அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue


கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அமீரகத் தமிழ் மன்றத்தினர் வேட்டி சட்டை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்க பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தன. `குத்துப் பாடல்களுக்கு` மட்டுமே நடனம் ஆடும் கலாசாரத்தை மாற்றி வரிகளில் செறிவு கொண்ட பாடல்களுக்கு மட்டும் நடனமாடியது சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சியை அமைப்பின் இணைச் செயலாளர் ஜெஸிலா தொகுத்து வழங்கினார்
நடனங்களுக்குப் பிறகு கணினியில் இலவச மென்பொருட்களைக் கொண்டு தமிழை உள்ளீடு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் ஒலி ஒளிக்காட்சியாக வழங்கப்பட்டது. இந்நிகழவை தொகுத்து வழங்கிய அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அமீரகத் தமிழ் மன்றம் மீண்டும் விரைவில் கணினிப் பட்டறை நிகழ்த்தவிருப்பதால் தேவைப்படுபவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து நிகழந்த பலகுரல் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரோபோ சங்கர் பார்வையாளர்களை மகிழ வைத்தார்.

அமைப்பின் ஆலோசகர் ஜெகபர் விருந்தினர்களை மேடைக்கழைக்க சிறப்பு விருந்தினர்களான `அழகர்மலை` ஆர்கே, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோருக்கும் ஈடிஏ குழும மின் மற்றும் இயந்திரவியல் துறை இயக்குனர் அன்வர் பாஷா ஆகியோருக்கு அமைப்பின் நிர்வாகிகள் பொன்னாடை வழங்கி கௌரவிக்க சிறப்பு விருந்தினர்களுக்கு முறையே சிறுமிகள் ஃபாத்தின் ஜுமானா, மிருணாளினி, ஆஷிமா ஆகியோர் பூங்கொத்துகள் வழங்கினர்.
கடந்த ஆண்டில் அமைப்பு நடந்த நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் செயலர் ஃபாரூக் அலியார் தனது உரையில் எடுத்துரைத்தார். விழாவில் உரையாற்றிய அன்வர் பாஷா அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார். கஞ்சா கருப்பு பேசுகையில் தாய்மண்ணை விட்டு விலகி நிற்கும் போதும் தமிழை மறக்காமல் தமிழ் விழாவில் ஒன்று கூடியிருக்கும் தமிழர்களைப் பார்த்து மகிழ்வதாகக் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் ஆர்கே தனது உரையின் போது தமிழ் மக்கள் ஏன் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேற முயற்சிக்க வேண்டும் என்பதைச் சிறுகதைகள் மூலம் எடுத்துச் சொல்லி பார்வையாளர்களை மகிழ்வூட்டினார்.

தொடர்ந்து ஆண்டுவிழா மலரை அறிமுகம் செய்து பேசிய ஆசிப் மீரான் உலகளாவிய படைப்புகளைத் தாங்கி வந்து கொண்டிருந்த மலர் இப்போது அமீரகப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கி வருமளவிற்கு அமீரகத்தில் படைப்பாளிகள் பெருகியிருப்பது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விழா மலரை சிறப்பாக வடிவமைத்ததற்காகவும் அதற்காகக் கடுமையாக உழைத்ததற்காகவும் இணைச்செயலாளர் ஜெஸிலாவைப் பாராட்டினார். விழாவில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளை உருவாக்க உதவிய கீழை ராஸா, சரவணன், செந்தில் வேலன், சுரேஷ் குமார் ஆகியோரின் சேவையையும் அவர் பாராட்டியதைத் தொடர்ந்து ஆண்டு விழா மலரை ஆர்கே வெளியிட கஞ்சா கருப்பு அன்வர் பாஷா ஆகியோர் பெற்றுக் கொண்டனர் அமைப்பின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வந்திருந்த சிவகார்த்திகேயன் தனது பலகுரல் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்.

நிகழ்ச்சியின்போது தமிழகத்திலிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார், கவிக்கோ அப்துல் ரஹ்மான், நடிகர் சிவக்குமார், இயக்குனர் மீரா. கதிரவன், கலைஞானி கமல்ஹாஸன் ஆகியோர் அமீரகத் தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வாழ்த்துரைகளின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக `வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை சுவையானதா அல்லது சுமையானதா` என்ற தலைப்பில் `இவர்களா அவர்களா` நிகழ்ச்சியை மிகச் சுவைபட நிகழ்த்தினார் `நீயா நானா` புகழ் கோபிநாத். 20 பேர் பங்கு கொண்ட இந்நிகழ்வு நடுநிசி தாண்டி நடந்தும் பார்வையாளர்களை அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது. கோபிநாத்தின் ஆளுமை நிறைந்த பேச்சும் பங்கேற்பாளர்களின் உணர்ச்சி நிறைந்த வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. மாலை முரசு நாளிதழின் புகைப்படக்காரராக இருந்த ஹமீது மற்றும் அமீரகத்தில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் நூருல் அமீன் அகியோருக்கு சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கோபிநாத்திற்கு அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் பொன்னாடை வழங்க செல்வி ஃபாதிலா பூங்கொத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு அமைப்பின் ஆலோசகர் அகமது முகைதீன் நன்றி கூறினார். நடுநிசி தாண்டியும் கலையாமல் இருந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்ததாக வெகு மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

-ஆசிப் மீரான்

படங்கள்
1. நடனம் -நிவேதிதா குழுவினர்
2. ஆண்டுவிழா மலர் வெளியீடு: இடதிலிருந்து: ஜெஸிலா ரியாஸ், அகமது முஹைதீன், பாரூக் அலியார், காமராசன், பீர் முகமது, ஆசிப் மீரான், அன்வர் பாஷா, ஆர்.கே., கஞ்சா கருப்பு, ராமன், ஜெகபர், ரமணி, நஜ்முதீன், ரியாஸ் அகமது.
3.கோபிநாத் வழங்கிய `இவர்களா அவர்களா?`
4. ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன்

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts