கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பித்தன்


திண்ணை வாசகர்களுக்கு,

இந்த வாரம், இப்போது வெளியாகியிருக்கும் ஜீனியர் விகடனில் ‘ஸ்பெஷல் ‘ பகுதியில் (vikatan.com), அவர்தாம் பெரியார் என்ற அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. சாதியை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற மக்கள் பிரச்சனைக்காகவே தம் வாழ் நாளைக் கழித்த ஒரு உத்தம சமுதாய சீர்திருத்தவாதியை, ‘அவர் சாதி ஒழிப்புக்காக என்ன செய்தார், அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியா ‘ என்றெல்லாம் சில மூடர்கள் திண்ணையில் கேள்விக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதைப் படிக்கலாம், படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். கோவில் இருக்கும் தெருவில் மற்ற மக்கள் யாரும் போகக் கூடாது போன்ற கீழ்தரமான கருத்துக்களை எதிர்த்து வைக்கமில் நடந்த போராட்டத்தை தந்தை பெரியார் எப்படி தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீண்டாமை பிரச்சனை எப்படி மோசமாக இருந்திருக்கிறது என்பதை மறைத்து, அதைக் களைய பாடுபட்டவரைப் பார்த்து இனவாதப் பிரச்சாரம் செய்தார் என்று உளறும் அசடுகள் இதைப் படித்து தெளியலாம்! பார்ப்பனர்களை எதிர்த்து அவர் வெளியிட்ட கடுமையான கருத்துக்களை இந்த மோசமான தீண்டாமை நிலையை வைத்தே நாம் பார்க்கவேண்டும். தெருக்களுக்குள் மக்கள் நடமாடவே கூடாது என்பது எப்படிப்பட்ட மோசமான தீண்டாமையாக இருந்திருக்கவேண்டும். மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதத்தினர் அந்தணர், எத்தனை பேர் படித்தவர்கள் அதில எத்தனை சதவிகிதம் அந்தணர், அரசுப் பணிகளில் இருந்தவர்கள் எத்தனை பேர் அதில் எத்தனை சதவிகிதம் அந்தணர் என்ற புள்ளி விவரங்களும் அந்த கட்டுரையில் காணப்படுகிறது. அந்தணர்களே அப்போது அதிகாரங்களில் இருந்தார்கள் என்பது ‘ஏன் பார்ப்பனரை மட்டும் பெரியார் தாக்கினார் ‘ என்பதற்கு பதிலாக இருப்பதோடு, மண்டல் கமிஷன்கள் மிகத் தேவையான ஒன்று என்பதையும் விளக்குவதாக இருக்கிறது. இப்போது பெரியார் இருந்திருந்தால் வைக்கத்தில் போராடியது போலவே திண்ணியங்களிலும் போராடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே அவர் பார்ப்பனீயத்தை மட்டும் தாக்கினார் என்பது அன்றைய தேவை என்பதால் மட்டுமே. மற்றபடி அவர் எல்லா சாதிவெறிகளுக்கும், தீண்டாமைக்கும் எதிரானவரே.

ஊழல் செய்து அரசியலில் பணம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும், அரசியல் லாபங்களுக்காக மத வெறியைத் தூண்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை ஒப்பற்ற தலைவர்கள் என்று அழைத்துக்கொண்டிருக்கும் ம(ா)க்கள் பெரியாரைப் பார்த்து ஒரு உண்மையான பொதுநல தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அவர் வகித்துவந்த 29 பதவிகளை விட்டுவிட்டு அரசியலில், பொதுவாழ்வில் ஈடுபட்டவர் பெரியார் என்றும், எந்தவித அரசுப் பதவியையும் கடைசிவரை ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசில் ஈடுபட்டால் பொதுநலம் போய் சுயநலம் வந்துவிடும் என்பதாலும், ஊழல்வாதியாக தம் கட்சியினர் மாறிவிடக் கூடும் என்பதாலும் தன் கட்சி, தேர்தலிலேயே போட்டியிடக் கூடாதென வழிவகுத்தவர் அவர். (அது பிடிக்காமல் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற கொள்கையாலேயே அண்ணா பிரிது வந்து கட்சி தொடங்கினார். அது தெரியாமல் பெரியார் ஒரு பெண்ணை மணந்ததால் தான் அண்ணா பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தார் என்று ஒரு அசமந்தம் உளறுகிறது!). கொள்கையில் கடைசிவரை உறுதியாக இருந்தவர். கொள்கைக்காக, ‘ஒத்துழையாமை இயக்குத்துக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார் ‘ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதிய வயதில் ஒரு பெண்ணை மணந்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக (அந்த பெண்ணே விரும்பி மணந்திருந்தால் அதில் பேச ஒன்றுமில்லை என்றாலும்கூட) ‘பெரியார் பெண்ணியவாதியா, பெண்ணுரிமைப் பற்றிப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. ‘ என்று அசட்டுக் கேள்வி கேட்பவர்களுக்காக அந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகளை தருகிறேன். ‘தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமையாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப் படுத்தியவர் அவர்தான். திருமணம் செய்யும் உரிமை, செய்யாமலிருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்யோகத்திலும் சரி பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் போட்டவர் அவர். ‘ இந்த வரிசையில் விதவைப் பெண்களின் மறுமணம் விட்டு போயிருக்கிறது. இன்னும் கூட இந்த உரிமைகளில் பலவற்றைப் பெண்கள் பெறமுடியாமல் இருப்பதையும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாகாமல் தள்ளிப் போய்க்கொண்டேயிருப்பதையும் பார்த்தாலே பெரியார் எப்படிப் பட்ட, அருமையான, முற்போக்கானக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

இதைப் படித்தவுடன் ‘உட்காருமிடம் ‘ எரிந்து ‘ஈவேரா பிரச்சாரம், இனவாதப் பிரச்சாரம் ‘ என்றெல்லாம் புலம்பி ‘திக காரன், பெரியார் விசிறி ‘ என்றேல்லாம் எனக்கு பட்டமளிக்கப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. (அதற்காக ஒரு கும்பலே திண்ணைப் பக்கம் இருக்கிறது, எனினும் எனக்கு கவலையில்லை.) நான் முன்பே குறிப்பிட்டபடி மற்றவர்களைப் படிப்பதுபோலவே பெரியாரையும் படிக்கிறேன் என்பதைத் தவிர எனக்கும் பெரியாருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஒரு மாபெரும் தலைவரை, சமூகத் தொண்டரை, சீர்திருத்தவாதியை, கொள்கைப் பிடிப்புக்கொண்டவரை, 97 சதவிகித மக்களுக்காகவும் போராடியவரை, நாட்டுகுத்தேவையான மிக மிக முக்கியமானக் கருத்துக்களை சொன்னவரை, சமூக நீதிக்காக போராடியவரை, எல்லா மக்களும் சமம் என்ற சுயமரியாதையை ஏற்படுத்தியவரைப் பார்த்து, ஒன்றுமில்லாத சாதி, மத வெறியர்கள் அவதூறாகப் பேசி, அவரை மோசமானவராக சித்தரிக்க முயலுவதாலேயே நெஞ்சு பொறுக்காமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அருமையான அந்தக் கட்டுரையை எழுதிய ஞாநி அவர்களுக்கு நன்றி.

-பித்தன்.

piththaa@yahoo.com

Series Navigation

author

பித்தன்

பித்தன்

Similar Posts