ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

சத்யானந்தன்


ஆரண்ய காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் நிறைய அரக்கர்கள் ராமன் அம்புகளில் மாய்ந்து போகிறார்கள். சூர்ப்பனகையின் அங்கஹீீனத்தில் தொடங்கி, கரன், தூஷணன், திரிசிரஸ், மாரீசன் மற்றும் கபந்தன். சிம்மாசனத்தில் அமராவிட்டாலும் ராமன் ரிஷி முனிவர்களை ரட்சிக்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறான். சூர்ப்பனகை வடிவில் சோதனை தொடங்குகிறது. ராமலட்சுமணர்களால் அங்கஹீீனப் படுத்தபட்டு அவமதிக்கப்பட்ட அவள் தனது அண்ணன் ராவணனைத் தூண்டி விட்டு சீதையைக் கடத்தும் அளவு கொண்டு வருகிறாள்.

ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகைக்கு நடப்பவை ராமனின் இயல்புக்குப் பொருந்துபவையாக இல்லை. என்றாலும் நமது கேள்வியான ‘அடையாளம் எது?” என்பதை அதிகம் நெருங்கவில்லை அந்த நடவடிக்கை. ஏனெனில் சீதையைத் தாக்கும் அளவு சூர்ப்பனகை சென்றது ஒரு காரணம் ஆகி விடுகிறது. சமுதாய நோக்கினின்று மீறியவளாய் சீதை ஆரண்ய காண்டத்தில் ஒரு வித்தியாசமான முகத்துடன் நம்மால் காணப்படுகிறாள்.

நாம் குறைந்த பட்சம் மூன்று பிரதிகளை வாசித்து ஒப்பாய்வு செய்ய நினைத்தது மிகவும் நல்லது. ஏனெனில் ஆரண்ய காண்டத்தில் கம்பராமாயணம் சீதை லட்சுமணன் மீது நிகழ்த்தும் தாக்குதலை மிகவும் நாசூக்காகக் கையாண்டிருக்கிறது.

பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது ” அட்ட திக்கினும் அப்புறம் புக” , “சீதா, ஓ லட்சுமணா ” என்று குரல் கொடுக்கிறான். இது ராமனின் குரலில்தான் மாயமாக நிகழ்த்தப்பட்டது என்று கம்பராமாயணம் திட்டவட்டமாகக் கூறவில்லை.

இலக்குவன் ராமனின் பராக்கிரமத்தைக் கூறி ஒரு அரக்கனின் கையில் சிக்கி ” சீதா, ஓ லட்சுமணா” என்று குரல் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று விளக்குகிறான். ஆனால் சீதை மனம் பதறுகிறாள். லட்சுமணன் உடன் விரைய வேண்டும் என விரும்புகிறாள். லட்சுமணனைக் கட்டாயப்படுத்த என அவன் போகாவிட்டால் தான் உயிரை விடுவேன் என்கிறாள்.
“ஒரு பகல் பழகினால் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா”

இதன் பொருள்: அன்புக்குரியவருக்காக ஒரு நாளே பழகினாலும் உயிரைத் தருவோர் உண்டு. ஆனால் உடன் பிறந்த தம்பியான நீ தமையன் உயிருக்கு ஆபத்து வந்த பின்பும் அச்சப்படாமல் இங்கேயே இருக்கிறாய்” (பாடல் 815 ஆரண்ய காண்டம்)

அதாவது உயிரை விடுவதாக மட்டுமே மிரட்டுகிறாள். ஆனால் வால்மீகி ராமாயண்த்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு லட்சுமணன் ஆளாகிறான்.

“சுதுஷ்ட்த்வம் வனே ராமமேகேஅனு கச்சஸி
மம ஹேதோ: பிரதிச்சனள் ப்ரயுக்தோ பரதேன வா ”

இதன் பொருள்: ” நீ மிகவும் கெட்டவன் ! ராமர் என்னுடன் தனியாகக் காட்டுக்கு வருவதை அறிந்து அவர் பின்னாடியே நீ வந்து விட்டாய். இல்லையென்றால் பரதன் தான் உன்னை அனுப்பி வைத்தானோ ” (பாடல் 24 சர்க்கம் 45)

“தன்ன ஸித்யதி சௌ மித்ரே தவாபி பரதஸ்யவா
கதமின் தீவதஷ்யாமம் ராமம் பத்மநிபேக்ஷணம்
உபஸம் ஷ்ருத்திய பரத்தாரம் காமயேயம் ப்ருகத் ஜனம்”

இதன் பொருள்: ” ஆனால் சுமித்திரை மைந்தனே ! உனது மற்றும் பரதனது இந்த எண்ணம் ஈடேறாது. தாமரை போன்ற நீலக் கண்களைப் பெற்ற ராமனைக் கணவனாகப் பெற்ற நான் வேறு எந்த ஆணையும் ஏறெடுத்தும் பார்ப்பது இயலாத காரியம்” (பாடல் 251/2 ஸர்க்கம் 45)

“ஸமக்ஷம் தவ சௌ மித்ரே ப்ராணாம் ஸ்த்யஷ்யாம்
ராமம் வினா ஷமப்ரதி நைவஜீவாமி பூதலே”

பொருள்:” சுமித்திரை மைந்தனே ! நான் உன் முன்னே என் உயிரை விடுவேன் ஆனால் ராமன் இல்லாமல் ஒரு கணம் கூட இவ்வுலகில் நான் வாழ மாட்டேன். ” (பாடல் 261/2 ஸர்க்கம் 45 வால்மீகி ராமாயணம்)

“ஜாஹு வேகி ஸ்ங்கட்தவப்ராதா
லக்ஷ்மம் விஹன்ஸி கஹா அனு மாகா
புகுடி விலாஸ ஸ்ருஷ்டி லயஹோயி
ஸபனேஹு ஸ்கட் பரைகி ஸோயி”

பொருள்: ” நீ உடனே செல். உனது சகோதரர் ஆபத்தில் உள்ளார். இதைக் கேட்டு நகைத்த லட்சுமணன் ‘யாருடைய புருவத்தின் அசைவில் உலகமே அழியுமோ அவர் மீது கனவிலும் ஆபத்து வராது’ என்றான். ”

” மர்ம வசன் ஸீதா ஜப் போலி
ஹரி ப்ரேரித் லட்சுமண் மதி டோலி
வன் திஷி தேவ ஸெவம்பி சப் காஹூ
சலே ஜஹான் ராவண் சஷி ராஹூ ”

பொருள்: அப்போது சீதை காதில் கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கூறவும் சீதையை திசைகள் மற்றும் வனத்தின் தேவதைகள் பொறுப்பில் ஒப்படைத்து லட்சுமணன் ராவணன் என்னும் சந்திரனை அழிக்கும் ராகுவான ராமன் இருக்கும் திசையில் சென்றான். (பக்கம் 561 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

சீதை எந்த அளவு மனக்கொதிப்போ பதட்டமோ அடைந்திருந்தாலும் லட்சுமணனைப் பார்த்து சீதை கூறிய வார்த்தைகள் இந்திய மனப்பாங்கு உள்ளோரை மிகவும் திடுக்கிடச் செய்யும். அண்ணியை அம்மாவாக நினைத்துப் பழகுவது சர்வசாதாரணமானது இந்தியப் பண்பாட்டில். வார்த்தைகள் வேண்டுமென்றால் யோசிக்காமலோ பதட்டத்திலோ உச்சரிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஐயப்பாடு அடிமனதில் இருந்திருக்கத்தானே வேண்டும்? கம்பரும் துளஸிதாஸரும் இந்த இடத்தில் நாசூக்குக் காட்டினாலும் வால்மீகி ராமாயணம் தன்னளவில் ஒரு மூலப் பிரதியாகும். எனவே அந்தப் பதிவுகளை நாம் புறந்தள்ள இயலாது. அன்றைய சமூகத்திலும் சரி இன்றும் கூட ஒரு அண்ணியின் நிலை மிகவும் மரியாதைக்கும் தொலைவுக்கும் உரியதாகவே இருக்கிறது. லட்சுமணனைப் பதம் பார்த்தது போதாது என்று சீதை பரதனை வேறு உள்ளே இழுக்கிறாள்.

இந்த நிலையில் சற்றே பின் செல்ல வேண்டும். ஆரண்ய காண்டம் என்பது அயோத்தியா காண்டத்திற்கு அடுத்த கட்டம். அயோத்தியா காண்டம் ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளில் தொடங்கி பாதுகா பட்டாபிஷேகத்தில் முடிகிறது. அப்படி பாதுகைகளைப் பெற வந்த பரதன் தன்னுடன் கைகேயியையும் அழைத்து வருகிறான். குகனிடம் தாயைக் காட்டும் போது கூட குத்தலாகத்தான் அறிமுகம் செய்து வைக்கிறான். இதன் பொருள் என்ன ? பரதனின் நிலைப் பாட்டையும் மன உறுதியையும் குற்ற உணர்வையும் பார்த்து ஒன்று கைகேயி மனம் மாறி இருக்க வேண்டும். இல்லையேல் வேறு வழியில்லை. மகனை இழப்பதை விடவும் ராஜ மாதா என்னும் நிலையை இழப்பதே மேல் என்று முடிவு செய்திருக்க வேண்டும்.

எப்படியோ பரதன் கைகேயியையே கொண்டு வந்து நிறுத்தித் தனது தூய்மையை, கொள்கைப் பிடிப்பை நிலை நாட்டி விட்டான். அதன்பின் பல அரக்கர்கள் வதம் எனக் காலமும் கடந்து விட்டது. அப்படி இருக்கையில் எவ்வாறு சீதை அன்றே பரதனைப் புரிந்து கொள்ளவில்லை? காலப் போக்கில் ராமனிடம் ஏன் இது பற்றி விவாதிக்கவில்லை ?

பரதனது படைகளைக் கண்டு கொதித்தெழும் லட்சுமணனை ராமன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் அவன் என்று கூறி அடக்குகிறான். ராமனின் கருத்து தானே சீதையின் கருத்தும் ? அப்படியே சற்று உடன்பாடு இல்லாமற் போனாலும் இவ்வளவு மோசமன கருத்தா லட்சுமணனையும் பரதனையும் பற்றி சீதையின் மனதில் இருந்தது ?

மரஉறி தரித்து வனம் புகச் செல்லும் போது மரஉறியை சீதையால் உடுத்திக் கொள்ள இயலாத போது அப்போதைக்கு சீதை அணிந்திருந்த ஆடை மீதே சுற்றி விட்டு ராமன் அவளை வனத்திற்கு அழைத்துச் செல்கிறான். கோசலையும் சுமித்திரையும் ராமனை இந்தப் பெண் இங்கேயே இருக்கட்டுமே என்று கூட வேண்டிக் கொள்கிறார்கள்.

இந்த அளவு எதிர்மறையான கருத்தைத் தன் மனதில் சுமக்கும் சீதை அப்போதே தன் மாமிகள் எதிரில் மந்திரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதையெல்லாம் கூறித் தீர்வு கண்டிருக்கலாமே?

இதே ஆரண்ய காண்டத்தில் நேர்மாறாக ராவணன் நிறையவே சிந்திக்கிறான். மாரீசன் சொல்லும் புத்திமதிகளை அப்படியே நிராகரிக்காமல் தனது முடிவை மாற்றிக் கொள்கிறான். பிறகு மறுபடியும் சூர்ப்பனகையின் துர்போதனையால் திரும்பவும் மாரீசனிடம் செல்லும் போது மாரீசன் ஒரு நீண்ட உரை நிகழ்த்தித் தடுத்துக் கூறுகிறான். அதை முழுவதுமாகக் கேட்டும் ராவணன் மனம் மாறவில்லை. எப்படி ராவணனிடம் இந்த அளவு பக்குவப்பட்ட நடவடிக்கை தென் படுகிறது? அதே சமயம் சீதை இத்தகைய ஒரு மிகவும் எதிர்மறையான மட்டமான கருத்தை தன் மைத்துனர்கள் பற்றிக் கொண்டிருக்கிறாள். அதுவும் இருவருமே வெறும் மைத்துனர்கள் மட்டுமல்லர். அவளது இளைய சகோதரிகளைக் கரம் பிடித்தவர்கள். அவ்வாறேனில் ஒரு பக்கம் கணவன் ராமன் மூலமாகவும் மறுபக்கம் தனது சகோதரிகள் மூலமாகவும் சீதையால் பரதனையும் லட்சுமணனையும் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கத் தானே செய்தது?

மாரீசன் ‘சீதே லட்சுமணா’ என்று கூறிய காட்சியை எடுத்துக் கொள்வோம். அதற்கு முன்பே ராமன் சீதையை விட்டு அகலாது காவலாயிரு என்று லட்சுமணனனுக்குக் கட்டளையிட்ட பின்பே மானின் பின் செல்கிறான். லட்சுமணன் அண்ணனின் கட்டளையை மீறுவதே இல்லை என்பது ராமாயணத்தை வாசிப்பவர்களுக்கே மிகவும் எளிமையாகப் புரியும். அவ்வாறிருக்க சீதைக்கு எப்படிப் புரியாமற் போனது?

ராமன் இட்ட கட்டளை மீறப்படவே கூடாதது என்னும் கட்டுப்பாடு ஒரு பாரம்பரியமாகவோ அல்லது அந்த மூன்று தம்பிகளின் தீர்க்கமான முடிவாகவோ இருந்து தானே வந்தது? பின் எப்படி சீதையால் லட்சுமணனை சந்தேகிக்க இயன்றது?

இந்த இடத்தில் தான் ராமாயணம் சாதாரண மனிதர்களின் காவியமாகப் பரிமளிக்கிறது. சமுதாயத்தின் நேர் கோடுகளில் கட்டங்களில் தண்டவாளங்களில் தடம் மாறாது கட்டுப்பட்டிருக்கும் – சமுதாயத்தின் அங்கமாக நிற்போரைப் பற்றியதும் அதை மீறுவோர் பற்றியதும் ஆக ஒரு முடிவற்ற கேள்வியைச் சுற்றிய தேடலில் நம்முடன் கை கோர்த்து நடக்கிறது.

கைகேயியோ சீதையோ சமுதாயத்துக்குக் கட்டுப்பட்டோர் கொண்டாடும் கோட்பாடுகள் தாங்கிப் பிடிக்கும் பீடங்களில் வீற்றிருந்தவர்கள். ஆனால் ஏதோ ஒரு நிலையில் தனது (தனி மனித) மனப் போக்கில் உணர்ச்சி வேகத்தில் மிகப்பெரிய மீறல்களைச் செய்தார்கள்.

ராமாயணத்தின் பிரதிகள் கண்டிப்பாக வேறு படுகின்றன. ஆனால் ஒரு தனிமனிதனின் இயங்குதல் தன் போக்கிலா அல்லது சமுதாயத்தின் அங்கமாகவா என்னும் கேள்வி நம் வாசிப்பில் புதிராய் நீள்கிறது. மேலும் வாசிப்போம்.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts