சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பி.கே. சிவகுமார்


என்னதான் முந்தைய தே.ஜ.கூ ஆட்சியில் பொருளாதாரம் நற்கதியிலிருந்ததாக மீடியாக்கள் மொழிந்தாலும் அத்தனையும் ‘சமைத்துப் பார் ‘ புத்தகத்தில் இருக்கும் மேட்டர் மாதிரிதான். இந்தப் புத்தகத்தில் உள்ள பண்டங்களைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பாமரன் இல்லாதிருந்ததே உண்மை நிலை.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் பிரசுரமான வாசகர் கடிதத்தில் திசையன்விளையிலிருந்து வாசகர் ஆர்.ஜி.ஏ. ராமன்

**** ****

கடந்த கால கோஷங்களும் ஒரு கிழிந்த புத்தகமும்தான் பராரியான மக்களுக்குத் தெம்பூட்டுவதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது என்பது அனுபவபூர்வமான உண்மை. விளிம்புநிலை மக்களின் குரலாக இடதுசாரிகள் இருக்கிறார்கள். இது கடைகோடி மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இந்த தேசத்தில் ஜனநாயகம் நிலைக்கவும் நீடிக்கவும் இது அத்தியாவசியமானது.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் பிரசுரமான வாசகர் கடிதத்தில் அரசூரிலிருந்து அலர்மேல்.

**** ****

கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட குளச்சல் பகுதிக்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி செல்வதாக இருந்த திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. அத்வானி போன்ற முக்கிய பிரமுகரின் வருகை, மீட்புப் பணிகளைப் பாதிக்கும் என்று ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். களத்தில் இறங்காமல் வெறுமனே பார்வையிட வரும் வி.ஐ.பிக்கள் பற்றிய பரவலான அபிப்ராயம் இதுவே.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் நிருபர் எஸ்.செந்தில்குமார் எழுதியதிலிருந்து

**** ****

ஆபரேஷன் கடல் அலை என்று பெயரிடப்பட்டுள்ள நிவாரணப் பணிகளின் பரிமாணம் மிரள வைக்கிறது. பாதுகாப்புப் படைகளிலிருந்து மட்டும் 20,000 வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் 40 கப்பல்கள், ஏ.என்-32, ஐ.எல்-76 போன்ற பெரிய அளவில் சரக்குகளைக் கையாளக்கூடியவை உள்பட 34 விமானங்கள், 44 ஹெலிகாப்டர்கள் நிவாரணத்தில் ஈடுபட்டுள்ளன.

நிவாரணப் பணிகள் துல்லியமாக, சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுனாமி தாக்கிய 10வது நாளுக்குள் 6.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 5,79,506 பேருக்காக 605 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2,142 மருத்துவ குழுக்கள், 24 மணி நேரமும் பணியாற்றி தொற்று நோய் பரவலையும் மரணங்களையும் தடுக்கின்றன.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் ஷங்கர் ஐயர், முரளி கிருஷ்ணன் எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

ஒரு லட்சம் தருவதாகச் சொல்லி 15,000 ரூபாய்தான் கொடுத்தார்கள்.

– குப்பன், மீனவச் சிறுவன். நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் சுனாமி அலையில் தந்தையை இழந்துவிட்டான். அரசு கொடுப்பதாகச் சொன்ன ரூபாய் 1 லட்சமும் கிடைக்கவில்லை.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் சரவணன் எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் விசாரணை எண்ணான 197ஐ தொடர்பு கொள்பவர்களில் 97 சதவீதம் பேருக்கு பதிலளிக்கப்படுகிறது. இந்த எண்ணைத் தொடர்புகொள்ள மணிக்கணக்கில் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.

– கே.பி. பிரம்மதத்தன், தலைமைப் பொது மேலாளர், பி.எஸ்.என்.எல் சென்னை டெலிபோன்ஸ், ஜனவரி 19, 2005 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேவில் சொன்னது.

**** ****

டிசம்பர் 26ந் தேதி பொழுது சாய்வதற்குள் இந்தியக் கடற்படையின் முதல்விமானம் இலங்கையில் தரையிறங்கியது. அங்கு நடக்கும் நிவாரண நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரெயின்போ ‘ என்றும், மாலத்தீவுக்கான உதவிக்கு ‘ஆபரேஷன் காஸ்டா ‘ என்றும், இந்தோனேஷியாவில் ‘ஆபரேஷன் கம்பீர் ‘ என்றும் பெயர் சூட்டப்பட்டது. ‘தென் கிழக்காசியாவில் உதவி நடவடிக்கையில் இறங்கும் முதல் நாடாக இருப்பதுதான் நோக்கம் ‘ என்கிறார் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையினர் கமிட்டியின் தலைவரான வைஸ் அட்மிரல் ராமன் பூரி.

– ஜனவரி 19, 2005 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேவில் செளரப் சுக்லா எழுதியது

**** ****

கூலிப்படைகள் கருவறுக்கப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்தான் இந்தக் கொலை.

– ஆலடி அருணா கொலைபற்றி வை.கோபால்சாமி சொன்னதாக ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில்.

**** ****

தென் கிழக்காசியாவைச் சூறையாடிய சுனாமி, இந்தியக் கடலோரப் பகுதிகளைத் தாக்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே மற்றொரு மாபெரும் அலையில் இந்தியா மூழ்கியிருந்தது. அந்த அலையின் பெயர் சோனியா காந்தி. அந்த அலை இந்தியாவைத் தாக்கி ஓய்ந்தபோது, அரசியல் கடற்கரையோரம் பாரதீய ஜனதாக் கட்சி என்ற அகங்காரம் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தது. இனிமேல் காங்கிரசிற்கு மறுமலர்ச்சி என்பது சாத்தியமில்லை என எல்லா அரசியல் நோக்கர்களும் முடிவுகட்டிவிட்ட நிலையில், தற்செயலாக நேரு குடும்பத்தில் இணைந்த சோனியா அக்கட்சிக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். இந்திய அரசியலையே மறுவரையறை செய்து, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை எப்படி ஆளுவது என முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்.

– இந்தியா டுடே 2004ன் செய்தி நாயகராக சோனியா காந்தியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதுகுறித்து, சிகரம் தொடும் சோனியா என்ற தலைப்பில் ஜனவரி 19, 2005 இந்தியா டுடேவில் எடிட்டர் பிரபு சாவ்லா எழுதிய கட்டுரையிலிருந்து.

**** ****

இத்தனை நடந்த பிறகும் அந்த அழகிய தீவுவாசிகள் தங்கள் பூமி முன்பு எத்தனை இயற்கை அழகுடன் மிளிர்ந்தது என்று மெச்சத் தவறுவதில்லை. நாலாப் பக்கமும் மனிதச் சடலங்களும், தினசரி வாழ்க்கையின் இடிபாடுகளும், அவநம்பிக்கையும் சூழ்ந்திருக்க, விசாரிக்க வந்த நம்மிடமும் அந்தமானின் அழகைப் பற்றித் தங்களையறியாமல் சொல்கிறார்கள்.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் ஷார்தா உக்ரா எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

கேள்வி: பாலியல்ரீதியாக ஒடுக்கப்படுதலும், சமூக-பொருளாதார, அரசியல் தளங்களில் ஒடுக்கப்படுதலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பாலியல் சுதந்திரம் சமூகத்தில் பெண்கள் நிலை மாறுவதற்கு உதவும் என்று நினைக்கிறீர்களா ?

சல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: முஸ்லீம் பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக நீங்கள் இதுவரை குரல் கொடுக்கவில்லையே. ஏன் ?

சல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

சல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.

– ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவுக்கு சல்மா அளித்த நேர்காணலிலிருந்து சில கேள்வி – பதில்கள்

**** ****

ஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏது இடம் ? நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழன்ற நிலையில் ஆதார மானுட தேவைகளுக்க்கான தேடலில் நாம் எல்லாரும் ஒன்றாகிப் போனவர்கள் அல்லவா ?

– ஜனவரி 19, 2005 இந்தியா டுடேவில். ஜார்ஜ் எலியட்டின் மேற்கோளுடன் சுனாமி பற்றிய தன் கட்டுயையைத் தொடங்கிய வாஸந்தி

**** ****

வாழ சற்றே அனுமதிக்கப்பட்டவர்கள் வாழ மறுக்கப்பட்டவர்களின் கொடுங்கனவைப் பகிர்ந்து கொண்டவாறு இந்தப் புத்தாண்டைத் துவக்கலாம்.

– ஜனவரி 2005, உயிர்மை தலையங்கத்தில், சுனாமி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதியது.

**** ****

ஆக விரும்பியதாக அல்லாமல் ஆகிப்போவதுதான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை.

– ஜனவரி 2005, உயிர்மையில், சுகுமாரன் எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

தமிழில் இலக்கிய பூர்வமாக எழுதப்படும் ஒருசில போர்னோ கதைகளைப் படித்துப் பார்த்தேன். சகிக்க முடியவில்லை. கமர்ஷியல் போர்னோவின் மொழியை நீக்கிவிட்டு அதில் இலக்கிய வார்த்தைகளைப் போட்டு நிரவிவிட்டால் இலக்கியமாகிவிடுமா என்ன ? இதற்குக் கமர்ஷியல் போர்னோ பத்திரிகையின் சர்டிபிகேட் வேறு!

– ஜனவரி 205, உயிர்மையில், சாரு நிவேதிதா எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

பெரியவர்கள் எல்லோருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள்தாம். ஒரு சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கிறது.

– அந்த்வாந்த் செந்த் எச்சுபரி மேற்கோளாக, ஜனவரி 2005 உயிர்மையில் எழுதிய தன் கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.

**** ****

‘உங்கள் மிகப்பெரிய சாதனை என்ன ? ‘ என்று ஒருமுறை எம்.எஸ்.ஸிடம் கேட்டபோது, ‘இதுவரை நான் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்ததில்லை. அதுதான் நான் செய்திருக்கும் ஒரே சாதனை ‘ என்கிறார்.

– ஜனவரி 2005, உயிர்மையில், எம்.எஸ். பற்றி சி. அண்ணாமலை எழுதிய கட்டுரையிலிருந்து

**** ****

நான் போரைப் பார்த்திருக்கிறேன். புயல்களையும் சூறாவளிகளையும் பிற சீரழிவுகளின் நிவாரண உதவிகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒன்றை இதுவரைப் பார்க்கவில்லை.

– அமெரிக்க உள்துறை செயலர் காலின் போவெல், இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது சொன்னதாக, ஜனவரி 17, 2005 தேதியிட்ட டைம் பத்திரிகையில் வெளியான மேற்கோள். (மொழியாக்கம் – பி.கே. சிவகுமார்)

**** ****

நான் கற்றுக் கொண்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால் சிலநேரங்களில் வார்த்தைகள் அவை சொல்ல நினைக்காத பொருளை, விளைவுகளை ஏற்படுத்துகின்றன. என்னுடைய ‘அவர்களை வரச் சொல்லுங்கள் (Bring them on) ‘ இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

– அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னதாக ஜனவரி 24, 2005 டைம் பத்திரிகையில் வெளியான மேற்கோள். (மொழியாக்கம் – பி.கே. சிவகுமார்)

**** ****

கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியங்கள் இன்றைக்கு உலகப் புகழ் பெற்று உலக எழுத்துத் தரத்திற்குச் சமமாக உலவிக் கொண்டிருக்கின்றன.

– ஜனவரி 4, 2005 சென்னையில் நடைபெற்ற வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் மு. கருணாநிதி பேசியதாக முரசொலியில் வெளிவந்தது.

**** ****

‘சன் டி.வி.யை ‘ குடும்ப டிவி என்று வர்ணித்து வசைபாடியுள்ளார். ‘

பாவம்; குடும்பம் என்பது இழிவான சொல் அல்ல; அதற்கு எதிரான சொல்தான் இழிவுடைய சொல் ஆகும்.

– ஜெயலலிதா சொல்லியது பற்றி ஜனவரி 11, 2005 அன்று முரசொலியில் மு. கருணாநிதி எழுதிய கடிதத்திலிருந்து

**** ****

நாகப்பட்டினத்தில் ஒரு சுனாமி நிவாரண முகாமில், கிழவிகளும் குமரிகளும் கைகோர்த்துக் கொண்டு வட்டமாக நடனமாடினார்கள். சிரித்தவாறு குதூகலித்தார்கள். பின்னணியில் நின்றிருந்த குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்து, பெரியவர்களுக்கு உற்சாகமூட்டினார்கள். அப்பாடா! God is not yet discouraged of man!

அங்கு தங்கியிருப்பவர்கள் தங்கள் துயரத்தைச் சிறிதுநேரம் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று, அத்த முகாம் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது நம்ம பக்கத்து டி.வி. எதுவும் இல்லை. ஆங்கில சேனலான ‘ஹெட்லைன்ஸ் ‘.

– 19 ஜனவரி 2005 தேதியிட்ட துக்ளக்கில் வினோத் எழுதிய கட்டுரையிலிருந்து.

**** ****

நன்றி: தமிழ் இந்தியா டுடே, உயிர்மை, டைம், முரசொலி, துக்ளக்

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்