ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

சத்யானந்தன்


யுத்த காண்டம் – இரண்டாம் பகுதி

போர் ஒரு திருப்புமுனையே. தீர்வு அல்ல. போர் ஒரு சமூகமோ, அரசனோ தவிர்த்து வந்த ஒரு மாற்றத்தை வன்முறையாக நிகழ்த்திக் காட்டுகிறது. எல்லாப் போரின் முடிவிலும் ஒரு தொலை நோக்கற்ற தலைவனின் முடிவு நிகழ்த்தப்படுகிறது.

போர் பல காவியங்களின், பல இலக்கியப் படைப்புகளின் களனாகியுள்ளது. மன்னனின் புகழ் பாடியோர் அவன் போரில் கொன்று குவித்த காதையை அவன் வீழ்த்திய அரசுகளின் வரிசையைச் சொல்லியே பாடினர். போரின் தாக்கமும் அது நிகழ்த்தும் மாற்றமும் ஒரு வரலாறின் இன்றியமையாத பகுதியாகப் போரை உயர்த்தின.

ஆனால் போர்கள் இருமுனை மன்னர்களுக்கு எப்போதுமே மிகப் பெரிய சவாலாக இருந்தன. ஏனெனில் போரின் முடிவு அவர்களது அதிகார பீடத்தின் அல்லது அரசியல் வாழ்க்கையின் முடிவாக இருக்கக் கூடும். இதனால் போருக்காகத் திட்டமிடல் மற்றும் தயாராவதில் ஒரு முக்கியமான பகுதியாகப் போரைத் தவிர்த்து தூதுவர் மூலமாகப் பேசிப் பிரச்சனையைத் தீர்க்க முயலுதல் இருந்தது.

வெற்றி பற்றிய நிச்சயம் இருந்த மன்னன் கூடத் தூது அனுப்பும் வாய்ப்பை நழுவ விடுவதில்லை. ஏனெனில் அழிவு, உயிர்ச்சேதம் என்பது வெல்லும் மன்னனின் நாட்டுக்கும் படைக்கும் உண்டு. எனவே தூது அனுப்பும் வழிமுறை மிக அவசியமான பாரம்பரியம் ஆகிறது. ராமனும் அந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறான். ராவணனிடம் பேச அங்கதனைத் தூது அனுப்புகிறான்.

“தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும் ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலையம் அன்னான்”

“கருணையின் உறைவிடமான ராமன் ‘நாம் ஒரு தூதுவனை அனுப்பி சீதையை விடிவிக்கும்படி ராவணனை வேண்டிவோம். அவன் மறுத்தால் போரிடச்செல்வோம். அறமும் நீதியும் அதுவே ஆகும்” (பாடல் 916 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

தூதோ அஹம் கோசலேந்திரஸ்ய ராமஸ்யாகிஷ்டக்மணஹ
வாலிபுத்ரோ அங்கதோ நாமயதி தே ஷோத்ரமாகதஹ
ஆஹத்வாம் ராகவோ ராமஹ கௌஸல்யானந்தன தவர்த்தனஹ
நிஷ்பத்ய ப்ரதியுத்வஸ்ய ந்ருஷம் புருஷோபவஹ
ஹந்தாஸ்மி த்வாம் ஸஹாமாத்யம் சபுத்ரஞாந்திபாந்தவம்
நிருத்திக்னாஸ்த்ரயோ லோகோ பவிஷ்யந்தி இதே த்வயி

பொருள்:” மிக எளிதாக பெரும் சாதனைகள் செய்யும் கோசலை மன்னன் ராமனின் தூதனும் வாலியின் மகனுமான அங்கதனுமாவேன். என் பெயரை நீ கேள்விப்பட்டிருக்கலாம்.”

அன்னை கோசலையின் மகிழ்ச்சியை அதிகமாக்கும் ரகுகுலதிலகமான ஸ்ரீராமர் உனக்கு சொல்லும் செய்தி ஆவது “பேடியான ராவணனே ! சற்றேனும் ஆண்மையுடன் வீட்டை விட்டு வெளியே வந்து போரில் என்னை எதிர் கொள்.

உனது மந்திரி, மகன்கள், மற்றும் உறவினருடன் சேர்த்து உன்னையும் வதம் செய்வேன். ஏனெனில் உன்னை அழித்தால் முவ்வுலக உயிரும் பயமின்றி வாழ்வர்” (வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் ஸ
ர்க்கம் 41 பாடல் 78, 79, 80)

கஹ கபி தர்ம ஷீலதா தோரி
ஹமஹு(ன்) சுனிக்ருத் பாதிய சோரி
தேகேவு நயன் தூத் ரக் வாரி
பூடி ந மரேஹு தர்மப்ரத்தாரி

பொருள்: “அங்கதன் சொன்னான் “அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் உன் தர்ம சிந்தனை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தூதுவனை நீ காப்பதைக் கண்ணாலேயே காண்கிறேன். இதை தர்மபாலனம் என்னும் நீ முழுகினாலும் இறந்து போகாதவன்” (பக்கம் 714 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இப்படி தூது அனுப்பும் ராமன் வாலியை வதம் செய்த போது எந்த அணுகுமுறையை மேற்கொண்டான்? சமுதாயத்தின் தேர்ந்தெடுத்த எந்த விழுமியங்கள் அவனுக்கு வழி காட்டின? வாலி வதத்தைத் தவிர்க்க இயலாது என்னும் கருத்து மட்டுமே தென்படுகிறது. வேறு எந்த மாற்றும் இல்லை என்னும் கருத்தும்.

சீதையைப் பிரிந்து மனம் துயர் அடையும் நேரத்தை விட்டு விட்டால் ராமன் ஒரு அரசனின் அரசியல் ரீதியான கண்ணோட்டத்தோடுதான் செயற்படுகிறான். ரிஷிமுனிவர்களை ரட்சிக்கிறான். தனது எதிரியை இனங்கண்ட பின்னர் படைகளைத் திரட்டுகிறான். சரணம் என்று வந்த பகைவனின் தம்பியை ஏற்கிறான். இறுதிப் போருக்கு முன்னர் மறுபடி ஒரு தூதுவனை அனுப்புகிறான். ஒரு அரசனாக இயங்குவதில் பிறழாது செயற்படுகிறான். ஒரு அரசன் என்பவன் கடவுளுக்கு அடுத்தபடியாக சமுதாயத்தால் நாட்டு மக்களால் போற்றப்படுபவன். எனவே அந்த பீடத்தின் கட்டாயங்களைத் தாண்டிய ஒரு கவனம் தேவையில்லை. அந்தப் பதவியின் கூரான விளிம்புகளுக்கு உள்ளேயே அவன் இயங்க வேண்டும்.

எனவே, ஒரு மன்னனோ அல்லது இளவரசனோ தனது பாதையை சமுதாயத்தின் அங்கமாக என்று நூற் பிடித்த மாதிரி ஒரு வழியில் செல்ல இயலாது. சூழ்நிலைக்கும் தனது பார்வைக்கும் ஏற்ப அவன் செய்யும் முடிவுகள் ஒவ்வொரு விதமாக இருக்கக் கூடும்.

அப்படிப்பட்ட புரிதலுக்குள்ளும் விபீடணனும் கும்பகர்ணனும் எடுக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகள் அடங்கவில்லை. விபீடணன் கும்பகர்ணன் இருவருமே ராவணனுக்கு அறிவுறு த்துகிறார்கள். ஆனால் விபீடணன் ராவணனை விட்டு நீங்கும் முன்பாக எதிரியுடன் சரணடையும் முன்பாக ஒரு இறுதி எச்சரிக்கை மாதிரியாகத்தான் அறிவுரை கூறுகிறான். கும்பகர்ணனிடம் ராவணனின் மனமாற்றத்தை விரும்பும் அதே சமயம் உடன் நின்று போராடி உயிரையும் கொடுக்கும் உறுதி தென்படுகிறது.

முதலில் விபீடணன் சொற்கள்:
“எத்துணை வகையினும் உறுதியெய்தின
ஒத்தன உணர்த்தினேன் உணர்கிற்றிலை
அத்த என் பிழை பொறுத்தருளுவாய் என
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.”

பொருள்: “நல்லனவும் உறுதிமிக்க வழியானதாகவும் உள்ளவற்றைப் பலவிதமாக உனக்கு எடுத்துரைத்தேன். ஆனால் நீ உணரவில்லை என் பிழையைப் பொறுத்து அருள்வாயாக” என உத்தமனான விபீடணன் லங்கையை விட்டு வெளியேறிப் போனான். (பாடல் 317 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்
மட்டவிழ் மலர் குழலினாளை இனி மன்னா
விட்டிடுது மேல் எளியம் ஆதும் அவர் வெல்ல
பட்டிடுது மேல் அதுவும் நன்று பழி அன்றால்

பொருள்: ” மன்னவனே ! சான்றோரின் செயலை நீ செய்யவில்லை. குலத்திற்கே இழுக்கு ஏற்படும் செயலைச் செய்தாய். கூந்தலில் தேன் சிந்த மலர்ந்து பூக்களை அணிந்த சீதையை விட்டு விடுவது மேலானது. ஆனாலும் நாம் எளியவரென்று இழிவாக கருதப்படுவோம். அவர்கள் நம்மை கொன்று போரில் வெல்லக் கூடும். அது சிறந்தது. ஏனெனில் பழி இன்றி இறப்போம் நாம்.”

வால்மீகி ராமாயணத்தில் விபீடணன் சொற்கள்:
தன்மர்ஷயது யன்சோக்தம் குருத்வாத்திதமித்ததா
ஆத்மான் சர்வதா ரக்ஷ புரீம் சேமாம் ஸராக்ஷஸாம்
ஸ்வஸ்தி தேஅஸ்து கமிஷ்யாமி சுகீ பவமயாவினா

பொருள்: “ராட்சஸரின் அரசனே ! நான் உன் நலம் விரும்புகிறேன். எனவே நான் கூறியவை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என் அண்ணன் என்னும் முறையில் என்னை மன்னித்து விடு. இனி நீயும் ராட்சஸருமாய் முழு லங்கையைக் காப்பீராக. உனக்கு நல்லது நடக்கட்டும். நான் இங்கிருந்து கிளம்பி விடுகிறேன். நீ நான் இல்லாமல் சுகமாயிருப்பாயாக.

நிவார்யமாணஸ்ய மயாஹிதைஷிணா
ந ரோசதே தே வசனம் நிஷாசர
பராந்தகாலேஹி கதாயுபோ நரா
ஹிதம்ந க்ருஹம்தி ஸுகப்திரீரிதம்

பொருள்: தவறான நடத்தையுள்ள மன்னா! நான் உனது நலம் விரும்பி. எனவே நான் பல முறைகள் உன்னை கெட்ட வழியில் இருந்து செல்லாமல் நிறுத்த முயற்சித்தேன். ஆனால் என் பேச்சு உனக்குக் கசப்பாயிருக்கிறது. ஆயுள் முடியும் நிலை வந்தோர் அன்புக்குறியவரின் பேச்சைக் கேட்க மாட்டார்கள்” (ஸர்க்கம் 16 பாடல் 15,16 வால்மீகி ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் கும்பகர்ணன் பேச்சு:
யதுகதமிஹ தே பூர்வே பிரியயா மேஅனுஜேனச

பொருள்: உனது அன்பு மனைவி மண்டோதரி மற்றும் என் அன்புத் தம்பி விபீடணன் உன்னிடம் என்ன சொன்னார்களோ அதுவே நமக்கு நன்மை தரக் கூடியது. உன் மனம் எவ்வழி விரும்பிகிறதோ அவ்வழி செல்” (ஸர்க்கம் 63 பாடல் 11 வால்மீகி ராமாயணம்)

அவஷ்யம் து ஹிதம் வாச்யம் ஸ்ர்வாவஸ்தம் மயா
பந்து பாயாதபிஹிதம் ப்ராதுஷ்னேகாஷ்ச்ச பார்த்திவ
ஸத்ருஷம் யச்ச காலே அஸ்மின் கர்த்தும் ஸ்னேஹேகா
வித்ருணாம் கதனம் பஷ்ய கிர்யமாணம் மயாரணம்

(ஸர்க்கம்63, பாடல் 33,34, வால்மீகி ராமாயணம்)

பொருள்:” மன்னா ! அவசியமாக உனக்கு நன்மை பயக்கும் சொற்களையே எப்போதும் நான் சொல்ல வேண்டும். சகோதர பாசத்திலும் சொந்தம் என்ற பற்றிலுமே நான் இவ்வாறு பேசினேன்.

ஆனால் இப்போது சகோதர பாசத்தின் அடிப்படையில் நான் என்ன செய்வது நல்லதோ அதையே செய்வேன். இனிப் போர்க்களத்தில் என்னால் எதிரிகள் கொல்லப் படுவதை நீ காண்பாய்’.

ராமசரிதமானஸில் விபீடணன்

ராம சத்ய சங்கல்ப பிரபு சபா கால்பஸ் தோரி
மை(ன்) ரகுனாயக ஷரண் அப், ஜாவூ(ன்) கோரி நஹி மோரி
பொருள்:ஸ்ரீராமர் நினைப்பது தான் நடக்கும். உன்னையும் உன் மந்திரிகளையும் மரணம் சூழ்ந்துள்ளது. நான் இப்போது ஸ்ரீராமரைச் சரணடைகிறேன். என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம். (பக்கம் 676 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

ராமசரிதமானஸில் கும்பகர்ணன்:

கீன்ஹேவு ப்ரபு விரோத் தேஹி தேவக்
ஷிவ விரஞ்சி சுர் ஜாகே சேவக்
நாரத் முனி மோஹி(ன்) ஞான் ஜோ கஹேவு
கஹதேஹு(ன்) சமய் நஹி (ன்) ரஹேவு

பொருள்: தேவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் யாரின் சேவகரோ நீ அந்த தெய்வத்தை விரோதித்துக் கொண்டாய். நாரதர் என்னிடம் சொன்ன விஷயத்தை உன்னிடம் கூறினேன். இப்போது காலம் கடந்து விட்டது”
(பக்கம் 753 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

தீவீரமான ஒரு பற்றை, பாசத்தை மட்டும் வழிகாட்டுதலாகக் கொண்ட கும்பகர்ணின் பாதை மிகவும் எளியது. ராமாயண காலத்து விழுமியங்களுக்கு ஒரு முக்கியமான உதாரணம் கும்பகர்ணன். மூத்தவனாகவும், மன்னனாகவும் உள்ள ராவணனின் மீது அவன் காட்டும் விசுவாசம் தனது நாட்டின் மீதும் மக்களின் மீதும் கொண்ட மாறாப் பற்றாகும்.

விபீடணனும் லங்கையின் நன்மையைக் கருதியே ராவணனை விட்டு நீங்கியதாக, பின்னர் லங்கை அரக்கர் வசமே தொடர ஒரு அடித்தளம் அமைத்ததாகக் கூட வாதிடலாம். அதுவே சரியாகவுமிருக்கலாம்.

ஆனால் விபீடணன் ஒரு அரசியல் நிபுணத்துவத்தின், கூரிய, ஆய்ந்து அறியும் புத்திசாலித்தனத்தின் உருவகமாகவே தென்படுகிறான். கும்பகர்ணனோ நெல்வயலில் பாய்ந்த நீர் மண்ணோடு பிணைந்திருப்பது போல் இறுதி வரை தன் நாட்டுடனும் சகோதரனுடனும் சேர்ந்திருந்துப் பிறகு உயிரையும் தியாகம் செய்கிறான்.

சமுதாயம் அல்லது அரசாங்கம் என்னும் யந்திரங்கள் கும்பகர்ணன் போன்றோரது விசுவாசம் என்னும் சக்கரத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. அரசியலோ ராஜதந்திரமோ அறியாதவராகவோ அல்லது அதற்கு வாய்ப்பற்று அடிபணிபவராகவோ இருப்போரே ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள்.

இவரை நெறிப் படுத்துவதற்காக இயற்றப்பட்ட புழக்கத்திலிருந்த எழுதப் படாத சட்டங்கள் எத்தனையோ. அவற்றை ஒட்டியும் அதற்கு மேல் மண் மீது தாம் கொண்ட பிடிமானத்தைத் தொட்டும் இவர்தம் மனசாட்சி இயங்குகிறது.

இந்த மனசாட்சியே இவர்களை சமூகத்தின் வலிமையான அங்கங்களாய் இயக்குகிறது. இவர்களில் அபூர்வமாக யாரேனும் தனது தனி மனித மன எழுச்சியில் தாறுமாறான மீறல்களைச் செய்ய யத்தனித்தாலும் அதை அவருக்கு இணையான பின்ன ணி உள்ள சமூகத்தின் பிரஜைகள் தடுத்து நிறுத்துகின்றனர்.

எனவே அதிகாரம் என்ற ஒன்று ஒரு மனிதன் தனிமனிதனா சமூகத்தின் அங்கமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான அளவு கோல் என்று பிடிபடுகிறது. மேலும் வாசிப்போம்.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts