மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி

This entry is part 27 of 30 in the series 20100425_Issue

கேதார் சோமன்


இந்த போரில் அவுரங்கசீப்பின் ராணுவத்தில் 5,00,000 பேர்கள் இருந்திருக்கிறார்கள். இதனை ஒப்பிடும்போது மராத்தா ராணுவத்தில் 1,50,000 இருந்திருக்கிறார்கள். முகலாயர் ராணுவத்தில் காலாட்படை, துப்பாக்கிப்படை, குதிரைப்படை ஆகியவையோடு, முகலாயரது பெரும் கஜானாவில் இருந்த செல்வமும் இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இது எந்தவகையில் பார்த்தாலும் சமமானவர்களிடையே நடக்கும் போராக இல்லை.

அவுரங்கசீப்பின் முக்கியமான போர்த்தந்திரங்களானவை:-

தேவைக்கு அதிகமான படையோடு வந்து எதிரியை நிலைகுலையச் செய்வது

இந்த முறை அவுரங்கசீப்பின் மற்ற போர்களில் வெகுவாக வெற்றி ஈட்டித்தந்திருக்கிறது. ஆகவே அதே முறையை மஹாராஷ்டிராவிலும் பயன்படுத்தினார். பல சந்தர்ப்பங்களில் தேவைக்கும் மிஞ்சிய மாபெரும் முகலாய படைகள் ஒரு நகரத்தையோ அல்லது ஒரு கோட்டையையோ கைப்பற்ற பணிக்கப்பட்டிருக்கின்றன.

கோட்டைகளை கைப்பற்ற துல்லியமாக திட்டமிடுதல்:-

மராத்தாக்களின் பாதுகாப்பு கவசமாக சஹ்யாத்ரி மலைகளில் இருந்த கோட்டைகளே முதுகெலும்பு போல இருந்தன என்பது அவுரங்கசீப்புக்கு தெரியும். ஆகவே அவரது கணக்கு, இந்த கோட்டைகளை கைப்பற்ற முற்றுகையிட்டு உள்ளே இருக்கும் மக்களை பட்டினி போட்டு இறுதியில் கோட்டையை சரணடைய வைத்தல்.

காலாட்படை, குதிரைப்படைகள் மூலமாக கத்திரி வியூகங்கள் அமைத்து எதிரியை இரு புறத்திலும் தாக்குவது.

ஏராளமான படைகளாக வரும் காலாட்படையும் குதிரைப்படையும் கத்திரி வியூகமும் மராத்தாக்களை ஏறத்தாழ தோல்வியடையவைத்தது என்பது உண்மை.

மராத்தாக்களுக்கு அவர்களது பக்கத்தில் ஒரே ஒரு பலம் இருந்தது. அது நிலத்தின் புவியியல். மராத்தாக்கள் இந்த பலத்தை கடைசி சொட்டுவரை பயன்படுத்தினார்கள். பருவநிலை, புவியியல் அமைப்பு இரண்டையும் கணக்கிலெடுத்துகொண்டு மராத்தாக்கள் தங்கள் திட்டங்களை வகுத்தார்கள்.

மராத்தாக்களின் போரியல் தந்திரங்களாவன:-

பாதுகாப்பு தந்திரம், தாக்கியழிக்கும் தந்திரமும் இணைந்த போரியல் முறை

27 வருட காலம் முழுவதும், மராத்தாக்கள் தாக்கியழிக்கும் முறையை நிறுத்தவே இல்லை. இது இரண்டு பலன்களை கொடுத்தது. மராத்தா ராணுவம் முகலாய ராணுவத்தை தாக்குகிறது என்ற செய்தி, முகலாயர்கள் மராத்தாக்களது நிலத்துக்குள் புகுந்து மராத்தாக்களை தாக்குகிறார்கள் என்பதற்கு இணையான செய்தியாக இருவரையும் ஒரே சமமான பலமுள்ளவர்களாக மனோதத்துவ ரீதியில் மராத்தாக்களை பலப்படுத்தியது. முகலாயர்களை பலவீனப்படுத்தியது. இரண்டாவது இந்த தாக்குதல்கள், முகலாயர்களின் உணவுப்பாதை, தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகள் மீது நடத்தப்படும் திடீர் தாக்குதல்களாக அமைந்து முகலாய ராணுவத்தை பலவீனப்படுத்தியது.

மராத்தா பாதுகாப்பின் முதுகெலும்பாக அமைந்த கோட்டைகள். சிவாஜியின் திட்டமிடுதல் காரணமாக, ஒவ்வொரு கோட்டைக்குள்ளுமேயே நல்ல தண்ணீர் கிடைக்கும் வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன. தண்ணீருக்காக கோட்டைக்கு வெளியே செல்லவேண்டிய தேவை இல்லை. இதனால், கோட்டைகள் வெகுகாலம் தாக்குப்பிடித்தன. சிவாஜி கட்டிய கோட்டைகளின் எண்ணிக்கை 300க்கும் மேல். இந்த ஏராளமான எண்ணிக்கை உள்ள கோட்டைகள் அவுரங்கசீப்புக்கும் மிகுந்த தலைவலியை கொடுத்தன.

கோட்டை பாதுகாப்பு:

மராத்தாக்களின் பக்கத்தில் இருந்த முக்கியமான பலம் அவர்களது கோட்டைகள். அவர்கள் கோட்டை போர்களில் மிகுந்த திறமைசாலிகளாக இருந்தார்கள். கோட்டைகள் மூலமாக அவர்களது போர்களில் இரண்டு பகுதிகள் இருந்தன.

முதலாவது பகுதி கோட்டைகளை இரண்டாக வகுத்தது. ஒன்று strategic fort எனப்படும் முக்கிய கோட்டைகள். நவீன போரியலில் strategic assets எனப்படும் முக்கிய போர் சொத்துக்கள். இவை எதிரியின் திட்டங்களையே மாற்றி அமைக்க வேண்டிய தேவையை உருவாக்குகின்றன. உதாரணமாக aircraft carrier என்ற விமானம் தாங்கி கப்பல்கள். இரண்டாவது வகை சொத்துக்கள் tactical assets எனப்படும் போரின் அன்றாட சொத்துக்கள். டாங்கிகள், பெரும் துப்பாக்கிகள். இவைகள் ஒவ்வொரு போருக்கும் முக்கியமானவை. ஆனால், எதிரி திட்டங்களை மாற்ற தேவை இல்லை. இதே போல முக்கிய போர் சொத்துக்களாக இருந்தவை ராய்காட் கோட்டை, ஜஞ்சீரா கோட்டை, பன்ஹாலா கோட்டை, தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டை ஆகியவை. இதே வேளையில் சிறிய ஆனால், டாக்டிகல் கோட்டைகளாக விஷால்காட் கோட்டை, சிங்ஹாட் கோட்டை, ராஜ்காட் கோட்டை ஆகியவை.

மராத்தாக்களின் தலைநகராக இருந்த ராய்காட் கோட்டை மாபெரும் கோட்டை. இது 11 ஆம் நூற்றாண்டில் மௌரிய வம்சத்தினரால் கட்டப்பட்ட கோட்டை. இது பல பேரரசுகளின் அச்சாக இருந்தது. இதன் உச்சிகள் தரையிலிருந்து 1200 அடி உயரமாக இருக்கின்றன. இதற்குள் வளமையாக நன்னீர் கிடைக்கிறது. ராய்காட் கோட்டையும் செஞ்சிக்கோட்டை போலவே பலவருடங்கள் எந்த வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்படக்கூடியது. சஹ்யாத்ரியையோ அல்லது கொங்கண் பிரதேசத்தையோ தன்னுடையது என்று சொலல்வேண்டுமென்றால் அவர்கள் ராய்காட் கோட்டையை கைப்பற்றியே ஆகவேண்டும்.

ராய்காட் கோட்டையை கைப்பற்றுவது மிகவும் கடினமானது என்பதை அவுரங்கசீப் அறிந்திருந்தார். ஆகவே உள்ளே ஒரு துரோகியை வைத்துத்தான் அதனை கைப்பற்ற முடிந்தது. இந்த துரோகியின் பெயர் சூர்யாஜி பிஸால். மராத்தாக்களிடம் ராய்காட் இருந்திருந்தால், அவுரங்கசீப்பின் வேலை இன்னும் கடினமாக இருந்திருக்கும். ராய்காட் கோட்டையை போரின் ஆரம்பத்திலேயே முகலாயர்களிடம் இழந்தார்கள் மராத்தாக்கள். அதனை போரின் இறுதியில்தான் மீண்டும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், மற்ற இரண்டு கோட்டைகளின் பாதுகாப்பையும் வெகு திறமையாக கையாண்டார்கள். பன்ஹாலா கோட்டையும், தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையும் இந்த இரண்டு கோட்டைகள். பன்ஹாலா கோட்டை பல தளவாட பாதைகள் இணையும் இடத்தில் இருக்கின்றது. ஆகவே இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கோட்டையை கைப்பற்றாமல் முகலாயர்களது தளவாடப்பாதைகளை உறுதிப்படுத்தமுடியாது. பன்ஹாலா கோட்டையை வெகுகாலம் பாதுகாத்தனர். அவர்கள் அதனை இழந்தபோது அதனை மீண்டும் கைப்பற்ற விரைவிலேயே முனைந்தனர்.

கோட்டை போரின் இரண்டாவது பகுதி காலாட்படை நகர்வை பருவநிலைக்கு ஏற்ப அமைத்தல். வருட முழுவதும் கோட்டைகள் பலம் வாய்ந்த சொத்தாக இருக்கும். ஆனால், மழைக்காலத்தில் இது நஷ்டக்கணக்காக இருக்கும். ஏனெனில் உணவு மற்றும் தள்வாடங்களை கோட்டைக்குள் மேலே ஏற்றுவது கடினமான வேலை. அதே வேளையில், மழைக்காலம் கடுமையாக இருப்பதால், எந்த ராணுவ நடவடிக்கையையும் எடுக்கமுடியாது. எனவே மராத்தாக்கள், பருவமழைக்காலம் வரும் வரைக்கும் கோட்டையை காப்பாற்ற போர் புரிந்துவிட்டு, மழைக்காலம் வந்ததும் கோட்டையை சரணடைந்துவிட்டு நகர்ந்தனர். சரணடைவதற்கு முன்னால், கோட்டைக்குள் இருந்த அனைத்து உணவுகளையும் எரித்துவிட்டனர். இதனால், விகிதாச்சாரத்தில் முகலாயருக்கு இழப்பை அதிகரித்தனர். பெரும்பாலான சமயங்களில் கோட்டையை வெறுமையாக சரணாக கொடுத்துவிட்டு, முகலாயர்கள் அந்த கோட்டைக்குள் உணவையும் தண்ணீரையும் நிரப்பியதும் அந்த கோட்டைகளை கைப்பற்றினர். இவை முகலாயர்களை மன ரீதியில் தோல்வியடையச் செய்தன.

முகலாய ராணுவம் வெகுதூரத்தில் இருக்கும்போதே அருகாமை பிரதேசங்களில் முனைந்து தாக்குதல்களை மராத்தாக்கள் நடத்தினார்கள். முகலாய ராணுவத்தை அவர்கள் திறந்த களத்தில் நேருக்கு நேர் சந்தித்து போர்புரிவதை தவிர்த்தார்கள். நிலைமை மோசமாகவானால், உடனே கலைந்து பிரிந்து தங்களது ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் பின்னொரு நாள் உபயோகித்துக்கொள்ள தப்பினார்கள்.

மஹாராஷ்டிரா நிலத்தை பலவேறு வடக்கு தெற்கு பிரிவுகளாக பீமா ஆறு, கிருஷ்ணா, கோதாவரி, சஹ்யாத்ரி மலைகள் ஆகியவை பிரிக்கின்றன. முகலாய ராணுவம் ஒரு பிரிவில் தெற்கு ரீதியாக பயணத்தால், மராத்தாக்கள் வடக்கு ரீதியாக அதே நிலத்தில் புகுந்து முகலாய ராணுவத்தின் மீது தாக்குதலை தொடுத்தனர். இந்த நிலைமை தொடர்ந்து மாறி, இறுதியில் நேருக்கு நேராக முகலாய ராணுவத்தை எதிர்கொண்டனர்.

புகழ்பெற்ற வரலாற்றாய்வாளரான ஜாடுநாத் சர்கார் இந்த போரை பற்றிய மூல வாக்கியத்தை எழுதினார் என்று சொல்லலாம். “அவுரங்கசீப் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றி பெற்றார். ஆனால் இறுதியில் போரில் தோல்வி அடைந்தார். போர் நீண்டு செல்ல செல்ல, ஆயுதங்களின் போராக இருந்த போர், மன உறுதியின் போராக மாறியது. அவரங்கசீப்பால் மராத்தாக்களின் மன உறுதியை இறுதிவரை உடைக்கவே முடியவில்லை”

சமச்சீர் இல்லாத போருக்கான அருமையான உதாரணத்தை மராத்தாக்கள் உருவாக்கினார்கள் எனச் சொல்லலாம். சர்க்கார் மேலே கூறுவதின் உள்ளே எவ்வாறு சமச்சீரற்ற போரில் கீழ் நிலையிலுள்ளவர் ஜெயிக்க முடியும் என்பதன் உண்மையை மறைத்திருக்கிறது. பெரும்பாலான சண்டைகளில் தோல்வி அடைந்து போரில் வெற்றிபெற முடியுமா? எப்படி?

இதனை Simpson’s paradox சிம்ப்ஸனின் முரண்பாடு என்று சொல்வார்கள். இதன் படி, ஏராளமான சிறிய விளைவுகளின் தொடர்ச்சியாக ஒரு விளைவை எதிர்பார்க்கலாம். ஆனால், மொத்த விளைவு, இந்த சிறிய விளைவுகளின் கூட்டுக்கு எதிராக இருக்கும்.

உதாரணமாக அ என்னும் பிரிவு 100 போர் வீரர்களையும் ஆ என்னும் பிரிவு 40 போர்வீரர்களையும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இரண்டுக்கும் இடையேயான ஒவ்வொரு சண்டையும் கீழ்க்கண்டது நடக்கிறது என்று கொள்வோம்

அ தோற்றால், அது 80 சதவீத போர்வீரர்களை இழக்கிறது
ஆ தோற்றால், அது 10 சதவீத போர்வீரர்களை இழக்கிறது
அ வெற்றி பெற்றால், அது 50 சதவீத போர்வீரர்களை இழக்கிறது
ஆ வெற்றி பெற்றால் அது 10 சதவீத போர் வீரர்களை இழக்கிறது

மேலே கண்டபடி, அ வின் இழப்பு வீதம், ஆ வின் இழப்பு வீதத்தை விட அதிகம். ஆகவே அ பிரிவு பாதிக்கு மேற்பட்ட சண்டைகளில் வெற்றி பெற்றாலும், அவர்கள் தங்களது போர் வீரர்களை ஆ வை விட அதிகமாக இழப்பார்கள். இறுதியில் நடக்கும் போர்களில் அ பிரிவினர் பகுதியில் இருக்கும் போர் வீரர்களின் எண்ணிக்கை ஆ பிரிவின் போர் வீரர்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைந்து காணப்படும். ஆ பிரிவு செய்யவேண்டியதெல்லாம். மன உறுதியை தக்கவைத்துக்கொண்டு இழப்பை கட்டுப்படுத்துவதே.

இதையே புராதன இந்திய வரலாற்றில் பீஷ்ம பர்வத்தில் பீஷ்ம பிதாமகர் யுதிஷ்டிரருக்கு சொல்கிறார். “ராணுவத்தின் பலம் அதன் எண்ணிக்கையில் இல்லை”

(தொடரும்)

Series Navigation<< ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும் >>

கேதார் சோமன்

கேதார் சோமன்