ஒரு மத அழிப்பின் கதை

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

அருணகிரி


சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார். கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார். பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.

அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள “கம்யூனிஸ்டு” இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். ‘இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் – தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்…” என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.

பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:

– 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

– பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது “எதிரிச் சொத்து” என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட “அர்பிதா சம்பதி” சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

– பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.

– சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.

– இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.

– பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.

– 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

– கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.

– பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக்
குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.

– இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.

– முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன “நடுநிலைவாதிகளிடமிருந்தும்” ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?

– பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் “பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)” என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது- முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் புகைப்படம் உட்பட. http://www.hrcbm.org/ ( (எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):

.


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி