சாய் (என்கிற) பேப்பர்பாய்
டேக்-2
‘ தீனா…மூனா..கானா ‘
வர்ணாஸ்ரம சனாதன கொள்கையை காங்கிரசும் காந்தியும் தாங்கிப் பிடிப்பதாக கோபித்துக் கொண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறிய ஈ.வெ.ரா.பெரியார், 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.
ஒத்தக் கருத்துடைய ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் 1938ல் தேர்ந்தெடுக்கப்படும் வரை சுயமரியாதை இயக்கம் நீடித்தது. இயக்கம் தான் கலைக்கப்பட்டதே தவிர, கொள்கைகள் அல்ல. தனது சித்தாந்தங்களை மக்கள் முன் வைக்க சு.ம. இயக்கத்தாருக்கு , நீதிக்கட்சி அகலமானதொரு தளமாக அமைந்ததெனலாம். மிட்டா மிராசுகளின் கட்சி என்று பரவலாக கருதப்பட்டு சாமானிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த நீதிக்கட்சியை பாமரனிடம் கொண்டு சென்றார் பெரியார்.
அவரது சளைக்காத போராட்டத்தின் விளைவாக சமூக நீதி, பகுத்தறிவு போன்ற கருத்துகள் சாமானிய மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருந்த காலகட்டம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய கவர்ச்சியை உண்டாக்கியிருந்தது. கடவுள் மறுப்பும் வைதீக எதிர்ப்பும் புதிய சிந்தனையின் அடையாளமாக அவர்கள் மத்தியில் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது.
அவ்வாறு கவரப்பட்டவர்களில் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணனும் ஒருவன். அந்த தாக்கத்தின் விளைவாக, பகுத்தறிவுச் செய்தியை தமிழ் டாக்கியில் முதன் முதலாக பதிவு செய்து புதியக் கணக்கைத் துவக்கியவனும் அந்த இளைஞனே.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் 29-11-1908 அன்று சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். மிகச் சாதாரண குடும்பம். சாப்பாட்டுக்கே சிரமம். ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முழுசாக முடிக்க முடியாதபடிக்கு கஷ்ட ஜீவனம். அதனால் அக்காலத்திய நிலமைப்படி, பாய்ஸ் நாடகக் கம்பெனியொன்றில் சேர்ந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் பணியாற்றினான் கிருஷ்ணன். பின்னர் பேசும் தமிழ் சினிமாவில் நுழைய முயன்றான். போராடினான். இறுதியில் வென்றும் காண்பித்தான்.
அந்த கிருஷ்ணன் தான், இறந்தும் இன்று வரை நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
*********
குட்டிக்கரணமடிப்பது, தத்துபித்தென உளறுவது, ஆட்டின் வாலை அளப்பது, ஆனைக்கு அல்வா கொடுப்பது போன்ற வகையிலான கோணங்கித்தனங்களே காமெடிகளாக இருந்து வந்த தமிழ் டாக்கியில் முதன் முறையாக நகைச்சுவைக்கு அந்தஸ்தும் அர்த்தமும் ஊட்டியவர் கலைவாணர். அரசியலையும் கூட.
கலைவாணர் நடித்து முதலாவதாக வெளி வந்த சினிமா ‘சதிலீலாவதி (1936). சமூகப் படம். ( பின்னாளில் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழ் சினிமாவிலும் தவிர்க்கவே முடியாத சக்தியாக உருவெடுத்த எம்.ஜி.ஆர்., ஒரு சின்ன துக்கடா வேடத்தில் அறிமுகமானதும் இந்த படத்தில்
தான்)
நாடகக் காலத்திலேயே பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டிருந்த என்.எஸ்.கே., சினிமாவில் பிரவேசித்ததும் அவற்றை தனது முதல் படத்திலேயே சாதுர்யமாக நுழைத்தார். ( எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கிய அப்படத்தில் அதற்கான வாய்ப்பும் என்.எஸ்.கே.,வுக்கு அமைந்ததை அதிருஷ்டமென்று குறிப்பிட்டலாமா! ) ‘சதிலீலாவதி’யில் கோழி முட்டையும் சாராயத்தையும் ‘காந்தர்வ ஆகாரம்’ என பெயரிட்டு உண்ணும் ஒரு பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்து ஆதிகால பிராமணனின் சுபாவமாக காண்பித்து ஒரு கலக்கு கலக்கினாராம் கலைவாணர். ஏற்கனவே பெரியாரின் கைங்கரியத்தால் பிராமணிய எதிர்ப்பென்பது வசீகர விஷயமாக அப்போது இளைஞர்கள் மத்தியில் பரவி வந்த
நிலையில், புதுமுகக் காமெடியன் கிருஷ்ணனின் இந்த ‘மூவ்’ உடனடியாக ‘ஒர்க்கவுட்’ ஆனது.
அதையடுத்து பட வாய்ப்புகள் மளமளவென கிடைக்க தொடங்கின. பக்த துளசிதாஸ் (1937), திருநீலகண்டர், மாணிக்கவாசகர் (1939), சந்திரகாந்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக 1940களில் கலைவாணரின் திரை வாழ்க்கை உச்சத்துக்குப் போனது. என்.எஸ்.கே.,வின் காமெடி டிராக் இருந்தால் தான் படம் போணியாகுமென்ற நிலை உருவானது.
அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை வெறும் பணம் பண்ணும் சந்தர்ப்பங்களாக கொள்ளாமல், சமுதாயத்துக்கு உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளவே முயன்றார். மீனவனா.. குமாஸ்தாவா.. கோயில் பட்டரா..ஹரிகதா பாகவதரா…துப்புரவுத் தொழிலாளியா…இப்படி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதன் மூலமாக பகுத்தறிவு சுயமரியாதைக் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதையும் பாமரர்களுக்கு புரியும்படியாக பேசினார். பாடினார்.
“காசிக்கு போனால் கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு- இப்போ
ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற
உண்மை தெரிஞ்சி போச்சு…”
– என்று பளீரென அறைந்தார்.
“மாயவன் நாவில் அவள்
உறைவது நிஜமானால்
மலஜலம் கழிப்பதுமெங்கே ? எங்கே?”
– இது ஒரு படத்தில் கலைவாணர், பிரம்மாவையும் (மாயவன்) சரஸ்வதியையும் (அவள்) வம்புக்கிழுத்து பாடினார்.
இன்னொரு படத்திலோ “பாலில்லாமல் குழந்தைகள் அழும் போது கடவுளுக்கு பாலும் பழமும் அபிஷேகமும் அவசியம் தானா?” என்று
கேட்டார். திருஞானசம்பந்தர் குழந்தையாய் இருந்த போது அவருக்கு பார்வதி தேவியே நேரில் பிரசன்னமாகி ஞானப்பால் ஊட்டிய புராண கதையையும் அவர் விட்டு வைக்கவில்லை. பார்வதியிடம் பால் குடித்த உடனேயே அக்குழந்தை, இறைவன் மீது பதிகங்களை பாட ஆரம்பித்து விட்டதாமே என்று அப்போது சுயமரியாதை இயக்கத்தார் செய்து வந்த கிண்டல் கேலியை ‘பூம்பாவை’ என்ற படத்தில் பாடலாய் பிரதிபலித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
மேலும், கலைவாணர் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மணமகள்’ படத்தில் அவரே பாடிய பாடல் வரிகள்:-
” சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே – ஏ
மாத்துகிற வார்த்தையுமிருப்பதாலே !
சாதிமதம் இல்லையென்ப தெதனாலே? – மனம்
சமத்துவம் தானடைந்த தன்மையாலே !”
அதேபோல் அவர் தயாரித்து கதாநாயகனாக நடித்து சக்கைப் போடு போட்ட படம் ‘ நல்லதம்பி’. பரோபகாரியான ஜமீன்தாராக வருவார். அப்படத்தில் மதுரத்துடன் சேர்ந்து பாடுவார்:
” மனுஷனை மனுஷன் ஏச்சு பிழைச்சது அந்தக் காலம்…” என்று ஆரம்பித்து வரும் பாடல்.
நெனைச்சதையெல்லாம் எழுதி வச்சது அந்தக்காலம் – எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம்.
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்சது அந்தக் காலம்- மழையை
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்.
………………………………….
…………………………………
துரோபதை தன்னை துகிலுரிஞ்சது அந்தக் காலம் – பெண்ணை
தொட்டுப் பாத்தாச் சுட்டுப்புடுவாள் இந்தக் காலம்.
………………………………..
…………………………………
சாஸ்திரம் படிச்சது அந்தக் காலம்;
சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பார்த்தது அந்தக் காலம்;
குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம்
– என்று ஒரு பட்டியலேப் போட்டு சனாதனிகளை ஒரு வாங்கு வாங்குவதுடன் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளின் தாக்கம் சமுதாயத்தில் வேகமாக பரவி வருவதாகவும் இப்பாடல் மூலம் கோடிட்டுக் காட்டினார் கிருஷ்ணன்.
அதே படத்தில் இன்னொரு காட்சி. பத்திரிகை நிருபராக வரும் ஒரு கதாபாத்திரம் ஜமீன்தார் என்.எஸ்.கே.வை பேட்டியெடுத்து முடித்து விட்டு விடை பெறும் போது ” ராமா..ராமா..” என்று சொல்லியபடியே எழுந்து கிளம்ப, உடனே அதே வேகத்தில் ” ராவணா…ராவணா.” என்று திருப்பி (திருத்தி) சொல்லி வழியனுப்பி வைப்பார் கலைவாணர். ( புராண ஸ்ரீராமரை எதிர்த்து வீரப்போர் புரிந்த இலங்கை வேந்தன் இராவணனை, ஆக்கிரமிப்பு ஆரிய இனத்தை எதிர்த்து நின்ற திராவிட இனத்தின் குறியீடாக சித்தரித்து அப்போதிருந்தே திராவிட இயக்கத்தார் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)
மேலும் அதே ‘ நல்லதம்பி ‘யில் கோயில் சென்று ஆண்டவனை வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நந்தனாரின் சரித்திரத்தை தனது கொள்கை பிரசாரத்துக்கேற்ப மாற்றியமைத்து ‘கிந்தனார்’ என்ற தலைப்பில் கதாகாலட்சேப காட்சி வைத்தார் கலைவாணர். இந்த காலட்சேபத்தில் பண்ணை வேலைக்கார பையன் கிந்தன், கல்வி பயில சென்னை பட்டணத்துக்கு செல்ல பண்ணையாரிடம் அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பண்ணையார் கிந்தனிடம் சொல்லுவார்:-
“காடுகரை உழைக்கும் பிழைப்பு- அது
கடவுள் நமக்கமைத்த அமைப்பு.
ஏடெழுத்தாணி கொள்ளும் படிப்பு- மிக
ஏற்றமான ஜாதிக்காம் அந்த பொறுப்பு”
-என்று ஜாதிய மேலாதிக்க மனோபாவத்தின் தோலுரித்துக் காட்டினார் கிருஷ்ணன்.
சிவகவி (1944) என்றொரு படம்; தியாகராஜ பாகவதர் நடித்தது. அதில் கிராமத்து ஏழைத் தொழிலாளியாக வருவார் கலைவாணர். ஒரு காட்சியில் தனது நண்பன் கதாபாத்திரத்துடன் கோயிலுக்கு போவார். கோயில் கதவு மூடியிருக்கும்.
என்.எஸ்.கே : வெளியில் இருந்தே பாட்டுப்பாடி பூஜை செய்யப் போறேன். அம்மன் கதவை திறந்து வெளியே வரமாட்டாளாயென்ன ?”
நண்பன் : அதெப்படி ? தேங்கா, பழமெல்லாமில்லாம பூஜை செய்வே?
என்.எஸ்.கே : ஏண்டா, தேங்காயும் பழத்தையும் காட்டி சாமியை ஏமாத்தவா பாக்குறீங்க?
நண்பன்: அது போகட்டும். அப்படியும் உன்னாலே பூஜை செய்ய முடியாதே.
என்.எஸ்.கே.: ஏன்?
நண்பன் : நீ தான் குளிச்சி சுத்தமாயில்லையே.
என்.எஸ்.கே : அப்போ, தவளையும், பாம்பும், மீனும் சதா சர்வகாலமும் தண்ணீக்குள்ளாரயே கிடந்து சுத்தமாயிருக்கு. அப்ப, அதுங்க
பூஜை பண்ணலாமா ? போடா. மனசு சுத்தமாயிருந்தாலே போதும்டா.
– இது நண்பன் பாத்திரத்துக்கு சொல்லப்பட்டதல்ல. உண்மையில், ‘ கோயில்களில் பூஜை செய்யும் உரிமை குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கே தான் காலம் காலமாக இருந்து வர வேண்டுமாயென்ன? ‘ என்கிற திராவிட இயக்கத்தின் கேள்வியே கலைவாணர் வாயிலாக மக்கள் மன்றத்துக்கு சொல்லப்பட்டது.
இவ்வாறாக பெரியாரியக் கருத்துகளை கலைவாணர் சினிமாவில் பிரச்சாரம் செய்து வந்த அதே நேரத்தில் காந்தி மீது தான் கொண்டிருந்த அபிமானத்தையும் அவர் வெளிப்படுத்த தவறவில்லை. உதாரணமாக ‘நல்லதம்பி’யில்,
” உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம்தமிழ்நாடு.
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய்
உணர்ந்து நடப்பதில் எமக்கில்லை ஈடு.
……………………………………..
………………………………………
இந்தக் கள்ளுக்குடியை
நம்ம நாட்டை விட்டு
ஒழிச்ச அந்த நல்ல மனுஷங் காலுக்கு
கோடி கோடி கும்பிடு “
-என்று பாடி தனது காந்தி நேசத்தையும் வெளிப்படுத்துவார் என்.எஸ்.கே.
***************
இதற்கிடையில் கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது, சென்னையில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் 1944ல் கைதாகி 1947ல் விடுதலையானார். சிறைக்கு போய் திரும்பிய பிறகும் என்.எஸ்.கே.வின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. சினிமா மார்க்கெட் சரிந்திடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு பிறகு தான் அவர் பல படங்களை சொந்தமாக தயாரித்து வெற்றியும் கண்டார்.
அப்படி அவர் தயாரித்தப் படங்களில் குறிப்பிடத்தக்கது தான் ‘ நல்லதம்பி ‘. அப்போது பெரியாரின் பிரதான சீடராகவும் (திராவிட இயக்க மொழியில் ‘தளபதி’ ) அவரது இயக்கத்தின் போர்வாளாக வர்ணிக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாதுரையின் பேச்சாற்றல் முக்கியமாக எழுத்தாற்றல் கலைவாணரை வெகுவாக ஈர்த்திருந்தது. அண்ணாவை சினிமாவுக்கு இழுக்க கிருஷ்ணன் விரும்பினார். அதற்கான ஆற்றலும் ஆசையும் அண்ணாவுக்கும் இருக்கவே அவரது கதை வசனத்தில் ‘ நல்லதம்பி’ படத்தை 1949ல் கலைவாணர் தயாரித்து வெளியிட்டார்.
ஆக, ‘ நல்லதம்பி’ வாயிலாக அண்ணா, சினிமாவில் காலடி எடுத்து வைக்கவும் அதன் மூலமாக திராவிட இயக்கத்தின் நங்கூரம் அசைக்க முடியாதபடிக்கு தமிழ் சினிமாவினுள் இறங்கவும் என்.எஸ்.கே., அடிகோலினார் என்றால் அது மிகையாகாது.
‘ நல்லதம்பி ‘ வெளியான அதே ஆண்டு தான் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் இயக்கம் உருவானது. பெரியாரின் கருத்துகளில் மனதை பறி கொடுத்திருந்த கலைவாணர், அதே கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்த திமுக மீதும் அபிமானம் கொண்டிருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் , அண்ணாவின் தளபதியாகவும் திமுகவின் போர்வாளாகவும் வர்ணிக்கப்பட்ட – எழுத்தாற்றல்மிக்க மு.கருணாநிதியையும் தான் தயாரித்த ‘ மணமகள்’ (1951) படத்துக்கு இழுத்துப் போட்டுக் கொண்டார். (இதற்கு முன்பே 1947லேயே ராஜ்குமாரிபடத்தின் மூலம் வசனக்கர்த்தாவாக மு.க., அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
பின்னர் 1952ல் ‘பணம்’ தயாரித்தார். இதிலும் கதை வசனம் மு.க., தான். ‘ பராசக்தி ‘ மூலம் பிரபலமாகி அப்போது திமுக நடிகராக கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன் தான் கதாநாயகன்.
புதியதாக உருவாகியிருந்த தி.மு.க.வுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கிலோ அல்லது தி.க.வும், தி.மு.க.வும் அடிப்படையில் ஒன்றே என்று சொல்ல விரும்பியோ என்னவோ, ‘பணம்’ படத்தில் பரபரப்பான அரசியல் பாடல் ஒன்றை வைத்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். காங்கிரஸ் அல்லாத ஒரு அரசியல் இயக்கத்தின் அதாவது திராவிட இயக்கத்தின் இருப்பு அல்லது துதி , முதன்முறையாக தமிழ் சினிமாவில் பட்டவர்த்தனமாக முகத்துக்கு நேராக தூக்கி காண்பிக்கப்பட்டது இந்த பாடல் மூலம் தான் எனலாம். அது தான் ‘ தீனா…மூனா…கானா..” . இந்த பாடலை எழுதியவரும் அப்போது தீவிர திமுககாரராக இருந்த கவிஞர் கண்ணதாசனே.
” தீனா…மூனா…கானா – எங்கள்
தீனா…மூனா…கானா.
அறிவினை பெருக்கிடும்
உறவினை வளர்த்திடும், எங்கள் (தீனா)
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ்
திருக்குறள் தந்தார் பெரியார்
வள்ளுவப் பெரியார்! – அந்தப்
பாதையில் நாடு சென்றிடவே- வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும், எங்கள் (தீனா)
கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும் – தலை
கனத்தைக் குறைத்து நல்லத்தன்மையுண்டாக்கும்.
……………………………………..
…………………………………………….
தனயன்மாருகளுக்கொரு தந்தையைப் போலே
தங்கைகளுக்கொரு தமக்கையைப் போலே
தம்பிமாருக்கொரு அண்ணா போலே
சரியும் தவறும் இதுவெனக் காட்டும்
தமிழன் பெருமையை நிலை நாட்டும்
எங்கள் தீனா..மூனா…கானா..
எங்கள் தி…மு…க…! “
இந்தப் பாடலை என்.எஸ்.கே. பாடுகையில், பெரியார், அண்ணா என்று வரும் போது அந்த வார்த்தைக்கு தரும் விசேஷ அழுத்தத்திலேயே அவரது அபிமானமும், நோக்கமும் பளிச்சென புலப்படும். அதே போல் ‘தீனா..மூனா…கானா.. வுக்கு பாடல் ஆரம்பத்தில் ‘ திருக்குறள் முன்னணிக் கழகம் ‘ என்று அர்த்தம் சொல்லி விட்டு, பாடல் கடைசியில் முடியும் போது ‘ எங்கள் தி..மு…க…’ என்று அழுத்தந் திருத்தமாக சொல்லி முடித்து வைப்பார் என்.எஸ்.கே.
இப்படியாக, தமிழ் டாக்கியில் திராவிட இயக்கத்துக்கு இடம் பிடித்துக் கொடுத்து விட்டு 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மண்ணுலகை விட்டுப் பிரிந்தார் வள்ளல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
(வளரும்)
அடுத்து: ‘ இரட்டைக் குழல் துப்பாக்கி ‘
vee.raj@rediffmail.com
- ரியாத் கலை விழா – 2006-12-08
- அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
- ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு
- காதல் நாற்பது (2) – சாதல் அல்ல காதல் !
- யுனிகோடு ( ஒருங்குறி ) தமிழ் எழுத்துரு வரலாறு
- Letter – Flourishing of Sanars and malaprop of Nadars
- கணையாழியில் நான் கண்டது
- எழுத்தாளர் அம்பைக்கு 2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது
- கடித இலக்கியம் – 38
- “அனைத்துயிரும் ஆகி” – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
- பதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்
- N F S C தேவராட்டம் பயிற்சி முகாம்
- கற்பழிக்கத் தூண்டிய கவிதை
- கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி
- யாசகம் !
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 2
- பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை
- ஆசிரம வாழ்க்கை
- நீர்வலை (4)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17
- மின்னூட்டாம் பூச்சி
- இதுவேறுலகம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1
- உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் – ஒரு கேள்வி-பதில்- 1
- மக்காக்கா!…மக்காக்கா!
- அரபு தேசிய வாதம்
- ஒரு திரைமீன் வாய் திறக்கிறது !
- பெரியபுராணம் – 118 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- நன்றிக் கடன்
- இலை போட்டாச்சு 8 – சட்டினி வகைகள்
- என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்
- மடியில் நெருப்பு – 18