“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

ஜடாயு


சமீபத்தில் ஒரு இலக்கிய உரையாடலுக்கு நடுவில் நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார் – “DT சுஸுகி தன்னுடைய புத்தகங்களில் ஜப்பான் மற்றும் சீனாவின் நுண்ணிய கலைகளின் உயர்வுக்கு ஜென் தத்துவமே காரணம் என அழகாய் விளக்கியிருப்பார். அதனால், ஜப்பானிய இலக்கியங்களை அணுகிற அனைவராலும் அவற்றின் நுணுக்கங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

இதே போன்று சங்கப் பாடல்கள் மற்றும் தமிழின் பேரிலியக்கியங்களின் உருவாக்கத்திலும் தொக்கி நிற்பது அத்வைதம் முதலான ஹிந்து தத்துவங்கள் தான் என்பதை விளக்கி எழுத வேண்டிய அவசியமிருக்கிறது”.

“உலகொத்தொரு நீயாகத் தோன்ற” என்ற திருமுருகாற்றுப் படை ஆரம்பமே அத்வைத தத்துவத்தின் சாரம் தான் என்று நண்பர் சைவ அறிஞர் ஜாவா குமார் அடிக்கடி கூறுவார். “இவ்வுலகம் அனைத்தும் நிரம்பியிருப்பவன் ஈசனே” (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜக்த்யாம் ஜகத்) என்ற உபநிஷதத்தின் முதல் வரியுடன் அது அழகாக ஒத்திசைவது பற்றி நான் எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் அருமையான இந்தக் கட்டுரை இத்திறக்கில் பல சான்றுகளையும், ஆழ்ந்த விளக்கங்களையும் தருகிறது. பரம்பொருள், ஜீவன், மாயை, பிறவிச் சுழல், பக்தி, யோகம் ஆகியவை பற்றிய தத்துவச் சிந்தனைகளும் சங்கப் பாடல்களில் விரவி வருவதை மிக நன்றாக எடுத்துக் காட்டுகின்றார்.

சிருங்கார ரசத்தை முதன்மையாக வைத்து காவியங்களும், நாடகங்களும் புனைந்த மகாகவி காளிதாசர் அடிப்படையில் ஒரு “அத்வைத கவி” என்று சம்ஸ்கிருத இலக்கிய விமர்சகர்கள் அவரது கவிதைகளின் ரசானுபவத்தை அலசுகையில் குறிப்பிடுவர். அதே போன்று,
சைவத் திருமுறைகளின் அகப் பொருள் சங்க இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியே என்பதை அழகிய மேற்கோள்களுடன் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

அறம்,பொருள்.இன்பம், வீடு ஆகிய மானுட வாழ்க்கைப் பேறுகளுக்கான தேடலை ஒன்றோடொன்று மோதவிடாமல், சமரசத்துடன் ஒருங்கிணைத்து ஒரு அற்புதமான வாழ்வியல் தரிசனத்தை சைவம், வைணவம் ஆகிய இந்து ஆன்மிக நெறிகள் வளர்த்தெடுத்திருக்கின்றன. கலைகளும், இலக்கியங்களும், தத்துவமும் ஒன்றுக்கொன்று ஊடாடி வந்து கொண்டிருப்பதை விவரிக்கும் இது போன்ற ஆழ்ந்த தேடல்கள் இந்தப் புரிதலை இன்னும் விரிவாக்க உதவும்.

//// கட்டுரை: பரிபாடல் முதலியவற்றில் சிலபாடல்கள் முருகன் திருமால் முதலிய கடவுள்களைப் பற்றியனவென்றாலும் அவை அகப்பொருட் பாடலாகச் சார்த்து வகையில் பாடப்பெற்றனவே யன்றித் தனித்த பத்திப்பாடல்கள் அல்ல. ////

இது சரியான கருத்து அல்ல. பரிபாடலில் திருமாலை வாழ்த்திப் பாடும் அழகிய பாடல் ஒன்று –

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்..

என்று போகிறது. “விறகில் தீயினன்” என்ற அப்பர் தேவாரமும், “சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது” என்கிற திருமந்திரமும் பாடுவது இந்த சங்கப் பாடலின் அடிநாதத்தையே அல்லவா? வேதாந்தம், சைவ சித்தாந்தம், வைணவம் இவை மூன்றும் போற்றும் பரதத்துவம் இந்த பக்திப் பாடலில் உள்ளது. இந்த மூன்று நெறிகளுக்கும் பொதுவான தத்துவ அடித்தளங்கள் பல உள்ளன, அவையே சங்கப் பாடல்களில் பெரும்பாலும் பேசப் படுகின்றன என்று கொள்வதே சரியான கருத்தாக இருக்கும்.. பின்னாளில் எழுந்த தத்துவச் சிடுக்குகளும், முடிச்சுகளும் தவிர்த்த கவித்துவம் சார்ந்த அனுபவம் தான் சங்கப் பாடல்களில் காணக் கிடைப்பது.

சங்க இலக்கியம் ஏன் சைவ மடங்களில் இல்லை என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணங்கள் மிகவும் ஏற்புடையனவாக உள்ளன. வன்முறை, துதிபாடல் போன்ற தனது “காலச் சூழலின் கசடுகளை” சங்கப் பாடல்களும் தன்னகத்தே கொண்டுள்ளன, அத்தகைய பாடல்கள் வழிகாட்டும் தன்மையன அல்ல என்று அவர் கூறும் கருத்தும் பக்குவப் பட்டதாகவும், தெளிவாகவும் உள்ளது.

மரபிலக்கியத் தேடலுக்கு உரம் சேர்க்கின்ற இது போன்ற மேலும் பல கட்டுரைகள் திண்ணையில் வரவேண்டும்.

அன்புடன்,
ஜடாயு
http://jataayu.blogspot.com/

Series Navigation

author

ஜடாயு

ஜடாயு

Similar Posts