கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

நாக.இளங்கோவன்


இந்து மதம் என்றால் எது ? என்ன ?

என்று சரியாக எத்தனை பேருக்கு தெரியும்

என்பது அய்யப்பாடே!

இதைச் சொல்வது கூட சிலருக்கு எரிச்சலாக

இருக்கக் கூடும்.

அவர்களின் பொன்னான மனம் புண்ணாவதாக

அங்காலாய்க்கக் கூடும்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குக் கூட

இந்து மதம் என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது.

அதிலே, ‘யார் இசுலாமியர் இல்லையோ, யார் கிறித்துவரும்

இல்லையோ ‘ அவர்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகக்

கருதலாம் என்றுதான் இருக்கிறது.

இப்படி, இந்திய அரசியலமைப்பிற்கே குழப்பமாக

இருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டு

சந்திலே சிந்து பாடித்திரியும் இராமகோபாலன்கள்

பரிதாபத்திற்குரியவர்கள்.

கலைஞர் இந்து மதத்தைத் தாக்கிப் பேசுகிறாரே

என்று சிலருக்கு தாங்க முடியாத எரிச்சலும்

பலருக்கு குழப்பமும் இருக்கக் கூடும்!

எரிச்சல் கொள்வோரைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை.

திராவிடம், தமிழ் என்றாலே எரிச்சல் கொள்வோரிடம்

வேறேதும் எதிர்பார்க்க ஏலாது.

ஆனால், குழப்பமடைவோர் சிந்திக்க சில உண்டு!

கலைஞர் சிவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ

தாக்கிப் பேசியிருக்கிறாரா என்று சிந்திப்பது

சரியானதாக இருக்கும்.

கலைஞரின் மேடைகளில் சிவநெறியாளர்கள்,

ஆதீனத் தலைவர்கள் பங்கு கொள்கிறார்களே,

ஆனால், இராமகோபாலன்களைப் பார்த்ததில்லையே

ஏன் என்று சிந்திப்பது சரியானதாக இருக்கக் கூடும்.

வேறொன்றுமில்லை! சிவமும் மாலியமும் இந்தத் தமிழ்

மண்ணின் ஆதி மதங்கள்.

சிவவழிபாடு, திருமால் வழிபாடு மட்டுமல்ல,

கவுமார சமயத்தின் முருக வழிபாடும்,

சாக்கியத்தின் சக்தி வழிபாடும் இம்மண்ணின் தொன்மையான

சமய நெறிகள்.

பழனியிலும், சிங்கையிலும், கோலாலம்பூரிலும், கண்டியிலும்

நடைபெறும் தைப்பூச விழாக்களையோ, முருக பக்தர்களையோ

கலைஞர் தாக்கியிருக்கிறாரா ?

மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்களை

கலைஞர் தாக்கியிருக்கிறாரா ? பங்காரு அடிகளாரோடு

ஒரே மேடையில் மேல்மருவத்தூரில் பேசியவர்தான் கலைஞர்.

சிவநெறியாளர்களை தம்மோடு மேடையில் வைத்துக் கொண்டதை

பார்க்காதவர் இருக்க முடியாது. குன்றக்குடி அடிகளார்

எத்தனை மேடைகளில் கலைஞருடன் இருந்திருக்கிறார்

என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால், பல விடைகள்

கிடைக்கக் கூடும். தமிழர்கள் இந்துக்களா ?

என்ற வினா மனதில் தோன்றும்.

இராமேசுவரம்,அண்ணாமலை மற்றும் பல

சிவத்தலங்களில் சிவனை தரிசிக்க காத்திருக்கும் சிவபக்தர்கள்,

திருவரங்கப் பெருமாளையும், வேங்கடப் பெருமாளையும்

காய்வதில்லை. மாறாக தில்லையில் சிவனையும், அறிதுயில் அரங்கனையும்

ஒரே இடத்தில் இருந்து வணங்குகிறார்கள்.

சக்திவழிபாட்டிற்கு மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள்,

அங்கே கிறித்துமசு விழாவின் போது வைக்கப் பட்டிருக்கும்

விழாக்கோலத்தில் வைக்கப் பட்டிருக்கும் ஏசுநாதரைக் கண்டு

அருவெறுப்படைவதில்லை. பங்காரு அடிகளார் அம்மன் பக்தராயிருந்தாலும்

அங்கே கிறித்துவ மதத்தின் கடவுளையும் கிறித்துமசு காலத்தில்

வைக்கத் தயங்கியதில்லை.

பழனிக்குக் காவடிதாங்கிச் செல்லும் பக்தர்கள்,

வேலைத்தூக்கி வேறு மதம் அல்லது நெறியினரைக்

குத்துவதில்லை.

நாகூர் தர்காவிற்கு நேர்த்தி செய்யப் போகும் எத்தனையோ

தமிழர்களைப் பார்த்திருப்போம்.

அப்படி, தழுவும் சமய நெறிகள் பலவாக இருப்பினும்

வெறி இல்லா குமுகாயமாக தமிழகம் இருந்து வருவது,

இந்த இராமகோபலன்களுக்கு மட்டும் எரிச்சலாக

இருக்கிறது.

இவர்களின் இந்துமதம்தான் இன்று வெறிபிடித்து

ஆடுகிறதே தவிர தமிழர்களின் சிவமும் வைணவமும்

அப்படிச் செய்வன அல்ல!

அதனால்தான் எத்தனையோ கூத்துகள் ஆடியும்

தமிழ் மண்ணில் தன் சரக்கு விலைபோக மறுக்கிறது

என்ற வெறுப்பில்தான் ‘மதப்பற்று இந்த (இந்து) மக்களுக்கு

இல்லை ‘ என்று புலம்பி யிருக்கிறார் இராமகோபாலன்.

அந்தப் புலம்பலின் தொடர்ச்சிதான் கோபாலபுரத்து

சந்துகளில் ஊர்வலம் போய் பகவத்கீதையை

கலைஞருக்குப் பரிசளித்த பண்பு!

கலைஞர் பகவத்கீதையை படித்திருக்க மாட்டார் பாருங்கள் 😉

ஆயினும் அதை வாங்கிக் கொண்டு, கீதையின் மறுபக்கத்தை

இராமகோபாலன் கையில் திணித்துவிட்டு

இராமகோபாலனை நாமகோபாலனாக்கி அனுப்பி வைத்திருக்கிறார்

கலைஞர்.

தமிழ்மண்ணில் மிகப்பெரும்பான்மையானவர்கள் சிவனையோ,

திருமாலையோ, முருகனையோ, அம்மனையோ வணங்குபவர்கள்.

பெரியார் எத்தனையோ இக்கடவுளரைத் திட்டியும் கூட

தமிழர்கள் பெரியார் பால் துளியும் வெறுப்புற்றார்கள் இல்லை.

அதுபோல, கலைஞரை இந்து மத எதிரியாக காட்டிவிடத்துடிக்கும்

பலர் உணரவேண்டியது என்னவெனில், தமிழ்மக்கள் அதற்காக

கலைஞரை வெறுத்து விட மாட்டார்கள் என்பதைத்தான்.

மாறாக, ‘கலைஞர் இந்து மத எதிரி ‘ என்று சொல்வது

உண்மையில் தமிழர்களை சிந்திக்கத்தான் வைக்கும்.

வடக்கே சமணத்திடம் தாக்குப் பிடிக்கமுடியாமல்,

தெற்கே சைவத்திடமும் வைணவத்திடமும் ஒண்ட வந்த

வைதீகம், இந்து என்ற முகமூடியில்,

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல,

சைவத்தையும் வைணவத்தையும் தனது முகவரிக்குள்

கொண்டு வந்த கதையெல்லாம் சிந்திக்க வைக்கும்!

அது இந்துமதத்தின் புழுக்கத்தில் இருக்கும்

சிவத்துக்கும் மாலியத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

கிறித்துவர், இசுலாமியர் அல்லாதார் எல்லாம்

இன்று இந்துக்கள் என்று சான்றிதழ்களில் குறிக்கப் படும்

காலம் மாறி, சைவராகவோ, வைணவராகவோ

குறித்துக் கொள்ளும் காலம் வரவேண்டியதன்

அவசியத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டும்!

இசுலாமியரையும், கிறித்துவரையும் கலைஞர்

திட்டுவதில்லையே என்பவர்கள், சைவத்தையும் வைணவத்தையும்தான்

திட்டுவதில்லையே ஏன் ? என்று சிந்திக்க வைக்கும்.

ஆகவே, இராமகோபலன்களே, ‘தொடர்ந்து

இந்து மதத்தின் எதிரியாக கலைஞர் மற்றும் பல தலைவர்களைச்

சித்தரியுங்கள். இதுவும் காலத்தின் கட்டாயம் ‘!

சிவனையும் சித்தனையும் வணங்கிக் கொண்டு

முழுச் சிவ நெறியாளர்களாக இருந்தும்

இந்து என்ற முகமூடியில் தன்னை இழந்திருக்கும்

பல சைவர்களுக்குக் கொஞ்சம் மயக்கம் தெளியட்டும்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

nelan@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

author

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்

Similar Posts