் விட்டு

என்ணக்கூடியவர்கள்தான்

இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெருகி வரும் ஹைக்கூ வெள்ளத்தில் தேர்ந்த விமர்சனத்தின்

இடம்

ஹைக்கூவின் இன்றைய மிகப்பெரிய தேவையாகவே இருக்கிறது.

துளித்துளியாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் சாரத்திலிருந்து சாறுப் பிழிந்து மிகச்சிறந்த ஹைக்கூ

ஆய்வுக் கட்டுரைகளைப்

பொன்.குமார் போன்றவர்கள் படைக்க வேண்டும். இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் சிறு சிறு தவறுகள் கூட

கொட்டைகள் நீக்கப்பட்ட

பழச்சாறாக அவருடைய விமர்சனக்கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே.

அட்டைப்படம் அருமை. சிறப்பாக வெளியிட்டிருக்கும் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகதார்க்கு வாழ்த்துகள்.

நூல்: ஹைக்கூ அனுபவங்கள்

பக் 96 விலை: ரூபார் 35/

ஆசிரியர்: கவிஞர் பொன்.குமார்

21/15 புது திருச்சிக்கிளை வடக்குத் தெரு

லைன்மேடு, சேலம் 636 006

தமிழ்நாடு

e-mail: ponkumar_slm6@yahoo.co.in

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை