ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

சத்யானந்தன்


யுத்த காண்டம் – மூன்றாம் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

யுத்த காண்டம் மிகவும் நீண்டது. விபீடணனைத் தவிர ராவணனின் அரச குல ஆடவர் அனைவரும் போரில் மடிகின்றனர். இவருள் இந்திரஜித் என்னும் ராவணனின் மகனும் கும்பகர்ணனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

யுத்தத்தில் பல்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமாக ராமனும் வானர சேனையும் மறுபக்கம் ராவணனும் அவனது வீரரும் முன்னேற்றமோ பின்னடைவோ கொள்கின்றனர். மாயாஜாலங்களில் பெரிதும் சிறந்தோராக அரக்கரும் திவ்யாஸ்திரங்களில் மிகவும் உயர்ந்தோராக ராமலட்சுமணரும் வர்ணிக்கப் படுகின்றனர். யுத்தத்தின் ஒவ்வொரு நிலையிலும் விபீடணன் ராவணனது ரகசியங்களை ராமனுக்குத் தெரியப்படுத்துகிறான். அதனால் யுத்தத்தைக் கொண்டு செல்ல வேண்டிய வழி புலனாகிறது. பல்வேறு வரங்களையும் மாயக்கவசங்களையும் பெற்ற ராவணனனை வீழ்த்துவது ராம-விபீடண கூட்டணியினால் மட்டுமே சாத்தியமாகிறது.

அறவழியில் செல்லுபவனாகவும் அரசியல் ரீதியாகவும் விபீடணன் ராமனிடம் சரணடைந்தது ஆகச் சிறந்த முடிவாகவே அமைகிறது. ராமாயணத்தை வாசிப்போர் யாருக்கும் விபீடணின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இறுதியாக ராவணன் வீழ்த்தப்பட்டு அவனது உடல் தரையில் கிடக்கிறது. அப்போது அருகில் இருப்பது ராமலட்சுமணனும் அனுமனும் விபீடணனும். இந்தக் காட்சியில் விபீடணனைப் பொருத்த அளவில் அவனது சகோதரன் பிணமாகிக் கிடக்கிறான். யுத்தத்தின் ஒரு நிலையில் இந்திரஜித்தின் நாக அஸ்திரத்தில் அடிபட்டு லட்சுமணன் நினைவிழக்கிறான். அப்பொது ராமன் மிகவும் மனம் துயறமுற்று வருந்துகிறான். அந்த வருணனைகளை வாசிக்கிறோம். இப்போதோ ராவணன் உயிரையே துறந்து விட்டான். அவனது சகோதரன் விபீடணனின் மனநிலை யாது? உலகுக்கெல்லாம் அவன் கொடிய அரசனாயிருக்கலாம். ஆனால் விபீடணனுக்கு சொந்த அண்ணன். அதனாலேயே தகப்பனுக்குச் சமமானவனும் ரத்தத்தின் உயிர்0த் துடிப்போடு நேசிக்கப்படுபவனும். இல்லையா?

முதலில் கம்பராமாயணத்தின் படி விபீடணனின் எதிர்வினையைக் காண்போம்:

காத்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்னக் கற்கும்
வார்த்தை உண்டு அதனைக் கேட்டு நாணுறு மனத்தினேற்கும்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம்
நேர்த்தலும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க

மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கும் இசை முயங்க மாட்டாது
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப்புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் என்றான்

பொருள்: காத்தவீரியன் என்னும் ஒருவன் ராவணனைக் கட்டிப் போட்டான் என்று ஒரு சொல் உண்டு. இன்னொருவனால் தோற்கடிக்கப்பட்டவனை வெற்றி கொள்ளும் படி ஆகிவிட்டது. அவனது புறமுதுகிலும் புண் பட்டதால் நான் அவனை வென்ற விதம் தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். கயிலை மலையின் கீழே நசுங்கியவன் இந்த ராவணன்.

இந்தப் போரில் நான் மரித்திருந்தாலும் அது மேலானது. இனி உயிர் வாழ்ந்து உண்டு களிப்பேன் எனப் பகைவர் எள்ளி நகையாடக்கூடும். புறமுதுகிடும் தொழிலானவனான ராவணனைக் கொன்று நான் பெற்ற வெற்றி அபத்தமானது என்றான்.
(பாடல் 3848, 3849 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

இதற்கு விபீடணின் பதில்:
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஜய
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த
தாயினும் தொழத் தக்காள் மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால் வெல்வரோ நுவலற்பாலார்

பொருள்: தேவர்கள் அளித்த சாபத்தினாற்தான் ஆயிரம் கைகளுடைய காத்தவீரியனும் வாலியும் ராவணனை வென்றது. சீதை தாயினும் தொழத் தகுந்தவள். அவள் மீது கொண்ட ஆசையும் தங்களது சினமுமே அன்றி வேறு எதுவும் அவனை வெல்ல இயலாது. (பாடல் 3851 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

மேற்கண்டவாறு தொடங்கிப் பலவிதமாகவும் விபீடணன் ராமனின் வெற்றி மிகவும் போற்றுதற்கு உரித்தானதே என்று விளக்குகிறான். அவனது உரை முடிவில் ராமன் சொல்கிறான்:

அன்னதோ என்னா வீரன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணாதக்கது அன்றால்
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான்
(பாடல் 3856 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

பொருள்: தன்னைப் பற்றிய ஐயமும் நாணமும் நீிங்கப் பெற்ற மாவீரனாகிய ராமன் தனது தோள்களைப் பெருமையோடு பார்த்துக் கொண்டான். பிறகு ” விபீடணா ! இது என்ன? இறந்தவன் மீது ஏன் இந்த வெறுப்பு? நூல்கள் சொல்லிய விதமாக அவனுக்குரிய ஈமைக் கடன்களைச் செய்வாயாக” என்றான். (பாடல் 3857 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

போழ்ந்ததென அரக்கன் செய்த புண்தொழில் பொன்றயிற்று ஆமால்
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக்கான் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை தன்னால் தலைமகன் அருள் தள்ளி
வீழ்ந்தனன் அவன் மேல் விழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்ததென”

பொருள்;” ‘இதயத்தையே பிளந்தது போல் சீதையைச் சிறைப்பிடித்த ராவணனின் குற்றச்செயல் அவன் மரணத்தோடு முடிந்தது. வாழ்பவனாகிய நீ ஏற்ற ஈமைக்கடன்களைச் செய்வாயாக.’ என்னும் கருணை மிக்க ராமனின் சொற்களைக் கேட்ட விபீடணன் ஒரு மலையின் மேல் மற்றொரு மலை வீழ்ந்தது போல ராவணனின் உடலின் மீது வீழ்ந்தான்.

எவரும் உலகத்து எல்லா உயிர்களும் எரியும் நெஞ்சின்
தேவரும் முனிவர் தாமும் சிந்தையின் இரக்கம் சேர
தாஅரும் பொறையினான் தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகுவாய் ஆர

பொருள்: பொறுமையில் பழுதற்ற விபீடணன் தன் அறிவினால் அடக்கி வைத்திருந்த ஆற்றாமையும் துயரமும் தீர வாய் விட்டு அழுது புலம்பினான். அதைக்கண்ட தேவர், முனிவர், உலகத்து உயிர்கள் அனைவரது மனமும் ராவணனின் கொடுமையால் கொண்ட கொதிப்பு நீங்கி அவன் பால் இரக்கம் கொண்டனர். மேற்கண்டவாறு தொடங்கிப் பலவிதமாகவும் விபீடணன் ராமனின் வெற்றி மிகவும் போற்றுதற்கு உரித்தானதே என்று விளக்குகிறான். அவனது உரை முடிவில் ராமன் சொல்கிறான்:

அன்னதோ என்னா வீரன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணாதக்கது அன்றால்
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான்
(பாடல் 3856 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

பொருள்: தன்னைப் பற்றிய ஐயமும் நாணமும் நிங்கப் பெற்ற மாவீரனாகிய ராமன் தனது தோள்களைப் பெருமையோடு பார்த்துக் கொண்டான். பிறகு ” விபீடணா ! இது என்ன? இறந்தவன் மீது ஏன் இந்த வெறுப்பு? நூல்கள் சொல்லிய விதமாக அவனுக்குரிய ஈமைக் கடன்களைச் செய்வாயாக” என்றான். (பாடல் 3859 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில்
ததஸ்து சுக்ரீவவிபீஷணாங்கதாஹா
சஹருத்விஸிஷ்டாஹா ஷஹலக்ஷ்மணஸ்ததா
ச்மேத்ய ஹ்ருஷ்டா விஜயேன ராகவம்
ரணோபிராமம் விதிநாப்யபூஜயன்

பொருள்: சுக்ரீவன், விபீடணன், அங்கதன் மற்றும் லட்சுமணனும் அவர்தம் சகாக்களும் ஸ்ரீ ராமசந்திரரின் வெற்றியில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு விதிப்படி பூஜை செய்தனர். (பாடல் 33 ஸர்க்கம் 108 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ப்ராதம் நிஹதம் த்ருஷ்ட்வா ஷயானம் நிர்ஜிதம் ரணே
ஷோகவேகபரிதாத்மா விலலாப் விபீஷண

பொருள்: தோற்ற சகோதரனின் பிணம் தரையில் கிடப்பதைப் கண்ட விபீடணனின் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. அவர் அழுது புலம்பினார். (பாடல் 1 ஸர்க்கம் 109 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஏஷோ அஹிதாக் நிஷ்ச மஹாதபாஷ்ச்ச
வேதந்தகஹ சாத்ரயஷூரஹ
ஏதஸ்ய யத் ப்ரேதகதஸ்ய க்ருத்யம்
தத் கர்த்துமிச்சாமி தவ ப்ரசாதாத்

ஸ தஸ்ய வாக்யைஹி கருணைமகாத்மா
சம்போதிதஹ சாது விபிஷணேன்
ஆக்யாபயாமாச நரேந்த்ரஸுனுஹூ
ஸ்வர்கீயமாதாமை தீனஸத்வஹ

பொருள்: இந்த ராவணன் அக்னி ஹோத்ரி, பெரிய தபஸ்வி, வேதாந்தி மற்றும் யாகம் யக்ஞங்களில் சூரன்- அதாவது மிகவும் கருத்தானவன். இவன் மரணமடைந்துள்ளதால் தங்கள் தயையுடன் நான் இவனுக்கு கிரியைகள் செய்ய விரும்புகிறேன்.
விபீடணனின் இறைஞ்சும் சொற்களைக் கேட்ட கருணை மிக்க இளவரசர் ராமர் நல்லோரை சொர்க்கமடையச் செய்யும் இறுதிச் சடங்குகள் செய்ய ஆணை தந்தார். (பாடல் 23,24 ஸர்க்கம் 109 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில் விபீடணன் துக்கமடைந்தானென்று குறிப்பிடப் பட்டுள்ளது. கதறி அழுததாக இல்லை.

க்ருபா த்ருஷ்டி ப்ரபு தாஹி விலோகா
கரஹு க்ரியா பரிஹரி சப் ஷோகா
கீன்ஹ க்ரியா ப்ரபு ஷ்ராய்ஸுமானி
விதிவத் தேஷ கால கதி ஜானி

பொருள்: கருணை மிகுந்த பார்வையுடன் விபீடணனிடம் ராவணனின் அந்திமக் கிரியைகளைச் செய்து சோகத்தை விடும் படி ராமர் கட்டளையிட்டார். காலம் இடம் இரண்டையும் கருத்திற் கொண்டு விபீடணன் ராமரின் கட்டளைப் படி கிரியைகளைச் செய்து முடித்தான் (பக்கம் 800 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

கம்பராமாயணத்தை ஒப்பிடும் போது மற்ற இரு ராமாயணங்களிலும் விபீடணன் நிலை தேவலாம். அதாவது அழுவதற்குக் கூட ராமனின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. இருந்தாலும் மூன்றுக்கும் பொதுவான ஒன்று ஈமக்கிரியைகள் செய்ய ராமன் ஆணையிட்டான் என்பது. வாசிக்கும் போதே மிகவும் மனச்சங்கடத்தை ஏற்படுத்துவது. தனது சகோதரனுக்கு இறுதியாகச் செய்ய வேண்டிய கடமைக்கும் இன்னொருவர் (அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்றாலும், நல்லவர் என்றாலும்) அனுமதி நோக்கி நிற்கும் நிலை அரசியல் ஒரு தனி மனித வாழ்க்கையை ஒரு குடும்பத்தின் ஒப்பற்ற மனித உறவுகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். சமுதாயத்தின் அங்கமாக இங்கு விபீடணன் செயற்படவில்லை. அதே சமயம் தன்னுள் பீறிட்டெழும் பாசத்தையும் அடக்கிக் கொண்டிருக்கிறான். இது ஆண்டான் அடிமை என்னும் நிலையில் இயங்க வேண்டிய கட்டாயத்தையே காட்டுகிறது. அது , தானே விபீடணன் வலிந்து ஏற்றதோ ?

ராமாயணம் அடிப்படையில் மன்னன் அல்லது மன்னர் குடும்பங்களின் வரலாறே. எனவே இந்த வாசிப்பு பண்பாட்டுக்கு முன்னுதாரணமாக, மையமாக, வழிகாட்டியாக விளங்கியோர் பற்றியது. மன்னன் கடவுள் இல்லை என்பது ஒன்றைத் தவிர அவன் நடமாடும் தெய்வமாக வழிபடப் பட்டான். எல்லா கதா பாத்திரங்களையும் பின்னணி அடிப்படையில் இரு வகையாக்கலாம் – மன்னர் குலம் மற்றவர் என. மன்னர் குலத்தவர் தமது வட்டத்துக்குள் பின் பற்றும் மனித உறவு வரையறைகள் மற்றும் ஏனையர் அவர்களோடு பழக வேண்டிய முறை என நாம் சில பாரம்பரியங்களைக் காண்கிறோம்.

“தனி மனிதன் என்பதா அல்லது சமுதாயத்தின் அங்கம் என்பதா” என்னும் நம் கேள்விக்கான் விடை அதிகார மையத்தைச் சுற்றி அமையும் என்னும் எண்ணம் யுத்த காண்டத்தைத் தொடர்ந்து வாசிக்கும் போது நம்முள் வலுக்கிறது.

அதிகார மையம் மெல்லிய அசைவு கொண்டால் அது தனிமனித வாழ்க்ககளைப் பெரிய பூகம்பமாய்ப் புரட்டிப் போடுகிறது. தனி மனிதனின் மீது சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க இயலாதது. ஆனால் அந்த சூழ்நிலைகளை அதிகார மையமே நிர்ணயிக்கிறது. ஒருவனது இருப்பு தன்னருகிலும், தன்னுள்ளும் அல்லது தன்னை விட்டு விலகியும் இவற்றுள் எதையுமே அதிகார மையமே தீர்மானிக்கிறது.

அதிகார பீடத்தில் அமர்வதோ அதன் ஆதரவாக இயங்குவதோ அதிக சுதந்திரம் கிடைக்கிற பணிகள் ஆகா. இந்தக் கோணம் வசப்பட தொடர்ந்து வாசிக்கிறோம்.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts