பேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

தமிழாக்கம்: புதுவை ஞானம்


( After PAT’S Birthday. by Kevin Tillman.)

நவம்பர், 6, ‘பேட்’ பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் தேர்தல் வருகிறது. இராணுவத்தில் சேருமுன்னர் நானும் பேட்டும் பேசிக்கொண்டிருந்தது பற்றி நினைக்க வைத்தது. ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து இடுவதில் உள்ள ஆபத்துகள் பற்றி அவன் பேசினான். நாம் ஒப்புக் கொண்டுவிட்டால் பின்னர் அமெரிக்கத் தலைமை மற்றும் அமெரிக்க மக்கள் தயவில் தான் கீழ்ப்படிந்து வாழ்ந்தாக வேண்டும். நமது விருப்பத்துக்கு எதிரான திசை வழியில் துரத்தப் படுவோம். ஒரு சிப்பாயாகப் போராடும் காலத்தில் நமக்கென்று ஒரு குரல் இருக்கப் போவதில்லை இராணுவத்திலிருந்து வெளியேறும் வரை – என்பது பற்றியெல்லாம் பேசினான்.

எங்களது குரலை ஒப்படைத்த பின்னர் எவ்வளவோ நடந்து விட்டது. :

எப்படியோ ஒரு தேசத்தின் மீது படையெடுக்க அனுப்பப் பட்டோம்.

ஏனெனில்;
அந்தத் தேசம்
அமெரிக்க மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்தது
அல்லது
உலக மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்தது
அல்லது
பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது
அல்லது
செப்டம்பர், 11 தாக்குதலில் உடந்தையாக இருந்தது
அல்லது
நைஜரிலிருந்து அணு ஆயுதம் தயாரிக்கவல்ல யுரேனியத்தை வரவழைத்தது
அல்லது
நடமாடும் ஆயுத ஆய்வுக் கூடங்கள் WMD வைத்திருந்தது
அல்லது
அந்தத் தேசத்தை விடுவிக்கும் தேவை இருந்தது
அல்லது
ஜனநாயகத்தை நிறுவ வேண்டிய தேவை இருந்தது
அல்லது
ஒரு எழுச்சியை ஒடுக்க வேண்டி இருந்தது
அல்லது
ஒரு உள்நாட்டு யுத்தத்தை நிறுத்த வேண்டி இருந்தது
நாமே அதை உருவாக்கி இருந்த போதிலும் கூட.

இப்படியான எதாவது ஒரு சாக்கு போக்கு இருக்கவே இருக்கிறது.

எப்படியோ
தன்னிடம் இல்லாத ஒன்றைத் தூக்கிப் பிடிப்பதிலும்,
இருப்பதனைத்தையும் கண்டிப்பதிலும் ஈடுபடும்
ஒரு நாடு என அமெரிக்கா பெயரெடுத்து விட்டது.

எப்படியோ
தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தலைவர்கள்
சர்வதேச சட்டங்களுக்கும் மானுடத்துக்கும்
குழி பறித்திருக்கின்றனர்
இரகசிய சிறைக்கூடங்களை உலகெங்கிலும் நிறுவியதாலும்
இரகசியமாக மக்களைக் கடத்தியதாலும்
இரகசியமாகக் கடத்தப்பட்டவர்களை
காலவரையறையின்றி அடைத்து வைத்ததாலும்
இரசியமாகக்கூட அவர்கள் மீது குற்றம் ஏதும் சுமத்தாததாலும்
இரசியமாக அவர்களைச் சித்திரவதைக்கு ஆளாக்கியதாலும்.
எப்படியோ
இந்த வெளிப்படையான சித்திரவதைக் கொள்கை
இராணுவத்தில் உள்ள சில வீணர்கள்(Bad Apples) செய்த தவறு என்றாகிவிட்டது.

எப்படியோ உள்நாட்டுக்குள்
சிப்பாய்களுக்கு ஆதரவு என்பது
ஐந்து வயது மழலைப் பள்ளிக் குழந்தைகளைக்கொண்டு
வண்ண மெழுகுச் சித்திரங்களை வரையச்செய்வது
அவற்றைக் கடல் கடந்து அனுப்பி வைப்பது
அல்லது
கார்களின் மீது ஒட்டுச் சித்திரங்களை அப்புவது
அல்லது
போர் வீரர்களுக்கான தலைக் கவசத்திற்குள் மேலும்
கூடுதலாக ஒரு ரப்பர் உறைக்காக
காங்கிரஸ் அங்கத்தினர்களைக் கனிய வைப்பது
எனவாகி விட்டது.

ஒரு சிப்பாய் தனது நான்காவது
அல்லது ஐந்தாவது பயணத்தின் போது
தன்னுடன் போராடும் நண்பர்கள் மரணத்தைத் தழுவும் போது
ஒரு ஐந்து வயதுக் குழந்தை வரைந்த வண்ண மெழுகுச்சித்திரத்தையோ
அல்லது காரில் ஒட்டப்பட்டு மழுங்கிபோன ஒட்டுச் சித்திரத்தையோ ;
பொருட்படுத்துவான் என்றோ . . . .

தான் பயணிக்கும் ராணுவ வண்டி
ஒரு I E D யால்ஐம்பது மீட்டர் உயரம் தூக்கி எறியப்பட்டு
காற்றில் மிதக்கையில்துண்டு துண்டாய் உடல் சிதறி,
தோல் உருகி இருக்கையில் ஒட்டும்போது
தலைக்கவசத்தில் ஒட்டப்பட்ட அதிகப்படியான ரப்பர் மெத்தை
தன்னைக் காப்பாற்றும் என நம்புவான் எனவோ
நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

எது எப்படியோ
அதிகம் அதிகமாக சிப்பாய்கள் மரணம் அடைய அடைய
சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு
மேலும் மேலும் நியாயப்படுத்தப் படுகிறது.

தன்னாட்டு மக்களிடம் பொய் பேசுவதும்,
சட்டவிரோதமாக ஒரு தேசத்தை ஆக்கிரமிப்பதும்
மட்டுமே தகுதியாகக் கொண்ட அமெரிக்கத் தலைமை
களத்தில் போராடும் சிப்பாய்களின்
தீரம்,ஒழுக்கம், கவுரவம் ஆகியவற்றைக்
களவாட அனுமதிக்கப் படுகிறது.

எப்படியோ
பத்தாண்டுகளுக்கு முன்
சட்ட விரோத ஆக்கிரமிப்பில் பங்கு கொள்ளப் பயந்தவர்கள்
தாங்கள் தொடங்கிய சட்டவிரோத ஆக்கிரமிப்பில் போராட
சிப்பாய்களை அனுப்பி வைக்க
அனுமதிக்கப் படுகிறார்கள்.

எப்படியோ
போலியான பாத்திரங்களும்,
விழுமியங்களும்,திடமும்,
சகித்துக் கொள்ளப்படுகின்றன.

எப்படியோ
அவலத்திலிருந்தும் அச்சத்திலிருந்தும்
ஆதாயமடைவது
அனுமதிக்கப் படுகிறது.

எப்படியோ
நூறு ஆயிரம் என்றில்லாமல்
பத்துப் பதினைந்தா ?
சகித்துக் கொள்ளப்படுகிறது
சாவு.

எப்படியோ
உரிமைச் சாசனமும்
அரசமைப்பு சட்டமும்
மீறப் படுவதும்
கவிழ்க்கப் படுவதும்
சகித்துக் கொள்ளப் படுகிறது.

எப்படியோ
ஆட்கொணர்வுச் சட்டம்
ஒத்தி வைக்கப் படுவது
நாட்டின் பாதுகாப்புக்கு
உகந்ததென கருதப் படுகிறது.

எப்படியோ
சித்திரவதை
சகித்துக் கொள்ளப் படுகிறது.

எப்படியோ
புளுகு மூட்டைகள்
சகித்துக் கொள்ளப் படுகின்றன.

எப்படியோ
பக்தி,வரட்டு சூத்திரம்,முட்டாள் தனம் என
பகுத்தறிவு
வீசி எறியப் படுகிறது.

எப்படியோ
அமெரிக்கத் தலைமை
மேலும் ஆபத்தான உலகை உருவாக்க
அனுமதிக்கப் பட்டுவிட்டது.

எப்படியோ
புனைவு என்பது
யதார்த்ததை விட
முக்கியமானதாகி விட்டது.

எப்படியோ
தான் எதுவாக இல்லையோ
அதனை உயர்த்திப் பிடிப்பதும்
தான் எதுவாக இருக்கிறதோ
அதனைக் கண்டிப்பதுமான
ஒரு தேசமாகி விட்டது அமெரிக்கா.

எப்படியோ
உலகில் மிகவும் நியாயமான
மிகவும் நம்பிக்கைக்குறிய
மிகவும் மதிக்கத்தக்க ஒரு நாடு –
மிகவும் ஏறுமாறான
மிகவும் முரட்டுத்தனமான
மிகவும் அஞ்சத்தக்க
மிகவும் நம்பத்தகாத
நாடுகளில் ஒன்றாகிவிட்டது.

எப்படியோ
அரசியல் தெளிவுள்ள
கவனமான
எளிதில் நம்பாத நாடு
துரிதமான அறியாமை மூலம்
பகைமையால்
நிரப்பப்பட்டு விட்டது.

எப்படியோ
அதே திறமையற்ற
தன்னைத்தான் வியக்கின்ற
ஒழுக்கமற்ற
உள்ளீடற்ற
கெடுமதி படைத்த கயவர்கள்
இன்னும் பதவியில்
இருக்கிறார்கள்.

எப்படியோ இது
சகித்துக் கொள்ளப் படுகிறது.
யாருமே இதற்குப் பொறுப்பேற்கத்
தயாரில்லை.

ஒரு ஜனநாயகத்தில்
மக்களின் கொள்கையே
தலைவர்களின் கொள்கையாய்
இருக்க வேண்டும்.

எனவே
நமது பேரக்குழந்தைகள்
இந்தத் தலைமுறையின் பெரும்பகுதியை
தேசத்துக்கும் உலகத்துக்கும் மானுடத்துக்கும்
துரோகமிழைத்தவர்கள் எனப் புதைத்தால்
அதிர்ச்சி அடையாதீர்கள்.

இந்த ‘எப்படியோ’ – வை
அச்சத்தாலும் பாதுகாப்பின்மையாலும்
அசட்டையாலும் நாட்டினை
தடுக்கப்படாத கேள்வி முறையற்ற
ஒட்டுண்ணிகளுக்குப் பலி கொடுத்து விட்டோம்
என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட வசமாக
இன்னும் இந்த நாடு
ஜனநாயக நாடாக இருக்கிறது.
மக்களுக்கு இன்னும் வாக்கு வன்மை இருக்கிறது.
மக்கள் இன்னும் கூட நடவடிக்கையில் இறங்க முடியும்.
அது ‘பேட்’டின் பிறந்த நாளுக்குப் பிறகு தொடங்க முடியும்.

————————————————————————————-
கெவின் டில்மேன் தனது சகோதரர் பேட்டுடன் இராணுவத்தில் 2002 இல் சேர்ந்தார்.இருவரும் ஈராக்கிலும் ஆப்கானஸ்திலும் இணைந்து பணி புரிந்தனர். ஏப்ரல் 22,2004 இல் பேட் கொல்லப்பட்டார்.கெவின் 2005 இல் ராணுவத்திலிருந்து விடுவிக்கப் பட்டார்.

தமிழாக்கம்: புதுவை ஞானம் . தகவல்:Common Dreams


j.p.pandit@gmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்