நான் கணேசனில்லை…

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இந்தியக் கலாச்சார அமைப்பின் சார்பில் குப்தா தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தான். போல் அருணாசலம், கிருஷ்ணசாமி, பஷீர் அஹமது, சஞ்சய் மெஹ்ரா, பாலா நாயர், தல்வீந்தர்சிங், கிருஷ்ணாராவ், பன்சீர்படேல், சுனில் பண்டாரி என வரிசையாக இந்தியத் திருவாளர்களும் திருவாட்டிகளும் நமஸ்தேக்களுடன் கட்டித்தழுவவொரு சந்தர்ப்பம். ஆண்கள் தோத்தி, குர்த்தாக்களிலும், பெண்கள், புடவைகள், பஞ்சாபிகளிலும் ஷாம்பெய்ன் கோப்பைகளுடன் முடிச்சு முடிச்சாக நின்று எதிரணியிலிருக்கின்றவர்களின் உடலையும் உடையையும் இமையிறக்கிப் பார்த்துவிட்டுத் தொடரும் உரையாடலில் டில்லியில் கற்பழிப்பு, நாயுடு மீதான நக்சலைட்டுகள் தாக்குதல், மணிசங்கர ஐயர் என விவாதிக்கப்பட வேண்டுமென்றால் எங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம்

அக்டோபரிலேயே தொடங்கிவிட்ட குளிருக்காக இந்தியப் பாரம்பரிய உடைகளுக்கு( ?)மேலே கம்பளி உடைகளைக் கவசமாக்கிக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்த மண்டபத்திற்குள் நுழைந்தால், வழக்கம்போல இந்தியத் துணைக்கண்டமும், பிரான்சுமாக உறவாடிக் கொண்டிருந்தன. எந்த நிகழ்ச்சியிலும் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தன்னை வலிந்து அடையாளப்படுத்திக்கொண்டிருப்பதைக் கவனித்ததுண்டா ? அப்படித்தான் அந்தப் பெண்ணின் தோற்றமும். இரண்டாவது முறையாக என் கண்களில் அவள் விழுந்தபோது, பெண்ணென்ற அந்தஸ்தை இழந்து பெண்மணியாகியிருந்தாள். இஇஇஇனரீதியாக சொல்லவேண்டுமென்றால், அவளொரு பிரஞ்சு பெண்மணி.. மன்மதராசா தனுஷுக்கு புடவைச் சுற்றியத் தோற்றம்., மாறாக முகத்தில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையில் வருகின்ற நாயகிகளின் வசீகரம். புடவைத் தலைப்பினை, இடதுகை நுனிவிரல்களால் திரும்பத் திரும்ப முறுக்கேற்றிக்கொண்டிருந்தாள். பூனைரோமமிட்ட முழங்கால்கள். மருதாணியிற் சிவந்த பாதங்கள். சிறிய மார்பும், தொளதொள ரவிக்கையுமாக, செயற்கைக் கனாகாம்பரசரத்தை முன் தலையிற் கிளிப்பிலிட்டு கொஞ்சமாக வலது தோளில் ஊசலாட, வயதினை மறைக்க முயற்சி செய்த ஒப்பனை. துணைக்குப் ‘பளிச் பளிச் ‘ கேமரா புன்னகை. குத்துவிளக்குகளுக்கும், அகல்விளக்குகளுக்கும் அக்கறையாகத் திரியைச் தூண்டி எண்ணெய் ஊற்றினாள்.. அவளிடமிருந்து கவனத்தைத் துண்டிப்பதில் சிரமமிருந்தது.

மண்டபத்தின் தொங்கலின் புதுச்சேரி பசில் தபலா வாசிக்க பண்டாரி சிதாரில் சிணுங்கிக்கொண்டிருந்தான்.. எனக்குத் தெரிந்து பசீல் ‘என்னடி ராக்கம்மாவுக்கு ‘ மட்டுமே ஒழுங்காக தபலா வாசிப்பான். பண்டாரியின் புனே நண்பன் ‘முதாகி ‘ தனது பிரஞ்சு மனைவி தோளில் வலது கையினை மாலையாக்கிக்கொண்டு, இடதுகையை அடிக்கடி நீட்டி, அரே வாஹ்வாஹ்! என்று எலிக்குரலில் கீச்சிடுவதை ரசித்துவிட்டு ஓவர்க்கோட்டினைக் கழட்டிக் கொண்டிருந்தபோது, குப்தா ஓடிவந்தான். ‘துர்கா பூஜையை இப்போதுதான் முடித்தோம். நீங்கள் கொஞ்சம் லேட் ‘ என்றான். வாட்சைப் பார்த்தேன். அவன் முகத்திலிருந்தது கிண்டலா, வருத்தமாவெனக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மணிநேரத் தாமதத்தை ‘கொஞ்சம் லேட் ‘ என வருணித்ததால் இந்தச் சந்தேகம். அவன் பார்வை எனது மனைவி கைகளிலிருந்த தூக்கிலிருந்தது. நிகழ்ச்சிக்கு அவரவர்பங்கிற்கு ஏதேனும் பலகாரங்கைளையோ, உணவினையோ கொண்டுவரவேண்டும் என்கின்ற விதிப்படி நாங்கள் எடுத்து வந்திருந்ததைப் பறித்துச்சென்று உரியவர்களிடம் சேர்ப்பித்துவிட்டுத் திரும்பியவன், எங்களை முன்வரிசையில் அமரவைத்துவிட்டுக் காணாமற்போனான்.

என் மனைவிக்குத் தமிழ் பேசுகின்றவர்கள் வேண்டும். தூரத்திலிருந்த மதாம் கெளசல்யாவைப் பார்த்துவிட்டாள். ‘ கொஞ்சம் பொறுங்கள். வருகிறேன் ‘ என மதாம் கெளசல்யாவை நோக்கி நடையைக்கட்டினாள். இனி நிகழ்ச்சி முடியும்வரை அவர்களிருவரையும் பிரிக்க முடியாது. கெளசல்யா சென்னை குரோம்பேட்டையில் ஜனித்து அமெரிக்காவிற்குப் பறந்து, அங்கே லாபில் கண்ட பிரஞ்சுக்காரன் ‘வல்மியை ‘ மணந்து இப்போது பத்துவருடங்களாக அவளுக்குப் பிரான்சும் பிரான்சைச் சார்ந்த இடமும் வாசம்… அமெரிக்கா, பிரான்சு என வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும், மதாம் கெளசல்யா சுத்த சைவம். ஆனால் அவள் ஆம்படையான் ‘வல்மி ‘ க்கு அசைவமில்லாமல் எதுவுமிறங்காது. அவனுக்கு வேண்டிய அத்தனை அசைவத்தையும் பாவம் மூக்கைக் பிடித்துக் கொண்டு செய்வதை கதை கதையாக வேறு சேதிகளில்லாதபோது சுவாரஸ்யமாக என் மனைவி விவரிப்பாள்.

எல்லோரும் கைதட்டவே கவனம் திரும்பியது. எதிரேயிருந்த மேடையைப் பார்த்தேன். பண்டாரி தன் சித்தார் வாசிப்பை முடித்திருந்தான். ‘குமார்.. ! ‘ என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பினேன். குஜராத்தைச் சேர்ந்த பன்சீர். அவன் முதுகை உரசிக்கொண்டு சற்றுமுன் நான் விவரித்த பிரஞ்சுப் பெண்மணி, கூடுதலாக எடுபிடி கணக்கில் பதுங்கிய தோற்றத்தில் மூன்றாவதாக அவள் புருஷன். ‘உன்னிடம் பேச வேண்டுமாம் ‘ அப்போதையிலிருந்து, இங்கே தமிழ்நாட்டினர் யாருமில்லையா ? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘. என்றான். ‘ஏன் ? என்ன விஷயம் ? ‘ என்று கேட்க நீயே பேசிப்பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். அப்போதுதான் அவ்ர்களைக் கூர்ந்து கவனித்தேன். அமெரிக்க அதிபர் ‘ஜார்ஜ் புஷ் ‘யையும், பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாவையும் ஆள்மாற்றி உடுத்திய தோற்றம்.. அவன் தன்னை ‘மர்த்தன் ‘ எனச் சொல்லிக் கொண்டான். அவள் ‘மரி ‘ யென்றாள். நான் ‘குமார் ‘ இவள் என் மனைவி எனச்சொல்ல பின்னர் கைகுலுக்கிக் கொண்டோம்.

