கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பி.சிவராமன்


(தமிழில். சி. மதிவாணன்)

இடதுசாரி கட்சிகள் முன்வைத்த கோரிக்கையான விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த சட்டத்திற்கு மாறாகவும், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையான அமைப்பாகத் தொழிலாள˜களுக்கான சட்டத்திற்குப் பதிலாகவும் யுபிஏ அரசாங்கம் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டம் (நகல்) என்ற ஒன்றை முன்வைத்திருக்கிறது. (இனி இதனை நகல் என்றே கட்டுரையில் குறிப்பிடுவோம்) இந்நகல் ஒப்பீட்டு ரீதியில் மிகக்குறைந்த வாய்ப்புகளையே வழங்குகிறது; பல்வேறு எதிர்மறை அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த நகலின் அம்சங்களை விரிவாக ஆய்வு செய்வோம். இச்சட்டம் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று யூபிஏ அரசாங்கத்தின் பத்திரிகைத் தொடர்பாளர்˜ கூறியிருக்கிறார். இச்சட்டத்தை நடப்புக்குக் கொண்டுவர மாநில அரசாங்களுக்கு இரண்டு வருடங்கள் என்ற நீண்ட காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் அய்ந்து ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் உள்ள ஜீன் டெராஸ் (Jean Dreaze) சொல்லியிருக்கிறார். ஏன் அய்ந்து வருடங்கள் ? இந்தத் தாமத்தை விளக்குவதற்குிக் காரணம் ஏதும் இல்லை. இத்திட்டம் உடனடியாக அமுலுக்கு வர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, இச்சட்டத்தின் முன்னோட்டமாக கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தை இவ்வாண்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது 150 மாவட்டங்களில் மட்டுமே அமுலுக்கு வரும். ஆனால் நகல் சட்டமோ முழு நாட்டிலும் அமுல்படுத்தப்படும் என்று சொல்கிறது. இந்த இரண்டும் தமக்குள் முரண்பட்டவை. எப்படியானாலும் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் எந்த பூகோள வரையறைக்குள்ளும் முடக்கப்பட்டவை அல்ல. மாவட்டங்களை தேர்ந்தெடுத்தலும் அர்த்தமற்ற முறையில் நடந்திருக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் நான்கு டெல்டா மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தர்மபுரி போன்ற மிகப் பின்தங்கிய மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை. சட்டம் நடப்புக்கு வரும் வரையிலும் தற்போதைய திட்டத்தையே நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக வேலைவாய்ப்பு உத்திரவாதத்திற்கு நிதி ஏற்பாடு செய்வதென்ற ஜீவாதாரமான பிரச்சனையை முதலில் எடுத்துக்கொள்வோம். கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ப.சிதம்பரம் 2000 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளார். ஆனால், 40% குடும்பங்கள் வேலை உத்திரவாதம் பெற 53,000 கோடி ரூபாயும், 33% குடும்பங்கள் பலன் பெற 44,100 கோடி ரூபாயும் வேண்டும் என்று சில பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். (வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மட்டும் 100 நாள் வேலை அளிக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான செலவு 40,000 கோடி ரூபாய் ஆகும். உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நாள் வேலைக்கு அளிக்கப்படும் தொகை 2004-5 விலைவாசியின்படி நாளொன்றுக்கு ரூபாய் 100 என்று இந்த கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளஸ்பட்டுள்ளது. இந்த 100 ரூபாயில் தோராயமாக ரூபாய் 60 கூலியாகவும், நிர்வாகச் செலவு போன்ற கூலி அல்லாத இனங்களாக மீதமுள்ள 40 ரூபாயும் அடங்கும். துவக்க கட்ட வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 100 நாள் வேலை என்பது அடிப்படை அளகாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் இணைத்து கணக்கிடும்போது, முழுமையான வேலைவாய்ப்பு உத்திரவாதம் உருவாக்கும் திட்டத்தின் செலவினைத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழான குடும்பங்களின் எண்ணிக்கையை 10,000 ரூபாயால் பெருக்குவதால் அடையமுடியும். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள கிராமப்புற மக்கள் தொகை 20 கோடி. அப்படியானால், (குடும்பத்திற்கு 5 பேர் என்று வைத்துக்கொள்ள) 4 கோடி கிராமப்புற குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வருகின்றன. எனவே, 2004-5 விலைவாசி நிலவரப்படி இச்சட்டத்திற்கான செலவினம் 40,000 கோடி என்றாகிறது. அல்லது இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)1.3% என்றும் சொல்லலாம்.)

எப்படி இந்தப் பணத்தை சேகரிக்கப்போகிறார்கள் ? இப்போதைய நிதி ஒதுக்கீட்டைப் பார்த்தால் ஆண்டொன்றுக்கு இதற்கான செலவினம் 2000 கோடி என்று அரசாங்கம் வைத்துக்கொள்வதாகத் தோன்றுகிறது. 10 கோடி மக்களுக்கு நாளொன்றுக்கு தலைக்கு 50 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 4 நாட்கள் வேலையை மட்டுமே அதனால் உருவாக்க முடியும்! அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4 கோடி பேருக்கு மேல் கிராமப்புற உழைப்பாளர்களாக இருக்கின்றனர்.

முந்தைய வாஜ்பாய் என்ன செய்ததோ, மிகச் சரியாக அதையேத்தான் யூபிஎ அரசாங்கம் செய்திருக்கிறது. வாஜ்பாய் அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் வேலைவாய்ப்பு திட்டங்களை இணைத்து, அத்தோடு ஓரளவு கூடுதல் ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய மொந்தையில் பழைய கள்ளை விற்கப்பார்த்தது. நிதி ஒதுக்கீடு என்ற உண்மையான பிரச்சனை பற்றி ஒன்றுமே சொல்லாமல், நகல் ஒன்றை, அது மசோதா கூட அல்ல, கொண்டுவந்துள்ள யூபிஏ அரசாங்கத்தின் நேர்மையைச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அனைத்து கிராமப்புற தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலையை அளிக்க நிதி திரட்டுவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. உலகமய-தாராளமய காலகட்டத்தின்போது இந்தியாவில், வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் தொடர்ந்து வீழ்ந்துவருவதை சில பொருாளதார அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 1991 ஆண்டு நிலைமைக்கு வரி-உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்த்தப்படுமானால், உள்நாட்டு உற்பத்தியில் 2.5% சதம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இது கிராமப்புற ஏழைகளுக்கு வேலை உத்திவாதம் செய்வதற்கு தேவையானதை விட அதிகமானதாகும். இந்தியாவின் வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 15%மாக இருக்க OECD நாடுகளில் இந்த விகிதம் 37%மாக இருக்கிறது. அது ஒருபுறமிருக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் பாதுகாப்புச் செலவினமாக 77,000 கோடி ரூபாயை ஒதுக்க முடியுமென்றால், மிக முக்கிய சமூகப் பிரச்சனையான கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ஏன் 40,000 கோடியோ அல்லது 45,000 கோடியோ ஒதுக்க முடியாது ? இது பட்டினிச் சாவுகளை தடுப்பதற்கு பெருமளவு உதவும்.

நகலில் இச்சட்டம் அமுலாவதை உத்திரவாதப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. அமுல்படுத்தவில்லை என்றால் உயர்மட்ட அதிகாரிகளைஷ சட்டப்படி தண்டிப்பதற்கோ அல்லது நிர்வாக ரீதியான தண்டனைகளோ எதுவும் இல்லை. (கீழ் மட்ட சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு மட்டும் சில தண்டனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.) இறுதிப் பொறுப்பில் உள்ள அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு எந்தத் தண்டனையும் இல்லை. எந்த வேலைவாய்ப்புத் திட்டத்திலும் ஊழல்தான் பெரிய விவகாரம். ஊழல் பேர்வழிகளை மக்கள் நீதிமன்றம் முன்பு நிறுத்தி தண்டிக்கும் வேலையை மக்கள் இயக்கங்கள் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல உடல் நிலையுள்ள அனைவருக்கும் வேலை என்பதற்குப் பதிலாக, குடும்பத்தில் நல்ல உடல்நிலை கொண்ட ஒருவருக்கு வேலை என்றே இந்த நகல் உத்திரவாதம் அளிக்கிறது. இது பெண்களுக்கு எதிரானதாகும். ‘சம்பாதிப்பது ‘ மற்றும் ‘குடும்பத்தின் தலைவர் ‘ என்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் பெண்களுக்கு எதிரானதாகும். விவசாயத் தொழிலாளர்களில் பெண்களின் பங்கு மிக அதிகமானதாகும். குறிப்பாக ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் இது 74% என்ற அளவுக்கு அதிகமானதாக இருக்கிறது. சில ஆய்வாளர்கள் உழைப்புச் சக்தி பெண்கள் மயமாக்கப்படுவது என்று சொல்லும் அளவுக்கு இது அதிகமானதாக இருக்கிறது. பெண்கள் அதிகமாரமுள்ளவர்கள் ஆவதற்கு பெண்கள் வேலையில் பங்கெடுப்பது பெருமளவு உதவும். இப்போதைய நகலை அமுல்படுத்தினால், தற்போதுள்ள உள்ள வேலைக்கு உணவுத் திட்டத்தில் எங்கெல்லாம் பெண்களும் இளைஞர்களும் வேலை பெறுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும். வேலையை அனைவருக்கும் உத்திரவாதம் செய்யும் திட்டம்தான் இப்போதைய தேவையை தவிர குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதல்ல. குடும்பம் என்பதற்கு நகல் தரும் விளக்கமே அபத்தமாக உள்ளது. தனிக் குடும்பத்தையும், கூட்டுக் குடும்பத்தையும் ‘ஒரு குடும்பம் ‘ என்றே நகல் எடுத்துக்கொள்கிறது. பத்து பேர் உள்ள ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்!

முன்மொழியப்பட்டுள்ள வேலை உத்திரவாதச் சட்டத்தில் என்ன திட்டத்தை (செய்யப்பட வேண்டிய வேலையை) மேற்கொள்வது என்ற மக்கள் முடிவு செய்ய முடியாது. ஜவகர் ரோஜ்கார் யோஜானாவில் (JRY) நடப்பது போல, பொருட்களை வாங்கவும் யந்திரங்களைஸ் பயன்படுத்தவும் கூலிக்கான பணம் திருப்பப்படுவதைத் தடுக்க எந்த உத்திரவாதமும் இல்லை. கூலிக்கான பகுதி என்றும் பொருட்களுக்கான பகுதி என்றும் நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவினையும் நகல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கூலிக்கான பணத்தை பொருட்களை வாங்கவோ அல்லது காண்ட்ராக்டருக்கான தொகை என்பதாகவோ ஒதுக்கிக்கொள்ள முடியும் என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது. காண்டராக்டர்கள் நுழைவதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும். மக்களின் கூட்டுறவு போன்ற அமைப்புகளுக்கு நேரடியாக வேலையை அளிக்க வேண்டும்.

நகல் சட்டம் ஆண்டுக்கு 100 நாள் வேலையை மட்டுமே உத்திரவாதம் செய்கிறது. முன்பு வழக்கமான விவசாய வேலைக்குத் துணையானதாக 100 நாள் வேலை கருதப்பட்டது. ஆனால், இப்போது ஆண்டொன்றுக்கு விவசாயத் தொழிலாளி ஒருவருக்கு 70 நாட்கள் மட்டுமே விவசாய வேலை கிடைக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆண்டொன்றுக்கு 120 நாட்கள் விவசாய வேலை, உலகமய காலகட்டத்தின் போது ஆண்டொன்றுக்கு 70 நாட்களாக, படிப்படியாகக் குறைந்து வந்திருக்கிறது. எனவே, வேலை உத்திரவாதச் சட்டம் என்ற பெயரே தப்பான பெயராகும். எனவே, இது துணை வேலைச் சட்டம் என்பதே சரி. வேலைக்கான உத்திரவாதத்தை நூறு நாட்களாக சட்டத்தில் சுருக்கக்கூடாது.

மாநிலங்களுக்கு மாநிலம் குறைந்தபட்ச கூலி மாறுபடுகிறது. சில மாநிலங்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக குறைந்தபட்ச கூலியை மாற்றவே இல்லை. சில மாநிலங்களில் சட்டபூர்வமான குறைந்தபட்ச கூலி நடப்பில் உள்ள கூலியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. உதாரணமாக, கடற்கரையோர ஆந்திரா, பஞ்சாப், கேரளாவைச் சொல்லலாம். கடற்கரையோர ஆந்திரப்பகுதியில் 60 முதல் 80 ரூபாய் வரை நடப்புக் கூலி வாங்கும் தொழிலாளர்கள் ரூபாய் 42 சட்டக்கு கூலி வழங்கும் அரசாங்கத் திட்டத்தில் வேலை செய்யத் தயாராக இல்லை. வேலை வாய்ப்பு உத்திரவாதச் சட்டம் அகில இந்தியச் சட்டம். ஆனால், குறைந்தபட்ச கூலிச்சட்டம் அகில இந்தியச் சட்டம் இல்லை. மத்திய அரசு மாதிரி அறிவிக்கை (Model Notification) ஒன்றை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. அது மாநிலங்களைஸ்ரீ கட்டுப்படுத்தாது. மேலும் விவசாய வேலைக்கு ரூபாய் 60 என்பது மிகவும் பொத்தாம் பொதுவானதாகும்! எனவே, வெவ்வேறான விவசாய வேலைக்கு வெவ்வேறான கூலியை நிர்ணயம் செய்யும், அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவவருவது அகில இந்திய குறைந்த பட்சக் கூலிக்கு மிக அவசியமானதாகும். அப்போது மட்டும்தான் குறைந்தபட்ச கூலி கிடைக்கும் 100 நாள் வேலை உத்திவாதம் பொருளுள்ளதாக இருக்கும்.

வீட்டில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களுக்குக் குறைவான வேலை நேரம் போன்ற விசேஷ அம்சங்கள் நகல் சட்டத்தில் இல்லை. பெண்களின் கோணத்தில் பார்த்தால் முக்கியத்துவம் பெறும் குடிநீர் திட்டங்கள், கிராமப்புற கழிப்பிடங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு நகல் சட்டத்தில் இல்லை.

14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களைஸ்ரீ குழந்தைத் தொழிலாளர்கள் என்று குழந்தைத் தொழிலாளர்˜ சட்டம் சொல்கிறது. நகல் சட்டமோ 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ‘வயது வந்தோர் ‘ என்று வரையறுக்கிறது. இது குளறுபடியாகும். 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட உழைப்பாளர்கள் மிக அதிகமானவர்கள் ஆவர். எனவே, 14 வயதுக்கு மேற்பட்டவர்களையும் சட்டம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

‘பலனுள்ள வேலையை ‘ மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், எது ‘பலனுள்ள வேலை ‘ என்று சட்டம் விளக்கவில்லை. இதில் ஒரு வித்தை இருக்கிறது! கிராமப்புற குடியிருப்புகள் கட்டுவது, குடிநீர் வசதி போன்றவற்றுக்காக கிணறு தோண்டுவது, கிராமப்புற கழிப்பிடங்கள் போன்றவை பலன் தரும் வேலைகளா என்பது தெளிவில்லை. JRY திட்டத்தில் கிடைத்த ஆந்திர அனுபவம் மேல்சாதி நிலப்பிரபுக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு தலித் உழைப்பாளர்களைஸ் பயன்படுத்திக்கொண்டதைக் காட்டுகிறது. இதுபோன்ற பாரபட்சங்களுக்கு எதிரான பாதுகாப்புகள் எவையும் சட்டத்திற்குள் இல்லை.

இச்சட்டத்தின் படி வேலை பெறுவதற்கான விண்ணப்பம் குறைந்து 14 நாட்களுக்காவது வேலை பெறுவதற்கானது என்பதாக சட்டம் சொல்கிறது, வார விடுமுறை பற்றியோ, விழாக்கால விடுமுறை பற்றியோ, மருத்துவ விடுப்பு பற்றியோ, இடையில் தொடர்ந்து வர முடியாது போவது பற்றியோ சட்டம் பேசவில்லை.

சட்டப்படியான குறைந்த பட்சக் கூலியில் மூன்றில் ஒரு பங்குதான் வேலையின்மைக்கான உதவித்தொகை என்பது கேலிக்குரியது. குறைந்தபட்ச சட்டக்கூலியில் 80%மாவது வேலையின்மை உதவித் தொகையாக அளிக்கப்பட வேண்டும்.

சட்டத்தில் சொல்லியுள்ளபடி நல்வாழ்வுத் திட்டங்கள் எதற்கும் பிடித்தம் செய்யக்கூடாது.

தொழிலாளர்களின் சொந்தக் கிராமத்திற்கோ அல்லது 5 கிமீ சுற்றுக்குள் உள்ள இடங்களுக்கோதான் வேலைவாய்ப்பு உத்திரவாதம் பொருந்தும். ஆளால் பல பத்து லட்சக்கணக்கான இடம்பெயரும் தொழிலாளர்கள் உள்ளனர். சில நாள் கிடைக்கும் விவசாய வேலைக்காக பஞ்சாபுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை உத்திவாதத்தின் கீழ் 14 நாட்களே கிடைக்கும் வேலைக்காக ஒரிசாவிலோ, பிகாரிலோ இருக்கும் தமது சொந்த கிராமத்திற்கு திரும்ப முடியாது. இடம்பெயர்ந்த இடத்தில் வேலை கிடைக்காத நாட்களுக்கான இழப்பீடு எதுவும் சட்டத்தில் இல்லை.

மிகப்பெரும் எண்ணிக்கையிலான கிராமப்புற ஏழைகள் நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நகர்புற சேரிகளில் வயிற்றைக் கழுவி வருகிறார்கள். எனவே, வேலை வாய்ப்பு உத்திரவாதம் நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

திட்டத்தின் செலவினத்தில் மாநிலத்தின் பங்கும் மத்திய அரசின் பங்கும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

மகாராஷ்டிரத்தின் வேலை உத்திரவாதத் திட்டம்தான் அகில இந்திய வேலை உத்திரவாதச் சட்டத்திற்கான உந்துதலை அளித்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா திட்டம் படுபயங்கரத் தோல்வியென்பதை பழங்குடியினர் பகுதியில் நிகழ்ந்த பட்டினி மரணங்கள் நிரூபித்தன. எந்தவொரு வேலை உத்திரவாதத்தின் வெற்றியும் அதனை அமுல்படுத்துவதில் உள்ள உத்திரவாதத்தில்தான் அடங்கியிருக்கிறது.

நகலில் உள்ள இந்த எதிர் மறை அம்சங்கள் பற்றி இடதுசாரிக் கட்சிகள் மெளனம் சாதிக்கின்றன. இகக(மா) கட்சி தவறான காரணங்களுக்காக இதனை எதிர்க்கிறது என்பது மிகவும் சுவாரஸ்யமானதாகும். நகலின்படி, 100 நாட்கள் வேலை வழங்க அரசு தவறுமானால், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும். வேலை கேட்டு விண்ணப்பம் வழங்கிய 15 நாட்களுக்குள் வேலை அளிக்கப்படவில்லை என்றால், அந்த நபருக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்குவது கட்டாயம் ஆகும். மாநில அரசாங்கம் அந்த வேலையின்மை உதவித்தொகை வழங்குவதை ஏற்கவேண்டும். எனவே, மேற்கு வங்க அரசு நகலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இ.க.க(மா)வும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்˜ சங்கமும் இந்நகலை எந்தவித விமர்சனமுமின்றி ஏற்றுக்கொள்ள, மேற்கு வங்க அரசாங்கம், குறிப்பாக அசிம் தாஸ் குப்தா, ‘வேலை உத்திரவாதம் கொடுக்க முடியவில்லை என்றால் நகலில் உள்ளபடி மாநிலம் வேலையின்மை உதவித்தொகை கொடுக்க முடியாது ‘ என்ற அடிப்படையில் எதிர்த்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் (24, செப்டம்பர், 2004) செய்தியின்படி, மேற்கு வங்க நிதியமைச்சர் அசிம்தாஸ் குப்தா இ.க.க(மா) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்தையும், சீத்தாரம் எச்சூரியையும் டெல்லியில் சந்தித்து நகலுக்கான மேற்கு வங்க அரசின் எதிர்ப்பைத் தெரியப்படுத்தினார். யதார்தத்தில் பார்த்தால், 2001 வரை பின்பற்றி வந்த வேலையின்மை உதவித் திட்டத்தின் கீழ் வேலையின்மை உதவித் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்த அற்பத் தொகையான மாதத்திற்கு ரூபாய் 50 என்பதை, பணம் இல்லை என்ற காரணம் காட்டி, மேற்கு வங்க அரசு நிறுத்திக்கொண்டுவிட்டது.

நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம், குறிப்பாக கிராமப்புற வேலைவாய்ப்பு நிலவரம் மிக மோசமானதாக இருக்கிறது. 1983-84க்கும், 1993-94க்கும் இடையிலான விவசாய வேலை வாய்ப்பு ஆண்டு வளர்ச்சி 2.23%. 1993-94 முதல் 1999-2000 வரையிலான காலகட்டத்தில் அது மிக வேகமாகச் சரிந்து 0.02% ஆனது. இது மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் உழைப்பாள˜ எண்ணிக்கை வளர்ச்சியை விட மிகக் குறைவானதாகும். 1993-94ல் தினசரி வேலையின்மை நிலவரம் 5.63% மாக இருந்தது. அது 1990-2000ல் 7.21%மாக உயர்ந்தது. வேறு சிலரின் கருத்துப்படி, ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 60%மாக இருக்கும் விவசாய வேலை வாய்ப்பு இந்த காலகட்டத்தில் முற்றூடாக குறைந்துபோய்விட்டது. விவசாய வேலையில் எஞ்சும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் கிராமப்புற பண்ணை சார வேலைவாய்ப்பும் மெதுவான வேலை வாய்ப்பு வளர்ச்சியையே காட்டுகிறது.(1983-84ல் இது ஆண்டுக்கு 3.28%மாகவும், 1994-2000த்தில் ஆண்டுக்கு 2.14%மாகவும் இருந்தது.) 1983-93 காலகட்டத்தில் ஆண்டுக்கு 2.04%மாக இருந்த பொருளாதாரத்தின் மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சி 1994-2000ல் ஆண்டுக்கு 0.98%மாக வீழ்ச்சியடைந்தது. இதற்கு நேர்மாறாக, கிராமப்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு 1995-96ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.40%மாக இருந்தது, 2000-2001ல் உள்நாட்டு உற்பத்தியில் 0.13%மாக குறைந்துவிட்டது. இதேகாலகட்டத்தில் கிராமப்புற முன்னேற்றத்திற்கான விசேஷ திட்டத்திற்கான ஒதுக்கீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08%லிருந்து 0.03%மாக வீழ்ந்தது.

வேலை செய்யும் உரிமை அடிப்படை ஜனநாயக உரிமையாகும். வேலை செய்யும் உரிமையும், அரசாங்கத்தால் வேலை அளிக்க முடியவில்லை என்றால் வேலையின்மை உதவித்தொகை அளிப்பதும் முதலாளித்துவ அரசில் மிகவும் சாத்தியமான ஒன்று. யதார்த்தத்தைப் பார்த்தால் இது அனைத்து வளரும் நாடுகளிலும் அமுல்படுத்தப்படுகிறது. வேலை செய்யும் உரிமை18 வளரும் நாடுகள் உட்பட 30 நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியா அதனை சட்டமாக்குவதை இனியும் தாமதப்படுத்த கூடாது. அரசுக்கொள்கையின் வழிகாட்டு கோட்பாடுகள் (Directive Principles of State Policy) என்ற பிரிவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வேலை செய்யும் உரிமை பற்றி பேசுகிறது. அதன் பிரிவு 39, ‘குடிமக்கள், ஆண் பெண் சமத்துவத்துடன், வாழ்வாதாரங்களை அடைவதற்கு போதுமான வழிவகை பெறும் உரிமை உள்ளவர்கள் ‘, ஆவதை அரசு உத்திரவாதம் செய்யவேண்டும் என்கிறது. மேலும், பிரிவு 41இ ‘அரசு தனது பொருளாதார பலம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப, வேலை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு பலன் தரும் ஏற்பாடுகளைஷ செய்ய வேண்டும் ‘, என்று வலியுறுத்துகிறது. ஆனபோதும், இதுவரையில் வேலை வாய்ப்பு கூடுதலாக உள்ள கிராமப்புற வேலைத் திட்டங்களை உருவாக்கியிருந்தபோதும், அவை வேலை செய்யும் உரிமையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை கூடுதல் வேலைவாய்ப்புகள் மட்டுமே. வேலை செய்யும் உரிமை சட்டபூர்வ உரிமை ஆவதுதான் ஏழைகளின் தேவை. கிராமப்புறங்களில் வேலை உத்திரவாதம் மிக அவசரமான ஒன்றாக இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட குறைபாடுகளைக்ஸ்ரீ களைந்து மற்றொரு திருத்தப்பட்ட நகல்/ மசோதாவை அரசு கொண்டுவர வேண்டும் என்றும், வெகுவிரைவில் அதனைச் சட்டமாக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

—-

mathivanan_c@yahoo.com

Series Navigation

பி.சிவராமன்

பி.சிவராமன்