இருவருக்கும் நாற்பதுவயதுக்குமேற் கொடுக்கலாம்.. அவனுக்கு முன்வழுக்கை. குள்ளமாகவிருந்து எடைபோட்டிருந்ததால், அனுதாபத்தைச் சம்பாதிக்கும் தோற்றம். அவளைப்பற்றிய வர்ணனை கொஞ்சம் அதிகமாகவே ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி வேண்டாம். அவனைவிட அவள்தான் பேசினாள். என் அனுபவத்தில் பெரும்பாலான பிரஞ்சுக் காரர்களின் வாய்பாடு பழகிவிட்டிருந்தது. இந்தியாவுக்குப் போயிருக்கிறேன் என ஆரம்பிப்பார்கள், பெரும்பாலும் டில்லி, பனாரஸ், ஆக்ரா ஜெய்ப்பூராகவிருக்கும். சென்னை, மதுரை, மஹாபலிபுரம் என்று பேசுகின்றவர்களும் இப்போது உண்டு. திடுமெண்று கதம்பப் பூச்சரங்கள் விற்கின்ற ஆயா, எருமைமாடுகளுக்கிடையில் ரிக்ஷா, அலகுக் குத்திய பக்தர்களென தாங்கள் இரசித்தக் இந்தியக்காட்சிகளை நிழற்படங்களாகக் கொண்டுவந்து நம்மைச் சீண்டுவார்கள். இந்தியர்கள் மிகவும் நல்லவர்களென ஆரம்பித்து, இந்தியாவின் வறுமை, பசி, பட்டினிச் சாவு என, முகமுழுக்கச் சோகத்தினை வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிடுவார்கள். இவளதுப் பேச்சும் அந்த ரகம்ந்தான். இடைக்கிடைத் தன்னைப்பற்றியும் சொல்லாமலில்லை.

அவன் தகப்பன்வழியிற் கிடைத்த சொத்தினைக்கொண்டு அவர்களுக்குக் கிராமத்தில் ஒரு பண்ணையும், வீடுமிருப்பதாக அறிய முடிந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்த உரையாடலில் என் பங்கோ, அவளது புருஷனின் பங்கோ ஏதுமில்லை. அவள் பேசுவதை நான் காதில் வாங்குகின்றேனா என்ற அக்கறையேதுமில்லை. நிறையப் பேசினாள். பக்கத்தில் புருஷன் காதினைக் குடைந்துக் கொண்டிருந்தான், உபயம் கார்ச்சாவி..

அவள் பிரசங்கத்திலிருந்து புரிந்து கொண்டதை வேண்டுமானால் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவள் பண்ணையில் செம்மறியாடுகள் வெள்ளாடுகள், கோழிகள் வளர்க்கிறாள். சந்தை நாட்களில் முட்டைகள், கோழிகள், பாற்கட்டிகளை விற்றுவருவது அவளின் வழக்கம். இதில் மர்த்தனின் பங்கு வீட்டிலிருந்துகொண்டு (விட்டத்தைப் பார்த்ததுபோக மீதி நேரங்களில் ?) அவைகளைப் பராமரிப்பது.. இது தவிர அவர்களுக்குச் ‘சொந்தமாக ஒரு சிறிய விலங்குப் பண்ணை இருப்பதாகவும். அதில் ஆசிய, ஆப்ரிக்க விலங்குகளை வளர்ப்பதாகவும், அடுத்த ஞாயிற்றுகிழமை பண்ணையிற் கொண்டாடவிருக்கும் தீபாவளிக்கு அவசியம் வரவேண்டுமென்றும். ‘ அவள் முடித்தபோது பக்கத்திலிருந்த மர்த்தன் சாதுவாகத் தலையாட்டினான்..

‘ என்ன விலங்குகளைப் பார்க்கவா ? என் பிள்ளைகள் விலங்குகைளைப் பார்த்து அதிசயப்படுகின்ற வயதையெல்லாம் தாண்டிவிட்டார்களே ‘ என்றேன்.

‘ இல்லை நீங்கள் ‘ கணேசனுக்காவது ‘ நாங்கள் கொண்டாடும் தீபாவளியில் கலந்து கொள்ளவேண்டும். ‘

‘கணேசன் ‘ என்ன யானைக்குட்டியா ? ‘

‘இல்லை எங்கள் வளர்ப்பு மகன். சென்னைக்கருகே ஓர் அநாதை இல்லத்திலிருந்து சிலமாதங்களுக்கு முன்னதாகத் தத்தெடுக்கப்பட்ட சிறுவன். உங்களைப் பார்த்தால் அதிகச் சந்தோஷப்படுவான் ‘ சொன்னவள் விடுவிடுவென்று நடந்துச் சென்று திரும்பவும் வந்தாள். அவள் வலது கரத்தில் நான்கு அல்லது ஐந்துவயது மதிக்கும்படியான சிறுவன். முதன் முறையாக அந்தப் பெண்ணிடம் எனக்கு ஒரு வித மரியாதை. என்னினத்தைக் கப்பிடித்திருக்கிறாளே என்கின்ற இயல்பான மரியாதை. சிறுவனிடம் ‘ ‘உன் பெயரைச் சொல் என்றாள் ‘ என்றாள். அவன் தயங்கினான். ‘ உங்கள் ஊர் யானைத் தலை கடவுளின் பெயரை வைத்திருக்கிறோம் ‘ என்று என்னிடம் சொன்னவள், மீண்டும் அந்தச் சிறுவன் பக்கமாகத் திரும்பி ‘ எங்கே சொல்லு!.. பெயரைச் சொல்லு ‘ அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். அவன் வாய் திறப்பதாகயில்லை.. அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, அவனும் பிடிவாதமாக மறுத்தான். எனக்குச் சங்கடமாகவிருந்தது. ‘வற்புறுத்த வேண்டாம் விட்டுவிடுங்கள் ‘ என்றேன். மெல்ல அவன் கைகளைப் பற்றி என்னருகேக் கொண்டுவந்தேன். என் பார்வைக்குள் முழுவதுமாக வந்தான். வறுமைக்கோட்டிற்கு மேலே இழுத்துவந்திருந்த உடல்.. மாநிறம். களையான முகம், முகத்திலிருந்து உள்வாங்கிய கண்கள், தேடுகின்ற பார்வை. மெள்ள அணைத்துக் கொண்டேன். இதமாக இருந்தது. அனுபவித்தேன்.

‘எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டான் பார்த்தீர்களா ? அப்போ.. அடுத்த ஞாயிற்றுக் கிழமை எங்கள் பண்ணையில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அவசியம் எதிர்பார்க்கலாமா ? ‘

‘ அச்சிறுவனின் கண்களைப் பார்த்தவாறு, ‘அவசியம் வருகிறேன் ‘ என்றேன். அவன் கண்களிற் சுரந்த சந்தோஷம் என்னிதயத்தை நனைத்தது. அந்தப் பிரஞ்சுத் தம்பதியரோடு சிறுவன் புறப்பட்டு போனபோது, அவன் கண்கள் என்னையேச் சுற்றி சுற்றிவந்ததாகப் பிரமை.

அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு, பிரஞ்சுப் பெண்மணியின் குடும்பமிருந்த கிராமத்தை அடைந்து, அவர்களின் பண்ணைக்குச் சென்றபோது எனக்குமுன்னதாக இரு ஆப்ரிக்க, ஒரு வியட்நாமிய, இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகைளைச் சேர்ந்த குடும்பத்தினர் இருந்தார்கள். கணவன் மனைவி இருவரும் எங்களை வரவேற்றுத் தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்னார்கள். பண்ணைகளில் முகப்புகளில் தீபாவளி வாழ்த்துகள் எனத் தமிழ், உட்பட பல்வேறு மொழிகளில் எழுதிக் கட்டியிருந்தார்கள். பிறகு, விலங்குப் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.. வந்திருந்த மற்றக் குடும்பங்கள், விலங்கிகளைத் தீண்டி ஆனந்திக்க, எனக்குக் கணேசனைப் பார்க்கவேண்டுமென்பதில் ஆவல். .

மீண்டும் அந்தப் பெண் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தாள். ‘இது ஆப்ரிக்க குரங்கு, அது வியட்நாம் வாத்து, அதோ அது இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கழுதை, அங்கிருப்பது பெரு தேசத்து லாமா ஆடு. ஒவ்வொன்றிற்கும் அதன் தேவைக்கேற்ற சூழலை ஏற்பாடு செய்துள்ளோம்.. அவைகளைப் பாரமரிப்பதற்கென்று விலங்கியல் மருத்துவர், விலங்குகள் பராமரிப்பில் பட்டயம்பெற்ற செவிலியர்…. ‘ அவள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோனாள்.

‘கணேசன் எங்கிருக்கிறான் ? ‘ என் மனைவி. ஆச்சரியாமாயிருந்தது. இது என்மனைவிக்கும் கணேசன்மீது ஏற்பட்டிருந்த அக்கறை குறித்தான ஆச்சரியம்..

‘அதோ அங்கே… ‘ விலங்குப் பண்ணைக்கு அருகிலிருந்த வீட்டையும், சிறிய விளையாட்டுத் திடலையும்காட்டினாள்.

‘தனியாகவா ? ‘

‘ இல்லையே!.. அவனோடு நான்கு சிறுவர்கள் உள்ளார்கள்.. வாருங்கள் அழைத்துப் போகிறேன். இப்போது எல்லோரும் அங்கேதான் போகிறோம். ‘

அவள், வந்திருந்த மற்ற குடும்பங்கள், நாங்கள் என அனைவரும் அவ்விடத்தை அடைந்து வெளிக்கதவினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது அங்கே கணேசனோடு இன்னும் நான்கு சிறுவர்கள்.

கைதட்டி சிறுவர்களை அழைத்தாள்.. ‘விளையாடியது போதும். உங்களைத்தேடி. யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.. ‘

அவர்கள் தயங்கியவாறு மெல்ல முன்னேறி எங்களை நோக்கிவந்தார்கள்..

முன்னால் வருபவன் ஆப்ரிக்காவின் கமரூன் நாட்டுச் சிறுவன் வீக்கோ, அவன் பின்னே வருபவன் வியட்நாமிய சிறுவன் கிம், அடுத்து இந்தியாவிலிருந்து கணேசன். பிறகு சிலி நாட்டிலிருந்து சாக்கோ.. இவர்களுக்கான உணவுகள், படிப்பதற்கு, விளையாடுவதற்கான நேரங்கள் அனைத்துமே முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அப்பிரஞ்சு பெண்மணி மறுபடியும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தாள். இவ்வாசகங்களில் பெரும்பாலானவற்றை சற்று முன்னர் அறிமுகப்படுத்திய விலங்குப் பண்ணைக்கும் உபயோகித்திருந்தாள். எங்களை நெருங்கியதும், என்ன நினைத்தானோ கணேசன் என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டான்.

‘ கணேசா இங்கே வா! உனக்கு என்ன கொண்டுவந்திருக்கோம் பாரு. நிறையச் சாக்லெட். கரடி பொம்மை.. எங்கக்கிட்ட நிறைய பேசணும். ‘

அருகில் வந்தவன் சிறிது நேரம் என்னை நின்று கவனித்தான். ஏதோ யோசிப்பதாக நினைத்தேன். முதன்முறையாக என்னிடம் பேசினான்.

‘ என்னை ராமுண்ணு கூப்பிடுங்களேன். ‘

‘அப்போ கணேசன் ?

‘ நான் கணேசனில்லை அது இவங்க வச்சபேரு. நம்ம ஊர்ல என் ஃபிரண்ட்செல்லாம் என்னை ராமுண்ணுதான் கூப்பிடுவாங்க. ‘

என் மனைவி அவன் கைகளைத் தன் கைகளுக்குள் வாங்கிக்கொண்டாள். அவள் பதிலில் அவன் சமாதானமடைந்திருக்கவேண்டும். ஆர்வமாய்க் கேட்டான்.

‘ நான் மறுபடியும் ராமுவாகணும், ? ‘

****************

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா